Jala Deepam Part 2 Ch28 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் –28 பதவி மாற்றம்
Jala Deepam Part 2 Ch28 | Jala Deepam | TamilNovel.in
கம்பீரத்துடன் கணீரென்று ஒலித்த குரலைக் கேட்டு அது வரும் திசை எதுவென்று அறிய நாற்புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்த இதயசந்திரன் குலாபியின் கர்ப்பக்கிருகத்திலோ கர்ப்பக்கிருக வாயிலிலோ தன்னை யும் சாஸ்திரியையும் தவிர யாருமில்லாததைக் கண்டதும் உண்மையில் அது குலாபியின் வாக்காகத்தானிருக்க வேண்டுமென்று நினைத்தான். அந்த நினைப்புக்கு ஆதரவு தேட சாஸ்திரியின் முகத்தைப் பார்க்கவும் செய்தானானாலும் சாஸ்திரியின் முகத்தில் எந்தவித உணர்ச்சியோ பரபரப்போ இல்லாததைக் கண்டதால், “சுவாமி! இப்பொழுது யார் பதில் கூறியது எனக்கு?” என்று வினவினான்.
“எனக்கு எப்படித் தெரியும்?” என்றார் சாஸ்திரி பதிலுக்கு.
“குரல் மனிதர் குரல் மாதிரி இருந்ததே” என்று மீண்டும் கேட்டான் தமிழன்.
“ஆம்” என்ற ஒற்றைச் சொல்லிலேயே பதில் கூறினார் மகாராஷ்டிர சாஸ்திரி.
“ஆனால் மனிதர் யாரையும் காணோமே.”
“ஆம், காணோம்.”
“மனிதர் குரலாயில்லாவிட்டால் அது குலாபியின் குரலாகத்தான் இருக்க வேண்டும்.”
“மனிதர். குரல் மூலமும் குலாபி பேசுவதுண்டு. அதற்கு ஆவேசம் என்ற பெயரும் உண்டு.
சாஸ்திரியிடமிருந்து விளக்கம் ஏதும் தான் பெற முடியாதென்பதை உணர்ந்து கொண்ட இதயசந்திரன்
மிகுந்த கோபத்துடன் குலாபியை வணங்கிவிட்டு, “இந்த உண்மையை உன் அருளால் அவிழ்க்கிறேன்” என்றும்கூறி, கர்ப்பக்கிருகத்தை விட்டு வெளியேற வாசற்படியைத் தாண்டினான். அவனைத் தாண்ட விடாமல் குறுக்கே ஒரு வாள் அவனைத் தடுத்தது. வாளைக் கண்டதும் இதய சந்திரன் பெரிதும் பிரமித்தான். சில வினாடிகள் நின்ற இடத்திலேயே சிலைபோல் நின்றான். பிறகு சட்டென்று மண்டியிட்டு அந்த இடத்திலேயே வணங்கி வாளைக் கண் களிலும் ஒற்றிக் கொண்டான். அந்த வாள் தாழ்ந்தது. கடகடவென கனோஜியின் பயங்கர சிரிப்பு உதிர்ந்தது. குலாபியின் ஆலயத்தையே கிடுகிடுக்கச் செய்யும் வகையில் கர்ப்பக்கிருகச் சுவருக்கு வெளியே மறைந்திருந்த ஆங்கரே மெள்ள வெளியே வந்து, “எழுந்திரு தமிழா! எழுந்திரு! இத்தனை சீக்கிரத்தில் குலாபியின் பக்தனாகி விடுவாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று கூறி அவனை எழுந்திருக்கச் செய்து முதுகிலும் பேயறைவது போல தட்டிக்கொடுத்தார்.
