Jala Deepam Part 3 Ch30 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 30 கனோஜி அஞ்சிய மாமனிதன்
Jala Deepam Part 3 Ch30 | Jala Deepam | TamilNovel.in
எந்தக் காரியத்தைக் கொண்டும் முகவெட்டு வீரனுக்குப் பிராந்தி கொடுக்க முடியாதென்றும், திரும்பவும் அவனை விழிக்கச் செய்ய இயலாதென்றும் மிஸ் எமிலி திட்டவட்டமாகக் கூறியதன்றி, உடனடியாக வெளியே செல்லுமாறு வாயிலையும் சுட்டிக் காட்டியதைக் கண்டதால், உள்ளத்தில் கோபம் சுடர் விட்டெரிய அந்தச் சுடரின் ஒளி முகத்திலும் பிரதிபலிக்க அவளைச் சுட்டு விடுபவன்போல் சில வினாடிகள் பார்த்துக் கொண்டு நின்ற இதயசந்திரன், சரேலென அசுர வேகத்துடன் திரும்பி, அந்த இடத்தைவிட்டு வெகு வேகமாக வெளியே நடந்தான். ஆஸ்பத்திரியை விட்டு வெளிப்போனதும் அங்கிருந்த புரவிமீது தாவிக் கண்மண் தெரியாமல் அதைக் கல்யாண் நகர் வீதிகளில் விரைய விட்டான். செல்ல வேண்டிய திசையைப் பற்றியோ, அடைய வேண்டிய இடத்தைப்பற்றியோ எண்ணாமல் கண்டபடி புரவியை விரட்டிய இதயசந்திரன் பல தெருக்களைக் காரணமின்றிச் சுற்றினான். ஆங்காங்கிருந்த பல வீரர்கள்மீதும் உபதலைவர்கள் மீதும் காரணமின்றி எரிந்து விழுந்தான். கடைசியாகத் திரும்பத் தனது இருப்பிடம் வந்தான்.
நகரத்தின் நடுவிலிருந்த தனது மாளிகைக்கு வந்ததும் புரவியிலிருந்து குதித்துத் தனது அறைக்குச் சென்றுவிட்ட தமிழன் அறைக் கதவைச் சாத்திக் கொண்டு தடாலென்று தனது படுக்கையில் விழுந்தான். உள்ள உடையைக் களையாமலும், மாற்றுடை அணியாமலும், தான் தமிழகத்திலிருந்து எந்தப் பணியை நிறைவேற்ற வந்தானோ அந்தப் பணியைப் பற்றிய புலன் தன் கைக்கு
கனோஜி அஞ்சிய மாமனிதன் 269 எட்டியும் செவிக்கு எட்டாத நிலை ஏற்பட்டதை நினைத்துத் தன்னைத் தானே வெறுத்துக் கொண்டும், தன் அதிர்ஷ்டத்தை நொந்து கொண்டும் படுக்கையில் கிடந்தான் ஸார்கேலின் உபதளபதி. ‘என்னதான் காயமடைந்திருந்தாலென்ன? இன்னும் ஒருமுறை பிராந்தி கொடுத்திருந்தால் அவன் கண்ணைத் திறந்திருப்பான்; பேசியுமிருப்பான்! என்ன துணிவுடன் மறுத்து விட்டாள் எமிலி, என்று உள்ளூர எண்ணமிட்டதால் ஒரு முறை புரண்டு படுத்தான் பஞ்சணையில் அவன். “உடலையே எனக்கு அர்ப்பணம் செய்து விட்டவள். என்னை உயிருக்கு உயிராய் நேசிப்பவள், இவளுக்கென்ன அத்தனை அனுதாபம் என் எதிரியின்மீது?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். ‘பம்பாய் கவர்னர் இவளை நான் இழுத்துக் கொண்டு ஓடிவிட்டேன் என்று வதந்தி கிளப்பி விட்டதால் இவள் திரும்பவும் வெள்ளையர் இருக்குமிடம் போக முடியாது. என்னைத்தானே நம்பியிருக்க வேண்டும்? அப்படியிருக்க என் விருப்பத்துக்கு எதிராக நடக்க இவளுக்கு எத்தனைத் துணிச்சல்! புனிதத் தொழிலாம் புனிதத் தொழில் அந்த நர்ஸ் தொழில்! பூ!’ என்று எரிச்சலுடன் பலவிதமாக எண்ணமுமிட்டான். என்ன நினைத்தும் தன்னிஷ்டம் நிறைவேறாது எமிலி யின் ஆஸ்பத்திரி சம்பந்தப்பட்டவரை, அவள் தொழில் சம்பந்தப்பட்டவரை என்பதை, எண்ணி எண்ணி வருந்தினான். கோபித்தான், படுக்கையில் புரண்டான். பிறகு. திடீரென்று ஒரு முடிவுக்கு வந்து, “சரி, ஸார்கேலையே கேட்டு விடுகிறேன்” என்று படுக்கையிலிருந்து எழுந் திருந்தான். ஸார்கேல் தன்னை வந்து சந்திக்கும்படி சொல்லியிருந்தது நினைப்புக்கு வரவே, அறைக் கதவைத் திறந்து கொண்டு அவர் அறைக்குச் சென்றான். அறை காலியாயிருக்கவே ஸார்கேல் எங்கேயென்று அங்கிருந்த, காவலனை விசாரித்தான். மாடியிலுள்ள மகாலில் இருப்பதாகக் காவலன் கூறியதன்றி உங்களை அங்கே வரச் சொல்லி உத்தரவு” என்றும் கூறினான்.
மாடி மகாலை இதயசந்திரன் அடைந்தபோது அங்கிருந்த உள்ள நிலைமை அவனை அசர வைத்தது. ஸார்கேல் பூரண போருடை அணிந்து நாற்காலி யொன்றின் மீது ஒரு காலை வைத்து, ஒரு காலைத் தரையில் ஊன்றி, எதிரே மேஜை மீதிருந்த மகாராஷ்டிர தேசப் படத்தை ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய உபதலைவர் நால்வரும்கூட அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தான் வந்ததை அவர்கள் யாருமே கவனிக்காததால் மெல்லப் பூனைபோல் நடந்து மேஜைக்கருகில் வந்த இதயசந்திரனும் படத்தை பார்த் தான். ஸார்கேல் திடீரென்று இரண்டு இடங்களில் தனது விரல்களை ஊன்றினார். பிறகு மூன்றாவது இடமொன்றில் விரலை நன்றாக அழுத்தினார். அந்த இடம் மகாராஜா ஷாஹுவின் தலைநகரான ஸதாரா!
கனோஜியின் எண்ணம் திண்ணமாகத் தமிழனுக்குப் புரிந்ததால் அவன் முகத்தில் விவரிக்க இயலாத பீதி விரிந் தது. ஸதாராவைக் கைப்பற்றுவது கனோஜியின் திட்டம் என்பதை புரிந்து கொண்ட இதயசந்திரன், ‘இது நடக்கிற காரியமா?’ என்று நினைத்தான். எதற்கும் திடுக்கிடாத அவன் நெஞ்சுகூட அந்தச் சில வினாடிகளில் திடுக்குற்று மார்பு டக்டக்கென்று வெகு வேகமாக அடித்துக் கொண்டது. அதனால் சற்றுப் பெரிதாக அச்சம் கலந்த மூச்சொன்றையும் வெளியிட்டான் தமிழன்.
கனோஜியின் இதழ்களில் புன்முறுவலொன்று தவழ்ந்தது. பார்வையைப் படத்திலிருந்து எடுக்காமலே கூறினார் கனோஜி, “அசாத்தியம் என்று உலகில் எதுவும் கிடையாது. ஸதாரா பலமுறை கை மாறியிருக்கிறது. இன்னொரு முறை கைமாறுமானால் அதிசயமுகமாகாது” என்று .
