Jala Deepam Part 3 Ch10 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 10 மிஸ்டர் ப்ரௌன் அளித்த பரிசு
Jala Deepam Part 3 Ch10 | Jala Deepam | TamilNovel.in
மிஸ்டர் ப்ரௌனின் தூண்டுதலின் பேரில் மானுவல் டீ காஸ்ட்ரோ நடனமாடிக் கொண்டிருந்தவர்களின் கூட்டத்திற்குள் புகுந்துவிட்டானென்றாலும், மிக சாமர்த்தியமாக ஜோடிகளின் மேல் படாமல் இடைவெளி களில் நுழைந்து நுழைந்து முன்னேற முயன்றானென்றாலும் அது அத்தனை எளிதில் முடிகிற அலுவலாயில்லை.
கவர்னர் ஏஸ்லாபி அன்று வழக்கத்திற்கு விரோத மாகப் பல காரியங்களைச் செய்திருந்தார். சாதாரணமாக விருந்துக்கு விடும் அழைப்புகளை விட இரட்டை மடங்கு அழைப்பு விடுத்திருந்தபடியாலும், போதாக் குறைக்குச் சுதேசியான இதயசந்திரனை வெள்ளைக்காரப் பெண்ணுடன் நடனமாட அனுமதித்திருந்தபடியாலும், நடன மண்டபத்தில் கூட்டம் அதிகமாயிருந்ததோடு நடனமாடிய வர்கள் அடிக்கடி இதயசந்திரனையும் எமிலியையும் திரும்பத் திரும்பப் பார்த்ததால், கூட்டத்துக்குள் நுழைந்த டீ காஸ்ட்ரோ மிகுந்த கஷ்டத்துடன். மூன்னேற வேண்டி வந்ததன்றி, மற்ற வெள்ளைக்கார ஜோடிகளின் பார்வைக்கும் இலக்கானான். சிலர் அவனை வியப்புடன் பார்த்தனர். சிலர் வெறுப்புடன் பார்த்தனர்.. அவன் அப்படி நுழைவது சரிதானா என்று வினவுபவர் போல் சிலர் தூரத்தே மனைவியுடன் நின்று கொண்டிருந்த கவர்னர் மீதும் கண்களை ஓட்டினர். இது எதையும் லட்சியம் செய்யாமலே டீ காஸ்ட்ரோ முன்னேறினான். எதையும் லட்சியம் செய்யாமலே இதயசந்திரனும் மிஸ் எமிலியைத் தழுவிய வண்ணம் நடனமாடினான்.
முதலில் நடன கூடத்துக்குள் புகுந்து மிஸ் எமிலியின் சொற்படி அவள் இடையைத் தழுவியும் தோளை ஒரு கையால் அணைத்தும் இசைக்குத் தகுந்தபடி அசைந்து செல்ல முயன்ற அவனுக்கு ஆரம்பம் பெரும் பிரமையாக இருந்ததன்றிச் சிறிது சங்கடமாகவும் இருந்தது. அழகி யொருத்தி தனது கையில் வளைய வருகிறாளேயென்ற பிரமை மட்டுமின்றி, கூடத்துக் கூட்டத்துள் ஊர்ந்து சென்றபோது தங்களை அணுகி வந்த இதர நடன ஜோடிகளில், சில பெண்களின் திறந்த முதுகுப் பகுதிகளும், சில பெண்களின் இடைகளும், சில பெண்களின் கழுத்தும் மார்பும் கண்களில் பட்டதாலும், தமிழனைப் பெரும் மயக்கமும் ஆட்கொண்டிருந்தது.
