Jala Deepam Part 3 Ch23 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 23 என்றும் புது மலர்
Jala Deepam Part 3 Ch23 | Jala Deepam | TamilNovel.in
கனோஜி ஆங்கரே திடீரென அன்று மாலையில் தனது படைத்தளத்தில் தோன்றியதும், துரிதமாக மந்திரா லோசனையில் இறங்கியதும், போர் முறையைக்கூட ஓரளவு மாற்றிவிட்டதும் பெரு விந்தையாயிருந்தது இதய சந்திரனுக்கு. மஞ்சுவுக்கோ அது பெரும் வேதனையாயிருந்தது. சில நாட்களுக்கு முன்பு கொலாபாவிலும் மற்றத் துறைமுகங்களிலும் கப்பல்களைக் காத்து நிற்கவும், கடலில் சஞ்சரித்துக் கோட்டைகளை மாற்றார் கப்பல்கள் அணுகாமல் பாதுகாக்கவும் உத்தரவிட்ட மகாராஷ்டிரக் கடற்படைத் தளபதி, திடீரென ஒவ்வொரு துறைமுகத்திலும் கப்பல்களைத் தரைக்கு இழுக்கவும், பீரங்கிகளைக் கொண்டு அவற்றுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் உத்தர விட்ட்தை நினைத்து, இந்த மாற்றத்துக்கு என்ன காரண மிருக்கக்கூடும் என்று எண்ணிப் பார்த்தும் விடை காணவில்லை தமிழன். ஆனால் மஞ்சுவுக்கோ, பத்து நாளைக்குப் பின் நகர வேண்டிய படையை உடனடியாகப் புறப்பட உத்தரவிட்டு விட்டாரே தந்தை என்ற நினைப்பு உள்ளூரப் பெரும் குமுறலையும் எரிச்சலையும் விளை வித்தது. ஆனால் அதைப்பற்றிக் காரணம் கேட்க அவளுக்குத் துணிவு இல்லை.
இதயசந்திரன் மட்டும், “தாங்கள் முன்பு இட்ட உத்தரவுக்கும் இன்றைய உத்தரவுகளுக்கும் சில மாறுபாடுகள் இருக்கின்றனவே?” என்று வினவினான்.
அப்பொழுதுதான் தேசப் படத்திலிருந்து கண்களை அகற்றி ஆசனத்தில் மல்லாந்து உட்கார்ந்துவிட்ட
என்றும் புது மலர் கனோஜி. “என்ன மாறுபாடுகள் இருக்கின்றன?” என்று பதில் கேள்வி போட்டார்.
“நமது கடலோரக் கோட்டைகளைப் பாதுகாக்கப் போர்க்கலங்கள் சித்தமாயிருக்கவும் உலாவவும் கட்டளை யிட்டீர்கள். இப்பொழுது அவற்றைத் தரையில் – இழுத்து விடக் கட்டளையிடுகிறீர்கள்…’ என்று கூறி வாசகத்தை முடிக்காமல் கனோஜியை நோக்கினான் இதயசந்திரன்.
வெற்றிக் கோஷமிட்ட உபதலைவர்கள் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு பிரமை பிடித்த கண்களைத் திருப்பினார்கள் தமிழனை நோக்கி. கனோஜி முடிவான உத்தரவு பிறப்பித்த பிறகு அவரை மறுத்துப் பேசுவதோ அல்லது விளக்கம் கேட்பதோ பெரும் அபாயமென்பதை உணர்ந்திருந்த உபதலவைர்கள் அடுத்து என்ன நடக்குமோ என்று எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தார்கள். கனோஜியைத் தூக்கியெறிந்து பேசும் சுபாவமுள்ள மஞ்சுகூட அதிர்ச்சியுற்றுக் கண்களைத் திருப்பினாள் தந்தைமீது.
கனோஜியின் பயங்கர விழிகள் தமிழனை வியப்புடன் நோக்கின ஒரு விநாடி. பிறகு அந்த விழிகளில் சிறிது கோபம் துளிர்த்தது. என்ன காரணத்தினாலோ, இன்னு மொருவி நாடியில் கோபம் இகழ்ச்சிக்கு இடம் கொடுத்தது. “தரைப்படை உபதளபதிக்கு விளக்கம் தேவையோ?” என்று வினவினார்.
