Jala Deepam Part 3 Ch15 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 15 சளைத்த உடல்கள், சலன சித்தங்கள்
Jala Deepam Part 3 Ch15 | Jala Deepam | TamilNovel.in
மலைப்பாறையின் மறைவு சிருஷ்டித்த மணவரை யில் மகிழ்ந்து இணைந்துவிட்ட காதலர் இருவரும் மறு காலையில் வெவ்வேறு திக்குகளையும் வெவ்வேறு அலுவல் களையும் நோக்கிச் சென்று விட்டார்களென்றாலும், அவ்விருவர் மனங்களும் முந்திய இரவின் இன்ப நினைப்பு களிலேயே ஈடுபட்டுக் கிடந்ததால் அவ்விருவரும் அடுத்த நாள் முழுவதும் சற்றுத் தடுமாற்றத்துடனேயே நடந்து கொண்டார்கள். இரவில், பாறையிலேயே உறங்கிவிட்ட இருவரில், பொழுது புலருவதற்கு வெகு நேரமிருக்கையி லேயே கண் விழித்துவிட்ட மஞ்சு நட்சத்திர ஒளியில் அருகே கிடந்த ஆடவன் மீது கண்களை ஓட்டினாள். அவன் அலுத்துக் களைத்து உறங்குவதைக் கண்டதும் அவள் முகத்தில் ஒரு புதுப் பொலிவும் பெருமையும் துலங்கின. சற்றுத் தடுமாறி எழுந்து உட்கார்ந்து கொண்ட அவள் பல வினாடிகள் தன் முழந்தாளைக் கட்டிக் கொண்டு அந்தக் கட்டிளங்காளையைப் பார்த்த வண்ணமே உட்கார்ந்திருந்தாள். பிறகு மெல்ல ஒரு முறை அவன் உடல் மீது கையை வைத்து உலுக்கிப் பார்த்தாள். அவன் சிறிதும் அசையாமல் அயர்ந்து தூங்குவதைக் கண்டதும் சிறிது புன்முறுவல் கொண்டு தலையை அண்ணாந்து பின்னலைப் பிரித்துக் குழல்களை முடிந்து கொண்டு எழுந்திருந்து பாறைகளில் தன்னந் தனியே நடந்து சென்றாள்.
எத்தனையோ இன்ப எண்ணங்கள் மனத்தில் அலை பாய அந்த எண்ணங்களால் உடல் பலவிதமாய் ஒய்யார அசைவு அசைய, இடை துவள, கால்கள் சரியாக நடக்க முடியாமல் பின்ன, பாறைகளைத் தாண்டிக் கடற்கரைக்கு வந்து, அங்கிருந்த படகொன்றை எடுத்துக் கொண்டு ஜல தீபத்தை நோக்கிச் சென்றாள் மஞ்சு. படகில் துடுப்புகளைத் துழாவியபோதுதான் அவளுக்குத் தன் பூரா அசதியும் தெரிந்தது. பெரிய’ அலைகள் மீது அனாயாசமாகப் படகைச் செலுத்தவல்ல மஞ்சு தனது கைகள் துடுப்புகளைத் துழாவ முடியாமல் தடுமாற்றமடைவதைக் கண்டு வியந்தாள். உடலெங்கும் ஏற்பட்டிருந்த வலியும் அசதியும் அவளுக்கு இன்பமாகவே இருந்ததென்றாலும், படகை ஜல தீபத்தின் அருகில் கொண்டு போய்ச் சேர்க்க முடியாதோ என்ற பேரச்சம் அவளைப் பற்றிக் கொள்ளவே, மூச்சைப் பிடித்துக் கொண்டு துடுப்புகளைத் துழாவி மெள்ளப் படகை ஜல தீபத்திற்குக் கொண்டு வந்து இணைத்து ஏணியில் ஏறித் தளத்தை அடைந்து தனது அறையை நோக்கிச் சென்றாள்.
