Jala Deepam Part 3 Ch41 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 41 சுவாமியின் கவலை
Jala Deepam Part 3 Ch41 | Read Jala Deepam | TamilNovel.in
காமத் திளைப்பாலும், ‘காந்தம் இரும்பு உவமையாலும் கலகலவென நகைத்த அவ்விருவரில் மஞ்சுவே முதலில் சிறிது நகைப்பை அடக்கிக்கொண்டு, “இரைந்து நகைக்காதீர்கள். வெளியே கேட்கப் போகிறது” என்று எச்சரித்தாள் வெட்கச்சாயை முகத்தில் படர.
அந்த வெட்கம் அவள் முகத்திலிருந்த பொலிவை ஆயிரம் மடங்காக அடித்திருந்தது. அவள் எழுந்து உட்கார்ந்திருந்த நிலையில் அவளுடைய இடைப்பகுதியில் சட்டை, சற்று மேலேறியிருந்த காரணத்தால் இடை வெளேரெனத் தெரிந்தது! அந்த இடையை ஒரு கையால் சற்று அழுத்தியே பிடித்தவண்ணம் சொன்னான் இதய சந்திரன், “பேஷ்வா எமப் பேர்வழி’ என்று.
மஞ்சுவின் இதழ்களில் புன்முறுவல், படர்ந்தது. “அதில் சந்தேகமில்லை ” என்ற அவள் பதிலிலும் மகிழ்ச்சி ஒலித்தது.
“பேஷ்வாவும் நம்மைப் போலத்தான் போலிருக்கிறது” என்று கூறி லேசாக நகைத்தான் இதயசந்திரன்.
மஞ்சுவின் விழிகளில் கேள்விக் குறி இருந்தது. “எந்த விஷயத்தில்?” என்று அவள் உதடுகளும் கேள்வியை உதிர்த்தன.
“இந்த விஷயத்தில் தான்…’ “இந்த விஷயத்திலென்றால்?”
“காந்தம் இரும்பை இழுக்கும் விஷயத்தில்…” இதைச் சொன்ன இதயசந்திரன் மீண்டும் நகைத்தான்.
“சே! சே! பேஷ்வாவை அப்படியெல்லாம் சொல்லா தீர்கள்” என்றாள் மஞ்சு, அவனை எச்சரிக்கும் பாவனையில்.
இதயசந்திரன் அந்த எச்சரிக்கையை லட்சியம் செய்யாமல் கேட்டான், “பேஷ்வா என்ன துறவியா?” என்று .
“துறவியாயில்லாவிட்டால் என்ன? அவர் ஒன்றும் உங்களையும் என் தந்தையையும் போன்றவரல்ல” என்று கூறினாள் மஞ்சு.
“என்ன வித்தியாசமாம்?” இதயசந்திரன் கேள்.வியில் விஷமம் இருந்தது.
“பேஷ்வா வைதிகர்…”
“ரொம்பச் சரி.”
“தினம் மூன்று வேளை சந்தியாவந்தன மாத்தியான்னிகங்களைச் செய்யத் தவறுவதில்லை.”
” அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?”
“உங்களையும் தந்தையையும் போல் இது விஷயத் தில்… உம்…வெறி பிடித்தவரல்ல” இதைச் சொன்ன அவள் குரலில் கோபமும் வெறுப்பும் கேலியுடன் கலந்தொலித்தன.
இதயசந்திரன் சற்றுச் சிந்தித்தான். பிறகு கேட்டான்: “மஞ்சு! ஒரு சந்தேகம் எனக்கு” என்று.
“என்ன சந்தேகம்?” என்று கேட்டாள் மஞ்சு சற்றுச் சந்தேகம் ஒலித்த குரலில்.
“பேஷ்வாவுக்குத் திருமணமாகிவிட்டதா?” என்று வினவினான் இதயசந்திரன், சர்வ சாதாரணமாக.
“ஆகிவிட்ட து.”
“குழந்தை இருக்கிறதா?”
”வீரப் புதல்வன் இருக்கிறான். பாஜிராவ் என்று ‘பெயர்.”
“பின்…” என்று இழுத்தான் இதயசந்திரன்.
“பின் என்று இழுப்பானேன்? தெளிவாகத் தான் சொல்லுங்களேன்.’
“பேஷ்வா வைதிகராயிற்றே! மூன்று வேளை அர்க்யம் விடுகிறாரே!…” என்று இழுத்தான் இதயசந்திரன்.
