Jala Deepam Part 3 Ch21 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 21 உரிமையுள்ளவள்
Jala Deepam Part 3 Ch21 | Jala Deepam | TamilNovel.in
இரட்டைக் குதிரை வண்டியிலிருந்து குதித்த எமிலி முழங்காலுக்கு மேல் தொடையின் அரைப் பாகம் வரை ஏறியிருந்த மஞ்சள் நிறக் கௌனுடனும், கழுத்திலிருந்து மார்புவரை அர்த்த சந்திர வடிவமாக வெட்டி விடப்பட்ட கௌனின் மேற்பகுதியுடனும், அறவே கையில்லாததால் தோள்களை மட்டுமே தழுவி நின்ற உடையின் பக்கப் பகுதிகளுடனும், தனது கூடாரத்தை நோக்கி வெகு சுந்தர மாக’ நடந்து வந்ததைக் கண்டதும் இதயசந்திரன் பேரதிர்ச்சியடைந்து கனோஜியைச் சபிக்கவும் செய்தா னென்றால் அதற்குக் காரணங்கள் பலவல்ல, இரண்டே தான். ஒன்று தனது சொந்தப் பலவீனம், இன்னொன்று மஞ்சு என்ன நினைத்துக் கொள்வாளோ என்ற பயம். ஆனால் அந்த இரண்டையும் அத்தருணத்தில் அவன் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. திருமணமாவதற்கு முன்பு தனது நிலை எப்படியிருந்தாலும், திருமணமான பின்பு தனது மனம் கண்டபடி அலையாது என்று தனக்குத் தானே எண்ணிக் கொண்டான் தமிழக வாலிபன். ‘இனி அந்தப் பயமில்லை. ஆனால் ஒரு பெண் தனித்துப் படையுடன் வந்தால் படை வீரர்கள் அவளையே சுற்றுவார்களே! சில சமயங்களில் அத்துமீறியும் நடப்பார்களே! இதற்கு என்ன செய்வது?’ என்று உள்ளூரக் கேள்விகளை எழுப்பிக் கொண்டாலும், உண்மைக் காரணங்கள் அவையல்ல வென்பதைப் புத்தியின் ஒரு பகுதி அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது. மிஸ் எமிலி மட்டும் அளவுக்கு அதிக மாகத் தன்னை நெருங்கினால் தன் உறுதி காற்றில் பறந்துவிடும் என்பதை அவன் உணர்ந்தேயிருந்தானென்றாலும் அதை அவன் மனம் ஒப்புக்கொள்ளாமல்,
“வரட்டும் எமிலி, இனி யார் வந்தாலென்ன? நான் தான் மஞ்சுவுக்குச் சொந்தமாயிற்றே’ என்று வீம்பு பிடித்துக் கொண்டிருந்தது.
ஆனால் அவன் கண்கள் மிஸ் எமிலியின் நடை ஒய்யா ரத்தைக் கவனிக்கவும், அவற்றை வாங்கி மனத்திற்கு அனுப்பி வைக்கவும் தயங்கவில்லை. வண்டியிலிருந்து குதித்தபோது அவள் கௌன் வண்டி முகப்பில் சிக்கிச் சற்று ஏறிவிட்டதால் அவள் கால்களின் பரிமாணம் இடுப்புவரை பூராவாகத் திடீரென்று தெரிந்துவிட்டதைக் கண்கள் பார்த்தன. ஆடையை வண்டி சிக்கலிலிருந்து அரை விநாடியில் அவள் கழற்றிச் சரி செய்துகொண்டு விட்டாலும், அந்த அரை விநாடியில் தெரிந்த ஜோதியைத் தமிழனின் கூரிய கண்கள் அள்ளிப் பருகத் தயங்கவில்லை. இறங்கிய பின் அவள் நடந்தபோது கௌனின் கீழ்ப்புறம் அவள் பூந்தொடைகளைத் தழுவிப் பக்கவாட்டில் நகர்ந்த தையும், மார்பு மட்டும் திண்மையின் காரணமாக அதிக மாக அசங்காமல் மெல்ல கௌனுக்குள் உ.ராய்ந்ததையும், கண்கள் காணத் தவறவில்லை.
