Jala Deepam Part 3 Ch29 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 29 புனிதத் தொழில்
Jala Deepam Part 3 Ch29 | Jala Deepam | TamilNovel.in
அந்த முகவெட்டு வீரன் இதயத்தில் ஒரு சாம்ராஜ் யத்தின் பெரும் ரகசியம் புதைந்திருப்பதாக இதயசந்திரன் கூறியதைக் கேட்ட மிஸ் எமிலி, மிதமிஞ்சிய வியப்படைந் தாளாகையால், இதயசந்திரனை மலர்ந்த கண்களைக் கொண்டு ஏறெடுத்து நோக்கினாள். அந்த வீரன் மிக முக்கியத்துவம் வாய்ந்தவனென்பதை முந்திய இரவு நிகழ்ச்சியிலேயே அவள் புரிந்து கொண்டிருந்தாலும், பெரும் சாம்ராஜ்ய ரகசியம் அவனிடமிருக்குமென்று அவள் ஊகிக்கக் காரணமுமில்லை; சந்தர்ப்பமுமில்லை. தானும் இதயசந்திரனும் இணைந்தாடிய சமயத்தில் முன்னறிவிப்பு ஏதுமின்றித் திடும்பிரவேசமாக அந்த முகவெட்டு வீரன் உள்ளே நுழைந்ததையும், அவனை மிகுந்த கோபத்துடன் இதயசந்திரன் சந்தித்ததையும், பிறகு இருவரும் வெளியே போய்விட்டதையும் பார்த்திருந்தாளாகையால் இதய்சந்திரனையும் இஷ்ட விரோத மாக இழுத்துச் செல்லும் அளவுக்கு அவனுக்குத் திராணியும் திறமையும் இருந்ததை அவள் உணர்ந்து கொண்டிருந்தாளேயொழிய, ஒரு பெரிய சாம்ராஜ்ய மர்மத்தை ஏந்திய மனிதனாக அவனை அவள் எடை ‘போடவில்லை. அவன் பெருங்காயங்களுடன் வண்டியில் போட்டு எடுத்து வரப்பட்டபோது அவனை இதயசந்திர னுக்காக எப்படியும் காப்பாற்றிவிட வேண்டுமென்று தனியாகப் படுக்க வைத்துக் காயங்களுக்குக் கட்டும் போட்டிருந்தாள் எமிலி. சில இடங்களில் சஸ்திர சிகிச்சையும் செய்திருந்தாள். அவன் பிழைப்பானா இல்லையாவென்று அவளே சந்தேகித்திருந்த நிலையில் இதயசந்திரன் அந்தப் புது மர்ம வெடியை வீசியதும்
தமிழனை நோக்கிய அவள், “இவனிடமா? பெரும் சாம்ராஜ்ய மர்மம் சிக்கியிருக்கிறதா?” என்று கேள்வி யொன்றையும் விடுத்தாள்.
ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த இதயசந்திரனை நோக்கி, “ஏன் அந்த மர்மத்தை நான் அறியக் கூடாதோ?” என்று இன்னொரு கேள்வியும் கேட்டாள்.
இதயசந்திரன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. நீண்ட நேரம் சிந்தித்துவிட்டுச் சொன்னான், “எமிலி! இவனால் தான் நான் கொங்கணிக்கே வந்தேன். வந்தபின் பல தொல்லைகள் என்னைப் பிடித்துக்கொண்டன…” என்று.
எமிலி மெல்ல நகைத்தாள். “ஆம். ஆம். நான்கு தொல்லைகள்” என்றும் கூறினாள் நகைப்புக்கிடையே.
இதயசந்திரன் எண்ணமெல்லாம் அந்த முகவெட்டு வீரன் மீது புதைந்திருந்தபடியால் அவள் பேச்சிலிருந்த ஏளனத்தை அவன் கவனிக்கவில்லை. ஆகவே, “நான்கு தொல்லைகளா?” என்று சாதாரணமாகவே கேட்டான்.
“ஆம். முதல் தொல்லை பானுதேவி, இரண்டாவது தொல்லை மஞ்சு, மூன்றாவது தொல்லை காதரைன், நான்காவது தொல்லை…’ என்று எமிலி வாசகத்தை முடிக்காமல் விட்டாள்.
“உம்.”
இதயசந்திரன் அந்த உங்காரத்திற்கு மேல் சொற்களேதும் கொட்டவில்லை.
