Jala Deepam Part 3 Ch45 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 45 பாலாஜியின் கண்கள்
Jala Deepam Part 3 Ch45 | Read Jala Deepam | TamilNovel.in
மஞ்சுவையும் தன்னையும் பற்றி கனோஜி ஆங்கரே ஒரு முடிவுக்கு வந்து விட்டாரென்பதை இதயசந்திரன் உணர்ந்தானானாலும், அது என்ன முடிவு என்பதை உணர்ந்து கொள்ள முடியாத காரணத்தால் அதைப் பற்றிய சிந்தனையுடனேயே அவன் தன் அறையை அடைந்தான். அந்தச் சிந்தனை அவன் சித்தத்தில் தீவிரமாயிருந்ததால், மஞ்சு கேட்ட கேள்விகளுக்குக்கூட அவன் சரியான விடை பகரவில்லை. “இத்தனை நேரம் தந்தை யின் அறைக்குத்தானே போயிருந்தீர்கள்?” என்ற கேள்விக்கு ஒரு வெற்று “ஆம்” மட்டும் சுருக்கமாகப் பதிலாக வந்தது அவனிடமிருந்து.
அந்த ஒற்றைச் சொல் பதிலும் அவன் முகத்திலிருந்த குழப்பமும் அவன் சித்தம் சிந்தனையிலாழ்ந்திருந்ததை எடுத்துக் காட்டவே, அதுவரை பஞ்சணையில் படுத்திருந்த அவள் எழுந்து உட்கார்ந்து கொண்டு, “இப்படி வாருங்கள்” என்று பஞ்சணையில் அவனுக்கு இடம் விட்டாள். பதுமைபோல் நடந்து தன்னிடம் வந்து உட்கார்ந்த அந்த ஆண்மகனை மஞ்சுவின் ஒரு கை தழுவியது. இன்னொரு கை அவன் கையொன்றை எடுத்துத் தன் மடியில் போட்டு அழுத்திக் கொண்டது. அந்த நிலையில் கேட்டாள் அவள், “தந்தையிடம் என்ன கேட்டீர்கள்? அவர் என்ன சொன்னார்?” என்று.
”நாளை விசாரணையைப் பற்றிக் கேட்டேன்” என்றான் அவன் வரண்ட குரலில்.
“என்ன சொன்னார் தந்தை?” என்று அவள் கேட்டாள் அவனை.
“நேரடியாகப் பதிலேதும் சொல்லவில்லை. விசாரணை மிக அவசரமோ என்று கேட்டார். பிறகு ஏதோ முடிவுக்கு வந்தவர் போல் காணப்பட்டார்” என்றான் இதயசந்திரன், குரலில் ஓர் அசந்துஷ்டியையும் அசட்டையையும் காட்டி.
“என்ன முடிவு என்று ஏதாவது கோடி காட்டினாரா?” என்று வினவினாள் மஞ்சு.
இதயசந்திரன் அவளைத் திரும்பிப் பார்த்தான். “”உன் தந்தை சொல்ல இஷ்டப்படாததை அவரிடமிருந்து கிரகிக்கக்கூடிய மனிதன் உலகத்தில் இனிமேல்தான் பிறக்கவேண்டும்” என்று பதில் சொன்ன இதயசந்திரன், “மஞ்சு! படுத்துக்கொள். எல்லாம் நாளைக்கு வெட்ட வெளிச்சமாகிவிடும்” என்று கூறித் தன் இரு கைகளாலும் அவளைப் பிடித்துப் படுக்க வைத்தான். அவன் கைகள் அவள் உடலை ஆதரவுடன் தடவிக் கொடுத்தன. இருமுறை அவள் வயிற்றின் அருகில் வந்தபோது, சற்று நிற்கவும் செய்தன. அதற்குள் சூல் நிலை திட்டமாகத் தெரியாத காலம் அது. இருப்பினும் அதில் ஒருவனோ ஒருத்தியோ உறைகிறது நிச்சயம் என்ற காரணத்தால் மிகுந்த எச்சரிக்கையை அவன் கை அடைந்தது, அங்கு வந்தபோது. மனம் அதைவிட எச்சரிக்கை அடைந்தது.
கண்ணை மூடி உறங்குவதுபோல் பாசாங்கு செய்து கொண்டிருந்த நிலையில். அவன் கையின் நிதானத்தையும், அதிலிருந்து அவன் மனத்தின் எச்சரிக்கையையும் நினைத்து, உள்ளூர நகைத்துக்கொண்டாள் மஞ்சு. இந்த ஆண்பிள்ளைகள் மிகவும் கோழைகள். உலகில் பிரதி தினம் அக்கம் பக்கத்தில் நூற்றுக்கணக்கில் குழந்தைகள் பிறப்பதை அறிந்தும் தங்கள் மனைவிக்கு அந்த நிலை வந்தால் என்ன பயம் பயப்படுகிறார்கள்?’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். அந்த நினைப்பு கொடுத்த சந்துஷ்டியில் மெல்ல உறங்கவும் செய்தாள்.