மண்டியிட்ட நிலையிலிருந்து எழுந்து அந்த அறையையும் முதுகில் வாங்கிக் கொண்ட இதயசந்திரன், “ஸார்கேல் வருவதற்கு எந்த முன்னறிவிப்பும் இல்லையே” என்று வினவினான் பணிவுடன். அதைக் கேட்ட போது அவர் உடையிலிருந்த நிலைமையும் முகத்திலிருந்த கரியை யும் பார்த்து வியப்பும் அடைந்து, “தாங்கள் நேராக…” என்று இன்னொரு கேள்வியையும் தொடுக்க முற்பட்டான்.
அவன் வாசகத்தை முடிக்க விடாத மகாராஷ்டிர கடற்படைத் தலைவர், “ஆம். போரிலிருந்து வருகிறேன். அதுவும் எடுத்த காரியம் நிறைவேறாமல் வருகிறேன்” என்று கூறினார். அதைச் சொல்லிக் கொண்டே கர்ப்பக் கிருகத்துக்கு வெளியே நெடுஞ்சாண் கட்டையாகத் தரையில் விழுந்து குலாபியை வணங்கவும் செய்தார். பிறகு எழுந்திருந்து “வா போகலாம் அரண்மனைக்கு” என்று அவனை உடனே அழைத்துச் சென்றார்.
தோர்லாவாடாவை அடையும் வரையில் கடற்படைத் தலைவர் ஏதும் பேசாமல் விடுவிடு என்று நடந்தே சென்றார். வழியில் அவரைப் பார்த்த கோட்டை வீரர்கள் வணங்கியதற்கும் சாதாரண பணிமக்கள் கை கால்களில் விழுந்ததற்கும் கையை மாத்திரம் ஆட்டிவிட்டுச் சென்றார். அவருடைய வேகமான நடையையும் சாதாரணமாகச் சிரித்த வணக்கத்தை ஏற்கும் அவர் நடைமுறை அடியோடு அன்று மாறியிருந்ததையும் கண்ட இதயசந்திரன் அவர் பெரும் யோசனையிலிருப்பதைப் புரிந்து கொண்டதால் அவனும் பேசாமலே அவரைப் பின்பற்றிச் சென்றான்.
அரண்மனையை அடைந்ததும் அவர் பிரதான அறைக்குச் சென்று தனது ஆடைகளைக் களைந்து வேறு ஆடை உடுத்தி உணவும் உட்கொண்டார். இதயசந்திரனை யும் தன்னுடனேயே உண்ணப் பணித்து இருவரும் உண்ட தும் அங்கிருந்த பெரும் ஆசனத்தில் சாய்ந்து கொண்டு பணியாட்களை வெளியே செல்லச் சொல்லிவிட்டு இதய சந்திரனை நோக்கி, “தமிழா! நீ இங்கு வந்து எத்தனை நாட்களாகின்றன?” என்று வினவினார்.
அவர் அந்தக் கேள்வியை, எதற்குக் கேட்கிறார் என்பதை உணர முடியாததால் சிறிது சிந்தனையில் இறங்கிய இதயசந்திரன், “ஒரு மாதம் சில நாள்கள்” என்றான்.
கனோஜியின் ராட்சதக் கண்கள் இதயசந்திரன் முகத்தை ஆராய்ந்தன. பிறகு உதடுகள் மெல்ல விரிந்து, “இந்த ஒருமாதம் சில நாள்கள் என்ன செய்து கொண்டு இருந்தாய்?” என்ற சொற்களை உதிர்த்தன.
“தங்கள் உத்தரவுப்படி முப்பதாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு வெள்ளைக்காரியை அனுப்பினேன் பம்பாய்க்கு” என்றான் இதயசந்திரன்.
“நீயாக அனுப்பினாயா? அவர்களாக வந்து ரூபாய் கொடுத்து அழைத்துப் போனார்களா?” என்று வினவினார் கனோஜி.
“அவர்கள் தான் கிப்போர்ட் என்ற தூதனை அனுப்பி னார்கள். அவன் வந்தான், நீங்கள் என்னை நம்பாமல் நேரிட கவர்னருக்கு எழுதிய கடிதத்துடன்” என்று சுட்டிக் காட்டிய இதயசந்திரன் குரலில் வெறுப்பு இருந்தது.