‘நான்காவது தொல்லை பக்கத்திலிருக்கிறது” என்றாள் எமிலி நகைத்துக் கொண்டே• இதயசந்திரன் கை, அவள் இடையில் தவழ்ந்து, அவளை நெருங்கி இழுத்தது. “எமிலி! இவனை எப்படி யாவது பிழைக்கச் செய்துவிடு” என்றதன் உணர்ச்சியுடன்.
“முயன்று பார்க்கிறேன்” என்றாள் எமிலி. ”இவனுக்குக் காயங்கள் அதிகமா எமிலி?” * “மிக அதிகம், நெற்றியில் மட்டும் ஆறு வெட்டுக் கர்யங்கள் இருக்கின்றன. இரண்டு இடங்களில் தையலும் போட வேண்டியிருந்தது. உடம்பிலும் பல காயங்கள். இவன் போரின் மும்முரமான இடத்தில் இருந்திருக்க, வேண்டும். உண்மையில் பெருவீரன் இவன்.”
“இவனைச் சிறைப்படுத்தி வண்டிக்குள் அடைத்தேன். இவன் எப்படிப் போரின் மும்முரமான இடத்துக்கு. வந்தான்?”
“இப்பேர்ப்பட்டவனை அடைத்து வைப்பது கஷ்டம். உங்கள் வீரர்களையும் மீறி இவன் போரில் நுழைந்திருப்பான்.”
மிஸ் எமிலி சொன்னது சரியாகத்தானிருக்குமென்று புரிந்தது இதயசந்திரனுக்கு. ‘இத்தகைய ஒரு பெரிய வீரன் மட்டும் கொலைகாரனாக இல்லாமல் தஞ்சையிலுள்ள ராணிக்கு அநீதியும் இழைக்காமல் இருந்தால் மகாராஷ்டிரத்துக்கு எத்தனை பயன்பட்டிருப்பான் ஆக்க வழியில்?’ என்று எண்ணிப் பெருமூச்சுவிட்ட இதயசந்திரன், மிஸ் எமிலிக்கு மெல்ல மெல்லத் தன் கதையைச் சொன்னான். கதையின் விவரத்தைக் கேட்கக் கேட்கப் புல்லரித்தது. உடலுடன் உணர்வுடன் இதயசந்திரனை நோக்கிய எமிலி, கடைசியாகச் சொன்னாள்; “உபதளபதி! இவனைக் காப்பாற்ற எப்படியும் முயலுகிறேன். தெய்வத்தின் துணை மட்டும் தஞ்சை ராணிக்கு இருந்தால். இவன் கண்டிப்பாய் பிழைப்பான்’ என்று.
அந்த உறுதிமொழியைப் பெற்றதாலும், அந்த முக வெட்டு வீரனிருந்த நிலையில் அவன் எங்கும் ஓடிவிட முடியாதென்று தீர்மானித்ததாலும் இதயசந்திரன், மிஸ் எமிலியிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு கனோஜி ஆங்கரேயைக் காணச் சென்றான். அவன் எந்த மாளிகை யில் தங்கியிருந்தானோ அந்த மாளிகையிலேயே கனோஜி யும் தமது பாசறையை அமைத்திருந்தார். அவனும் எமிலியும் முதல் நாளிரவு எந்த அறையில் இணைந்தாடினார் களோ அந்த அறையையே தமது அறையாக்கிக் கொண்டிருந்தார் ஸார்கேல். இதயசந்திரன் அந்த அறைக்குள் நுழைந்த போது ஸார்கேல் போர் உடையைக்க்ளையாமலேயே தமது உபதலைவன் ஒருவனுடன் ஏதோ தர்க்கித்துக் கொண்டும் கையிலிருந்த துப்பாக்கியால் மடியில் கிடந்த ‘தேசப் படத்தில் சில இடங்களைச் சுட்டிக்காட்டிக் கொண்டுமிருந்தார். போர் அரங்கத்திலிருந்து வந்தவர், நீராடவோ உண்ணவோ இல்லையென்பதை அவருடைய மண்படிந்த உடையிலிருந்தும் கலைந்து கிடந்த முரட்டுக் குழல்களிலிருந்தும் கன்னத்தில் ஓரிடத்தில் தீற்றியிருந்த துப்பாக்கி மருந்திலிருந்தும் புரிந்து கொண்ட இதய சந்திரன் சிறிது நேரம் மௌனமாகவே நின்றான். உபதலைவனுக்குப் பல இடங்களைக் காட்டி உத்தரவுகளைப் பிறப்பித்த பிறகு தலைநிமிர்ந்த கனோஜி, “ஓ! உபதளபதியா! வா!” என்றழைத்துச் சிரித்தார்.
