Jala Deepam Part 3 Ch17 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 17 பழையன கழிதலும் புதியன புகுதலும்
Jala Deepam Part 3 Ch17 | Jala Deepam | TamilNovel.in
மகாராஷ்டிர சாம்ராஜ்யாதிபதியான ஷாஹுவின் பேஷ்வா பாஹிராவ் பிங்களேயை முறியடிக்க ஸார்கேல் கனோஜி ஆங்கரே விவரித்த திட்டத்தைக் கேட்டதும் வியப்பால் வாயைப் பிளந்தான் இதயசந்திரன். திட்டம் துணிகரமாகவும் இருந்தது, தெளிவாகவும் இருந்தது, வெற்றி சந்தேகமில்லையென்பதை நிரூபிக்கும் வகையிலும் இருந்தது. ஸார்கேல் தமது திட்டத்தை விவரிக்கத் துவங்குமுன்பு ஒரு கேள்வியைப் போட்டுகொண்டு துவங்கினார். ”தமிழா! ஒரு சிங்கத்தைப் பிடிக்க நீ என்ன செய்வாய்?” என்று வினவினார் ஆரம்பத்தில்.
“பெரும் வலையைத் தயார் செய்வேன்” என்று பதில் கூறினான் இதயசந்திரன், அவர் கேள்வி அவர் விவரணத்துக்குப் பூர்வாங்கமென்பதை உணர்ந்து.
“பிறகு?” என்று அடுத்த கேள்வி எழுந்தது ஸார்கேலிடமிருந்து.
சிங்கத்தைப் பிடிக்கும் வழிகள் சகலத்தையும் தான் சொல்லியாக வேண்டுமென்று புரிந்து கொண்ட தமிழக வீரன் விடுவிடுவென்று கூறினான்: “வலையைச் சிங்கத்தின் கண்களுக்குப் புலப்படாமல் தரையில் விரிப்பேன். அதைத் திடீரென்று தூக்கும் கயிறுகளைப் பக்கப்புதர்களில் செலுத்தி மரக்கிளைகளில் கட்டுவேன். சிங்கம் வலைப் பகுதியில் கால் வைத்ததும் கயிறுகள் இழுக்கப்படும், வலை எழுந்து கண்மூடி கண் திறப்பதற்குள் சிங்கம் வலையில் சிக்கிவிடும்.”
பலே என்று அவன் விவரித்ததைக் கேட்டுச் சிலாகித்த கனோஜி ஆங்கரே, ”நமது திட்டமும் மகாராஜா விஷயத்தில் அதுதான். ரகசியமான வலை தரையில் விரிக்கப்படும். அது விரிக்கப்பட்டிருப்பது தெரியாமலே பிங்களே அதன் எல்லைக்குள் நுழைந்து காலை வைக்கவேண்டும். பிறகு கயிறு இழுக்கப்படும்” என்றார்.
தான் சொன்னதை அப்படியே திருப்பிச் சொல்வதில் என்ன பொருளிருக்கிறது என்று புரியவில்லை இதய சந்திரனுக்கு. ஆகவே கேட்டான், “வலை எது? எப்படி மறைந்திருக்கும்? எப்படிக் கயிறுகள் இழுக்கப்படும்” என்று.
கனோஜி ஆங்கரே தமது ஆசனத்தை விட்டுத் திடீரென எழுந்து ஓர் அலமாரியிலிருந்த பெரிய மகாராஷ்டிர நாட்டுப் படத்தை எடுத்து மேஜைமீது விரித்தார். “இப்படி வா” என்று இதயசந்திரனை அழைத்து, “இதைப் பார்” என்று கூறினார். இதயசந்திரன் தானிருந்த இடத்திலிருந்து எழுந்து மேஜையைச் சுற்றிச் சென்று ஸார்கேலின் பக்கத்தில் நின்றுகொண்டான். ஸார்கேல் அந்தப் படத்தில் தனது ஆள்காட்டி விரலால் சில இடங்களைத் தொட்டுக் காட்டினார். “நாம் இருக்கிறோம். இங்கிருந்து ஸதாரா எங்கிருக்கிறது பார்” என்றும் சொன்னார்.
இதயசந்திரன் நாட்டுப் படத்தை நன்றாக நோக்கி னான். அவரது கைவிரல்கள் சென்ற இடங்களையும் கவனித்தான். அவர் கேட்ட கேள்விக்கும் பதில் சொன்னான்: “கொலாபாவிலிருந்து நேர் தென்கிழக்கில் இருக்கிறது ஸதாரா” என்று.
