Jala Deepam Part 3 Ch4 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 4 பழைய நினைவுகள் புதிய திருப்பங்கள்
Jala Deepam Part 3 Ch4 | Jala Deepam | TamilNovel.in
மேலைக் கடற்கரையில், மாலைவேளை முடிந்து இருள் புகுந்துவிட்ட அந்தச் சமயத்தில், பின்புறம் வேக மான காற்றும் உக்கிரமான அலைகளும் சீறிக் கொண்டிருந்த சூழ்நிலையில், காலில் இடறிய அந்தப் பொருள், இருளிலும் நெருப்புப்போல் சுடர் விட்டதைக் கண்டதால் மட்டுமல்ல, அந்தப் பொருளுடன் இணைந்த தனது வாழ்க்கைச் சிக்கல்களின் நினைப்பினாலும் பல வினாடிகள் மலைத்து நின்றுவிட்டான் தமிழக வீரன். அவன் காலில் இடறியது கொங்கணத்தின் கடற்கரையில் முதன்முதலாக அவன் இழந்துவிட்ட புலிநக ஆபரணம். சிவாஜி மகாராஜாவின் கங்கணத்திலாடிய இரு புலிநக ஆபரணங்களில் ஒன்றும், சிவாஜி மகன் ராஜாராமினால் தஞ்சையி லிருந்த அவரது ரகசிய மனைவிக்குக் கொடுக்கப்பட்டதும், அந்த மனைவியால் மகனைக் கண்டுபிடிக்கத் தன்னிடம் அளிக்கப்பட்டதுமான சரித்திரப் பிரசித்தி பெற்ற அந்த ஆபரணத்தைப் பார்த்தவண்ணம் நீண்டநேரம் இதய சந்திரன் நின்று விட்டானே தவிர, அதை எடுக்கவும் துணியவில்லை அவன். காலில் அது இடறிவிட்டதே என்ற திகிலில், ‘குற்றம், குற்றம்,’ என்று கூவிவிட்டானே யொழிய அடுத்த வார்த்தை ஏதும் பேசச் சக்தியற்றவனானான் ஜல தீபத்தின் தளபதி. அப்படி அந்த ஆபரணத்தை நோக்கி, மலைத்து நின்றுவிட்ட இதய சந்திரனை, “எடுத்துக் கொள்ளுங்கள், மலைக்க வேண்டாம்” என்ற சொற்கள் இக உலகத்துக்குக் கொண்டுவரவே, சரேலெனக் குனிந்து அந்த ஆபரணத்தை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான். பிறகுதான் அவனுக்கு முழுச் சுரணையும் வந்தது. அதை எடுக்கச் சொன்னது யார் என்று தலைநிமிர்ந்து நோக்கினான். எதிரே புன்முறுவலுடன் நின்றிருந்தாள் ஷாஹுவின் மருமகள் பானுதேவி.
முதன் முதலாகக் கொங்கணியின் கடற்கரையில் பார்த்தபோது இருந்த அந்தக் கம்பீரத் தோற்றம், அந்த அசட்டையான பார்வை, யாரையும் மயக்கும் அதே அழகிய புன்முறுவல், முதல் நாளில் சந்தித்த அதே. நிலையில் நின்றிருந்தாள் ஷாஹுவின் மருமகள். இதய சந்திரன் கண்களில் விரிந்த பிரமிப்பைப் பார்த்த பானுதேவி மெல்ல நகைத்து, “மண்டியிட்டு உட்காரட்டுமா வீரரே?” என்றும் வினவினாள், முதல் சந்திப்பின் நிலையை மீண்டும் நினைவுபடுத்த.
இதயசந்திரனின் மனம் ஒரே குழப்பத்திலிருந்தது. அந்தக் குழப்பத்துக்கு அழகுச்சிலையென நின்றிருந்த பானுதேவியின் கவர்ச்சி கண்கள் மேலும் மேலும் சுருதி கூட்டவே, இதயசந்திரன் அந்தப் பழைய நாட்களுக்குச் சென்றான். கொள்ளைக்காரரிடம் அகப்பட்ட அந்தப் பெரும் மரக்கலம், அதன்மீது பாய்ந்து வந்த பீரங்கிக் குண்டுகள், மரக்கலம் தீக்கிரையாகி வெடித்ததால் தன்மீது பாய்ந்துவிட்ட சிலாம்புகள், அத்துடன் கடலில் நீந்தி, கைசோர்ந்து தரையில் ஒதுங்கிவிட்ட நிர்க்கதியான நிலை, இவையனைத்தும் நினைவுக்கு வரவே, அந்த முதல் சூழ்நிலையில் ஜீவித்தான் தமிழன். உடலில் பாய்ந்த அந்த சிலாம்புகள் அப்பொழுதும் உடலிலிருந்தன போலவும் மரண வலியை விளைவிப்பது போலவுமிருந்தது அந்த வீரனுக்கு. சுவாமி அங்கு ஓடி வந்தது, தான் ஆண்டவனை நினைத்து அவரை அழைத்தது, அவர் சங்கெடுத்து ஊதி அரசன் மருமகளையும் மற்றப் பணிமகளிரையும் அழைத்தது, அத்தனையும் மனத்திலே எழுந்து உலவவே’ பெருமூச்சுவிட்டான் தமிழன்.