அப்படி அவள் சென்ற சமயத்தில் உபதலைவன் அறை யிலிருந்து வெளியே வந்த மிஸ் எமிலி அவளை உற்று நோக்கினாள். மஞ்சுவின் துவண்ட இடை, தளர்ந்த நடை, நெகிழ்ந்த ஆடை மூன்றும் முதலிரவின் கதையைச் சந்தேகமற நர்ஸுக்கு உணர்த்தி விட்டதால் அவள் முகத்தில் சற்றே துயரத்தின் ரேகை படர்ந்தது. அத்துடன் மஞ்சு நடந்து சென்ற பாதையில் இருந்த ஒரு விளக்கின் ஒளி அவள் கழுத்தில் படவே கழுத்திலிருந்த மஞ்சள் கயிறு எமிலியின் கண்களுக்குப் புலனாகவே அவள் விஷயத்தைப் பூராவும் புரிந்து கொண்டு சிறிது பெருமூச்சும் எறிந்தாள். பிறகு அழைத்தாள் மஞ்சுவை, ‘அம்மா!” என்று.
மஞ்சுவின் நினைப்பெல்லாம் முந்திய இரவின் நிகழ்ச்சிகளிலிருந்ததால் அவள் காதில் அந்த அழைப்பு விழாத காரணத்தால், அவள் பதிலேதும் சொல்லாமலே நடந்தாள். அதைக் கண்ட எமிலி சற்று அழுத்தமாகவே அழைத்தாள், “அம்மா!” என்று.
தனது அறையை அணுகிக் கொண்டிருந்த மஞ்சு சற்று நின்று திரும்பிப் பார்த்தாள் எமிலியை. “ஏன் எமிலி?” என்று வினவினாள் மேலுக்கு சாதாரணமாக. ஆனால் அவள் உள்ளே சற்று பயம் இருந்தது; பயம் எதற்காக என்று அவளுக்கே புரியவில்லை.
எத்தனை சாதாரணமாக அவள் பதில் கூறினாலும் குரலில் லேசாகத் தொனித்த பயத்தை நொடிப் பொழுதில் உணர்ந்தாள் எமிலி. அந்தப் பயத்தின் காரணம் அவளுக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததால் அதைத் தான் அறிந்து கொண்டதாக வெளியில் காட்டிக் கொள்ளாமல், “இன்னும் பொழுது விடியவில்லையே அம்மா’ என்றாள்.
“ஆம். ஆம். விடியவில்லை ” என்றாள் மஞ்சு.
“இந்த அகாலத்தில் தன்னந்தனியாகவா படகில் வந்தீர்கள்?” என்று வினவிய எமிலி மஞ்சுவை நெருங்கி வந்தாள்.
அவள் நெருங்கிவருவதைக் கண்ட மஞ்சுவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. தவிர, பயமும் அதிகமாயிற்று. அவள் ஏதாவது கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வதென்று திகில் பட்டாள் மஞ்சு. ‘என்ன கண்டு பிடித்து விடுவாள்? இவளிடம் எதற்காக நான் பயப்பட வேண்டும்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண் டாலும் தைரியம் உள்ளத்தில் பிறக்கவில்லை. திருட்டுக் கல்யாணத்துக்கும் பல பேரறியப் பெரியவர்கள் நடத்திக் கொடுக்கும் நல்ல திருமணத்துக்கும் உள்ள வித்தியாசம் அவளுக்கு இப்பொழுது புரிந்தது. ஆனால் ‘இது எப்படித் திருட்டுக் கல்யாணமாகும்! குலாபியின் அனுமதியுடன் நடந்தது, குலாபியின் மஞ்சள் கயிறும். கழுத்திலிருக்கிறதே!’ என்று எண்ணினாள் அவள். இருப்பினும் அவள் மனத்தில் விவரிக்க இயலாத பயம் இருந்ததால் எமிலியை நோக்கி, “என்ன கேட்டாய் எமிலி?” என்று வினவினாள்.
“இந்த அகாலத்தில் தன்னந்தனியாகவா படகில் வந்தீர்கள் என்று கேட்டேன்” என்று எமிலி முகத்தில் பொய்யான அச்சத்தைப் படரவிட்டுக் கொண்டாள்.
“ஆம் எமிலி! தனியாகத்தான் வந்தேன். வந்தாலென்ன?” என்று வினவினாள் மஞ்சு, அசட்டுத் தைரியத்தை முகத்தில் பரப்பிக்கொண்டு.