இந்த நிலையில் கையிலொரு பெட்டியையும் ஏந்தி இதயசந்திரன் கூடாரத்தை நோக்கி வந்த எமிலி, கூடாரத்தை அடைந்ததும் வாயிலில் நின்ற வண்ணமே வாயிலுக்கு நேராக உட்கார்ந்து கொண்டிருந்த உப தளபதியை நோக்கி, “உட்கார்ந்த இடத்திலிருந்து உப தளபதியவர்கள் எழுந்திருக்க மாட்டாரோ?” என்று வினவினாள் கிள்ளைக் குரலில்.
இதயசந்திரன் உட்கார்ந்த நிலையிலேயே மிஸ் எமிலியை நோக்கித் தனது மனத்தை இரும்பாக்கிக் கொண்டு கடினமான குரலில் கேட்டான், “உன்னை யார் வரச் சொன்னது இங்கே?” என்று.
“படைத் தளபதி, மகாராஷ்டிர ஸார்கேல், ஸர்ன போர்த் கனோஜ் ஆங்கரே அவர்கள்” என்று கனோஜியின் சகல விருதுகளையும் சேர்த்தும், கால்களைக் குறுக்கி பிரிட்டிஷ் சோல்ஜர் போல் நின்று தலையை ஆணவத். துடன் நிமிர்ந்தும், மிகக் கடினமான குரலில் பதில் கூறினாள் மிஸ் எமிலி.
அப்பொழுதும் இதயசந்திரன் ஆசனத்தைவிட்டு எழுந்திருக்கவுமில்லை, கடுமையை முகத்திலிருந்தோ குரலிலிருந்தோ தளர்த்தவுமில்லை. “எதற்காக வரச் சொன்னார்?” என்று அடுத்த கேள்வியும் முரட்டுத்தனமாக. எழுந்தது தமிழனிடமிருந்து.
மிஸ் எமிலியின் முகத்தில் எந்தவித உணர்ச்சியுமில்லை. வரண்டு கிடந்த முகம்போல வரண்ட குரலும் எழுந்தது. “படைத்தளத்துக்கு நர்ஸை எதற்காக அனுப்புவார்களோ அதற்காக” என்று பதில் கூறினாள்.
இதயசந்திரன் அப்பொழுதும் அசைந்தானில்லை. மேலும் பிடிவாதத்தைக் காட்டி, “அவரது படைப்; பிரிவுக்கே நர்ஸை வைத்துக் கொள்ளலாமே” என்றான்.
மிஸ் எமிலியின் அழகிய அதரங்கள் மடிந்து இகழ்ச்சி முறுவல் கோட்டின. “அவசியமில்லையென்று நினைக் கிறார் ஸார்கேல்” என்ற சொற்கள் வெகு விஷமமாக உதிர்ந்தன அவளுடைய உதடுகளிலிருந்து.
“எப்படித் தெரியும் உனக்கு? உன்னிடம் சொன்னாரா?” இதயசந்திரன் குரலில் வீம்பும் உக்கிரமும் ஒலித்தன.
“இல்லை. நானே ஊகித்தேன்” என்றாள் எமிலி. மேலும் விஷம் ஒலியைக் குரலில் காட்டி.
“என்ன ஊகித்தாய்?”
“அவர் படைக்கு நர்ஸ் தேவையில்லை என்பதை.”
“ஏன்?”
“அவர் படையில் அதிக வீரர்கள் காயமடையவோ இறக்கவோ பிரமேயமிருக்காது.”
“எப்படித் தெரியும் உனக்கு?”
”அவர் என்னை இங்கு அனுப்பி வைத்ததிலிருந்து.”
மிஸ் எமிலி வேண்டுமென்றே இப்படிப் பதில் சொல்லு கிறாளென்பதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டான் தமிழன். ஸார்கேல் படைப் பிரிவில் ஆள் சேதம் ஏற்படாது, காயமேற்படாது. தன் படைப் பிரிவில் தான் ஏற்படுமென்றால், தனக்கு அவரைப்போல் படையை நடத்திச் செல்ல முடியாதென்று அர்த்தமென்பதை உணர்ந்ததாலும், தன்னை அவமதிக்கவே மிஸ் எமிலி அப்படிப் பேசுகிறாளென்பதைப் புரிந்து கொண்டதாலும், அவளைக் கூடார வாயிலிலேயே நிற்க வைத்துப் பேசுவது சரியல்லவென்று மெள்ள அவனுக்கு உறைக்கத் துவங்கிய தாலும், இதயசந்திரன் மெள்ள எழுந்து கூடார வாயிலுக்கு வந்து எமிலியை ஏற இறங்கப் பார்த்தான் ஒருமுறை. அவள் அழகு சித்தத்தைக் கலக்குவதாயிருந்தது. கௌனுடன் அவள் நின்று கொண்டிருந்த தோரணை மட்டுமின்றித் தலையில் அவள் அணிந்திருந்த நர்ஸ்’ வெள்ளைக் குல்லாயும், காதுக்கு மேல் செருகியிருந்த சிவப்புக் காட்டு மலரும் அவள் அழகை ஆயிரம் மடங்கு உயர்த்தியிருந்தது. அவள் கண்களில் அப்பொழுதும் ஒரு கடுமையிருந்தாலும் அந்தக் கடுமையினூடே அவை நகைப்பதாகவும் தோன்றியது தமிழனுக்கு. அதிக நேரம் அவளைப் பார்த்தால் தன் நிலை என்ன ஆகுமோ என்ற பயத்தால், “சரி! உனக்கு என்ன வேண்டும்?” என்று வினவினான்.
