Jala Deepam Part 2 Ch35 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் –35 புணர்ச்சி மகிழ்தல்
Jala Deepam Part 2 Ch35 | Jala Deepam | TamilNovel.in
குவளை மலர் கதிரவன்போல் சுட முடியாது. கதிரவனும் குவளை மலர்போல் குளிர முடியாது. இது இயற்கை. ஆனால் இதயசந்திரனை நோக்கிய மஞ்சுவின் குவளை விழிகள் அந்த இயற்கைக்கு மாறாக அவன் கண்களைச் சுட்டெரித்து விடுவனபோல் பார்த்தன. அப்படியும் ஒரு நிலை உண்டு என்பதைச் சமீப காலக் கவியான அருணாசலக் கவியும் ‘குவளை விழிகளோ பாணம்’ என்று கூறியிருக்கிறாரல்லவா? ஏன், கம்பன் மட்டும் ‘கண்ணெனும் பூசல் அம்பு’ என்று சொல்ல வில்லையா? கவிகள் பார்த்த அந்தத் தீ விழிகளை அன்று நேரிலேயே பார்த்தான் தமிழனான இதயசந்திரன். ‘நெறியின் புறஞ் செலாத’ பெண்களின் விழிகளில் கதிரவனுடைய தீக்கு மேற்பட்ட தீட்சண்யமுண்டு என்பதை அவன் அந்தச் சில விநாடிகளில் நன்றாக உணர்ந்து கொண்டான்.
இருள் சூழ முயன்ற சமயத்தில் அவன் உள்ளே வந்த தாலும் உள்ளே லேசாக இருட்டே இருந்தது. இதய சந்திரன் உள்ளே வந்து கதவை மூடியபோது முழுதும் மூடாததால் ஒருக்களித்திருந்ததன் காரணமாக, இடுக்கி லிருந்து வந்த சிறு வெளிச்சம் அந்த அறை இருட்டைச் சிறிது சாந்தப்படுத்தியிருந்தது. சாந்தப்பட்ட அந்த இருளில் சாந்தத்துக்கு முழுதும் புறம்பாக இருந்த மஞ்சுவின் பெருவிழிகளின் பார்வையைத் தாங்கமாட்டாத் இதயசந்திரன், துடித்த, அவள் உதடுகளை நோக்கினான். துடித்து நின்ற உடலையும் நோக்கினான். ஆக்ரோஷத்தின் காரணமாகத் தனச்கு வெகு அருகில் வந்துவிட்ட அவள் உடலின் நிலை உள்ளூர இருந்த உணர்ச்சியை நன்றாகத் தெரியப்படுத்தியது. ”நீங்கள் ஓர் ஆண் மகனா?” என்ற கேள்வியின் வேகம் அவள் உதடுகளிலிருந்து மட்டுமின்றி உடலின் ஒவ்வோர் அணுவிலிருந்தும் வெளி வந்து கொண் டிருந்ததைத் தொங்கியிருந்த கை விரல்களின் – நடுக்கத்தி’ லிருந்தும் மார்பின் அசைவிலிருந்தும் புரிந்து கொண்டான் அந்த வாலிபன்.
அந்த உடலின் கொந்தளிப்பையும் உள்ளக் கோபத்தை யும் அடக்கவோ அல்லது வேட்கை மீறிய காரணத்தாலோ என்னவோ, அவள் தோளிரண்டையும் திடீரென அவன் தனது கையினால் பற்றி, “மஞ்சு, ஏன் இப்படிப் பதட்டப்படுகிறாய்? நான்… நான்” என்று ஏதோ சொல்ல முயன்று முடியாமல் மென்று விழுங்கினான். உதடுகள் சொல்ல முடியாததை அவன் சொல்ல முயன்று அவள் தோள்களை மேலும் அழுத்தி வலிக்கும்படியாகப் பிடித்தன. பிறகு தோளிலிருந்த இரு கைகளும் மெல்ல அவள் கழுத்தை நோக்கிச் சென்று கழுத்தின் இரு பகுதிகளிலும் லேசாக. அழுத்தித் தடவவும் செய்தன.