“என்ன அப்படிக் கேட்கிறீர்கள் தலைவி? இந்த நேரத்தில் பெண்கள் இப்படி வருவது விரும்பத் தக்கதல்ல. ஆமாம், உங்களோடு உபதலைவர் வந்தாரல்லவா?” என்று கேட்டாள் எமிலி கோபத்துடன்.
“ஆம்.” உரமில்லாத குரலில் எழுந்தது பதில், மஞ்சுவிடமிருந்து.
“அவர் எங்கே?”
“அவர். அவர்… எனக்கெப்படித் தெரியும்?”
“உங்களுடன் தானே வந்தார்?”
“ஆமாம் வந்தார், கொலாபா கோட்டையில் பிரிந்து விட்டார்.”
இதைக் கேட்ட எமிலி நகைத்தாள். “பிரிந்து விட்டாரா. உங்களை விட்டா?” என்று வினவினாள் விஷமத்துடன்.
மஞ்சுவுக்குக் கோபம் துளிர்த்தது உள்ளத்தில். துருவித் துருவி என்னைக் கேட்க இவள் யார் என்று எண்ணினாள். இருப்பினும் அதைக் கேட்க முடியாமல், “ஏன் என்னை விட்டுப் பிரிந்து விட்டாலென்ன?’ என்று வினவினாள்.
மிஸ் எமிலியின் கண்கள் மஞ்சுவை நன்றாக அளவெடுத்தன. “பிரியலாம். ஆனால் பிரிந்ததாகத் தெரிய வில்லை” என்றாள் மெல்ல அவளை நெருங்கி, அவள் தோள் மேல் கையை வைத்து.
மஞ்சுவின் விழிகள் நெருப்பைக் கக்கின. ‘எப்படித் தெரியும் உனக்கு?” என்று கேட்டாள் குரலிலும் கனல் தெறிக்க.
பதிலுக்கு மிகுந்த துணிவைக் காட்டினாள் எமிலி. ”மஞ்சு!” என்று பெயர் சொல்லியே அழைத்து, “பின்னிய கூந்தலை அவிழ்த்துக் கட்டியிருக்கிறாய்?” என்று கூறி வாசகத்தை முடிக்காமல் விட்டாள்.
“அதனாலென்ன; தலை சிறிது கலைந்து சிக்கி விட்டது” என்று மஞ்சு பதில் சொன்னாள்.
மிஸ் எமிலி லேசாக நகைத்தாள். “அப்படித்தான் கலையும் மஞ்சு. அது மட்டுமல்ல, சேலையும் கலைந்திருக் கிறது. போய்ச் சரியாகக் கட்டிக்கொள்” என்று கூறிவிட்டு மறுபடியும உபதலைவன் அறையை நோக்கி நடந்தாள். மஞ்சு அவள் செல்வதைப் பார்த்துக்கொண்டு நின்றாள் சில விநாடிகள். அவள் அப்படி நிற்பதைப் பார்த்துவிட்ட பர்னாண்டோ அவளை நாடி வந்து, “ஏதாவது தேவையா தலைவி?” என்று வினவினான்.
“ஆம்.”
“கட்டளையிடுங்கள்.”
“உன் வேலையைப் போய்க் கவனி.”
”உங்களுக்கு ஏதோ தேவையென்று சொன்னீர்களே?”
“சொன்னேன்.”
“என்ன தேவை?”
“ஓய்வு” என்று எரிந்து விழுந்த மஞ்சு, தனது அறைக்குள் சென்று கதவைத் தடாலென்று அவன் முகத்தில் சாத்தினாள். அவள் போக்குப் பெரும் புதிராயிருந்தது பர்னாண்டோவுக்கு. எதற்காகத் தன்மீது அவள் எரிந்து விழுந்தாளென்பது புரியாததால் குழப்பத்துடன் திரும்பத் தானிருக்க வேண்டிய இடத்துக்குச் சென்றான்.