”உங்களுக்கு எப்பொழுதும் இந்த விஷமப் பேச்சுத் தான். பேஷ்வா சந்நியாசியென்றா சொன்னேன் நான்? உங்களைப்போல் கால காலமில்லாமல்” என்று சொல்லிக் கொண்டு போனவள், “இப்பொழுது பகல். இந்தச் சமயத்தில் இந்த அநியாயம்…” என்று கூறிவிட்டுப் பொய்க்கோபம் காட்டிக் கதவிடம் சென்றாள்.
“எதற்கு அங்கு போகிறாய் மஞ்சு?” என்று கெஞ்சினான் இதயசந்திரன்.
“கதவைத் திறக்க” என்றாள் அவள். “எதற்குத் திறக்க வேண்டும்?’ ”வெளியே இருப்பவர்கள் நகைக்காதிருக்க.’ ”யார்… நமது மாலுமிகளா?”
“அவர்கள் மட்டுமல்ல.”
“வேறு யார்?”
மஞ்சு அவனை நோக்கி நகைத்தாள். “இருங்கள் அழைக்கிறேன்” என்று கூறிவிட்டுக் கதவைத் திறந்து, “ஹர்கோவிந்த்!” என்று விளித்து மெல்ல ஏதோ சொன்னாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அறைக் கதவுக்கு வெளியே யாரோ திடத்துடன் நடந்துவரும் ஒலி கேட்டது. அந்த ஒலி, கதவையும் தாண்டி வந்ததும், உள்ளே நுழைந்த. மனிதரைக் கண்டு பெரும் பிரமிப்புக்குள்ளானான் இதய சந்திரன். தான் அடியோடு எதிர்பாராத அந்த மனிதர் அந்தக் கடலில் அந்த இடத்துக்கு வருவாரென்று சொப்ப னத்தில் கூட அவன் நினைக்காததால் அவன் உள்ளமும் உணர்ச்சிகளும் திடீரென உறைந்துவிட்டனபோல் தோன்றின.
தங்கப் பூண் போட்ட நீண்ட தடியுடனும், காஷாயத் துடனும், முதன் முதலில் கொங்கணிக் கரையில் தான் கண் விழித்தபோது எப்படித் தோற்றமளித்தாரோ அதே தோரணையுடனும், அதே அருள் நோக்குடனும் பிரும் மேந்திர ஸ்வாமி அவன் முன்பு நின்றார். அவரைப் பார்த்ததும் பெரும் அதிர்ச்சியினால் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்த நிலையில் பல வினாடிகள் அசைவற்று நின்று விட்ட இதயசந்திரன் மெல்லத் தன்னைச் சமாளித்துக் கொண்டு அவர் காலடியில் விழுந்து வணங்கினான். பிரும்மேந்திர ஸ்வாமி தமது கையை அவன் சிரசின் மேல் வைத்து, “உன்னால் நாடு மங்களமடையட்டும்” என்று ஆசி கூறினார்.
ஆசி பெற்று எழுந்ததும் இதயசந்திரனின் குழப்பம் நிறைந்த கண்கள் அவரை ஏறெடுத்து நோக்கின. அவர் செய்த ஆசியின் பொருள் அவனுக்குப் புரிந்திருந்தது. ‘மகாராஷ்டிரத்துக்கு உபயோகப் படும்படியாகச் செயல் புரி’ என்று தான் அந்த ஆசிக்கு அர்த்தம் என்பதை அவன் அறிந்திருந்தான். அதன் உட்கருத்து அவனுக்குப் புலனானாலும், அதைவிட வேறு கேள்விகள் அவன் உள்ளே எழுந்தன. ‘சுவாமி எப்படி திடீரென இங்கு வந்து சேர்ந்தார்? ஒப்பந்தம் ஏற்பட்ட போதுகூடக் கொலாபாவில் அவர் இருந்ததாகத் தெரியவில்லையே! ஜல தீபத்தில் அவர் வரவேண்டிய காரணம் என்ன?’ என்ற கேள்விகள் இதயத்தில் எழுந்தாலும் அவற்றில் எதையும் கேட்கவில்லை அவன்.