அவன் கைகள் கழுத்தில் புதைந்ததும் அவள் உடல் ஒரு. முறை சிலிர்த்தது. அவள் உதடுகளும் மெல்ல அசைந்தன. அந்தச் சிலிர்ப்பில் இருந்தும், உதடுகளின் அசைவிலிருந் தும், கீழே அவள் கால் விரல்கள் தரையைக் கீறி நிமிர்ந்து பதிந்த போது அகஸ்மாத்தாகத் தன் புறக்கால்மீது அழுத்தி விட்டதிலிருந்தும், கொழுகொம்பை நாடும் பூங்கொடி போல் அவள் தவிக்கிறாளென்பதை உணர்ந்துகொண்ட இதயசந்திரன் அவள் கழுத்தை மெல்லப் பிடித்தவண்ணம் அவளை நெருங்கி “மஞ்சு, மஞ்சு!” என்று குரல் தடுமாற அழைத்தான். அழைத்துக்கொண்டே முகத்தினருகே தன் முகத்தையும் கொண்டு சென்றதால் அவள் கன்னமும் லேசாக அவன் கன்னத்தைத் தடவியது. கன்னத்தை இழைத்துக் கொண்ட இதயசந்திரன் காதில் அவள் உதடு கள் முணுமுணுத்தன, “இங்கு ஏன் வந்தீர்கள்? அப்படியே போயிருக்கக்கூடாதா?” என்று.
பதில் சொல்லும் திறன் அவனுக்கில்லாததால் அவள் மேலும் முணு முணுத்தாள். “கழுத்தைச் சரியாகத்தான் பிடித்திருக்கிறீர்கள். அப்படியே நெறித்து விடுங்களேன்.”
இந்த முணுமுணுப்பு அவன் காதில் விழுந்ததோ இல்லையோ தெரியவில்லை. அவன் கைகள் அவள் கழுத்தை விட்டு முதுகுப்புறம் இறங்கி, கீழே சென்றன. சென்று அவள் உடலைத் தன்னை நோக்கி இழுக்கவும் செய்தன. நீண்ட நாள் பிரிவு. இடையே புகுந்த கனவு போன்ற வேறொருத்தியின் உறவு, உறவால் ஏற்பட்ட அந்த ஆண்மகனின் மனச் சிதைவு , இவற்றையெல்லாம் எண்ணியதால் துடிப்பும் குழைவும் நிறைந்த அவள் உடல் அவன் இழுத்ததை எதிர்க்கவில்லை. உணர்ச்சிப் புயலில் ஆடிய பூங்கொடி பக்கத்திலிருக்கும் மரத்தண்டின் மீது சாய்வது போல அவள் உடல் அவன் மீது சாயவே செய்தது.
சூறாவளி வேகத்துடன் அடித்ததால் பூங்கொத்துக்கள் இரண்டு ஆடின, துடித்தன. கொடி மலர்க் கரங்களிரண்டு உடலைச் சுற்றின. கன்னக் கமலங்கள் அதிகமாக இழைந்தன. பாதமலர்கூடக் கடினப்பட்டுப் பாதத்தை மிதித்தது. அவற்றின் குறிப்புகளை உணராதில்லை அந்த வாலிபன்: எப்பேர்ப்பட்ட புதையலை இத்தனை நாள் இழந்திருந்தோம் என்பதை அவன் புரிந்துகொண்டான். அவளுடைய வலுவான கைகள் தன்னைச் சுற்றியபோது அவற்றில் கடினம் மிக இருந்தும் எத்தனை இன்பமும் அந்தக் கடினத்தில் கலந்திருந்ததென்பதை எண்ணிப் பார்த்தான். இத்தகைய மஞ்சுவை, உயிரைத் தன்னிடம் வைத்திருந்த இந்த அழகு மலரை ஏன் இழந்திருந்தேன்’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். விவரமும் மெல்ல மெல்லப் புரியலாயிற்று அவனுக்கு. சம்பிரதாயங் களையும் பண்பாட்டையும் எண்ணியும் ஸார்கேலின் அனுமதியைப் பெற முயன்றும் நாள் வீணாகிவிட்டதை உணர்ந்தான். ”வீரர்களுக்கான காந்தருவ மனத்தில் நான் காலூன்றியிருந்தால் மஞ்சுவை விட்டு விலகவும் நேர்ந்திருக்காது, காதரைனிடம் அகப்பட்டு அறிவிழக்க வும் அவசியமிருந்திருக்காது” என்றும் கூறிக்கொண்டான் தனக்குள்ள.