“ஆம், ஆம் எழுதினேன், ஏனப்படி எழுதினேனென்று கேட்டு நீ ஏன் எனக்குக் கடிதம் எழுதவில்லை” என்று வினவினார் கனோஜி.
“ஸார்கேல் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பதைக் கூற நான் யார்?’ என்று பதில் வினா எழுப்பினான் தமிழன்.
கனோஜியின் ராட்சதக் குரல் பலமாக ஒலித்தது. ”நீ என் கப்பல்களிலொன்றின் தளபதி. திட்டமான உத்தரவுகளுடன் இங்கு வருகிறார். நீ வருவதற்கு முன்பே எதிரிகளுக்குக் கடிதம் போய் விடுகிறது என்னிடமிருந்து. உன் நிலையில் நானிருந்தால் ஒன்று ஜல தீபத்தை எடுத்துக் கொண்டு ஓடியிருப்பேன். தனிக் கொள்ளைக்காரனாகி யிருப்பேன். அதற்கு வசதிகள் நிரம்ப இருக்கின்றன. அரபிக் கடற்கரையோரத்தில் அப்படிச் செய்ய இஷ்ட மில்லையேல் என் நாணயத்தைப் பற்றிச் சந்தேகப்படுபவர் ஸார்கேலாயிருந்தாலும் எந்தக் கேலாயிருந்தாலும் சரி, சமாதானம் கேட்காமல் விடமாட்டேன். அப்படிக் கேட்பது வீரன் உரிமை. கேட்கப்படுபவன் வீரனா யிருந்தால் பதில் கூறும் கடமை அவனுக்கு உண்டு…” என்ற ஆங்கரே பேச்சை முடிக்காமல் விட்டு, தமிழனை ஊன்றிப் பார்த்தவண்ணம் இருந்தார் சில வினாடிகள்.
இதயசந்திரன் பதிலேதும் சொல்லவில்லை. ஆங்கரே சொல்வதில் நிரம்ப உண்மையிருப்பதைப் புரிந்து கொண்டான். காதரைன் தன் மனத்தை, தன் எண்ணங்களை, தன் நடவடிக்கையை எத்தனை தூரம் மாற்றி விட்டாளென்ற நினைப்பால் உள்ளம் புழுங்கவும் செய்தான்; அவன் இதயத்திலோடிய எண்ணங்களைப் புரிந்துகொண்ட கனோஜி எழுந்து அவனருகில் வந்து, “சுத்த முட்டாள்” என்று கூறிவிட்டுச் சற்று எட்ட இருந்த சாளரத்தை நோக்கி நடந்து சென்று அதன்மூலம் வெளியே நோக்கிக் கடலில் ஆடிநின்ற மரக்கலங்களைக் கவனித்தார். பிறகு திரும்பி, “இதயசந்திரா! இப்படி வா!” என்று அவனையும் அழைத்தார். அவன் வந்ததும் வெளியே துறைமுகத்தில் நின்றிருந்த கப்பல்களைச் சுட்டிக் காட்டினார்.
ஜலதீபத்தையும் நான்கைந்து காலிவாத்துகளையும் தவிர ஒரு குராப்பும் ஒரு காலிவாத்தும் தனித்து நின்றிருந்தன துறைமுகத்தில். “இந்தா, இதைக் கொண்டு நிதானமாகப் பார்” என்று அவனிடம் தூரதிருஷ்டிக் கண்ணாடியையும் கொடுத்தார். தூரதிருஷ்டிக் கண்ணாடி யைக் கண்ணில் வைத்து, சிறிது நேரம் அவன் ஆராய்ந்தான். அப்படி அவன் பார்த்துக்கொண்டேயிருக்கையில் கனோஜி கேள்விகளைக் கேட்டார். கண்ணிலிருந்து தூரதிருஷ்டியை எடுக்காமலே இதயசந்திரனும் பதில் கூறினான்.