அவர் சிரிப்பதற்குக் காரணமேதும் அறியாத இதய சந்திரன் கேட்டான், “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று.
கனோஜியின் முகத்தில் சிரிப்பு மறைந்து, கடுமை மண்டியது. “போர் முடிந்ததும் உபதளபதியின் முதல் வேலையென்ன?” என்ற அவர் கேள்வியிலும் கடுமையிருந்தது.
“தளபதியிடம் போரின் விளைவுகளைக் கூற வேண்டும்” என்றான் இதயசந்திரன் நன்றாக நிமிர்ந்து நின்று.
“அந்தப் பணியை நீ ஏன் செய்யவில்லை?” என்று சீறினார் ஸார்கேல்.
”விளைவு தளபதிக்கே தெரிந்ததால்தான்” என்று பணிவுடன் கூறினான் இதயசந்திரன்.
“வெற்றியை நான் கூறவில்லை. போர் முடிந்ததும் கைப்பற்றப்பட்ட எதிரி வீரர்களின் எண்ணிக்கை, அவர் களைக் காவலில் வைத்திருக்கும் இடம், முறை, அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போர்த் தளவாடங்களைப் பற்றிய புள்ளி விவரம்…” என்று கூறிக்கொண்டுபோன கனோஜி, பேச்சை முடிக்கவில்லை. அவனை உற்று மட்டும் பார்த்தார். அவரது பயங்கர மீசை மிகப் பயங்கரமாக. ஒருமுறை அசைந்தது.
இதயசந்திரன் பதில் சொல்ல முடியாமல் தலை வணங்கி நின்றான். கனோஜியின் முகத்தில் சுடர் விட்ட கோபம் திடீரென மறைந்தது. மெள்ள அவனிடம் வந்து தோள்மீது கையை வைத்தார். அவன் காதுக்கருகில் குனிந்து, “அவளை என்ன செய்தாய்?” என்று கேட்டார் மெல்ல.
திடுக்குற்றுத் தலை நிமிர்ந்த இதயசந்திரன், “எவளை?” என்று வினவினான்.
”அந்த நர்ஸை?” என்று கனோஜி அர்த்தபுஷ்டியுடன் புன்முறுவல் கோட்டினார்.
“நீங்கள் கேட்பது சரியல்ல” என்று சீறினான் இதய சந்திரன்.
”பயப்படாதே. மஞ்சுவிடம் நான் சொல்ல மாட்டேன்”- ஸார்கேல் மிக ரகசியமாக அவனைத் தூண்டினார்.
“ஸார்கேல்.”
“தமிழா!”
“இது தங்களுக்குத் தகுதியல்ல.” “எது?”
“போரில் வெற்றிக் களிப்பிலிருக்கும் நாம், கல்யாணைக் கைப்பற்றி பேஷ்வாவையும் சிறை செய் திருக்கும் நாம், இப்பொழுது பேச வேண்டியது கேவலம் ஒரு நர்ஸைப் பற்றியல்ல’ என்றான் இதயசந்திரன், உணர்ச்சி வேகத்துடன்.
”நர்ஸ் கேவலமா?” என்று பதில் கேள்வி போட்ட கனோஜி, “அப்படியானால் நீ என்னிடம் வருவதை விட்டு நர்ஸிடம் ஏன் சென்றாய்?” என்று வினவினார் கண்ணைச் சிமிட்டி.
இதயசந்திரன் இதயத்தை வியப்பு ஆக்கிரமித்துக் கொண்டது. தான் எமிலி இருக்குமிடம் சென்றதை அதற்குள் இவர் எப்படி அறிந்தார் என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். தன்னை உபதளபதியாகவும் ஆக்கி விட்டுத் தன் மீது வேவு பார்க்கவும் கனோஜி ஆள் வைத் திருக்கிறாரோ என்ற எண்ணமும் ஏற்பட்டதால் அவரைக் கேட்கவே கேட்டான், “என் மீது வேவு பார்க்கிறீர்களா ஸார்கேல்?” என்று.
“எதற்காக வேவு பார்க்க வேண்டும்?” என்று கேட்டார் ஸார்கேல்.