சுற்றிலுமிருந்தவர் கண்களிலிருந்த பிரமையையும் மஞ்சுவின் விழிகளில் தெரிந்த அச்சத்தையும் கவனித்தான் இதயசந்திரன். இரண்டு ஆண்டுகளில் காணாத ஒரு புதுக் கனோஜியைத் தான் காண்பது அவனுக்குப் புரிந்தது. மந்திராலோசனையில் யார் எதைச் சொன்னாலும் செவி மடுக்கும் சுபாவமுள்ள கனோஜி ஒரு முறை முடிவெடுத்து விட்டால் அதை மாற்றுவது பிரம்மனால் கூட முடியாதென் பதையும், அதற்குக் குறுக்கே பேசுபவன் நிலையும் விரும்பத்தக்கதல்லவென்பதையும் சந்தேகமறத் தெரிந்தது.
அவனுக்கு. இருப்பினும் துணிவை விடாமல், “உத்தரவின் மாறுதலின் அடிப்படை புரியவில்லை” என்றான்.
கனோஜி தமிழனை உற்றுப்பார்த்தார் மறுபடியும். “உனக்கு அண்டோனியோ கார்டிம் ப்ரோஸ் என்பவரைத் தெரியுமா?” என்று வினவினார் சர்வசாதாரணமாக.
“தெரியாது” என்றான் தமிழன் சற்றுக் குழப்பத்துடன்.
“போர்ச்சுக்கீஸியரின் கடற்படைத் தளபதி அவர்” என்றார் ஸார்கேல்.
“அவருக்கென்ன?” என்று கேட்டான் இதயசந்திரன் புரியாமல்.
”ஒன்றுமில்லை. கொலாபாவை நொறுக்க வருகிறார்.”
”கொலாபாவை நொறுக்கவா?” ”ஆம். ஆறு பெரும் போர்க் கப்பல்களுடனும் பல காலிவாத்துக்களுடனும் போர்ச்சுக்கீஸியக் கவர்னர் அவரை அனுப்பியிருக்கிறார் கொலாபாவைக் கைப்பற்ற, நமது கப்பல்களை அழித்துவிட; அண்டோனியோ ப்ரோஸ் சாமானியத் தளபதியல்ல. கடற்போரில் அவருக்கிணை யானவர் உலகத்திலேயே நான்கைந்து பேர்கள் தான்” என்று சுட்டிக் காட்டினார் கனோஜி.
இதயசந்திரன் திக்பிரமையடைந்தான். பெரும் ஆபத்து கொலாபாவுக்கு ஏற்பட்டிருப்பது அவனுக்குப் புரிந்தது. தானும் கனோஜியும் தரைப்போருக்குச் செல்லும் சமயமாகப் பார்த்துப் போர்ச்சுக்கீஸியர் கடலில் தாக்க முன் வந்ததை எண்ணியதால் என்ன செய்வதென்றறி யாமல் திகைத்தான். ” தரையில் நாம் முன்னேறாவிட்டால். பிங்களே நம்மைத் தாக்குவார். கடலில் தயாராக இல்லையேல் அண்டோனியோ கொலாபாவை முறியடிப்பார். தர்மசங்கடமான நிலையாயிருக்கிறதே!” என்று கூறினான் வாய்விட்டு. “இதயசந்திரா!” என்றழைத்தார் கனோஜி.
“ஸார்கேல்!”
“பெரும் ஆபத்துக்கள் நேரிடும்போது குழம்பாதிருப் பவனே வீரன் எனப்படுகிறான். இப்பொழுது நிலைமை சிக்கலானது தான், ஆனால் மீள முடியாத நிலை அல்ல. பிரிட்டிஷார் நம்மிடம் ஒப்பந்தம் செய்துகொண்ட சீற்றத்தில் போர்க்சுக்கீஸியக் கவர்னர் நம்மீது தமது கப்பற்படைத் தளபதியை ஏவியிருக்கிறார். அடுத்தபடி ஸித்திகளும் வருவார்கள். யார் வந்தாலும் நமது போர்க் கலங்களை ஒன்றும் செய்ய முடியாது. அவை கரையில் கிடக்கும். அவற்றை அணுகி வந்தால் போர்ச்சுக்கீஸியப் பெருங் கலங்கள் மணலில் சிக்கிச் செயலற்றுவிடும். அசைய முடியாத நிலையில் நமது கடற்கரை பீரங்கிகளுக்கு இலக்காகும். கடற்கரை பீரங்கிகளையும் நல்ல உயர்ந்த பாறைகளில் தகுந்த இடங்களில் அமைத்திருக்கிறேன். ஐம்பது கஜ தூரத்திற்குள் வரும் எந்தக் கப்பலும் அவற்றின் குண்டு வீச்சுக்கு இலக்காகும். கொலாபாவை எதிரிகள் அணுகக்கூட முடியாது” என்று விளக்கிய கனோஜி, “இதயசந்திரா! இப்பொழுது கடலில் பின் வாங்கியிருக்கிறோம் தற்காப்புக்காக. தரையில் முன்னேறு கிறோம் புதுக் கோட்டைகளைப் பிடிக்க. இப்பொழுது கடலாதிக்கத்தை நிலைப்படுத்திக்கொண்டு தரைப்பக்கம் திரும்பியிருக்கிறேன். தரையை நிலைப்படுத்திக் கொண்டால் மீண்டும் கடல் வழிகளில் உலாவுவோம், அப்பொழுது கடலிலும் தரையிலும் நமது ஆதிக்கம் இருக்கும்” என்று உணர்ச்சிப் பெருகச் சொன்னார்.