அந்தப் பெருமூச்சைக் கவனித்தாள் பானுதேவி. அவன் சங்கடத்தையும் கவனித்தாள், உறுதி தளர்ந்த அவன் நிலையையும் கவனித்தாள். அவன் மனத்திலோடும் எண்ணங்களையும் புரிந்து கொண்டாள். ”மண்டியிட்டு உட்காரட்டுமா வீரரே?” என்று மீண்டும் கேட்டு நகைக்கவும் செய்தாள்.
எண்ணத்திலெழுந்த அந்தப் பழைய கனவை உதறிக் கொள்ளத் தலையை இருபுறமும் ஆட்டிய இதயசந்திரன் அவளை ஏற இறங்கப் பார்த்தான். “மண்டியிட அவசியமில்லை தேவி. உடலில் காயங்களில்லை. ஆனால் உள்காயமிருக்கிறது” என்று கூறினான் அவளை நோக்கி.
பானுதேவியின் இதழ்களிலிருந்த புன்னகை சட்டென மறைந்தது. புன்னகையிருந்த இடத்தைச் சினம் ஆக்கிரமித்துக் கொண்டது. ”வீரரே! அந்தப் பழைய புரட்டு மீண்டும் அவசியமில்லை. அவ்வப்பொழுது கண் களில் தென்படும் பெண்களிடம் உமது உள்ளக் காயத்தை வெளிப்படுத்தி அதற்குச் சாந்தியைத் தேடிக்கொள்வது உமது மரபாக இருக்கலாம். எனது மரபு வேறு” என்றாள் பானுதேவி சற்றே கடுமையுடன்.
அவள் சொற்களின் கருத்தை நன்றாகப் புரிந்து கொண்ட தமிழன், “தேவி! உங்களைப் புண்படுத்தப் பழைய கதையை எழுப்பவில்லை நான். வாழ்வின் திருப்பங்கள் விதியைப் பொறுத்தவை. தனிமனிதன் நோக்கத்தை பொறுத்தவையல்ல” என்று சுட்டிக் காட்டினான்.
“விதி என்ற சொல் தனிமனிதன் சௌகரியத்துக்கு உபயோகப்படுகிறது. தனிமனிதன் சபலங்களை மறைக்கவும் அது ஒரு சாதனம்” என்றாள் பானுதேவி.
இதயசந்திரன் பதிலேதும் சொல்லச் சக்தியற்றவ னானான். எதிரே நின்றிருந்த அவள் கண்கள் கடலை நோக்கின. நட்சத்திரங்கள் வீசிய மங்கிய ஒளியில் அவள் கண்கள் தனி ஒளி பெற்றதால் அவள் கடல் தேவதைபோல் விளங்கினாள். அந்தத் தோற்றத்தையும் முன்பொருநாள்
பரசுராமபுரம் நோக்கிச் செல்லுகையில் காட்டில் அளித்த மோகனாகரத்தையும் இணைத்துப் பார்த்தான் இதய சந்திரன். அத்துடன் பரசுராமபுரத்தில் தானும் அவளும் நள்ளிரவில் புரவிகள் மீதமர்ந்து பரசுராம மலையின் சரிவில் வேகமாகச் சென்றதையும் அங்கிருந்த காட்டில் ஒரு சிறு பாறைமீது அவள் உட்கார்ந்திருந்த தோற்றத்தையும் எண்ணினான். ஒவ்வொரு தோற்றத்திலும் ஒவ்வொரு வித்தியாசம் இருந்தது என்றாலும், எல்லாத் தோற்றத்திலும் பொதுக் கம்பீரமொன்று களை விட்டதைப் புரிந்து கொண்டான் இதயசந்திரன். கடற்கரையில் அவள் எதிரே நின்ற அந்த நேரத்தில் அந்தப் பழைய நிலைகள் ஒவ்வொன்றிலும் அவன் திளைக்கவும் செய்தான்.