இன்னொரு முறை அந்தத் தவறு ஏற்படுமானால் மஞ்சுவை விட்டுச் சாதாரணமாகப் பிரிந்து சென்றால், நிலை என்னவாகுமோ என்ற கிலியும் பிடித்துக்கொள்ளவே அவள் பூவுடல் நெரியும்படியாக இறுக்கி ஒரு முறை பிடித்த இதயசந்திரன் அவளைச் சிறிது முரட்டுத்தனமாகவே அழைத்துச் சென்று கட்டிலில் கிடத்திவிட்டுக் கட்டில் அருகில் நின்றவண்ணமே அவளை ஊன்றிப் பார்த்தான். வீழ்த்தப்பட்ட நிலையிலேயே கட்டிலில் கிடந்த மஞ்சுவின் அழகுப் பெருவிழிகள் அவனைச் சலனமின்றிப் பார்த்தன. உதடுகள் மோகனப் புன்னகை கோட்டின. அவனைக் கட்டிலில் உட்கார அழைக்கவில்லை உதடுகள், கைகளும் அதற்குச் சைகை காட்டவில்லை. கைகள் காட்ட அவசியமில்லை. அவள் கிடந்த நிலையிலேயே அந்த அழைப்பு இருந்தது.
கப்பலுக்கு வருமுன்பு மாலுமிகளுக்குத் தன்னை அசட்டை செய்யக் கட்டளையிட்டுத் தன்னை அலட்சியத் துடன் வரவேற்ற மஞ்சுவுக்கும் அந்தக் கட்டிலில் படுத் திருந்த மஞ்சுவுக்கும் மாறுபாடு எத்தனையோ இருந்ததைக் கவனித்தான் இதயசந்திரன். வெறுப்பு நிறைந்த அந்த மஞ்சுவின் முகத்துக்கும் விருப்பு விரவிக் கிடந்த இந்த மஞ்சுவின் முகத்துக்கும் சம்பந்தமில்லையென்பதை நன்றாக உணர்ந்து கொண்டான். அப்பொழுதும் அகன்று விழித்தன விழிகள், இப்பொழுதும் அகன்று விழிக்கின்றன. அகலாமலே பெருவிழிகள் இவளுக்கு. அகன்றபின் இன்பக் கடலின் ஆழத்தைக் காட்டும் இரு ஜோதிகள் இவை. அப்பொழுது பார்த்த கடல் கொந்தளித்த கடல், இப்பொழுது பார்ப்பது நிம்மதியாகிவிட்ட கடல், நிலவைக் கண்ணாடிபோல் காட்டும் மந்தமாருதத்தால் சலனப்படும் சிற்றலைகளை உடைய இன்பக் கடல்!’
இப்படி விமர்சனம் செய்து நின்ற இதயசந்திரனை அழைக்கவோ என்னவோ அவள் பஞ்சணையில் சிறிது இடம் விட்டு நகர்ந்தாள்.
‘குறிப்பாலுணர்த்துதல்’ என்ற இலக்கண வழியை உணர்ந்த தமிழன் கட்டிலின் முனையில் உட்கார்ந்தான். பிறகு மெள்ள நன்றாகப் பின் சென்றும் அமர்ந்து அவளை நோக்கித் திரும்பி, “மஞ்சு! ஒரு சந்தேகம் எனக்கு?” என்று கேட்கவும் செய்தான்.
”கேளுங்கள்” என்றாள் மஞ்சு. சிறிது நேரம் அவன் ஏதும் கேட்கவில்லை. அவள் உள்ளூர கேட்டுக் கொண்டாள். ‘சந்தேகம் கேட்டவர் அந்தக் கையைத் தூக்கி எதற்காக என் உடலுக்குக் குறுக்கே போடுகிறார்’ என்று.
“இல்லை மஞ்சு! சற்று முன்பு என்னை மிரட்டினாரே அவரைத்தானே உன் தந்தை என்கிறாய்?” என்று வினவினான் இதயசந்திரன்.
“ஆம்” என்றாள் மஞ்சு வெளியே. ‘சரி! இதைக் கேட்க அந்தக் கை எதற்காகக் கீழே இறங்கிச் செல்ல வேண்டும்? சே! என்ன… இப்படி… இவர்?’ என்று உள்ளூர சொல்லிக்கொண்டாள்.
“உன் தந்தை என்பதற்கு ருசுக்களைக் காட்டினார் என்றாயே, என்ன ருசுக்கள் அவை?” என்று வினவிய இதய சந்திரன் தனது கைகளால் அவளைத் தன்னை நோக்கித் திருப்பினான்.