அறைக்குச் சென்று கதவைச் சாத்திக்கொண்ட மஞ்சு தடாலென்று பஞ்சணையில் விழுந்தாள். மிக மிருதுவா யிருந்த பஞ்சணையில் அத்தனை இன்பமில்லாததைக் கவனித்தாள். முரடான அந்த மலைப் பாறையிலேயே சாய்ந்திருந்ததை உணர்ந்து சிரித்துக்கொண்டாள் உள்ளூர. தன்னுடைய மாறிய நிலையை நினைத்து ஒரு வழியில் பெருமிதமும் இன்னொரு விதத்தில் பயமும் கொண்டாள். தன்னைப்பற்றி ஏற்பட்டது பெருமிதம், உலகத்தைப் பற்றி ஏற்பட்டது பயம் என்பதையும் புரிந்து கொண்டாள். ‘இதென்ன உலகம்! என்னையே பயமுறுத்தும் உலகம்!” என்றும் அலுத்துக் கொண்டாள்.
ஆனால் அதே சமயத்தில் பாறையில் கண் விழித்துக் கொண்ட இயதசந்திரன். மனத்தில் அத்தகைய அலுப்பு ஏதுமில்லை. உலகத்தின் முறையில் இன்பத்தையே கண்டான். அவன் உள்ளத்தில் ஆனந்தத்தின் பூர்த்தி இருந்தது. புது அனுபவத்தின் சந்துஷ்டி இருந்தது. அதில் ஆனந்தத்தின் பூர்த்தியிருந்தாலும், அனுபவத்தின் பூர்த்தி ஆரம்பத்தில் ஏற்படுவதில்லையென்பதையும் நாளா வட்டத்தில் தான் அது ஏற்படுமென்பதையும் உணர்ந்து கொண்டான். இருப்பினும் சந்துஷ்டியையும் இஷ்ட பூர்த்தியையும் அளித்த பவானியை மனத்தால் வணங்கினான். பிறகு திரும்பி மஞ்சுவைத் தேடினான். அவள் காணாததைக் கண்டு ஒருகணம் திகைத்தான், மறுகணம் புன்முறுவல் கொண்டான். பின் தூங்கி முன்னெழுவது கற்புடைய மகளின் ஒழுக்கு என்ற தமிழகப் பழமொழியை நினைத்து, “எனக்கேற்ற மனைவி இவள்” என்று ஒருமுறை சொல்லிக் கொண்டான். அதைச் சொல்லிக் கொள்வதிலேயே அவனுக்கு இன்பமிருந்தது.
அந்த இன்பத்துடன் எழுந்திருந்து பாறையில் அங்கு மிங்குமாக நடந்தான். பிறகு தோர்லாவாடாவை நோக்கிச் சென்று அதன் படிகளில் ஏறி, தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த தனியறைக்குச் சென்று படுத்துக் கொண்டான்.
படுத்த பின்பு தூக்கம் வரவில்லையென்றாலும் வலுக்கட்டாயமாகக் கண்களை மூடிக் கொண்டிருந்தான். கண்களை மூடிவிட்டதால் ஒரு மனிதனுக்குச் சாந்தி கிடைப்பதில்லையென்பதை அன்று அவன் சந்தேகமறப் புரிந்து கொண்டான்.
கண்களை மூடியதும் அவன் கண்கள் முன்பு மஞ்சு எழுந்தாள். மெல்லப் புன்முறுவல் கோட்டினாள். அவன் கைகளில் சுழன்றாள். ‘அப்பப்பா! அந்தக் கூந்தல் தான் எத்தனை வாசனை! பச்சைக் கற்பூர வாசனையுடன் கூடிய குலாபியின் அந்த மஞ்சள் கயிற்றின் நறுமணம் எத்தனை மயக்கம் தருகிறது! ஆம். எதற்காக மஞ்சு எனக்கு மூதுகையே காட்டி நிற்கிறாள்? அவள் வெண்மைக் கழுத்தை நான் பார்க்கவா? அல்லது கைகளைப் பிடித்து நான் திருப்பவா? இப்படித் திரும்பு மஞ்சு’ என்று இப்படி யெல்லாம் நடந்தது நாடகம் அவன் சித்தத்தில். வேறு பல நிகழ்ச்சிகளும் எழுந்தன. அவன் அனுபவம் அது, சொல்லுக்கு அப்பாற்பட்டது, எழுத்துக்கு ஒவ்வாதது.