இதயசந்திரன் பதிலேதும் சொல்லவில்லை. கனோஜியதிலை எதிர்பார்க்கவுமில்லை. “இதோ இருக்கிறது
ராஜ்மச்சிபர்வதக் கோட்டை. இதை முதலில் கைப்பற்று வோம். அங்கிருந்து லோஹ்காட்டைக் கைப்பற்றுவோம். இரண்டையும் கைப்பற்றிவிட்டால் வடகொங்கணம் நமது கைக்குள். தென்கொங்கணம் ஏற்கனவே நம்மிடமிருக் கிறது. லோஹ்காட்டில் நாம் தங்குவோம். அங்கிருந்து ஸதாரா மீது படையெடுப்பதாதச் செய்தி அனுப்புவோம் மன்னனுக்கு” என்று அறிவித்தார் கனோஜி, இரும்புடன் இரும்பு உராய்ந்தால் ஏற்படும் ஒலியுள்ள குரலில். இதைச் சொன்ன பிறகும் கனோஜி படத்தைவிட்டுக் கண்களை அகற்றவில்லை. ஏதேதோ மலைவழிகளையும் நிலைப் பக்குவங்களையும் பார்த்துக்கொண்டே இருந்தார். அவரே மேலும் சொன்னார். ‘ராஜ்மச்சி ஒன்றே போதும் ஷாஹுவை மிரட்ட. எதற்கும் லோஹ்காட்டும் இருக்கட்டும். கோட்டைகள் ஒன்றுக்கிரண்டாக நமது கைக்குள் இருப்பதால் தவறில்லை” என்று.
இதயசந்திரனுக்கு அவர் பேச்சு வியப்பாயிருந்தது. மிகப் பலமானதும், அணுக முடியாததும், பல்லிகூடக் கால் வைக்க முடியாத பெருமலைப் பாறையின்மீது நிர்ணயிக்கப்பட்டதும், ஸ்ரீவர்த்தனா, மனரஞ்சனா என்ற பெயருள்ளவையும் நன்றாக அரண் செய்யப்பட்டுள்ளவையான இரு உச்சிகளை உடையதுமான ராஜ்மச்சியை ஏதோ தமது கையிலிருப்பது போல் ‘னோஜி பேசுவது பெரு விந்தையாயிருக்கவே இதயசந்திரன் கேட்டான், “ராஜ்மச்சி மிகப் பலமுள்ளது என்று நீங்களே கூறியிருக் கிறீர்களே?” என்று.
மெல்லத் தமது கண்களைப் படத்திலிருந்து உயர்த்தி னார் கனோஜி. இதயசந்திரன் இதயத்தையே ஊடுருவி விடுவது போல் பார்த்தார் ஒரு விநாடி. “ஆமாம், சொன்னேன்” என்று இகழ்ச்சியுடன் கூறவும் செய்தார்.
“இதற்கு ஆயத்தம் வேண்டாமா?” என்று வினவி னான் இதயசந்திரன்.
அதற்குக் கனோஜி கூறிய பதில் அவனைத் திகைக்க வைத்தது. “இப்பொழுது என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது?”
“என்ன? இப்பொழுதே புறப்படப் போகிறீர்களா?” என்று கேட்டான் இதயசந்திரன், குரலில் வியப்பு மண்ட. “ஆம்” என்றார் கனோஜி சர்வ சகஜமாக.
“இன்று காலையில் தானே கல்யாண் போர் நடந்திருக்கிறது!” என்று இழுத்தான் இதயசந்திரன்.
“ஆம்” ”அதற்குள்…”
“என்ன அதற்குள்?”
“கைப்பற்றிய நகரைப் பலப்படுத்த வேண்டாமா? சிறைப் பிடித்தவர்களை என்ன செய்வதென்று தீர்மானிக்க வேண்டாமா? இனிமேல் தானே போர் வெற்றியால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டும்?”
கனோஜியின். இதழ்களில் புன்முறுவல் தவழ்ந்தது. “அதற்கெல்லாம் நீதானிருக்கிறாயே?” என்று கூறிய கனோஜி, மெள்ள நகைக்கவும் செய்தார்.
“நானா!” என்று வாயைப் பிளந்தான் தமிழன். “ஆம்.’ “ஏன்?”