“ஸதாராவிலிருந்து பிங்களே கிளம்பிவிட்டதாகத் தெரிகிறது” என்று மேலும் கூறிய கனோஜி, “அவர் இந்த மார்க்கத்தில்தான் வரவேண்டும்” என்று சொல்லி விரலால் அந்தப் பாதையையும் இழுத்துக் காட்டினார்.
“ஆம். அது தான் வழி. வேறு வழியில்லையே” என்றான் இதயசந்திரன்.
“வேறு வழி இருக்கிறது.”
“எங்கிருக்கிறது?”
“ஸதாராவிலிருந்து சுவர்ண துர்க்கம் வந்து மலை வழி வரலாம்.”
”அது கடினமாயிற்றே.” ”கடினம் தான். ஆனால் அந்த வழியில் யாருமறியாமல் வரலாம். ஆனால் பிங்களே படாடோபத்துடன் பலரறியக் கிளம்பியிருக்கிறார். அவர் புறப்பாடு முன்னதாக அறிவிக்கப்பட்டு, மங்கையர் திலகமிட., மேளதாளங்கள் முழங்க, மாலை போட்டுக் கொண்டு மாப்பிள்ளை புறப்படுவது போல் கிளம்பியிருக்கிறார் பிங்களே. புறப்பட்டு சம்பிரதாய வழியான பூனா மார்க்கம், அங்கிருந்து பம்பாய் வழியான காட்மார்க்கம், இப்படிப் பவனி வரப் போகிறார் படையுடன்” என்று ஆங்கரே நகைத்தார்.
“ஏன் நகைக்கிறீர்கள்?” என்று வினவினான் இதய சந்திரன்.
கனோஜி மீண்டும் நாட்டுப் படத்தை உற்றுப் பார்த்தார். “பிங்களே மட்டும் படைகளை இரு பிரிவாகப் பிரித்து, ஒன்றைப் பகிரங்கமாகப் பூனா பம்பாய் ரஸ்தா விலும் இன்னொன்றை மலைக்காட்டு வழியிலும் செலுத்தியிருந்தால், ஆலிபாக்கில் நம்மை இருவழியிலும் தாக்கலாம். நல்ல வேளை பிங்களேயைப் படைத்த ஆண்டவன் அவருக்கு மூளையைப் படைக்கவில்லை” என்று சற்று இரைந்து கூறிக் கொண்டார். மேலும் அவரே பேசிக் கொண்டார்: “பிங்களேயின் படை பிரதான ரஸ்தாவில் பவனி வருகிறது. ஆகவே நாம் குறுக்கு வழியாகச் செல்வோம். சென்று இந்த இடத்தைக் கைப்பற்றுவோம். பிறகு இப்படிச் சென்றால் உச்சியிலிருப்போம்…” இப்படிச் சொல்லி நிறுத்தி மீண்டும் சிந்தனையில் இறங்கினார்.
அவர் கைவிரல் சென்ற மார்க்கங்களைக் கவனித்த, இதயசந்திரன், அவர் போர்த் தந்திரத்தை நினைத்துப் பெருவியப்பு அடைந்தான். சற்று நேரம் கழித்து அவர் சிந்தனையிலிருந்து மீண்டு, “உபதளபதி! புரிகிறதா உனக்கு?” என்றார்.
“புரிகிறது ஸார்கேல்” என்றான் இதயசந்திரன்.
“என்ன புரிகிறது? சொல் பார்ப்போம்” என்று கேட்டார் ஸார்கேல்.
மேஜை மீதிருந்த படத்தைத் தன்னை நோக்கி இழுத்துக் கொண்ட இதயசந்திரன் அவர் விரல் வைத்த. இடங்களில் தானும் விரலை வைத்துக் காட்டினான். “இங்கிருப்பது கொலாபா. இங்கிருந்து தென்கிழக்கில் ஸதாராவும், வடமேற்கில் பம்பாயுமிருக்கின்றன. ஸதாராவிலிருந்து பூனா வந்து நேராக பம்பாய் மார்க்கத் தில் நம்மை நோக்கி வருவது பிங்களேயின் திட்டம். அவர் திட்டத்தை நாம் கத்தரிப்போம், இந்த இடத்தில்” என்று ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டினான் தமிழன்.
“பேஷ் பேஷ். அந்த இடம் எது தெரியுமா?” என்று கேட்டார் ஆங்கரே.