‘என்ன ருசுக்கள் என்பதைத்தான் வளர்ப்புத் தந்தை இவரிடம் சொல்லிவிட்டாரே? ஏதற்காக மீண்டும் கேட் கிறார்? எல்லாம் பாசாங்கு’ என்று உள்ளூர நினைத்த அவள் “என் உடலில் சில அடையாளங்களைச் சொன்னார். அதைப் பற்றித்தான் உங்களுக்கு எப்பொழுதோ தெரியுமே’ என்று கூறினாள்.
“அங்க அடையாளங்களா?” “ஆம்!” “எங்கே இருக்கின்றன?” “தெரிந்ததைத் திரும்பக் கேட்காதீர்கள்.” “சரி, அவை இருப்பது உண்மைதானே?” “உண்மைதான்.” “நான் பார்க்கலாமா?”
“உம்! உம்!” என்று அதட்டினாள் அவள் வெட் கத்துடன்.
“ஏன் மஞ்சு! இதில் என்ன தவறு?” என்று கேட்டான் அவன். “என்ன தவறா? நல்ல கேள்வி” என்று கோபம் காட்டினாள் அவள்.
“ருசுக்களைப் பார்ப்பதும் அவர்கள் சொல்வது சரிதானா என நிர்ணயிப்பதும் என் கடமையல்லவா?” என்று வினவிய இதயசந்திரன் அவளை நோக்கிக் குனிந்து, “மஞ்சு உன் பிறப்பின் ரகசியம் அவிழ்க்கப்பட வேண்டு மானால் அதை வீணாகப் பயன்படுத்திக் கொள்ளா திருக்கிறார்களா என்பதையும் உணரவேண்டுமல்லவா!” என்றும் கேட்டான்.
‘அப்பப்பா! இப்பொழுது தான் கவலை வந்து விட்டது இவருக்கு?” என்று நினைத்தாள் மஞ்சு. அத்துடன் சொன்னாள், “உங்களுக்கு என்னைப்பற்றி எத்தனைக் கவலை வந்துவிட்டது!” என்று.
“ஏன் வருவதில் என்ன வியப்பு?” என்று கேட்டான் தமிழன்.
மஞ்சுவின் முகத்தில் இகழ்ச்சிக் குறி படர்ந்தது. “இந்தப் பஞ்சணையில் படுக்கும் யாரிடமும் உங்களுக்குக் கவலை ஏற்படுகிறது. முதலில் என்னிடம், பிறகு வெள்ளைக்காரியிடம், மறுபடியும் என்னிடம்! வீரரே! இந்தப் பஞ்சணைக்கும் விக்கிரமாதித்தன் சிம்மாசனத் திற்கும் ஏதோ சம்பந்தமிருக்க வேண்டும்” என்றாள் ஏளனத்துடன். அத்துடன் ஒருமுறை நெளிந்தாள்.
அவள் நெளிந்ததாலும் அருகாமையில் அவன் சாய்ந் திருந்ததாலும் குறுக்கே கிடந்த கையில் வழுக்கிய திண்மைப் பகுதிகள் இதயசந்திரனின் உணர்ச்சிகளைக் ‘கட்டுக்கடங்காமல் செய்துகொண்டிருந்தன. அவள் இகழ்ச்சியை இவன் பொருட்படுத்தவில்லை. அதைச் சொல்லவும் செய்தான். “மஞ்சு! என்னை நீ இகழ்ந்தாலும் சரி, அடித்தாலும் சரி, அத்தனையும் தகும் எனக்கு” என்று.
மஞ்சு மெல்ல நகைத்தாள். “நல்ல ஆசாமி நீங்கள்” என்றும் கூறினாள்.
“ஏன் மஞ்சு?” என்ற இதயசந்திரன் குரல் குழைந்தது.
“மிகப் பணிவு காட்டுகிறீர்கள்!” ஏளனமிருந்தது மஞ்சுவின் குரலில்.
”பணிவா! சரணாகதி என்று சொல்.” ”சரணாகதியும் செய்வீர்கள்.”
“இதோ பார் மஞ்சு! உன் காலைப் பிடிக்கிறேன்” என்று அவள் உடலுக்குக் குறுக்கே கிடந்த கையை எடுத்துக் காலில் வைத்தான்.