“இதயசந்திரா! குராப் எனது கப்பல் என்று உனக்குத் தெரியும்.”
”தெரியும்.”
“காலிவாத்தை அழைத்து வந்ததற்கு ஒரு கப்பல் கூட இருக்கட்டும் என்று அழைத்து வந்தேன்.”
“உம்.”
“அந்தக் குராப் எப்படியிருக்கிறது?”
“பக்கப் பலகையில் குண்டு வீச்சால் காயம் பட்டிருக்கிறது. பாய்மரத்தண்டில் ஒன்றும் பாதிக்கப்பட்டிருக்கிறது…”
“காலிவாத்?”
”அதிகச் சேதமெதையும் காணோம். இருப்பினும் அதன் உடல் பூராவும் காயங்கள் இருக்கின்றன.” “இதிலிருந்து நீ என்ன நினைக்கிறாய்?”
இதயசந்திரன் தூரதிருஷ்டிக் கண்ணாடியை நீக்கி விட்டு அவரை நோக்கினான். “இங்கு எங்கோ சமீபத்தில் போர் நடந்திருக்கிறது” என்று அறிவித்தான்.
”ஆம்” என்ற கனோஜி ஆங்கரே, “எத்தகைய கப்பல் களுடன் போர் நடந்திருக்கும்?” என்று வினவினார்.
“சாதாரண வர்த்தகக் கப்பல்களுடன்” என்றான் இதயசந்திரன்.
கனோஜி ஆங்கரே மெல்ல நகைத்தார். ”வர்த்தகக் கப்பல்கள் மட்டும் எதிர்த்திருந்தால் அவற்றை! நான் விட்டிருக்க மாட்டேன். அவற்றை உடன் கொண்டு வராமல் இங்கு வந்திருக்கவும் மாட்டேன்” என்று கூறினார் ஆங்கரே.
“வேறெவ்வகைக் கப்பல்கள்?” என்றான் இதய சந்திரன் சந்தேகத்துடன்.
“குராப்பைவிடப் பெரிய கப்பல்கள். போர்க் கப்பல்கள். இரண்டு மடங்கு ஆயுத பலமுள்ள இரண்டு கப்பல்கள். ‘கிரந்தாம்’ ‘ஸாமர்ஸ்’ என்று பெயர் கொண்டவை’ என்ற கனோஜி ஆங்கரே இதயசந்திரன் மீது கண்களை நிலைக்க விட்டார்.
இதயசந்திரன் முகத்தில் பிரமை தட்டிக் கிடந்தது. ஒரு குராப்பையும் காலிவாத்தையும் கொண்டு இரு பெரும் பிரிட்டிஷ் கப்பல்களுடன் போரிடும் துணிவு ஆங்கரேயைத் தவிர வேறு யாருக்கும் இருக்கமுடியாதென்று நினைத்ததால் ‘நம்பத்தகாததாயிருக்கிறது ஸார்கேல்” என்று குழறினான் தமிழன்.