ஆனால், எந்த மனிதன் மனத்திலோடும் விஷயத்தையும் ஊகிக்கவல்ல பிரும்மேந்திர ஸ்வாமியே கூறினார்: “தமிழா! விதி உன்னை மகாராஷ்டிர சரித்திரத்தில் புகவிட்டிருக்கிறதென்பதை நீ முதன் முதலாகக் கொங்கணி வந்தபோதே கூறினேன். அதன் கரம்தான் உன்னையும் என்னையும் இதே அரபிக்கடல் பகுதியில் இணைய வைத்திருக்கிறது. பரசுராமனுக்குப் பணம் வசூலிக்க. நான் கனோஜியை நாடிக் கொலாபா வந்தேன். அங்கு ஏற்பட்ட ஒப்பந்தத்தை அறிந்தேன். ஆனால் பாலாஜி, ஒப்பந்தத்தால் ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட உன்னால் ஏற்பட்ட கவலையில் ஆழ்ந்து கிடந்தார். உன்னைப் பிடிக்க மஞ்சுவை அனுப்பியபோது, ‘நீங்களும் போய் வாருங்கள்’ என்று என்னையும் கேட்டுக் கொண்டார்” என்று குறிப்பிட்டார்.
“அப்படியானால் என்னைச் சிறைப்பிடிக்க நீங்களும் உதவினீர்களா?” என்று வினவினான் இதயசந்திரன்.
பிரும்மேந்திர ஸ்வாமியின் அருள் விழிகள் அவன் கண்களை உறுதியுடன் சந்தித்தன. “இதயசந்திரா! உன்னைப் பிடிக்க பாலாஜிக்கு யாரும் உதவவில்லை” என்ற சொற்களும் தெளிவாக உதிர்ந்தன,’’ அவர் உதடுகளிலிருந்து.
“அப்படியானால் நீங்கள்? மஞ்சு?” என்று வியப்புடன் வினவினான் இதயசந்திரன்.
“பாலாஜியின் கருவிகள். நாங்களெல்லாம் கைத் துப்பாக்கிகள். சுடும் கரம் அவருடையது” என்று தெளிவு படுத்திய சுவாமி மேலும் கூறினார்:
“இதயசந்திரா! நீ போகும் பாதை, இடம் அனைத்தை யும் திட்டமாகச் சுட்டிக்காட்டியவர் பேஷ்வாதான். தேசப்படத்திலேயே நீ போகும் பாதையையும் கோடிழுத்துக் காட்டி உன்னைப் பிடிக்க வேண்டிய இடம், முறை.
அனைத்தையும் கூறியவர் அவர் தான். முதல் நாளே தோர்லாவாடாவில் விவரங்களைக் கனோஜியிடமும் மஞ்சுவிடமும் கூறிவிட்டார் பேஷ்வா. மறுநாள் எனக்கும் தெரிவித்தார். ‘சுவாமி! குர்லா வரையில் அவன் செல்லட்டும். குர்லா கடலிலிருந்து உள்ளடங்கிய தீவுக் கோட்டையாதலாலும், அதன் வடபுறத்தில் மலை நன்றாகக் கடலுக்குள் நீட்டிக் கொண்டிருப்பதாலும், அந்த மலைச் சுவருக்கு வடபுறத்தில் குர்லாவிலுள்ள காலிவாத்துக்களையும் படகுகளையும் இழுத்துவிடுங்கள். கோட்டையில் உள்ள நூறு மாலுமிகளும், மற்றக் காவலரும் குர்லாவை நெருங்கியுள்ள மலைக்காட்டில் பதுங்கட்டும். இதயசந்திரன் இரவைக் கழிக்க அங்கு வருவான்’ என்று கூறினார்…”
இதைச் சொல்லிக் கொண்டுபோன சுவாமியை இடைமறித்த இதயசந்திரன் கேட்டான்: ”நான் அங்கு தங்க வராதிருந்தால்?” என்று.
”நிச்சயமாய்த் தங்க வருவாய் என்று சொன்னார் பேஷ்வா. காயமடைந்த வீரன் இத்தனை நாள் குணப்பட் டிருப்பான் என்று பேஷ்வா சொன்னார். ஆகவே அவனை மலைக் குடிசைக்கருகில் வைத்துப் பாதுகாப்பதைவிடக் கோட்டைக்குள் வைத்துப் பாதுகாப்பது சௌகரியமா யிருக்கும்போது அதன் காரணத்தை அறியவும் வீரனா யிருப்பவனுக்கு வேகமிருக்குமென்றும், அந்தக் கோட்டைக்கு நீ வரத் தயங்கமாட்டாயென்றும் பேஷ்வா திட்டமாக அறிவித்தார்” என்று விளக்கினார் பிரும்மேந்திர ஸ்வாமி.