“கல்யாண் வெற்றி உன்னுடையது. அதன் பலன் களும் உன்னுடையவை.”
இதயசந்திரன் இல்லையென்பதற்கு அடையாளமாகத் தலையை அசைத்தான். “இல்லை ஸார்கேல்! சமயத்தில் நீங்கள் படைகளை வாயு வேகத்தில் கொண்டு வந்து பிங்களேயின் கடைசிப் பகுதிகளைக் கத்திரித்திராவிட்டால் இங்கு உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கமாட்டேன்,
பேஷ்வாவின் பெரும் படைகளினால் அழிக்கப்பட்டிருப்பேன்’ என்று கூறினான் தமிழன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு.
கனோஜி, மேஜையைச் சுற்றி வந்து அவன் தோள் மீது கையை வைத்தார். “இல்லை தமிழா! உன் போர்த் திட்டத்தால் தான் பிங்களே தோல்வியுற்றார். நான் வருமுன்பே பிங்களேயின் பீரங்கிகளைத் திக்குமுக்காடச் செய்து விட்டாய். பிங்களேயின் படை விலாவில் சுகாஜி யும் நீயும் பாய்ந்தது இணையற்ற போர்த் தந்திரம். நீ பேஷ்வா கட்சியில்லாதது என் அதிர்ஷ்டம்” என்று பாராட்டினார். இதயசந்திரன் மேற்கொண்டு பதில் சொல்லச் சந்தர்ப்பமளிக்கவில்லை ஸார்கேல். “இதய சந்திரா! தரைப் படைக்கு எனக்கு ஒரு தளபதி வேண்டு மென்று எண்ணியதும் உன்னையே நினைத்தேன் நான். ஏனென்றால் தஞ்சையில் நீ இருந்திருக்கிறாய். பிரிட்டிஷ் படைகளில் சேவையும் செய்திருக்கிறாய். அவர்கள் குறைகளையும் நீ அறிந்திருக்கிறாயென்பதை உன் பேச்சி லிருந்தே ஊகித்தேன். ஆகவே உன்னை எனக்கு அடுத்த உபதளபதியாக்கினேன். இனி நான் தாமதிப்பதற்கில்லை. போரில் வெற்றியடைந்தவன் கையைக் கட்டிக் கொண்டு வெற்றி மகிழ்ச்சியில் திளைத்திருப்பது முட்டாள் தனம். கிடைத்த வெற்றி நொடிப் பொழுதில் போய்விடும். வெற்றியடைந்தவன் மேலும் துரிதமாக மற்ற இடங் களைத் தாக்கவேண்டும். எதிரிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியைத் தரவேண்டும். அவன் முடியாதென்று நினைப்பதை முடிக்கவேண்டும். அவன் எதிர்பார்க்காத இடங்களைத் தாக்கவேண்டும். அவனைச் சிந்திக்கவே விடக் கூடாது. . ஆகையால்தான் உடனடியாக நான் கிளம்புகிறேன். இன்னும் நான்கு நாளில் ராஜ்மச்சி என் கையிலிருக்கும். அடுத்த ஒரு வாரத்திற்குள் லோஹ்காட்டும் என் கைவசப்படும். சந்தேகமே வேண்டாம்” என்று கூறிய ஸார்கேல், ” இதயசந்திரா! நான் என்னுடன்
பேஷ்வா பிங்களேயை அழைத்து செல்கிறேன். பிடிப்பட்ட படையில் ஒரு பகுதியை அழைத்துச் செல்கிறேன். மீதிக் கைதிகளை இங்கேயே வைத்திரு. கல்யாண் நகரின் பாதுகாப்பை வலுப்படுத்திவிடு. பிறகு என் செய்திக்காகக் காத்திரு” என்றும் அறிவித்தார்.