காட்டு மரத்தின்மீது அவள் சாய்ந்து நின்றது, காட்டுத் தரையில் மலர்கள் உடல்மீது தூவிக் கிடக்க அவள் படுத்திருந்தது, பரசுராம மலைக்காட்டில் அவள் தன்னிடம் நெருங்கி வந்தது, அத்தனைக் காட்சிகளும், அவை சம்பந்தமான சின்னஞ்சிறு சம்பவங்களும் அவன் மனத்தில் விவரமாக வலம் வந்தன. அப்படி வலம் வந்ததால், ‘மனித புத்தியில் மற்றப் புராணங்களோ தத்துவங்களோ நிலைத்து நிற்காமல் போனாலும் காதல் சம்பவங்கள் நிலைத்து நிற்கவே செய்கின்றன’ என்று தன்னுள் சொல்லிக் கொண்டான்.
இப்படி தீர்க்காலோசனையில் திளைத்துவிட்ட இதய சந்திரனை நோக்கி, “தமிழக வீரர் பழைய காலத்துக்கு ஓடிவிட்ட மாதிரி தெரிகிறது” என்று கூறினாள் பானுதேவி.
“ஆம்!” இதயசந்திரன் பதில் ஒற்றைச் சொல்லாயிற்று உணர்ச்சிகளின் மிகுதியால்.
“யார் யாரைப் பார்க்கிறீர்களோ அவ்வப்பொழுது அவரவர்கள் நினைப்பு வருகிறது உங்களுக்கு?” பானுதேவி யின் கேள்வியில் இகழ்ச்சி இருந்தது.
அந்த இகழ்ச்சியைக்கூட கவனிக்கவில்லை இதய சந்திரன். ‘வாழ்க்கை யாத்திரையில் மனம் பல விஷயங்களில் மோதுகிறது. சிலவற்றை மறக்க முடிவதில்லை; சிலவற்றை நினைக்க முடிவதில்லை” என்று கூறினான்.
“வீரரே…” என்று மெள்ள அழைத்தாள் பானுதேவி குழைந்த குரலில்.
“தேவி…”
“எதெதை மறக்க முடிவதில்லை?”
”பலவற்றை….”
“உதாரணமாக?”
“ஏதும் சொல்ல இயலவில்லை.”
“நான் சொல்லட்டுமா?”
“சொல்லுங்கள் தேவி.’’
பானுதேவி சற்று நிதானித்துவிட்டுக் கேட்டாள், “என்னை விலக்கிச் சொல்லட்டுமா? சேர்த்துச் சொல்லட்டுமா?’ என்று.
“விலக்கி விட்டுச் சொல்லுங்கள்.”
“சரி, நீங்களே விலக்கிவிட்டதால் விலக்கி விட்டே சொல்கிறேன். முதலில் மஞ்சு…’
“உம்.”
“பிறகு வெள்ளைக்காரி.”
“உம்.”
“மீண்டும் மஞ்சு.”
“உம்.”
“மீண்டும் நாளை வெள்ளைக்காரி.”
இதயசந்திரன் நெருப்புத் துண்டைப் பிடித்ததுபோல் “என்ன! என்ன!” என்று வேதனையுடன் கேட்டான்.
“மீண்டும் நாளை வெள்ளைக்காரி” என்று அழுத்திச் சொன்னாள் பானுதேவி.
“நாளைக்கா! காதரைனா!’ என்று தடுமாறினான் இதயசந்திரன்.
“ஆம் வீரரே!” என்ற பானுதேவி சற்று நிதானித் தாள். பிறகு திட்டமான குரலில் கூறினாள்,
“நாளை அவளும் கவர்னர் விருந்துக்கு வருகிறாள்” என்று.
இதயசந்திரன் மலைத்து நின்றான். ‘நாளைக்கு கவர்னர் விருந்து நடக்கப்போவது தேவிக்குத் தெரிந்திருக்க லாம். அதற்குக் காதரைன் வரப்போவதும் தெரிந்திருக்கலாம் அழைப்புப் பட்டியலைப் பார்த்திருந்தால். ஆனால், நான் அழைக்கப்பட்டது ஷா ஹுவின் மருமகளுக்கு எப்படித் தெரியும்’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். இருப்பினும் அதை நன்றாயறிந்து கொள்வதற்காகக் கேட்டான், “தேவி, கவர்னர் விருந்துக்கும் அவள் வருவதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்று.
”நீங்களும் அதற்கு வருவதால் அங்கு அவளைச் சந்திக்கலாமல்லவா” என்று வினவினாள் பானுதேவி அவளை உற்று நோக்கி.