இதயசந்திரன் அவர் கூறியதை அசைவற்றுக் கேட்டுக் கொண்டான். அவரது போர்த் திறமையும் கூரிய அறிவும் பிரமிக்கத் தக்கதாயிருந்தன. சாதாரணமாக வேடிக்கைப் பேச்சும் அசுர நகைப்பும் உள்ள கனோஜி ஆங்கரே சமயம் வந்தால் இணையிலாத் தலைவனாக மாறும் விந்தையை அன்று கண்டான் அவன். அத்தகைய ஒரு பெரிய தலைவனிடம் பணி புரிய நேரிட்டது தனது பாக்கியமென்று கருதினான். உணர்ச்சிப் பெருக்கால் பேசும் சக்தியையும் இழந்தான்.
அவன் மௌனத்தைக் கவனிக்கவே செய்த கனோஜி, அவனை நோக்கி மீண்டும் கூறினார், “இதயசந்திரா! தரையில் நீ கல்யாண் நகரத்தைக் கைப்பற்றியதும் நானும் நீயும் பிங்களேயை முன்னும் பின்னும் தாக்குவோம் என் பதை முன்பே கூறியிருக்கிறேன். அங்கிருந்து நம்மிருவர் படையும் இணைந்து ராஜ்மச்சியையும் கைப்பற்றி விட்டால் கொங்கணியின் நிலப்பரப்பு பூர்ணமாக நமது கையிலிருக்கும்” என்று.
பதிலுக்கு அர்த்தமில்லாமல் தலையை மட்டும் அசைத் தான் இதயசந்திரன். கனோஜி ஆங்கரே கூடாரத்துக்கு வெளியே வெறித்துப் பார்த்தார். அந்த வெறித்த பார்வை யுடன் பேசவும் பேசினார். “ராஜ்மச்சி, பம்பாய்க்கும் பூனாவுக்கும் இடையே கண்டாலாவுக்கு. அருகில் இருக் கிறது. போர்காட் கணவாயின் பிரதான வழியில் ராஜ் மச்சியும் லோஹ்கட் எனும் இரும்புக் கோட்டையும் இருக் கின்றன. இரண்டும் கொங்கணியை நோக்கும் சிகரங்கள். இரண்டையும் ஆள்பவன் கொங்கணியை ஆள்கிறான். ராஜ்மச்சி உண்மையில் எத்தனை உயரத்திலிருக்கிறது! தெரியாமலா சத்ரபதி சிவாஜி அதற்கு, ‘ராஜ்மச்சி அரசர் உப்பரிகை’ எனப் பெயர் சூட்டினார். அந்த உப்பரிகை யிலும் லோஹ்கட்டிலும் நான் உட்காருகிறேன் வெகு விரைவில்” என்று இரைந்தே கூறினார். பிறகு சரேலென்று எழுந்திருந்து மந்திராலோசனை முடிந்து விட்டது என்ப தற்கு அறிகுறியாக மஞ்சுவிடம் வந்து, “உனக்குத்தான் கஷ்டம்” என்று கூறிவிட்டுக் கூடாரத்தை விட்டு வெளியே சென்றார். மற்ற உபதலைவர்களும் அவரைத் தொடர்ந்தனர். கூடாரத்தை விட்டு இருவர் மட்டும் அசையவில்லை. ஒருத்தி மஞ்சு, இன்னொருவன் தமிழன்.
கல்யாண், ராஜ்மச்சி, லோஹ்கட் இவற்றை இதய சந்திரன் பார்த்ததேயில்லை. அந்த மூன்று இடங்களைப் பற்றிக் குறிப்பிட்ட கனோஜி ராஜ்மச்சியையும் லோஹ்கட்டையும் பற்றித் திரும்பத் திரும்பக் கூறியதையும் அவற்றைப் பற்றிப் பேசுகையில் ஒரு வேகம் அவரிடமிருந்ததையும் எண்ணிப் பார்த்து, ‘அவை இரண்டும் மிக முக்கியக் கோட்டைகளாகவும் போர் அரண்களாகவும் இருக்க வேண்டும்’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான்.