எதிரே தெரிந்த எமிலியின் அழகிய கழுத்தும் கழுத்தி லிருந்து கீழே கௌன் சற்று இடைவெளி கொடுத்ததால் தெரிந்த அழகு பிம்பங்களும், அவனைப் பெரிதும் சங்கட மடைய வைத்திருந்ததென்றால், அவற்றிலிருந்து தப்பக் கீழே கண்களை ஓட்டினால், வெள்ளைக்காரிகளின் கௌன்கள் மேலேறியதன் விளைவாக அவர்கள் முழங்கால்களுக்கு மேல் அரை அடி தள்ளியே தெரிந்த கால் பிரதேசங்களின் கவர்ச்சி அவனை எங்கெங்கோ கொண்டு சென்றது. அந்த நிலையிலிருந்து தப்ப அவன் நடனமாடியவண்ணம் தூரத்தே உட்கார்ந்திருந்த பானுதேவியைக் கவனித்தான். பானுதேவி தன்னைச் சுட்டெரித்து விடுவதுபோல் பார்த்துக் கொண்டிருந்ததை யும், அவள் பக்கத்திலிருந்த காதரைனைக் காணாததையும் பார்த்த இதயசந்திரன் மீண்டும் எமிலியின் மோகனா ஸ்திரத்தில் கட்டுண்டான். அப்படி மீள முடியாமல் கட்டுண்ட அவன் உணர்ச்சிகளைக் குலைக்கவோ என்னவோ வயலின் திடீரென்று துரித காலத்தில் ஒலித்தது. அதன் விளைவாக அவன் மீது நன்றாக இணைந்து, “என்னை இறுகப் பிடியுங்கள். அதோ பக்கத்திலிருப்பவர் களைப் பாருங்கள்” என்று கூறித் தன் உடலை எமிலி
அழுத்தவே, வேறு வழியின்றி அவன் கைகள் அவன். இறுக அணைத்துக் கொண்டன.
நடன மண்டபத்தில் ஜோடிகள் அதிகமாக இணைந்தும் அணைந்தும் வேகமாகச் சுழன்றார்கள். வயலின் உச்சக் கட்டத்தை எட்டியபோது, எமிலி அவன் தோள்மீது தலையைப் புதைத்துக் கொண்டு அவனுடன் ஒன்றி இழைந்தாள். அவள் உடல் அவன் உடலுடன் குழைந்து குழைந்து ஆடியதால் இதயசந்திரனுக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த சுரணையும் காற்றில் பறந்தது. தோளில் சாய்ந்த எமிலியின் தங்கத் தலைமயிர் அவன் கண்களுக்கெதிரில் பச்சை, ஊதா நிற ஒளி வீச்சில் பளபளத்தது. அவன் நாசியில், அவள் லேசாகக் கழுத்திலும் தலையிலும் தடவியிருந்த மொகலாயர் ரோஜா அத்தர் புகுந்து சித்தத்தை மயக்கிக் கொண்டிருந்தது
ஏதும் புரியாத சொர்க்கத்தில் உலாவினான் அவன். நடனமாடிய நிலையில் அடிக்கடி அவனுக்கருகில் வந்து அவன் பிரமையைக் கவனித்த காதரைனையோ அவளுடன் ஆடிய கிப்போர்ட்டையோ அவன் கவனிக்கவில்லை. உண்மையில் நடன மண்டபம் மறைந்துவிட்டது அவன் கண்களிலிருந்து. விரிந்தது ஜல தீபத்தின் தலைவியறை. அவன் கை அணைப்பிலிருந்து எமிலி மறைந்து மஞ்சுவுக்கு. இடம் கொடுத்தாள். மஞ்சுவின் அலட்சியச் சிரிப்பு அவன் இதயத்துக்குள் கேட்டது. ஆகவே, இறுக்கி அணைத்தான் இதயசந்திரன் கையிலிருந்த ஏந்திழையை. அவன் உதடுகள் அவள் தலைக்குழலை லேசாகத் தொட்டன. கன்னங்களையும் தடவின. மிஸ் எமிலி அதையெல்லாம் கவனிக்கவே செய்தாலும், அதைப் பற்றி அவள் கவலைப்படவில்லை. தமிழன் லேசுப்பட்டவனல்லவென்று உள்ளூரச் சொல்லிச் சிரித்துக் கொண்டாள். அருகில் நடனமாடிக் கொண்டிருந்த காதரைனைப் பார்த்து மெல்லப் புன்முறுவலும் கோட்டினாள்.