கனோஜி ஆங்கரே புன்முறுவல் கொண்டார். “இதய சந்திரா! நம்பத் தகாதது இதில் எதுவுமில்லை, சரியாகக் கப்பலை நடத்தினால் சிறிய கப்பல்கூடப் பெரும் காரியங்களைச் செய்ய முடியும். போர் என்பது பெரும்பாலும் அறிவைப் பொறுத்தது. சிறிது ஆயுத பலத்தையும் பொறுத்தது. என்னுடைய குராப்பே பிரிட்டிஷ் கப்பல் இரண்டுக்கும் பெரும் சேதத்தை விளைவித்து விட்டது. அவை என்னிடமிருந்து தப்பி ஓடியதற்கு அவற்றின் பெரிய பாய்மரங்கள் காரணம். வசதியான காற்றும் காரணம். ஆனால் அவை தோற்று, சேதப்பட்டு ஓடியிருக்கின்றன” என்றார் ஆங்கரே. மேலும் சொன்னார்: “இதயசந்திரா! நீ மட்டும் சரியான கடற்படைத் தளபதியாயிருந்தால் ஒரு மாத காலம் ஜல தீபத்தை நங்கூரம் பாய்ச்சிவிட்டு இந்த அரண்மனையில் தூங்கமாட்டாய். இல்லை இல்லை, தூங்கவில்லை நீ. உனக்குத் தூக்கம் எப்படி வரும்? வெள்ளைக்காரியை நினைத்து நினைத்து உருகத்தானே சமயம் இருந்தது உனக்கு! பல விஷயங்களில் நீ கோழை. அதுவும் பெண்களின் விஷயத்தில் பெரும் கோழை. என் வளர்ப்பு மகளை இரண்டு ஆண்டுகள் தனித்து விட்டேன். கப்பலில் உன்னுடன் அப்பொழுதே அவளை நீ திருமணம் செய்து கொண்டிருக்கலாம். பயந்து பயந்து பிராணனை விட்டாய். அதற்கு முன்பு பானுதேவியிடம் துணிவைக் காட்டவில்லை. நீ அந்த வெள்ளைக்காரியையும் கடைசி யில் கோட்டை விட்டாய். பெண்களைப் பற்றி நினைப்ப திலேயே உன் காலம் போய்விடுகிறது. அதில் மனத்தை ஊன்றவிடுபவன் பெரிய காரியங்களைச் சாதிக்க மாட்டான். நீ மட்டும் சரியான மாலுமியாயிருந்தால் இத்தனை நாள் வெறுப்புத் தட்டும் அளவுக்குக் காமத்தை அனுபவித்திருக்கலாம். அதைப்பற்றி அக்கறையில்லாமல் ஜல தீபத்தைச் சதா கடலில் ஓடவிடலாம். அப்படி ஓட விட்டிருந்தால் உனக்கும் எனக்கும் கடல் வழியல் தொடர்பு இருக்கும். கொலாபாவில் சமீபத்தில் நடந்த
‘’இந்தப் போரில் ஜல தீபம் கலந்து கொண்டிருந்தால் விளைவும் வேறு.”
இதைக்கேட்ட இதயசந்திரன் மௌனமே சாதித்தான். கனோஜியே மேற்கொண்டு பேசினார். “இதயசந்திரா! பெண்களைச் சுற்றி வருவதால் பெண்களும் கிடைக்க மாட்டார்கள், வாழ்க்கையிலும் முன்னேற்றம் இருக்காது. கடமையையும் நாம் செய்ய மாட்டோம். மகாராஷ்டிர வாரிசைத் தேட வந்த நீ அந்த அலுவலிலும் வெற்றி பெற வில்லை. காதலிக்க முற்பட்ட நீ அதிலும் வெற்றி பெற வில்லை. பக்தனாக மாறினாயே , அதிலாவது வெற்றி கண்டாயா? அதிலும் இல்லை. இப்படியே நீ போய்க் கொண்டிருந்தால் வாழ்க்கை வியர்த்தமாகிவிடும். இன்று நீயும் நானும் இந்த நாடும் பெரும் வரலாற்றின் முன்னணியில் நிற்கிறோம். இங்கு மேற்கு வல்லரசு ஒன்று உருவாகிறது. இந்தச் சமயத்தில் நமக்குள்ளும் சண்டை இருக்கிறது. பெரும் இக்கட்டில் நாமிருக்கிறோம்…” இங்கு சற்று நிறுத்தினார் ஸார்கேல்.
இதயசந்திரன் தலை நிமிர்ந்து அவரை நோக்கினான். “என்ன இக்கட்டு?” என்று வினவினான்.