“இல்லாவிட்டால் நான் எமிலியைத் தேடிச் சென்றது உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“போர் முடிந்து ஒரு ஜாமம் ஆகிறது….’’
“ஆம்.”
“என்னைத் தேடி வரவில்லை.”
“ஆம்.”
“வேறு யாரைத் தேடிப் போவாய்?” இதைச் சொன்ன ஆங்கரே நகைத்தார்.
இதயசந்திரன் பிரமை பிடித்து நின்றான் சில வினாடி கள். பிறகு கூறினான், “நான் எமிலியைத் தேடிப் போனதற்குக் காரணமுண்டு” என்று.
“காரணமில்லாமல் எந்த வாலிபனும் வயதுப் பெண்ணைத் தேடிப் போகமாட்டான்’ என்று கனோஜி ஒப்புக் கொண்டார்.
“அவளால் சிகிச்சை செய்யப்பட்ட ஒருவனை நாடிப் போனேன். அவன் யார் என்பது உங்களுக்குத் தெரியும்” என்ற இதயசந்திரன், அவரை உஷ்ணத்துடன் நோக்கவும் செய்தான்.
அவன் எதைக் குறிப்பிட்டாலும் என்ன உஷ்ணத்தைக் காட்டினாலும் கவலைப்படாத கனோஜி, . “நீயும் அவளிடம் சிகிச்சை செய்து கொள்வது தானே?” என்று கேட்டார்.
“எனக்குத் தேவையில்லை.” “ஏன்?” “காயம் அதிகமில்லை.”
கனோஜி அவனை ஏறெடுத்து நோக்கினார். “ஆம் ஆம்! உடற்காயம் அதிகமில்லை ” என்றார்.
“உள் காயம் கிடையாது ஸார்கேல்” என்று அழுத்திச் சொன்னான் இதயசந்திரன்.
“ஏன், வசப்பட்டு விட்டாளோ?” என்று கேட்டார் ஸார்கேல்.
இதயசந்திரன் கோபத்துடன் தன் தோள் மீதிருந்த அவர் கையை எடுக்க முயன்றான். அந்தக் கை இரும்பு போல் அவன் தோளை அழுத்திக் கொண்டிருந்தது. தான் முதன் முதலாகக் கொங்கணி வந்தபோது தாமினி காட்டில் அவர் கை உரலுக்குக் குறுக்கே ஒரு நாளிரவு இரும்பு உலக்கையென விழுந்து கிடந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். உயிரின் மேல் ஆசையிருந்தால் எழுந்திருக்காதே என்று அவர் எச்சரித்தது அந்தச் சமயத்திலும் காதில் ஒலிப்பது போலிருந்தது தமிழனுக்கு. அந்தக் கனவில் லயித்துவிட்டவன் கையை அகற்ற எடுத்துக் கொண்ட முயற்சியைக் கைவிட்டான். ”ஸார்கேலின் ஆணை என்ன மேற்கொண்டு?” என்று வினவினான்.
பதிலுக்கு கனோஜி அவன் தோள் மீதிருந்த கையை அகற்றிக்கொண்டார். “நீ போய் நீராடி உணவருந்தி வேறு அலுவல்களிருந்தால் முடித்துக்கொண்டு இரவு முதல் ஜாமத்தில் இங்கு வந்து சேர். முக்கியமான அலுவலிருக் கிறது உனக்கு” என்று கூறிவிட்டு அவனைச் செல்ல அனுமதித்தார். இதயசந்திரன் தனது அறைக்குச் சென்று போராடைகளைக் களைந்து, நீராட்ட அறைக்குச் சென்றான். நீராடி உணவருந்தியதும் சுகாஜியுடன் நகரத்தைச் சுற்றிச் சிறை முகாமையும், கைப்பற்றப்பட்ட தளவாடங்களையும் பார்த்துக் கணக்கெடுத்துக் கொண்டான். மாலை நெருங்கியதும் மருத்துவமனைக்கு மீண்டும் சென்று எமிலியைச் சந்தித்து அந்த முகவெட்டு வீரன் நிலை பற்றி விசாரித்தான். அப்பொழுதுதான் மருத்துவ மனை விளக்குகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. மிஸ் எமிலியும் கையில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி எடுத்துக் கொண்டு வாருங்கள் பார்ப்போம்” என்று கூறி, அவனை அழைத்துக் கொண்டு, முகவெட்டு வீரன் படுத்திருந்த அறைக்குச் சென்றாள்.