இதயசந்திரன் சப்த நாடியும் ஒடுங்கி நின்றான். “தேவி! கவர்னர் எனக்கு அழைப்புக் கொடுத்தது நடுப்பகல் நகர்ந்த பிறகு. அதன் பின்னர் இப்பொழுது எட்டு நாழிகைகளே ஆகியிருக்கின்றன. இடையில் நான் யாரை யும் சந்திக்கவுமில்லை, பேசவுமில்லை. எனக்குக் கிடைத்த அழைப்பு உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று வினவினான் வியப்பும் கவலையும் கலந்தொலித்த குரலில்.
பானுதேவியின் பதில் திடமாகவும் தெளிவாகவும் வெளிவந்தது. “கவர்னர் ஏஸ்லாபியைப் புரிந்து கொண்டால் இதை ஊகிப்பது கஷ்டமாகாது” என்ற பானுதேவி மேலும் சொன்னாள்: ” வீரரே, கவர்னர்
ஏஸ்லாபியின் அறிவு மிகக் கூர்மையானது. பின்னால் வருவதை முன் கூட்டி ஊகிக்கக் கூடியவர் கவர்னர். அவரைப்போல் சிறந்த ராஜதந்திரிகள் மிகக் குறைவு நீங்கள் வரப் போவதை முன்கூட்டி அறிந்தே எனக்கு விருந்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். நீங்கள் வந்ததும் உங்களுக்கும் அழைப்புக் கடிதம் அளித்திருக்கிறார். ‘வெள்ளைக்காரி என்ற முறையில் காதரைன் கண்டிப்பாய் வருவாள். அதுமட்டுமல்ல வீரரே! இன்னொரு பெரிய செயலிலும் கவர்னர் இறங்கியிருக்கிறார்.”
இந்த இடத்தில் பேச்சை நிறுத்திக் கூர்ந்து நோக்கி ‘னாள் தமிழனை ஷாஹுவின் மருமகள். அந்தக் கூரிய விழிகளைச் சந்தித்த இதயசந்திரன் கண்கள், அவற்றில் அந்தச் சமயத்தில் காதல் ஏதுமில்லாததையும் ராஜதந்திரி யின் ஊகமும் ஊடுருவும் சக்தியுமே இருந்ததையும் கவனித்தன. ஆகவே அவன் கேள்வி தடுமாற்றத்துடன் எழுந்தது. ‘தேவி! வேறென்ன செயலில் இறங்கியிருக்கிறார் கவர்னர்?” என்று வினவிய குரலும் தழுதழுத்தது.
“இந்நகரிலிருக்கும் மகாராஷ்டிரப் பிரபுக்கள் பலரை விருந்துக்கு அழைத்திருக்கிறார்” என்று சுட்டிக் காட்டினாள் பானுதேவி.
”அதனாலென்ன?” என்று கேட்டான் தமிழன்.
“புரியவில்லையா உங்களுக்கு?”
“இல்லை.”
“வெள்ளைக்காரர்கள் விருந்தில் நடனத்தில் சுதேசி களுக்கு எப்பொழுதும் அழைப்புக் கிடையாது. சுதேசிகளுடன் பழகுவதை வெள்ளைக்காரர் விரும்புவதில்லை.”
“ஆம்.”
“அப்படியானால் இந்தக் கலப்பட விருந்தை ஏன் நடத்துகிறார் கவர்னர்?” என்று வினவிய பானுதேவி, ”கவர்னர் ஏதோ காரணத்தால்தான் இதைச் செய்திருக்கிறார். இப்படி நடக்கவிருக்கும் நடன விருந்து இதுதான் முதல் தடவை. இதன் காரணத்தை என்னால் ஊகிக்க முடியவில்லை. கவர்னரின் ஏற்பாட்டில் ஏதோ உள்மர்மம் இருக்கிறது. அது நாளை தெரியும்” என்று கூறினாள்.
பெரும் ராஜதந்திரச் சிக்கலில் தான் நன்றாக அகப் பட்டுக்கொண்டு விட்டதை உணர்ந்தான் இதயசந்திரன். ஆகவே பதிலேதும் கூறாமல் சிலையென நின்றான் பல வினாடிகள். “சரி, வாருங்கள்” என்று கடைசியில் அழைத்த பானுதேவி, சட்டென்று திரும்பி தூரத்தில் தெரிந்த குடிசைக் கூட்டத்தை நோக்கி நடந்தாள். இதயசந்திரன் ஏதும் பேசாமல் அவளைப் பின்தொடர்ந்தான். குடிசை களுக்கு அப்பாலிருந்த சாலையில் ஒரு வண்டி நின்றிருந்தது. அதில் இதயசந்திரனை ஏறச் சொல்லித்தானும் ஏறிக் கொண்டு, “விடு வண்டியை” என்று உத்தரவிட்டாள்.
வண்டிக்காரன் புரவிகளை முடுக்க சாலையில் வண்டி பறந்தது.