இப்படி நினைத்து நினைத்து நன்றாக விடியும்வரை காலங் கழித்த தமிழக வீரன் கடற்கரை சென்று நீராட்டத்தை முடித்துக்கொண்டு தோர்லாவாடா திரும்பி னான். தனது உடையை அணிந்து சிற்றுண்டியும் அருந்தினான். அவன் சிற்றுண்டி அருந்தி முடிப்பதற்கும் கனோஜியிடமிருந்து அழைப்பு வருவதற்கும் நேரம் சரியாயிருந்தது. “உபதளபதி! வரலாமா?’ என்று கேட்டு, பதிலுக்குக் காத்திராமல் உள்ளே நுழைந்த வீரனொருவன், “ஸார்கேல் தங்களை உடனே பார்க்க விரும்புகிறார். முழு ராணுவ உடையணிந்து வரும்படி உத்தரவு” என்று கூறினான்.
“ஸார்கேல் எங்கிருக்கிறார்?” என்று வினவினான் இதயசந்திரன்.
“மந்திராலோசனை அறையில்.”
“வேறு யார் வந்திருக்கிறார்கள்?”
“தெரியாது. அறை சாத்தியிருக்கிறது. கதவைப் பாதி திறந்து கனோஜி அறிவித்தார் உத்தரவை.”
வீரன் பதிலிலிருந்து ஏதோ முக்கியமான தகவல் தளபதிக்கு எட்டியிருக்கிறதென்பதைப் புரிந்துகொண்ட இதயசந்திரன் மேற்கொண்டு ஏதும் பேசாமல் வீரனை அனுப்பிவிட்டு, துரிதமாக ராணுவ உடை அணிந்து புறப்பட்டான். ஸார்கேலின் மந்திராலோசனை அறையில் அவனுக்குப் பெருவியப்பு காத்திருந்தது. கனோஜியின் புதல்வர்களும் மாபெரும் கடல் வீரர்களுமான சேகோஜி, மானாஜி இவர்களைத் தவிர நாலைந்து உபதலைவர்களும் அறையிலிருந்தார்கள். இவர்களைத் தவிர, அறவே ராணுவ உடையணியாத வெள்ளைக்காரர் ஒருவரும் அங்கிருந்தார்.
இதயசந்திரன் உள்ளே நுழைந்ததும் பெரிய மேஜையின் நடுவில் அமர்ந்திருந்த ஸார்கேல், இதயசந்திரனைச் சுட்டிக் காட்டி, “என் தரைப்படையின் உபதலைவர் இதயசந்திரன்,” என்று வெள்ளைக்காரருக்கு அறிமுகப்படுத்தினார். “இவர் தான் கவர்னர் ஏஸ்லாபியின் தூதர்,” என்று வெள்ளைக்காரரையும் சுட்டிக்காட்டினார் ஸார்கேல். அடுத்து மேற்கொண்டு ஏதும் பேசாமல், “உங்கள் நிபந்தனைகளைச் சொல்லுங்கள்’ என்ற ஸார்கேல் பக்கத்தில் நின்றிருந்த பரஸ்னிஸை நோக்கி, “அவர் சொல்வதை மொழி பெயர்த்துச் சொல்” என்றார்.
கவர்னரின் தூதர் தமது தோல் கச்சையிலிருந்து கவர்னரின் கடிதத்தை எடுத்து பரஸ்னிஸிடம் கொடுத்து, “நீங்களே படித்து மொழிபெயர்த்துச் சொல்லுங்கள்” என்று ஆங்கிலத்தில் கூறினார்.
பரஸ்னிஸ் மொழி பெயர்த்தார். அந்த மொழி பெயர்ப்பைக் கேட்கக் கேட்க ஸார்கேலின் முகம் கறுத்தது. அந்தத் தூதுச் செய்தியில் சில இடங்கள் தான் இதய சந்திரன் காதில் விழுந்தன. மீதி இடங்களை முந்திய இரவு நிகழ்ச்சிகள் ஆக்ரமித்துக் கொண்டிருந்தன. ஆகவே, தூதுச் செய்தியைப் படித்து முடிந்ததும், “இதயசந்திரா! இது என்ன?’ என்று எதற்கும் சீற்றத்தைக் காட்டாத ஸார்கேல் சீற்றத்தைக் காட்டினார்.