“கல்யாண்” என்றான் தமிழன்.
“அங்கு ஒரு கோட்டையிருக்கிறது” என்று சுட்டிக் காட்டினார் ஆங்கரே.
இதயசந்திரன் தொடர்ந்து கூறினான், “ஆம். பிங்களேயைக் கொங்கணிக்குள் வரவிட்டுக் கல்யாண் கோட்டையை நாம் பிடித்துக்கொண்டால் பிங்களேக்கும் ஸதாராவுக்கும் இடையில் ஒரு கத்தி செருகப்படும். அவரது படைகள் தலைநகரப் பாறையிலிருந்து: துண்டிக்கப்படும்” என்று.
“பலே பலே.” கனோஜியின் உற்சாகம் அதிகரித்தது.
“பிறகு நீங்கள் அங்கிருந்து ராஜ்மச்சிக் கோட்டையைப் பிடிக்கலாம்.”
“உம்.”
“அது காட்மாதாவின் உச்சியிலிருக்கிறது.”
“உம்.”
“அங்கிருந்து கொங்கணியையே பார்க்க முடியும்.”
“ஆம்.”
“அதையும் பிடித்துவிட்டால் பிங்களேயும், அவர் படைகளும் சிறைப்பட்ட மாதிரி.”
“பலே தமிழா பலே’ என்று கூறிய ஆங்கரே ஆர்வ மிகுதியால் அவன் முதுகில் பேயறையாக அறைந்தார் தமது பெரும் கரத்தைக் கொண்டு.
பெருவலியால் முகத்தைச் சுளித்துக் கொண்ட இதய சந்திரன் தலை நிமிர்ந்து, ”அது எல்லாம் சரி! ஆனால் நமது படைகளை எப்படி ரகசியமாக நடத்திக்கொண்டு போக முடியும் வலை விரிப்பது. போல்?” என்று வினவினான்.
கனோஜி ஆங்கரே அதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சிறிது யோசித்துவிட்டு, “வா, அதையும் காட்டுகிறேன்” என்று கூறி அவனையும் அழைத்துக் கொண்டு தோர்லாவாடாவை விட்டுக் கிளம்பினார். இருவருமாகப் புறப்பட்டுக் கொலாபாவிலிருந்து படகு மூலம் ஆலிபாவுக்கு வந்ததும் புரவிகளிலேறிப் படைமுனை முகாமுக்குச் சென்றனர்.
தரையில் அவர்கள் கால்வைத்த இடத்திலிருந்து புரவி வீரர்கள் காவலிருந்தது. உதிரி உதிரியாகப் பல இடங்களில் கண்ணுக்கு எட்டும் தூரம் மட்டும் சிறுசிறு கூடாரங் கள் தெரிந்தன. கூடாரங்களை அடுத்தடுத்து இருந்த காடுகளில் வீரர்கள் படுத்தும் சூதாடிக் கொண்டு மிருந்தார்கள். அவர்களில் சிலர் மாலுமிகளென்பதும், சிலரே தரைப் படை வீரர்களென்பதையும் கவனித்தான் இதயசந்திரன். இருவரும் புரவியில் பாதை நெடுகப் பயணம் செய்தபோது இடையிடையே ஒவ்வொரு புரவி வீரர் வந்து ஏதோ செய்திகளை ஆங்கரேயிடம் சொல்லி விட்டுப் போனதையும் கண்டான் இதயசந்திரன். முதலில் ஒரு சிறு கூடாரத்தை அவர்கள் அணுகியதும் எந்தவித அறிவிப்புமில்லாமலே அக்கூடாரத்திலிருந்த உப தலைவன் வெளியே வந்து ஆங்கரேயையும் உபதளபதியையும் வணங்கி நின்றான். ஆங்கரே அவனிடம் ஏதும் பேசாமலே புரவியை நடத்திச் சென்றார்.