அவர்கள் சென்ற சமயத்தில் அந்த முகவெட்டு வீரனின் உதடுகள் காய்ந்திருந்தன. முகத்தில் சுரத்துக்கான வியர்வைத் துளிகள் முத்து முத்தாகத் தெரிந்தன. மிஸ் எமிலி மெழுகுவர்த்தியைச் சற்று உயரமான ஒரு கட்டையில் வைத்தாள். பிறகு அறை மூலையிலிருந்த ஒரு பெட்டியிலிருந்து கொஞ்சம் பஞ்சு கொண்டு வந்து, அவன் முக வியர்வையைத் துடைத்தாள். பிறகு நாடியை நீண்ட நேரம் பார்த்தாள். அடுத்தபடி அவன் மார்பில் கை வைத்து இதயத் துடிப்பைக் கவனித்தாள். கடைசியாக ஒரு குப்பியிலிருந்து சிறிது பிராந்தியைப் புகட்டினாள் அவன் உதடுகளில் மெல்ல மெல்லக் கண் விழித்தான் நோயாளி. அவன் கண்கள் மிஸ் எமிலி மீது சில விநாடிகள் நிலைத்தன. பிறகு. இதயசந்திரன் கண்களைச் சந்தித்தன. இதயசந்திரன் அவன் காதுக்கருகில் குனிந்து, “உன்னால் பேச முடியுமா?” என்று வினவினான்.
நோயாளியின் இதழ்கள் அசைந்தன. ‘முடியும்’ என்ற சொல் மெல்ல வெளிவந்தது.
”பலமான காயமடைந்திருக்கிறாய்’ என்றான் இதய சந்திரன்.
அந்த வீரன் இதழ்களில் பெருமை நிரம்பிய இள நகை அரும்பியது. தலை லேசாக அசைந்தது, இதயசந்திரன் சொன்னதை ஆலோசிக்கும் வகையில். “இப்பொழுது: சொல் ரகசியத்தை. அந்தப் பையன் எங்கிருக்கிறான்?”” என்று கேட்டான் இதயசந்திரன்.
அந்த வீரன் உதடுகள் அசைந்த நிலையிலிருந்து அவன் தனது சக்தியெல்லாம் திரட்டுவதாகத் தெரிந்தது. கடைசியில் அவன் மிகச் சிரமப்பட்டு மெதுவாகச் சொன்னான், “அதைச் சொல்லக் கூடியவர் ஒருவர் தான். அவர் தான் ஸார்கேல்’ என்று. அதைக் கூறியதும் அவன் மீண்டும் மயக்கமுற்றான்.
“அவனுக்கு மீண்டும் சிறிது பிராந்தி கொடு” என்றான் இதயசந்திரன் எமிலியை நோக்கி.
“இனிமேல் கொடுப்பதற்கில்லை.”
“ஏன்?”
“தாளமாட்டான்.”
“பரவாயில்லை.”
இதைக் கேட்ட மிஸ் எமிலி இதயசந்திரனை எரித்து விடுவதுபோல் பார்த்தாள். “எதை நோயாளிக்குக் கொடுக்கலாம், எதைக் கொடுக்கக் கூடாது என்று இங்கு தீர்மானிக்கக் கூடியது நான் ஒருத்திதான்” என்று கூறவும் செய்தாள் சினத்துடன்.
”நான் உத்தரவிடுகிறேன்” என்று சீறினான் இதய சந்திரன்.
“ஆஸ்பத்திரிக்குள் நான் தான் உத்தரவிட முடியும்!” என்று அவளும் சீறினாள் பதிலுக்கு .
“ஏன்? நீ என்ன இந்த ஊர் ராணியா?”
”ராணியைவிட உயர்ந்தவள். நர்ஸ் தொழில் புனித மான தொழில். அந்தத் தொழில் புரிய நாட்டைவிட்டு ஆறாயிரம் மைல் வந்திருக்கிறேன். உங்கள் தொழிலைப் போல் காயம் விளைவிக்கும் தொழிலல்ல என் தொழில். காயத்தை ஆற்றும் தொழில். ஏசுநாதரின் கருணைத் தொழில்” என்று கூறிய எமிலி, தன் உடலின் குறுக்கும் நெடுக்கும் கையால் சிலுவை முத்திரையைக் காட்டினாள். அவன் வெளியே செல்லலாமென்பதற்கு அறிகுறியாகக் கையையும் வாயிற்படியை நோக்கி நீட்டினாள்.