வயலின் இன்னும் துரிதமாக ஒலிக்கவே நடன வேகம் அதிகப்பட்டது. ஜோடிகள் பரபரவென்று சுழன்றார்கள். ஏதோ வெறி அதிகப்பட்டு விட்டதற்கான அறிகுறி எங்கும் தென்பட்டன. அத்தகைய சூழ்நிலையில் சிக்கிக் கொண்ட ‘டீ காஸ்ட்ரோவால் எளிதில் அடைய முடியவில்லை இதய சந்திரன் இருந்த இடத்தை. இருப்பினும் அவன் சமாளித் துக்கொண்டு முன்னேறத் தொடங்கியதைக் கண்ட எமிலி மெள்ள மெள்ள இதயசந்திரனை மண்டபத்தின் பின்புற வாயிலை நோக்கி இழுத்தாள். இதயசந்திரனுக்கிருந்த சித்தப்பிரமையில் அவன் அவள் சொல்படி நகர்ந்தான். நடனமாடிய வண்ணம் மெள்ள மெள்ள அவனை வாயிற் படியை நோக்கி இழுத்துச் சென்ற எமிலி, “உம்… சீக்கிரம் இப்படி வாருங்கள்” என்று காதுக்கு மட்டும் கேட்கும் படியாகச் சொல்லி நடன் மண்டபத்தின் பின்புற வாயிலைத் தொட்டுக் கொண்டிருந்த மாடிப்படியின் கீழ் மறைந்தாள்.
அவள் .எதற்காக அப்படி மறைகிறாளென்பதை நினைத்த பின்பே சற்றுச் சுரணையடைந்த இதயசந்திரன் சற்றுத் தூரத்தில் டீ காஸ்ட்ரோ தன்னை அணுகி வருவதைக் கவனித்தானாகையால், அவள் விருப்பத்துக்கு இடம் கொடாமல் நின்ற இடத்திலேயே நின்றான். டீ காஸ்ட்ரோ மெள்ள நடன மண்டபத்தின் பின்புறக் கோடிக்கு வந்ததும் இதயசந்திரனைச் சில வினாடிகள் உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றான். இதயசந்திரன் இதயத்தில் சிறிது சினமும் இதழ்களில் அந்தச் சினம் கலந்த புன்னகையும் ஒரு வினாடி அரும்பியது. “காஸ்ட்ரோ, என்னை அடைய மிகுந்த சிரமப்பட்டிருக்கிறாய் நீ” என்று உரையாடலைத் துவக்கவும் செய்தான்.
காஸ்ட்ரோவின் கண்களில் விஷமம் தாண்டவ மாடியது. ”சிரமப்பட்டது என் இஷ்டத்தாலல்ல” என்றான் காஸ்ட்ரோ.
ஜலதீபம் இதயசந்திரன் முகத்தில் சந்தேகச் சாயைபடர்ந்தது “உன் இஷ்டத்தாலல்லவா?” என்று வினவியபோது குரலிலும் சந்தேகம் ஒலித்தது. “இல்லை” என்றான் காஸ்ட்ரோ திட்டமாக.
“வேறு யார் துடிக்கிறார்கள் என்னைப் பார்க்க?” என்று வினவினான் தமிழன்.
“இம்முறை துடிப்பது பெண்ணல்ல” என்று சுட்டிக் காட்டினான் காஸ்ட்ரோ விஷமத்துடன்.
“பெண்ணாயிருந்தால் நீ தூது வரமாட்டாய் காஸ்ட்ரோ” என்று கூறி நகைத்தான் இதயசந்திரன். “ஏன்?” “பெண்கள் உனக்குத் தேவையாயிற்றே? அதற்காக நீ நம்பிக்கையைத் துறப்பாய், நாணயத்தைத் துறப்பாய், நாட்டைத் துறப்பாய், சகலத்தையும் துறப்பாயே!”