இதயசந்திரன் தலை வணங்கினான் ஸார்கேலுக்கு. பிறகு ஏறிட்டு நோக்கினான் அவரை. அவர் முகத்தில் ஜெயஸ்ரீ ஜொலித்துக் கொண்டிருந்தாள். கறுத்து அடர்ந்த புருவங்களும், முரட்டுத் தலைமயிர்களும், பயங்கர மீசையும் அவர் காரியங்களை ஏற்கெனவே மனத்தில் சாதித்து விட்டதை அறிவுறுத்தின. கண்கள் ஈட்டிகளைப் போல் ஜொலித்தன. மகாராஷ்டிரத்தின் உன்னத ஸ்திதியைப் பற்றியே பெருங்கனவொன்று அதில் விரிந்து கிடந்தது. அந்த நிலையில் அவரை ஏதும் கேட்கத் தோன்ற வில்லை இதயசந்திரனுக்கு. அவருடைய பெருந்தோரணை தன்னை மிகச் சின்ன மனிதனாக அடித்து விட்டதை உணர்ந்தான் தமிழன். மகாராஷ்டிரத்தின் மூன்றாவது வாரிசைப் பற்றி ஏதாவது கேட்கலமா என்று ஒரு கணம் எண்ணினான். பெரும் சாம்ராஜ்யப் போருக்குத் திட்டம் வகுத்துக் கனவு காணும் கனோஜியிடம் அந்த விஷயத்தைக் கேட்கவும் – அவனுக்குச் சங்கோஜமாயிருந்தது. இருப்பினும், மெள்ளத் துணிவை வரவழைத்துக் கொண்டு “தங்களிடம் தனிமையில் ஒரு விஷயம் பேச வேண்டும்” என்று மெல்ல விண்ணப்பித்துக் கொண்டான்.
கனோஜி ஒரு விநாடி சிந்தித்தார். பிறகு மற்ற உபதலைவர்களை நோக்கி, “புறப்படச் சித்தம் செய்யுங்கள். படைகளை அணிவகுத்து நிறுத்துங்கள். அணிவகுப்புக்கு நடுவில் பிங்களேயும் மீதிக் கைதிகளும் வரட்டும்” என்று உத்தரவிட்டு அவர்களை அனுப்பினார். அவர்கள் அறையை விட்டு நகர்ந்ததும் கனோஜியின் ஈட்டிக் கண்கள் தமிழனைக் கூர்ந்து நோக்கின. அவனுடன் பேசினாயா?” என்ற சொற்கள் அவரது தடித்த உதடுகளிலிருந்து உதிர்ந்தன.
”ஆம்” என்றான் இதயசந்திரன்.
“வாரிசைப் பற்றி என்னைக் கேட்க வேண்டுமென்று சொன்னானா?” என்று மீண்டும் வினவினார் ஸார்கேல், தமிழனுக்கும் முகவெட்டு வீரனுக்கும் சம்பாஷணை நடந்த போது நேரிலிருந்நவர்போல்.
இதயசந்திரனுக்கு அவர் கேள்வி மிகவும் வியப்பா யிருந்தது. ஆகவே, “ஆம்” என்று அவன் சொன்ன பதிலிலும் வியப்பு ஒலித்தது.
“இதயசந்திரா! அந்த வாரிசைப்பற்றி எனக்கு பராபரியாகத்தான் தெரியும். ஒருவருக்குத்தான் முழு உண்மை தெரியும்” என்றார்.
“யாரவர்?”
”நான் அஞ்சும் ஒரே மனிதர்.”
“நீங்களும் அஞ்சும் மனிதர் மகாராஷ்டிரத்தில் இருக்கிறாரா?”
”இருக்கிறார்.”
இதைச் சொன்ன ஆங்கரேயின் குரலில் மரியாதை கலந்த அச்சமிருப்பது தமிழனுக்குப் புரிந்தது. மெல்லக் கேட்டான், ”யார் அவர்?” என்று.
மகாராஷ்டிர சாம்ராஜ்யத்திற்குப் பலமான அஸ்திவாரமிட்ட அந்த மாமனிதன் பெயரை மெல்ல உச்சரித்தார், யாரையும் லட்சியம் செய்யாத கனோஜி ஆங்கரே. ”பாலாஜி விசுவநாத்’ என்ற பெயர் அவர் வாயிலிருந்து மிகுந்த நிதானத்துடன் பக்தியுடன் உதிர்ந்தது.