ஆனால் இதயசந்திரனுக்கு உறக்கம் அடியோடு பிடிக் காததால் அவன் அவள் உறங்கியதும் எழுந்திருந்து அந்த அறையில் அங்குமிங்கும் உலாவினான். பிறகு, நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான். மறுநாள் விசாரணையில் தான் எத்தகைய போக்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் நினைத்துப் பார்த்தான். கடைசியாக அதைப் பற்றி ஒரு முடிவுக்கும் வந்து, “கனோஜியின் முடிவோ, யார் முடிவோ எப்படியிருந்தாலும் என் முடிவு ஒன்று தான். நான் தமிழகத்தில் அந்தத் தாய்க்குக் கொடுத்து வந்த ஆணைக்குப் புறம்பான எந்தத் தீர்ப்பையும் ஒப்புக்: கொள்வதில்லை” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். இந்த உறுதி அளித்த சாந்தியில் கண்களையும் மூடினான்.
மறுநாள் விசாரணைக்கு அவன் அழைக்கப்பட்ட போதும் அந்த உறுதியுடனேயே சென்றான். இரவு நேரங் கழித்து உறங்கியுங்கூட அவன் விடியற்காலையே விழித்துக் கொண்டு கடற்கரை சென்று கடலில் நன்றாக நீந்தித் துளைத்து நீராடினான். பிறகு தோர்லாவாடா வந்து புத்தாடை புனைந்து குலாபியின் ஆலயம் சென்று தேவி யைத் தரிசித்து, குங்குமப் பிரசாதம் பெற்றுத் தனது நெற்றித் திலகத்தின் மத்தியில் அதைச் சிறிது அணிந்து கொண்டு, மீதியைக் கச்சையில் பத்திரப்படுத்திக் கொண்டான். அங்கிருந்து மீண்டும் தோர்லாவாடாவுக்கு வந்து தனது அறையில் விசாரணைக்குத் தயாராக இருந்தான். அவன் நீராடி வந்த பிறகும் மஞ்சுவின் கண்கள் மூடியே கிடந்தன. அந்த உறங்கிய நிலையிலும் முகத்தில் சில வேளை கவலை ரேகையும் இன்னும் சில வேளை மகிழ்ச்சிச் சாயையும் மாறி மாறித் தெரிந்தன. ஒருமுறை இதழ்கள் நன்றாக விரிந்து புன்முறுவல் கோட்டின. உறக்கத்திலும் அவள் எத்தனை அழகாயிருக்கிறாள் என்பதைப் பார்த்துப் பார்த்து மனம் பூரித்தான் இதயசந்திரன். அவளும் நீண்ட நேரத்துக்குப் பின் கண் விழித்து அவனை நோக்கினாள்.
அவன் நீராடி ஆடையணிந்த தோரணையைக் கண்ட பிறகு துள்ளி எழுந்தாள் பஞ்சணையிலிருந்து. “ஏன் என்னை எழுப்பக்கூடாதா?” என்றும் வினவினாள் கெஞ்சும் பாவனையில்.
”எழுப்ப அவசியமில்லை தேவி” என்றான் இதய சந்திரன்.
தேவியென்ற சொல் அவளுக்கு மிகவும் பிடித்தது. தன்னை பத்தினியென்ற முறையில் அவன் அப்படி அழைப்பது அதுவே முதல் தடவை என்று எண்ணியதால் பெருமிதம் அடைந்தாள் மஞ்சு. அந்தப் பெருமை குரலிலும் துலங்கக் கேட்டாள்: “கற்புடைய பெண்கள் பின் தூங்கி முன் எழவேண்டாமா?” என்று.
“அவரவர்கள் நிலையைப் பொறுத்தது” என்ற இதய சந்திரன் அவளை ஆசையுடன் நோக்கினான்.
அவன் எந்த நிலையைக் குறிப்பிடுகிறான் என்பதை அறிந்த அவள் வெட்கப் புன்முறுவல் கோட்டினாள். திடீரென்று அந்த வெட்கம் மறைந்து அவள் வதனத்தில் கவலை படர்ந்தது. “விசாரணை இன்றுதானே?” என்று கேட்டாள், குரலிலும் கவலை தெரிய.
“ஆம்” என்றான் இதயசந்திரன். “அதற்குத்தான் இத்தனை படாடோபமா?” என்றாள் அவள் கோபத்துடன்.
“இதில் படாடோபமேதுமில்லை. அந்தஸ்தை உத்தேசித்துப் புத்தாடை அணிந்திருக்கிறேன்.”