“ஆம் தமிழா துறப்பேன். உண்மை அதுதான். நான் உண்மையே பேசுகிறேன். உன்னைப்போல் நாணயம் கண்ணியம் இவற்றை மேலுக்குச் சொல்லிக்கொண்டு போகுமிடங்களிலெல்லாம் மாறுபட்டு நடப்பது என் வழக்கமில்லை. அது கிடக்கட்டும். இப்பொழுது நான் நமது பரஸ்பர குற்றங்களைப்பற்றிப் பேச வரவில்லை” என்றான் காஸ்ட்ரோ.
“வேறு எதைப்பற்றிப் பேச வந்திருக்கிறாய்?” என்று வினவினான் தமிழன்.
”பேச நான் வரவில்லை. ஒருவருக்குத் தூது வந்திருக்கிறேன்.”
“யாருக்காகத் தூது?”
“என்னைத் தொடர்ந்து வா. தெரிந்து கொள்வாய்” என்று கூறிவிட்டுத் திரும்பி மண்டபத்தின் மாடிப்படியில் ஏறிச் சென்றான் டீ காஸ்ட்ரோ .
“எமிலி! இங்கேயே இரு. இதோ வந்து விடுகிறேன்” என்று மாடிப்படியின் அடியில் பதுங்கியிருந்த எமிலியிடம் கூறிவிட்டுப் படிகளில் ஏறி டீ காஸ்ட்ரோவைத் தொடர்ந்து சென்றான் இதயசந்திரன்.
மாடிப்படிகளின் உச்சிக்குச் சென்றதும் தன்னைத் தொடரச் சொல்லிச் சைகை செய்து மாடித் தாழ்வாரத் தின் கோடிக்கு நடந்த டீ காஸ்ட்ரோ அங்கிருந்த ஒரு சிற்றறைக்குள் நுழைந்தான். அவனைத் தொடர்ந்து அந்த அறைக்குள் நுழைந்த இதயசந்திரனை நோக்கிய மிஸ்டர் ப்ரௌன், “தூதரே! வாருங்கள்” என்று பணிவுடன் வரவேற்றார்.
அறை மிகச் சிறியதாயிருந்தாலும் கச்சிதமாயிருந்தது. நடுவில் ஒரு மேஜை: நான்கு நாற்காலிகள் போடப்பட்டி ருந்தன. அறைச் சுவர்களில் இருந்த அலமாரிகள், உயர்ந்த வகை – மது வர்க்கங்கள், கோப்பைகள் இருந்தன. மிக உயர்ந்த பானங்களைச் சிறிதளவில் குடிக்கக் கண்ணாடிச் சிமிழ்களும் வைக்கப்பட்டிருந்தன.
மிஸ்டர் ப்ரௌன் இதயசந்திரனை வரவேற்றுவிட்டு ஒரு சீசாவையும் மூன்று கண்ணாடிச் சிமிழ்களையும் எடுத்து வந்து மேஜை மீது வைத்து அவற்றில் பளபள் வென்று மதுவர்க்கத்தை ஊற்றித் தாம் ஒன்றை எடுத்துக் கொண்டு, ”உம்…எடுத்துக் கொள் காஸ்ட்ரோ , எடுத்துக் கொள்ளுங்கள் தூதரே” என்றார்.
“இப்பொழுது தேவையில்லை” என்றான் இதய சந்திரன், இத்தனை உபசாரம் எதற்கென்று புரியாமல்.
இதயசந்திரனின் நிராகரிப்பை ஆட்சேபிக்காது மிஸ்டர் ப்ரௌன் காஸ்ட்ரோவுடன் தானும் அருந்தினார்.
மதுவை. பிறகு இதயசந்திரனை உட்காரச் சொல்லித் தானும் உட்கார்ந்தார்.