திடீரென்று முந்திய நாளிரவுக் கனவுகளிலிருந்து விழித்துக் கொண்ட இதயசந்திரன், “ஏன்? என்ன?” என்று வினவினான்.
“என்னவா?” ஸார்கேல் குரலில் ஆத்திரமிருந்தது.
“என்ன?” என்றான் மீண்டும் இதயசந்திரன் குழப்பத்துடன்.
“நீ எங்கிருக்கிறாய் இதயசந்திரா?” என்று வினவினார் ஸார்கேல்.
“இங்குதானிருக்கிறேன்” என்று சமாளித்துச் சரியாக எழுந்து உட்கார்ந்த இதயசந்திரன், “இன்னொரு முறை நிபந்தனைகளைப் படிக்கச் சொல்லுங்கள்” என்றான்.
கனோஜி கண்காட்ட பரஸ்னிஸ் நிபந்தனைகளைப் படித்தார். நிபந்தனைகள் மிகக் கடுமையாயிருந்தன. ஆயுதசப்ளை செய்யவும் மாலுமிகளைப் பம்பாயில் திரட்டவும் ஏஸ்லாபி அனுமதி கொடுத்திருந்தாலும் கப்பல் போக்குவரத்து சம்பந்தமான நிபந்தனைகள் மிகக் கடுமையாயிருந்தன. ஏற்கனவே பிடிக்கப்பட்ட பிரிட்டிஷ் கப்பல்களுக்கும், பொருள்களுக்கும்கூட நஷ்ட ஈடு கேட்டிருந்தார் கவர்னர்.
இதயசந்திரன் அந்த நிபந்தனைகளைப்பற்றிச் சிந்தித்து விட்டு கவர்னரின் தூதுவரை நோக்கி அரைகுறை ஆங்கிலத்தில் கேட்டான், “இந்தக் கடிதம் வருவது மிஸ்டர் ப்ரெளனுக்குத் தெரியுமா?” என்று.
“தெரியும். கவுன்ஸிலில் வைத்துத் தீர்மானிக்கப் பட்டது” என்றார் தூதர்.
“இந்தக் கடிதத்தில் இல்லாத செய்தி ஏதாவது உண்டா கவர்னரிடமிருந்து?” என்று வினவினான் இதய சந்திரன்.
“இதை ஒப்புக்கொள்ளும்படி உங்களிடம் சொல்லச் சொன்னார். காரணம் உங்களுக்குத் தெரியும் என்று கூறினார்” என்று விளக்கினார் தூதர், முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல்.
“இதை ஒப்புக் கொள்ளலாம் ஸார்கேல்” என்று கூறினான் இதயசந்திரன் ஆங்கரேயை நோக்கி.
ஆங்கரேயின் முகத்தில் விவரிக்க இயலாத ஏதோ ஒரு சிந்தனைச் சாயை படர்ந்தது. “சரி, ஒப்புக் கொள்வோம்” என்ற அவர் குரலில் உறுதியிருந்தது.
அவர் முடிவு அறிவிக்கப்பட்டதும் கவர்னரின் தூதர் அந்த அறையைவிட்டு வெளியே சென்றார். தமது புதல்வர் களுக்கும் பரஸ்னிஸுக்கும் போக அனுமதி கொடுத்த கனோஜி, கவர்னரின் கடிதத்தை மேஜ்ைமீது வைத்து அது காற்றில் பறக்காதிருக்கத் தமது குறுவாளை அதன் நடுவில் செங்குத்தாகக் குத்தி வைத்தார். கடைசியாக இருவரும் தனிமையிலிருந்தபோது கனோஜி ஆங்கரே இதய சந்திரனை நோக்கிக் கேட்டார், “உடல்நிலை சரியாயில்லையா உனக்கு” என்று.
“சரியாயிருக்கிறது” என்றான் இதயசந்திரன்.
“மன நிலை?”
“ஏன்? அதற்கென்ன?”
”அது சரியில்லை.”
“எப்படிச் சொல்கிறீர்கள்?”
இதற்குப் பதில் கூறவில்லை கனோஜி பல விநாடிகள். கடைசியாக ஒரு கேள்வி கேட்டார்: “நேற்றிரவு நீ’ எங்கிருந்தாய்?” என்று.