“என்ன அந்தஸ்தோ?”
“ராஜாராம் மகாராஜாவின் அந்தரங்க ராணியின் தூதன் ஸார்கேல் கனோஜி ஆங்கரேயின் மருமகன்.”
“அதனால்?”
”பேஷ்வா விசாரணை துவங்கும்போது, தான் இஷ்டப்படி நடத்தவல்ல ஒரு சாதாரண மாலுமியைப் பார்க்க மாட்டார். தஞ்சை அரண்மனையின் தூதனைப் பார்ப் பார்.” இந்தச் சொற்களை மிகுந்த கம்பீரத்துடன் உதிர்த்த இதயசந்திரன், “தேவி, நீ போய்ச் சீக்கிரம் நீராடி வா” என்று உத்தரவிட்டான் அவளுக்கு.
மஞ்சு அவனைச் சில விநாடிகள் நோக்கிக் கொண்டு நின்றாள். பிறகு மெல்ல நடந்து அறையைவிட்டு நகர்ந்தாள். அந்த நடையிலும் அவள் மனத்திலிருந்த கவலைச் சுமை நன்றாகத் தெரிந்தது இதயசந்திரனுக்கு. அவள் வெகு சீக்கிரத்தில் நீராடி, புத்தாடை புனைந்து திரும்பி வந்தாள். அன்று அவள் சீலை கட்டவில்லை. விலை உயர்ந்த ஆடைகளையும் அணியவில்லை. மாலுமிகள் அணியும் சராயையும் மேலே பிரிட்டிஷார் அணியும் சட்டையையும் அணிந்திருந்தாள். அந்தச் சட்டையும் சராய்க்குள் செலுத்தப்பட்டிருந்ததால் அவள் எழில்களை ஆடை மறைப்பதற்குப் பதில் அவற்றை நன்றாக எடுத்துக் காட்டவே செய்தது.
இதயசந்திரன் அவளை ஆசனத்தில் உட்கார்ந்தபடியே ஏறெடுத்து நோக்கினான். “இதென்ன ஆடை மஞ்சு?” என்று வினவினான்.
“உங்களை முதலில் சந்தித்தபோது புனைந்த ஆடை” என்று சுட்டிக் காட்டினாள் அவள்.
“இப்பொழுது எதற்காக இதை அணிந்திருக்கிறாய்?” என்று கேட்டான் இதயசந்திரன்.
“வாசிஷ்டி ந்திக்கரை, படகு மறித்த கப்பல் எல்லா வற்றையும் நினைவுபடுத்திக் கொள்கிறேன்” என்றாள் அவள்.
இதயசந்திரனுக்கு அவள் மனப்போக்கு ஏதும் புரியாத தால் தனது கச்சையிலிருந்த தேவி பிரசாதத்தை எடுத்து அவள் நெற்றியில் தன் கையால் இட்டான். பிறகு. சொன்னான் அவளை அணைத்தவண்ணம், “மஞ்சு! நான் விசாரணைக்குச் செல்கிறேன், விசாரணையின் முடிவு எது வாயிருந்தாலும் நீ விபரீதமான செயல் எதிலும் இறங்க முயலாதே” என்று.
மஞ்சுவின் விழிகள் அவனை உறுதியுடன் நோக்கின. “விபரீதமான செயல் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?” என்று வினவினாள் அவள், சற்றும் சலிக்காத குரலில்.
”உனக்கோ நமது…”
“உம்… குழந்தைக்கோ …”
“தீங்கு வரக்கூடிய செயல்.” இதைத் தட்டுத்தடு மாறிச் சொன்னான் அவன். அவன் மனத்திலோடிய எண்ணங்களைப் புரிந்து கொண்ட அவள் சொன்னாள், “நீங்கள் நினைப்பதுபோல் எதுவும் நடக்காது. மிஞ்சி னால் பேஷ்வா உங்களைச் சிறையில் தள்ளலாம். அது விஷயமாகவும் நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்” என்றாள் மஞ்சு.
அவள் குரலில் உறுதி நன்றாகத் தெரிந்தது. அவள் கண்களில் முந்திய நாளிலிருந்த அச்சமெல்லாம் பறந்தோடிவிட்டது. அதைக் கவனித்த இதயசந்திரன் கேட்டான், ”என்ன முடிவு மஞ்சு?” என்று.
முடிவு என்ன என்பதை விளக்கவில்லை அவள். “சமயத்தில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்” என்று மட்டும் கூறினாள்.
‘கனோஜியும் ஏதோ முடிவுக்கு வந்துவிட்டார். இவளும் ஏதோ முடிவுக்கு வந்திருக்கிறாள். தந்தையைப் போல் பெண். இருவரும் இஷ்டப்படாவிட்டால் ஒரு. வார்த்தை கூடச் சொல்லமாட்டார்கள்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான் இதயசந்திரன்.