“காரியம் ஆவதற்குக் காலையும் பிடிப்பீர்கள்” என்ற அவள் சிரித்தாள்.
“ஏன் சிரிக்கிறாய் மஞ்சு!” என்று கேட்ட அவன் இன்னொரு கையைத் தோளில் வைத்தான்.
“வீரரே!” என்று அழைத்தாள் மஞ்சு.
“ஏன் மஞ்சு?”
“அது காலல்ல, தோள்.”
“தெரிகிறது.”
“காலைத்தான் பிடிப்பதாகச் சொன்னீர்கள்.”
“இடது கையால்தான் பிடித்திருக்கிறேனே காலை.”
“காலை சரணாகதிக்குப் பிடிப்பதானால் இரண்டு கைகளாலும் பிடிக்க வேண்டும்.”
“நான்கு கைகளிருந்தால் அவற்றாலும் பிடிப்பேன் மஞ்சு?” என்று சொன்ன இதயசந்திரன் தோளிலிருந்த கையைக் காலில் வைத்தான்.
மஞ்சு மெல்லச் சுழன்றாள் பஞ்சணையில். “சும்மா இருங்கள், கைகள் காலிலேயே இருக்கட்டும். அலைய. வேண்டாம்” என்று அவள் நகைத்தாள்.
நேரம் நகர்ந்தது. அவன் பிணைப்பில் அவள் கிடந்தாள். இரு உடல்கள் பேசின பல பேச்சுக்கள். சூன்ய நிலை உள்ள கடற்பகுதியில் திடீரெனக் காற்றுப் புகுந்தால் அலை புரளுவதுபோல உணர்ச்சிகள் சிதறுண்டு புரண்ட நிலை அது. அந்த அலைகளின் பரிமாணம், வேகம், அனைத்துமே அதிகம். அதிக நிலையிலும் காற்று வீச்சில் ஒலிகள் உண்டு. ஏதேதோ ஒலிகள் !! அர்த்தமற்ற ஒலிகள்!
உண்மையை அவனும் உணர்ந்தான், அவளும் உணர்ந்தாள். தன் கோபமெல்லாம் அவன் பிரிவால் என்பதை உணர்ந்தாள். அவனும் உணர்ந்தான் வழுக்கியதற்கெல்லாம் அவள் பிரிவு காரணமென்பதை.
அறையில் இருள் மூண்டு கிடந்தது. ஒருக்களித்த கதவு மூலமும் ஒளி வரவில்லை. இருப்பினும் அதைத் தாழிட்டு வந்தான். இருட்டிலே கிடந்தார்கள் இருவரும். வெளியே
புணர்ச்சி மகிழ்தல் ஜல தீபத்தின் விளக்குகள் ஏற்றப்பட்டன. அந்த அறை விளக்கையும் கொளுத்த மாலுமியொருவன் கிளம்பினான். பர்னாண்டோ கேட்டான் அவனை, “எங்கே போகிறாய்?” என்று.
“தளபதி அறை விளக்கைக் கொளுத்த” என்று பதில்ளித்த மாலுமி, “அந்த விளக்கை நான் தான் தினம் கொளுத்துவேன்” என்றும் சுட்டிக் காட்டினான்.
“இன்று நீ கொளுத்த வேண்டாம்” என்றான் பர்னாண்டோ.
“ஏன்?” மாலுமி கேட்டான் கோபத்துடன்.
“அதற்கு வேறொருவர் ஏற்பட்டுவிட்டார்” என்ற பர்னாண்டோ புன்முறுவல் செய்தான்.
ஜலதீபம் பக்கத்திலிருந்த இப்ரஹிம் தலையாட்டினான். விளக்கு எதும் உள்ளே கொளுத்தப்படவில்லை. இருளே மூண்டு கிடந்தது. வேறொரு விளக்கு எரிந்தது அங்கே. அதை ஏற்றிய தீ மஞ்சுவிடமிருந்தது. வியக்கத்தக்கது அது! கவிகளே வியந்த தீ அது! அவளை நீங்கினால் சுடும், குறுகி நெருங்கினால் குளிரும், அத்தகைய தீ அது!
நீங்கின் தொறூஉம்; குறுகுங்கால் தண்என்னும்
தீயாண் டுப்பெற்றாள் இவள்.
– குறள் – புணர்ச்சி மகிழ்தல்.
இரண்டாம் பாகம் முற்றும்