”படைகள் நகரும்வரை தனிக் கூடாரம் வேண்டும்” என்று கூறினாள் எமிலி.
“எதற்கு தனிக் கூடாரம்’ என்று கேட்டான் தமிழன் ஏதோ கேட்க வேண்டுமென்பதற்காக. மிஸ் எமிலி விஷம நகை காட்டினாள். “உங்கள் கூடாரத்தில் தங்கலாமென்றால் தனிக் கூடாரம் தேவையில்லை” என்ற எமிலி அவனைத் தாண்டிக் கூடாரத்துக்குள் செல்லக் காலடி எடுத்து வைத்தாள்.
“இரு இரு எமிலி. உனக்குத் தனிக் கூடாரமே தருகிறேன்” என்று அச்சத்துடன் கூறிய இதயசந்திரன், “சுகாஜி, சுகாஜி” என்று கூவினான் இரைந்து. சற்று எட்ட இருந்த ஒரு கூடாரத்திலிருந்து வந்து சுகாஜியிடம், “நர்ஸுக்கு ஒரு தனிக் கூடாரம் அடித்துக் கொடு. வேறு எந்த சௌகரியங்கள் வேண்டுமோ செய்து கொடு’ என்று உத்தரவிட்டான் அவசர அவசரமாக.
அவன் உத்தரவிடுவதற்குள் வாயிலிலேயே மிஸ் எமிலியை நிற்க வைத்துப் பேசிக்கொண்டிருந்த காலத் துக்குள், மகாராஷ்டிர வீரர்கள் கூட்டம் அவளுக்குப் பின்னால் கூடிவிட்டது. அழகிய பெண்ணொருத்தி வண்டி யிலிருந்து குதித்ததுமே காவற்பணியிலிருந்த புரவி வீரர் இருவர் புரவிகளை நடத்தி வண்டிக்கருகில் வந்தனர். பக்கக் கூடாரங்களில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த மற்றும் சில வீரரும் எழுந்து அவளுக்குப் பின்புறத்தில் சற்று எட்ட நின்று கொண்டு அவளைப் பார்த்து வாயைப் பிளந்தனர். இவையனைத்தையும் கவனித்த இதயசந்திரன் பெருமூச்சு விட்டான். இனிமேல் தன் படையில் நிம்மதியும், ஒழுங்கும் இருக்குமா என்ற சந்தேகம் அவன் மனத்தில் எழுந்து பிசாசைப் போல் பேருருவம் எடுத்தது. மிஸ் எமிலிக்குக் கூடாரம் தயார் செய்யச் சொன்னதுமே சுகாஜி மாத்திரமின்றி மற்றும் பல வீரரும் விரைந்ததையும், போர்ப் பொருட்சாலையிலிருந்து திரைச் சீலைகளும், கூடாரத் துணிகளும் ஆணிகளும் நீண்ட கழிகளும், வெகு துரிதமாகத் தன் கூடாரத்துக்குப் பக்கத்தில் வந்துவிட்ட தையும் கண்ட இதயசந்திரன் சங்கடம் பெரிதும் அதிகமாகவே, அவன் மீண்டும் தனது கூடாரத்திற்குள் நுழைந்தான். மிஸ் எமிலி வெளியிலிருந்த சுகாஜியை நோக்கி,
“வண்டியில் இரண்டு பெரிய கள்ளிப் பெட்டிகளிருக் கின்றன. அவற்றை ஜாக்கிரதையாக இறக்கிக் கூடாரத்தில் வையுங்கள். பெட்டிகளுக்குள் கண்ணாடிக் குப்பிகளிருக்கின்றன. ஜாக்கிரதை” என்று எச்சரித்துவிட்டு இதய சந்திரன் கூடாரத்துக்குள் நுழைந்தாள். அந்தக் கூடாரத் தின் நட்ட நடுவிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு கூடாரத்தின் உட்பகுதியைச் சுற்றுமுற்றும் நோக்கினாள். கூடாரம் ஓரளவு பெரிதாகவே இருந்தது. மூன்று பகுதி களிலிருந்த மூன்று திரைச் சீலைகள் கூடாரத்தில் மூன்று அறைகள் இருப்பதை நிரூபித்தன. அவற்றைக் கண்ட மிஸ் எமிலி மெல்ல முறுவல் கொண்டு, “மூன்று அறைகள் இருக்கின்றனவே” என்றாள் மெல்ல.