ஆங்கரேயுடன் அன்று பகல் பூராவும் பயணம் செய்த இதயசந்திரன், தான் பம்பாய்க்குப் போகுமுன்பு இருந்த படையைவிட நான்கு மடங்கு படையை ஆங்கரே தயாரித்துவிட்டதை உணர்ந்ததால், ஷாஹுவுக்குப் பதில் ஸார்கேல் மகாராஷ்டிரத்தின் மன்னராக இல்லாதது மகாராஷ்டிரத்தின் துர்பாக்கியம் என்றே எண்ணினான். அவர்கள் பார்த்த இடங்களிலெல்லாம் இருந்த படைப் பிரிவுகளிலிருந்தவர்கள் சரியாகப் பயிற்சி பெறாதவர் களென்றாலும் பெரு வீரர்களென்பதையும், வாட் போரிலும் துப்பாக்கிப் பிரயோகத்திலும் இணையற்றவர் களென்பதையும் இதயசந்திரன் சந்தேகமறப் புரிந்து கொண்டான். இப்படிப்பட்ட மலைவாசிகள், பலதரப் பட்ட குணங்களுள்ளவர்களை, ஒரு கட்டுப்பாட்டுக்கும் உட்படாதவர்களை, சிவாஜி மகாராஜா எப்படி ஒழுங்கு செய்து கட்டுப்பாடுள்ள பெரிய ராணுவமாக்கினார் என்று வியந்தான் தமிழன். சிவாஜிக்குப் பிறகு அந்தத் திறமை கனோஜிக்குத்தான் இருக்கிறதென்பதிலும் சந்தேகமில்லை அவனுக்கு.
அந்தச் சந்தேகமற்ற உறுதியான உள்ளத்துடன் அன்று அந்தப் படைத்தளத்தைப் பார்த்த அவன் அவர்கள் இயங்குவதைப் பார்க்கவும் முடிந்தது மாலையில். மாலை நேரம் வந்ததும் படையின் நடுப்பகுதியில் வந்த கனோஜி புரவியை நிறுத்தித் தமது கச்சையிலிருந்த கைத் துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தில் இருமுறை சுட்டார். திடீரென எதிரேயிருந்த காடுகளில் சரசரவென்ற ஒலி கிளம்பியது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஐந்நூறு புரவி வீரர் கொண்ட படை வெகு துரிதமாக அவர்களை நோக்கி வந்தது. காது செவிபடும் குளம்பொலிகளுடன் காற்றைப்போல் வந்த அந்தப் புரவிப்படை ஆங்கரேக்குச் சற்று முன்னதாகவே பட்டென்று நின்றது.
“படையின் சிறு பகுதி இது. இதை அழைக்க இதுதான் முறை’ என்ற கனோஜி, இதயசந்திரனை நோக்கினார்.
இதயசந்திரன் முகம் பிரமை தட்டிக் கிடந்தது. அதைக் கண்ட ஆங்கரே மெல்ல நகைத்தார். அவர் நகைத்ததால் பிரமையிலிருந்து மீண்ட இதயசந்திரன், “இவர் சுபேதாரா?” என்றான் அந்தப் புரவிப் படைத். தலைவனைச் சுட்டிக் காட்டி.
“இல்லை ” என்றார் அவர்.
“பின் இவர்?” என்று வினவினான் வியப்புடன் இதயசந்திரன்.
“அந்தப் பழைய முறையை மாற்றிவிட்டேன்” என்றார் ஆங்கரே.
“சம்பிரதாய முறையையா? சிவாஜி மகாராஜா வகுத்த முறையையா?” என்று வினவினான் தமிழன்.
”ஆம். சில சம்பிரதாயங்கள் உடைக்கத் தகுந்தவை” என்ற கனோஜி, வந்த குதிரைப் படையைப் பிரிந்து போகச் சொல்லிவிட்டுக் காடுகளிலிருந்த பீரங்கிப் படை முதலிய வற்றையும் இதயசந்திரனுக்குக் காட்டிவிட்டு இரவு சூழ்ந்ததும் கொலாபாவுக்குத் திரும்பினார்.
அன்று பகல் பூராவும் இருவரும் சரியாக உண்ணாத தாலும், ஆங்காங்குப் படைத்தளத்திலிருந்த உணவுகளை லேசாக உண்டதாலும், மிகக் களைத்திருந்தனர். ஆகவே
ஆடு கோழி இறைச்சிகளுடன் கூடிய ஆகாரத்தையும் சப்பாத்திகளில் சுமார் இருபத்தைந்தையும் விழுங்கிய பிறகு நீரை மடமடவென்று குடித்தார் கனோஜி. ராட்சசன் போல் அவர் உணவு உண்டதைப் பார்த்த இதயசந்திரன், ‘இதனால்தான் பகல் முழுவதும் இந்த மனிதனால் திரியமுடிகிறது லட்சியமில்லாமல்’ என்று தனக்குள் கூறிக்கொண்டான்.