அப்பொழுது தான் மிஸ்டர் – ப்ரௌனை நன்றாகப் பார்த்தான் இதயசந்திரன். கவர்னர் அறையின் கோடியில் கூனிக் குறுகிக் குனிந்து உட்கார்ந்திருந்த ப்ரௌன் அந்தச் சிற்றறையில் மிக உயரமாகவும் கம்பீரமாகவும் இருந்தார். அவரது பச்சை நிறக் கண்மணிகளும் பழுப்பு மீசையும் அவருக்கு நல்ல தோற்றத்தைக் கொடுத்தனவானாலும் அவர் முகத்தில் பெரும் தந்திரச் சாயை விரவிக் கிடந்த தைக் கவனித்த இதயசந்திரன், அவருடன் தான் வெகு எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமெனத் தீர்மானித்தான்.
மிஸ்டர் ப்ரௌன் நேரம் கடத்தாமல் சட்டென்று விஷயத்திற்கு வந்தார். “தமிழக வீரரே! நாம் பேச வேண்டியதைச் சீக்கிரம் பேசி முடிக்க வேண்டும். நடனம் முடிந்தால் கவர்னர் நாம் மண்டபத்தில் இல்லாததைப் புரிந்து கொள்வார்…” என்று துவக்கினார் மிஸ்டர் ப்ரௌன்.
இதயசந்திரன் புரிந்து கொண்டான் கவர்னருக்குத் தெரியாமல் விஷயங்கள் கவர்னர் மாளிகையில் நடப்பதை. மிஸ்டர் ப்ரௌள் தங்கள் பக்கத்தில் இருப்பதாக பிரும்மேந்திர ஸ்வாமி ஏற்கெனவே சொல்லியிருப்பதை நினைத்துப் பார்த்த இதயசந்திரன், தான் ஏதும் பேசாமல் மிஸ்டர் ப்ரௌனைப் பேச விட்டான்.
மிஸ்டர் ப்ரௌன் மேற்கொண்டு பேசினார். “தூதரே! உமது தூது பலிக்காது என்பதை முன்கூட்டிச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் கொண்டு வந்திருக்கும் நிபந்தனைகளை நான் ஒப்புக்கொள்ள முடியாது. கவர்ன ரைச் சரிக்கட்டி விடலாமென்று மனப்பால் குடிக்காதீர்கள். கௌன்ஸிலின் பூரண ஒத்துழைப்பின்றிக் கவர்னர் ஏதும் செய்ய முடியாது. கௌன்ஸில் நான் சொல்வதுபோல் ஆடும்” என்ற ப்ரௌன் சிறிது பேச்சை நிறுத்திவிட்டு இதயசந்திரனை உற்றுப் பார்த்தார்.
“சொல்லுங்கள் மிஸ்டர் ப்ரௌன்” என்று ஊக்கி னான் இதயசந்திரன்.
“நான் சம்பந்தப்பட்டவரையில், கெளன்ஸில் சம்பந்தப்பட்டவரையில், சுதேச அரசியலில் தலையிடுவது எங்கள் உத்தேசமல்ல. சட்டபூர்வமான அரசாங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இங்கு வர்த்தகத்தை அதிகரிப்பது எங்கள் நோக்கம். கனோஜி சட்டபூர்வமான மகாராஷ்டிர அரசரின் விரோதி. ஆகவே நாங்கள் ஒரு பொழுதும் அவருடன் ஒப்பந்தம் செய்து கொள்ள மாட்டோம். தவிர, காஸ்ட்ரோ எங்களிடம் சேர்ந்தபிறகு எங்கள் கடற்படையும் வலுத்திருக்கிறது. காஸ்ட்ரோவுக்கும் கனோஜியின் கப்பல்கள், தங்கும் ரகசிய இடங்கள், கோட்டை நுணுக்கங்கள், அனைத்தும் தெரியுமென்பதை நான் கூறத் தேவையில்லை’ என்ற இதயசந்திரன் மீது தமது கண்களை நிலை நாட்டினார்.