“ஆம்.” இதயசந்திரன் பதில் அந்த ஒற்றைச் சொல் லுக்கு மேல் ஓடவில்லை. அவன் கூடாரத்தின் ஒரு பகுதியிலிருந்த ஒரு நாற்காலிமீது ஒரு கையை மட்டும் ஊன்றிச் சாய்ந்து கொண்டே பதில் கூறினான் அவளுக்கு.
“இந்த அறைகளில் ஒன்றிருந்தாலே போதும் எனக்கு” என்று கூறினாள் எமிலி மீண்டும்.
இதயசந்திரன் பதில் கூறவில்லை . அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்ததால் பெருமூச்சு மட்டும் விட்டான்.
அதைக் கவனித்தாலும் கவனிக்காதது போலவே கூறினாள் மிஸ் எமிலி,
“இங்கு நான் வந்தது உங்கள் அதிர்ஷ்ட ம்” என்று.
எரிச்சல் மிக அதிகமானதால் இதயசந்திரன், “என்ன அதிர்ஷ்டமோ?” என்று கேட்டான்.
கவர்னர் ஏஸ்லாபியின் பிரத்தியேக நர்ஸ், பிரிட்டிஷ் பம்பாய் பாசறையின் ஆஸ்பத்திரி அதிகாரிக்கு அடுத்த பதவி வகிப்பவள். பல பேருக்குக் காய சிகிச்சை செய்திருப்பவள். உங்களுக்குக் கிடைப்பது அதிர்ஷ்ட மல்லவா! இதனால் படைப் பிரிவுக்கு எத்தனை லாபம் எத்தனை உயிர்கள் மீட்கப்படும் என்பதை எண்ணிப் பார்த்தீர்களா?” என்று சற்று சுய ஸ்தோத்திரத்தில் இறங்கினாள் எமிலி.
இதயசந்திரன் சரேலென்று வெடித்தான். “பார்த்தேன் பார்த்தேன். நீ வந்து இறங்கியபோதே படை வீரர்கள் உனக்குப் பின்னால் வந்து பல்லிளிப்பதைப் பார்த்தேன். உனக்குக் கூடாரமடிக்க உத்தரவிட்டதும் எத்தனை பேர் பறந்தார்களென்பதையும் பார்த்தேன், இனி இங்கு உன் உத்தரவுதான் செல்லும். என் உத்தரவு செல்லாது’ என்று இரைந்தான்.
மிஸ் எமிலி சிரித்தாள் கலகலவென்று. “இரண்டு பேரும் சேர்ந்து உத்தரவிட்டால் போகிறது” என்று கூறவும் செய்தாள் சிரிப்புக்கிடையே. பிறகு நாற்காலியி லிருந்து எழுந்து கூடாரத்துக்கு வெளியே சென்றாள். அவளது கூடாரம் அநேகமாகத் தயாராகியிருந்தது. அழகாகவும் தயாராகியிருந்தது. அதன் வாயிலில் ஒரு வண்ணச்சீலை தொங்கிக் கொண்டிருந்தது. வீரர்களுக்குச் சற்றுக் கலையுணர்வும் இருப்பதை உணர்ந்து கொண்ட எமிலி அந்தக் கூடாரத்தை நோக்கி நடந்தாள். கூடாரத் துக்குள் அவள் நுழைந்ததும் அப்படியே பிரமித்துப் போனாள். உட்புறம் இரண்டு அறைகளாகத் திரைச் சீலைகளால் பிரிக்கப்பட்டிருந்தது. அங்கு சீலைகளை அப்பொழுதே கட்டிமுடித்த வீரனொருவன் ஒரு சீலையை அகற்றிக் காட்டினான் உள்ளறையை. அந்த உள்ளறையில் ஒரு சிறு மடக்கு மேஜையும், மடக்கு நாற்காலியும் போடப்பட்டிருந்தன. சாதாரணமாக பிரிட்டிஷ் மேஜர் களுக்குத்தான் ராணுவத்தில் இந்த வசதியளிக்கப்படு மென்பதை அறிந்திருந்த எமிலி, நன்றி ததும்பும் கண்களை அந்த வீரர்கள் மீது திருப்பினாள். “இவை ஏது?” என்றும் கேட்டாள்.