உணவை முடித்துக்கொண்டதும் கனோஜி சொன் னார்: “இதயசந்திரா! எதையும் சரியாகச் செய்ய வேண்டும், குறைவற ஆகாரமுண்பவன் குறைவற சகலத்தையும் செய்கிறான்” என்று. பிறகு சட்டென்று படைப் பிரிவுகளைப் பற்றிய விஷயத்துக்கு வந்தார். “இன்று படைப் பிரிவுகளைப்பற்றி ஏதோ கூறினாயே?” என்று வினவினார்.
இதயசந்திரன் சொன்னான், “படைப்பிரிவு பழைய முறையில் இருக்குமென்று நினைத்தேன்’ என்று. ”பழைய முறை எது?” என்று கேட்டார் ஸார்கேல்.
“சிவாஜி மகாராஜாவின் முறை, எங்கள் தஞ்சையிலும் அம்முறைதான் கையாளப்படுகிறது” என்றான் இதய சந்திரன். அத்துடன் அந்த முறையையும் விவரித்தான். “ஸார்கேல்! சிவாஜி மொகலாயர் பலத்தை உடைத்தவர். தனி ராஜ்யத்தை மகாராஷ்டிரர்களுக்குச் சிருஷ்டித்தவர். அந்த முறையைத் தவறென்று சொல்லமுடியாது” என்ற பூர்வாங்கத்துடன் சொன்னான். “சிவாஜி மகாராஜா 25 புரவி வீரர்களுக்கு ஒரு ஹவில்தாரையும் 125 பேர் கொண்ட புரவிப் படைக்கு ஒரு ஜூம்லாதாரையும் ஐந்து ஜூம்லாக்களுக்கு அதாவது 625 குதிரை வீரர்களுக்கு ஒரு சுபேதாரையும் நியமித்திருந்தார். 6250 வீரர்களுக்கு அதாவது ஐந்து சுபேதார்களுக்கு ஒரு பஞ்ச் ஹுஸ்ரியிருந்தார். 6250 வீரர்கள் ஐயாயிரம் வீரர்களாகக் கணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதால் அவருக்கு பஞ்ச் ஹுஸ்ரி எனப் பெயர் இருந்தது. அந்த பஞ்ச் ஹுஸ்ரியுடன் ஒரு மஜும்தார் அதாவது ஒரு பிராம்மணக் கணக்கு ஆய்வாளரும் இருந்தார். அந்த இருவருடன் கணக்குப் பதிவாளரான அமீன் ஒருவரும் இருந்தார். ஸர்னபோத் என்பவர் பிரதம தளபதி. குதிரைப்படைக்கு ஒரு ஸர்ன போத்தும் காலாட் படைக்கு ஒரு ஸர்ன போத்தும் உண்டு. இப்படிப் படை பிரிக்கப்பட்டதால் அதன் இயக்குமுறையில் திட்டமும், கணக்கு விவகாரங்களும் ஒழுங்காயிருந்தன.
இந்த விவரங்களை நிதானமாகக் கேட்டுக் கொண்ட கனோஜி, மகாராஷ்டிரப் படை அமைப்பு முறைகளை நன்றாகக் கற்றிருக்கிறாய் தமிழா!” என்று சிலாகித்தார். அத்துடன் கூறினார்: ”தமிழா! சிவாஜி மகாராஜா ஓர் அவதார புருஷர். எப்போதோ ஒரு முறை நாட்டுக்காகப் பிறக்கும் அபூர்வப் பிறவிகளில் ஒருவர். அவர் படைப் பகுப்புமுறை முக்காலும் மொகலாயர் படையமைப்பு முறையைப் பின்பற்றியது. தரைப்படைக்கு அது சரியாக இருக்கலாம். ஆனால் இந்த காலத்துக்கும் மாலுமிகளையும் புரவி வீரர்களையும் காட்டுவாசிகளையும் கொண்ட கலப்படமான படைக்கும் அது சரியாகாது. ஆகையால் நான் அந்த முறையைச் சற்று மாற்றிவிட்டேன்’ என்றவர், “உங்கள் நாட்டில் புதுமையைப் புகுத்துவது பற்றி ஏதோ பழமொழி சொல்வதாகக் கேள்வி’ என்றும் கேட்டார் முடிவில்.
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்றான் தமிழன்… அதன் பொருளையும் விளக்கினான்.
“அது தான் சரி” என்ற ஸார்கேல், தமது படை யமைப்பு முறையை மெள்ள மெள்ள விவரிக்கத் தொடங்கினார் தமிழனுக்கு.