இத்தகைய எண்ணங்களில் திளைத்திருந்த அவன், மஞ்சு, மேஜையைச் சுற்றிவந்து வாசல் சீலையை அவிழ்த்து விட்டதையோ தனக்குப் பின் வந்து நின்றுகொண்டு தன்னைச் சுற்றி இரு மலர்க் கரங்களை ஓடவிட்டதையோ உணர்ந்தானில்லை. அவன் தலைமீது தனது தலையை வைத்து மஞ்சு, “என்ன, உங்களைத்தான்?” என்று மெல்ல அழைத்த பின்புதான் அவன் சுரணையடைந்தான். “என்ன மஞ்சு?’ என்று கேட்கவும் செய்தான்.
“ஒரே அடியாகத் தந்தையைப்போல் நீங்களும் கனவில் லயித்துவிட்டீர்களே? இப்பொழுதே ராஜ்மச்சில் இருப்பதாக நினைப்போ?” என்று கேட்டாள். தலையை அவன் தலைமீது உருட்டவும் செய்தாள்.
அவள் தலை உருண்டது. அவன் தலைக்கு எத்த னையோ இதமாயிருந்தது. அவள் இரு கைகளையும் தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டான் இதயசந்திரன். ”ஆம் மஞ்சு! உன் தந்தை அந்தக் கோட்டையைப்பற்றிக் கூறியது என்னை அசர வைத்து விட்டது. அத்தனை பெரிய கோட்டையா அது?” என்று கேட்கவும் செய்தான்.
”ஆம். அது கொங்கணியைச் சேர்ந்ததல்லவென்றாலும் ஸஹ்யாத்திரியின் முக்கிய பீடமான போர்காட்டிலிருப்பதால் மிக உயரத்திலிருந்து கொண்டு சதா கொங்கணியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பெரிய வழவழத்த கரிய பாறைகளையுடைய மலை உச்சியிலிருக்கும் ராஜ்மச்சிலிருந்து நீங்கள் கொலாபாவைப் பார்க்கலாம். ஸால்ஸெட்டி தீவுகளைப் பார்க்கலாம். பம்பாயைக் கூடப் பார்க்கலாம்” என்றாள் மஞ்சு.
“அதைப் பிடிப்பது சுலபமா?”
“மிகக் கஷ்டம்.”
“அதைப் பிடிக்கத் திட்டமிட்டிருக்கிறாரே உன் தந்தை?”
“கஷ்டம் என்று யாராவது சொன்னால் போதும் அந்த அலுவலில்தான் தந்தை இறங்குவார். இது கஷ்ட மென்பது அவருக்கே தெரியும். அப்படியிருக்க, இறங்காமலிருப்பாரா?” இதைச் சொன்ன அவளைத் தனது நாற்காலியைச் சுற்றி இழுத்து, அதன் கையில் தனக்கு எதிர்புறமாகத் திரும்பி உட்காரவைத்துக் கொண்ட இதயசந்திரன் அவளைப் பல வினாடிகள் உற்றுப் பார்த்தான்.
அவன் கண்கள் சென்ற இடங்களை எண்ணி நாணப் புன்முறுவல் செய்தாள் அவள். “என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டாள். “ஏன் பார்க்கக் கூடாதா?” “பாருங்கள் பாருங்கள். நான் என்ன புதியவளா?”
“புதியவள் தான் மஞ்சு.” இதைக் கேட்ட மஞ்சு நகைத்தாள்.
இதயசந்திரன், “ஏன் நகைக்கிறாய் மஞ்சு?” என்று வினவினான்.
“என்னைப் புதியவள் என்று கூறினீர்களே?”
”ஆம், கூறினேன்.”
“நான் பழையவள் தானே?”
”அதுதான் இல்லை.”
“என்ன சொல்கிறீர்கள்?’
‘
இதயசந்திரன் அவள் தலையைக் குனிய வைத்து காதில் ஏதோ சொன்னான். அவள், “சீச்சி! மோசம் நீங்கள்… ஆனாலும் மோசம்” என்று கூறி வேறுபுறம் திரும்பினாள்.
“காதலில் பழைமையேது மஞ்சு? நித்தம் நித்தம் புதிய வேதனை. புதிய சாதனை. இவற்றின் இணைப்புத்தான் காதல். என் கண்ணுக்கு நீ என்றும் புதுமலர். அந்த மலரை…” என்ற இதயசந்திரனை மேலே பேசவிடாமல் வாயைப் பொத்தினாள் மஞ்சு.
பிறகு இருவரும் மௌனமே சாதித்தனர். இருவர் உள்ளங்களிலும் மறுநாள் பிரிவே மேலோங்கி நின்றது.
இருவரும் அன்று உணவருந்தவில்லை, இரவு வீணாகவுமில்லை.