“நான் இப்பொழுது இரண்டு பிரிட்டிஷ் போர்க் கப்பல்களை விரட்டினேனல்லவா?” என்று துவங்கினார் ஸார்கேல்.
“ஆம்.”
”அவை இங்கிலாந்திலிருந்து வந்தவை.”
”அப்படியா?”
“ஆம், இப்படி அடிக்கடி இங்கிலாந்திலிருந்து போர்க் கப்பல்கள் இரண்டிரண்டாகப் பம்பாய்க்கு வருகின்றன.”
இதயசந்திரனுக்கு உண்மை விளங்கலாயிற்று. “அப்படியானால்…” துவங்கினான் கவலையுடன்.
“பம்பாய் பிரிட்டிஷாரின் கடல் தளமாகிறது. பிரிட்டன் இங்கு காலை ஊன்றப் பார்க்கிறது.”
“ஏற்கெனவே போர்ச்சுகீசியர் காலூன்றி இருக்கிறார்களே?”
“போர்ச்சுகீசியர் குரூரர்கள், ஆனால் தந்திரசாலி களல்ல. பிரிட்டிஷார் தந்திரசாலிகள். அவர்களிடம் தான் நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.”
”அதற்கு என்ன செய்ய வேண்டும்?”
ஸார்கேல் தமது ஏற்பாடுகளைச் சொன்னார். “விஜய துர்க்கம் பம்பாயிலிருந்து நீண்ட தூரமிருக்கிறது, ஆகவே நமது தலைமைத் தளத்தைக் கொலாபாவுக்கு மாற்ற வேண்டும். இங்கிருந்து பம்பாயைக் கவனிப்பது எளிது. தவிர பிரிட்டிஷாரிடம் நட்புக் கொள்ள வேண்டும்” என்ற ஸார்கேலின் சொற்களைக் கேட்ட இதயசந்திரன் பிரமித்தான்.
“என்ன! பிரிட்டிஷ்காரர்களிடம் நட்பா?” என்று வினவினான்.
“ஆம்.”
“அதற்கென்ன அவசியம் இப்பொழுது?”
“ஒரு அவசியம் ஏற்பட்டிருக்கிறது” என்ற ஸார்கேல் இருமுறை அந்த அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தார். பிறகு அறையின் நடுவில் விரிந்து கிடந்த பாரத தேசப் படத்தைப் பார்த்தார். இதயசந்திரனையும் கிட்ட அழைத்து “இந்த இடத்தை நன்றாகக் கவனி” என்றார்.
கவனித்த இதயசந்திரன், ‘ஆம் அதற்கென்ன?” என்று வினவினான், அவர் படத்தைப் பார்க்கச் சொன்னதற்குக் காரணம் புரியாமல்.
“இங்கிருப்பவர் நம்மை அழிக்கப் பார்க்கிறார்” என்று கூறினார் கனோஜி ஆங்கரே.
”அப்படியா!” வாயைப் பிளந்தான் தமிழக வீரன்.
“ஆம். அதற்கு ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. நிலத்தில் இந்த அபாயம். கடலில் பிரிட்டிஷ் அபாயம். இரண்டில் ஒன்றைத்தான் முதலில் கவனிக்க முடியும்…” என்று கூறி இதயசந்திரனை உற்று நோக்கினார்.
ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்து இதயசந்திரன், “அப்படியானால் பிரிட்டிஷ்காரருடன் தற்காலிக நட்பு அவசியம். நிலத்திலும் தற்காப்புக்கு அவசியமிருக்கிறது” என்றான்.
“ஆம்” என்று தலையசைத்த ஆங்கரே, ” இதய சந்திரா! உனக்குச் சிறிது பதவி மாறுகிறது” என்று கூறி, பதவி மாற்றத்தைக் குறிப்பிடவும் செய்தார். அந்த மாற்றம். அவனுக்கு வேதனையை மட்டுமல்ல, திகிலையும் தந்தது.