அந்தச் சமயத்தில் அவனுக்கு அழைப்பு வந்தது பேஷ்வாவிடமிருந்து. மெல்லக் கதவைத் தட்டிய பின்பு உள்ளே நுழைந்த இரு காவலர், ‘பேஷ்வா விசாரணை மண்டபத்துக்கு வந்துவிட்டார். தங்களை அழைத்துவர உத்தரவாகியிருக்கிறது” என்று கூறினார். இதயசந்திரன் மஞ்சுவிடம் விழிகளாலேயே விடைபெற்றுக் கிளம்பினான் அந்த இரு வீரர்களுடனும்.
தோர்லாவாடாவின் முதல் மாடியிலிருந்த பிரும் மாண்டமான நடு மஹாலில் விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டபத்தின் தெற்குக் கோடிச் சுவரின் நடு மத்தியிலிருந்த மேடையில் நீதிபதிக்குத் திண்டு திவாசுகள் போடப்பட்டிருந்ததன்றி அவற்றின் மீது விலை உயர்ந்த பட்டு விரிப்புகளும் மூடப்பட்டிருந்தன. அந்த மேடையின் ஒரு புறத்தில் *சிட்னிஸ் ஒருவருக்குச் சிறு சாய்வு மேஜை எழுதுவதற்காகப் போடப்பட்டிருந்தது. மேடையின் இரு புறத்திலும் பூரண ராணுவ உடை யணிந்து உருவிய வாட்களை ஏந்திய வீரரிருவர் நின்றிருந்: தனர். அந்த மேடையிலிருந்து சற்றுத் தள்ளி ஒரு சிம்மாசனம் போன்ற தனி நாற்காலியொன்றும் இருந்தது. மண்டபத்திற்கு இருபுறமும் வாயில்களிருந்ததால் இரு புறத்திலும் காவலர் காத்து நின்றனர். மண்டபத்துக்குள் அழைத்து வரப்பட்ட இதயசந்திரன் மேடையின் நடுவில் திண்டில் சாய்ந்த வண்ணம் பேஷ்வாக்களுக்கு உரிய பூர்ண ராஜிய உடையில் பேஷ்வா பாலாஜி விசுவநாத் அமர்ந் திருந்ததைக் கவனித்தான். தூரத்தில் சிம்மாசனம் போலிருந்த நாற்காலி, பிரிட்டிஷ் கவர்னர்கள் உட்காரும் நாற்காலியென்பதையும், அது கனோஜி கொள்ளை யடித்த பொருள்களில் ஒன்றென்பதையும் அறிந்ததால் சற்றுப் புன்முறுவல் கொண்டான் இதயசந்திரன். அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த கனோஜியும் அவனை நேசக்கிப் புன்முறுவல் செய்தார். * சிட்னிஸ்: அரசாங்கத் தகவல்களை எழுதுபவர்.
அதற்குப் பிறகு அந்த மண்டபத்தைச் சுற்றும் முற்றும் பார்த்து அளவெடுத்த பின்பு, பேஷ்வா இருந்த மேடையை நோக்கிச் சென்ற இதயசந்திரன் அவரை நோக்கிச் சிரம் தாழ்த்தி வணங்கினான். பாலாஜி விசுவநாத்தின் சாம்பல் நிறக் கண்கள் மெல்ல எழுந்து அவன் முகத்தில் நிலைத்தன. அந்தக் கண்களைக் கண்டதால், அவற்றின் இணையிலா சக்தியால், அப்படியே கவரப்பட்டு நின்று விட்ட இதயசந்திரனின் வீரம், வேகம் அனைத்தும் அந்த சில நிமிடங்களில் எங்கோ பறந்தன. பாரதத்தின் சரித்திரத்தில் புது அத்தியாயத்தை எழுத முன்வந்த அந்த மாபெரும் மனிதர் முன்பு, தான் நிற்பதை உணர்ந்தான் இதயசந்திரன். அந்த உணர்ச்சியில் ஆழ்ந்து விட்ட அவனை, “தமிழா!” என்று அழைத்த பாலாஜியின் சொல்கூட பிரமிப்பிலிருந்து இழுக்கும் சக்தியை இழந்து விட்டது. இரண்டாவது முறை அவர் “தமிழா!” என்று சற்று அழுத்தி அழைத்த பின்புதான். அவன் சுயநிலை அடைந்தான். அதன் விளைவாக மீண்டுமொரு முறை தலை வணங்கி விசாரணைக்குத் தயாராக நின்றான்.
பாலாஜி மிக நிதானமான, ஆனால் தெளிவான, திட்டமான, சம்பிரதாயம் சிறிதும் வழுவாத முறையில் விசாரணையைத் துவங்கினார்.