“இந்த மாதிரி எவ்வளவோ பிரிட்டிஷ் கப்பல்களிலிருந்து கிடைத்திருக்கின்றன. தோர்லாவாடா பொருள்.
கூடத்தில் இருக்கின்றன’ என்று கூறினான் இரு வீரரில் ஒருவன்.
தனது நாட்டாரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சாமான்கள் அவை என்பதை அறிந்ததால் மனம் சிறிது வருந்தினாலும் அதை அடக்கிக் கொண்டாள் எமிலி.
இரட்டைக் குதிரை வண்டி கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பெட்டிகள் வெகு கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இறக்கப்பட்டன. உள்ளே கொண்டு வந்து மிஸ் எமிலி காட்டிய இடத்தில் பெட்டிகளை வைக்கவும் செய்தார்கள் வீரர்கள்.
“இந்தக் கூடாரத்தை அடுத்தாற்போல், அதாவது பின்புறத்தில் நான்கு குச்சிகளை நட்டு அவற்றைச் சுற்றி ஒரு படுதாவைக் கட்டுங்கள்” என்றாள் எமிலி. “எதற்கு அது?” ஏதும் புரியாமல் கேட்டான் சுகாஜி.
“நான் குளிக்க” என்ற எமிலி அவனை நோக்கிப் புன்முறுவல் செய்தாள்.
சுகாஜி அந்தப் புன்முறுவலைக் கண்டு மதி மயங்கி நின்றான். பிறகு துரிதமாகவே வெளியே சென்றான். அடுத்த சில நிமிடங்களில் கூடாரத்தின் பின்புறம் யாரோ கடப்பாறை கொண்டு குழி தோண்டுவது காதில் விழவே தனது நீராட்ட அறை தயாராகிறது என்று தீர்மானித்துக் கொண்டாள் மிஸ் எமிலி. கால் ஜாமம் கழித்துக் கூடாரத் துக்குப் பின்புறம் சென்று அந்த அறைக்குள் நுழைந்த எமிலி வியப்பில் ஆழ்ந்து போனாள். குளிக்க நல்ல மறைவு மட்டுமல்ல, ஒரு மரக் குவளையும் வைக்கப்பட்டிருந்தது.
அதற்குப் பிறகு அவள் கூடாரத்தைவிட்டு வெளியே வரவில்லை. கூடாரத்தின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த ஹரிக்கேன் விளக்கைச் சிறிது தூண்டிவிட்டுத் தரையில் சீலை விரித்துப் படுத்துக் கொண்டாள். ஏதேதோ எண்ணங்கள் அவள் மனத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
இறங்கியவரின் முகத்தில் சரேலெனக் கூடாரத்தின் பக்கத்திலிருந்த பந்தத்தின் ஒளி வீசவே மிஸ் எமிலியின் முகத்தில் திடீரெனத் துயரத்தின் சாயை படர்ந்தது.
பந்தத்தின் வெளிச்சத்தில் தெரிந்தது மஞ்சுவின் மலர் முகம். அவள் கண்களில் பளிச்சிட்டது இணையிலா வேட்கை. சரேலென்று வாசல் திரைச்சீலையை விலக்கிக் கொண்டு உள்ளே சென்றாள் மஞ்சு. எமிலியின் மார்பு படபடவென்று அடித்துக்கொண்டது. மஞ்சு வெகு வேக மாகத் தள்ளிச் சென்ற இதயசந்திரனின் வாசல் திரைச் சீலை இருபுறமும் ஆடி ஆடி நின்றது. எமிலியின் இதயமும் அந்தத் திரைச்சீலையைப் போலவே ஆடியது. ஆனால் நிற்கவில்லை. ‘உரிமையுள்ளவள், கொடுத்து வைத்தவள்’ என்ற சொற்கள் அவள் மனத்தில் எழுந்து பெரிதாக ஒலித்தன.