“தேவையில்லை” என்றான் இதயசந்திரன்.
“போதாக் குறைக்கு மன்னர் ஷாஹு கனோஜியை ஒழிக்கப் பெரும் படை திரட்டிவிட்டார்’ என்றும் ப்ரௌன் சுட்டிக் காட்டினார். ”ஆம்.” “அதற்குப் பேஷ்வா பிங்களே தலைவர்.”
” அப்படித்தான் கேள்வி.”
“சுமார் பதினையாயிரம் வீரர் கொண்ட படை சில. நாட்களில் நகரும் கனோஜியை நோக்கி.”
“உம்…”
“கடலில் பிரிட்டிஷ் எதிர்ப்பு, தரையில் ஷாஹுவின் மாபெரும் படையின் எதிர்ப்பு. கனோஜி சந்தேகமின்றி அழிக்கப்படுவார்.”
“அப்படியா?”
“ஆம்.”
இதயசந்திரன் சற்றுச் சிந்தித்துவிட்டுக் கேட்டான், “இந்தப் பெரிய அரசியல் குமுறல்களுக்கும் என்னைப் போன்ற சாதாரண தூதனுக்கும் என்ன சம்பந்தம்?” என்று.
மிஸ்டர் ப்ரௌன் தொண்டையைக் கனைத்தார். பிறகு கூறினார் சற்றுச் சங்கடத்துடன், ”தங்களை அந்த அழிவிலிருந்து பாதுகாக்க ஒருவர் விரும்புகிறார்” என்று “யார் அது?” என்று வினவினான் இதயசந்திரன். “பானுதேவி” என்றார் மிஸ்டர் ப்ரௌன்.
“எப்படிப் பாதுகாக்க உத்தேசம்” என்று வினவினான் இதயசந்திரன்.
“கனோஜியின் படையிலிருந்து உம்மை வெளியே இழுத்து உமக்கு மன்னர் ஷாஹுவிடம் மன்னிப்பு வாங்கித் தருவார். வேறு பரிசும் உண்டு” என்ற மிஸ்டர் ப்ரௌன் சற்றுத் தொண்டையைக் கனைத்தார்.
“வேறு என்ன பரிசு!” என்று வினவினான் இதய சந்திரன் கடுமையான குரலில்.
மிஸ்டர் ப்ரௌன் மேஜை டிராயரைத் திறந்து ஒரு பெரும் முடிப்பை எடுத்து மேஜைமீது வைத்தார். “இதில் பதினாயிரம் தங்க மொகராக்கள் இருக்கின்றன. இவற்றைக் கொண்டு இரண்டு கப்பல்களை நீங்கள் சொந்தமாக வாங்கிக் கொள்ளலாம்’ என்றும் கூறினார்.
இதயசந்திரன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்தான். மிஸ்டர் ப்ரௌனும் எழுந்திருந்தார். “உங்கள் பதில்”. என்றும் வினவினார்.
“இதோ பதில்” என்ற இதயசந்திரனின் குரலைத் தொடர்ந்து மின்னல் வேகத்தில் அவன் கை முஷ்டி பிடித்து நீண்டு மிஸ்டர் ப்ரௌனின் முகத்தில் பாய்ந்தது.
மிஸ்டர் ப்ரௌன் நிலை தவறி நாற்காலியில் விழுந்து அது சாய தரையில் உருண்டார். அதே சமயத்தில் இதயசந்திரன் பின்புறமிருந்த டீ காஸ்ட்ரோ தன் கைத் துப்பாக்கியை ஓங்கினான். தமிழன் மண்டைமீது தாக்க. ஓங்கிய கை ஓங்கியபடி நின்றது, “போதும்’ என்ற ஏஸ்லாபியின் குரல் வாயிற்படியில் ஒலித்ததால்.