“இத்தனை அறிந்த பேஷ்வா மலைப்பாதையில் வீரர் களை விட்டு என்னை மடக்கிச் சிறை செய்வதுதானே?” என்று வினவினான் இதயசந்திரன்.
“இதை நானும் கேட்டேன். நீ வீரனாகையால் எப்படியும் போரிடத் தயங்கமாட்டாயென்றும், அப்படிப் போரிட்டால் நீயோ உன் கைதியோ மடியவுங் கூடுமென்றும் பேஷ்வா நினைத்தார். ஆகையால் இது சிறந்த வழி என்று கூறினார். ‘இதயசந்திரன் குர்லாவில் இறங்கும்போது ஸ்வாமி தயவு செய்ய வேண்டும்’ என்றார் என்னை நோக்கி. என்ன தயவு’ என்று நான் கேட்டதற்கு, ‘தங்களிடம் இல்லாத மூலிகை மகாராஷ்டிரத்தில் யாரிடமிருக்கிறது’ என்று கேட்டுப் புன்முறுவல் கோட்டினார் பேஷ்வா’ என்று விவரித்த பிரும்மேந்திர ஸ்வாமி, ”இதய சந்திரா! அவர் சொற்படி காலிவாத்துக்களையும் படகுகளையும் மறைத்தோம். பார்வைக்குக் குர்லா கோட்டையை நிர்க்கதியாக்கினோம். வலை விரித்துக் கிடந்தது உனக்கு. அதில் வந்து நுழைந்தாய் நீ. நீ உறங்கிய அரை ஜாமத்திற்கெல்லாம் நானும் மஞ்சுவும் சாளரத்தின் மூலமாக உள்ளறைக்குள் வந்தோம். நீ சிலாம்புக் காயங்களால் முதல் நாள் சித்திரவதை அடைந் திருந்தபோது உன்னை உறங்க வைத்த அதே மயக்கத் துளிகளை அன்று கொண்டு வந்திருந்தேன். குப்பியிலிருந்த துளிகளிரண்டை உன் உதட்டில் விட்டாள் மஞ்சு. மெல்லச் சுவைத்து விழுங்கினாய். அதே மாதிரி உபசாரத்தை நான் உன் விரோதிக்குச் செய்தேன். சில வினாடிகளுக்குப் பிறகு உங்களிருவரையும் புரட்டிப் பார்த்தேன். நீங்கள் மயக்கத்தின் சுகானந்தத்தில் திளைத்து விட்டீர்கள். பிறகு உங்களை, மாலுமிகளை விட்டு ஜல தீபத்துக்குக் கொண்டு வருவது ஒரு பெரும் வேலையில்லையல்லவா?” என்றும் கூறினார்.
இதயசந்திரன் முகத்தில் உணர்ச்சிகள் பல எழுந்து தாண்டவமாடின. பேஷ்வா எத்தனை தந்திரமாக, திட்ட மாகப் பிடித்துவிட்டார் என்பது அவனுக்குப் பெரு விசித்திரமாயிருந்தது. அவனுக்குச் சந்தேகங்கள் பல அப்பொழுதுமிருந்தன. பல சின்னஞ்சிறு கணுக்கள் பிரும்மேந்திர ஸ்வாமியின் கதையில் சேராதிருந்ததுபோல் தோன்றியது அவனுக்கு. அத்துடன் படைத்தளத்தின்
கடமையிலிருந்து தப்பியோடிய தன்னைப் பேஷ்வா என்ன செய்வாரென்ற கேள்வியும் உள்ளத்தே எழுந்தது. ‘பீரங்கி வாயில் வைத்துச் சுடுவாரா பேஷ்வா?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். அந்தச் சமயத்தில் பெரிதாக எங்கிருந்தோ இரு பீரங்கிகள் சப்தத்தின. இதய சந்திரன் சட்டென்று துள்ளி எழுந்தான் கட்டிலிலிருந்து. “இதென்ன பீரங்கி சத்தம்?” என்று வினவவும் செய்தான் சுவாமியை நோக்கி.
பிரும்மேந்திர சுவாமியின் முகத்தில் சிறிதே கவலை தெரிந்தது. ”கொலாபாவை அணுகிவிட்டோம்’ என்ற அவர் பதிலிலும் அந்தக் கவலை பிரதிபலித்தது.