Jala Deepam Part 3 Ch46 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 46 நாளை தீர்ப்பு
Jala Deepam Part 3 Ch46 | Read Jala Deepam | TamilNovel.in
நீதி மண்டபத்தின் ஒரு கோடியிலிருந்த மேடையில் நடுவே தனக்கு நேர் எதிரே திண்டு திவாசுகளில் சாய்ந்து கொண்டிருந்த பேஷ்வா பாலாஜி விசுவநாத் அதிக உயர மில்லாதவர் என்பதைப் பார்த்த உடனே அறிந்து கொண்ட இதயசந்திரன், அவர் கண்களைக் கண்ட பின்பு ‘பெரும் புத்தி பலமும் இணையிலா உறுதியுமுள்ள ஒரு மனிதன் முன்பு தான் நிற்பதை உணர்ந்தான். பேஷ்வாவின் செக்கச் செவேலென்றிருந்த முகமும், அதன் மத்தியில் தீட்டப்பட்டிருந்த கோபி சந்தனமும் அவருக்கு ஒரு ‘தெய்வீகக் களை அளித்ததையும் கவனித்தான் அவன். பேஷ்வா விசாரணையைத் தொடங்கியபோது வெளிப் பட்ட சொற்களில் ஒரு சாவதானம் இருந்தபோதிலும் சாம்ராஜ்யத்தை நிறுவக்கூடிய சக்தி சொற்களின் ஒலியில் இருந்ததையும் கண்டான் இதயசந்திரன். ஒரு சாதாரண சித்பவன் பிராம்மணன், கனோஜியிடம் கொங்கணிப் பகுதியில் தோல்வியடைந்து நடுங்கிக் கொண்டிருந்த ஒரு மன்னனின் மந்திரி, எப்படி கனோஜியைத் தமது இஷ்டத்துக்கு வளைத்தார் என்று கல்யாண் நகரிலிருந்த போது நினைத்ததுண்டு தமிழன். ஆனால் பேஷ்வாவை நேருக்கு நேர் அன்று கண்ட பிறகு, புஜ பலத்தையும் போர் அறிவையும்விடச் சிறந்த சக்தி ஒன்று உண்டு என்பதை அந்த நீதிமண்டபத்தில் புரிந்து கொண்டான்.
இப்படிப் பலப்பல எண்ணி, தம்மைப் பார்த்துப் பார்த்துப் பிரமித்துக் கொண்டிருந்த இதயசந்திரனை நோக்கிய பாலாஜி விசுவநாத், “தமிழா! நீ எதற்காக இங்கு கொண்டு வரப்பட்டிருக்கிறாய் என்பது உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்” என்று மெல்லச் சொற்களை உதிர்த்தார்.
இதயசந்திரன் பதில் மிகுந்த பணிவுடன் வெளி வந்தது. “தெரியும்” என்று.
“சத்ரபதி ஷாஹுகார்யதுரந்தரும் அவரது ஸார்கேலு மான கனோஜி ஆங்கரேயின் உத்தரவுகளை இருமுறை நீ மீறியிருக்கிறாய்; ராணுவ சட்டத்திட்டங்களின்படி அது பெரும் குற்றம்” என்று சுட்டிக்காட்டினார் பாலாஜி விசுவநாத்.
இதயசந்திரன் இதற்கு உடனடியாகப் பதில் கூற வில்லை. பேஷ்வாவையும் நோக்கி அவர் சொன்னதை. யெல்லாம் வெகு வேகமாக எழுதிக் கொண்டிருந்த சிட்னி யையும் நோக்கினான். பிறகு மார்பில் இரு கைகளையும் கட்டிக் கொண்டு, “இங்கு ஒரு தவறு இருக்கிறது” என்றான் பேஷ்வாவை நோக்கி.
இதைக் கேட்ட காவலர் திகைத்தனர். சிட்னிஸ்’ எழுதுவதை நிறுத்தி வியப்புடன் நோக்கினான் இதய சந்திரனை. கனோஜி ஆங்கரேயின் பெருவிழிகளிலும் ஆச்சரியம் தென்பட்டது. பேஷ்வாவிடம் தவறு கண்டு பிடிக்கக்கூடிய துணிவு இதயசந்திரனுக்கு ஏற்பட்டதை நினைத்த ஆங்கரேயின் பெரிய மீசையும் ஒருமுறை அசைந்து நின்றது. ஆனால் பாலாஜி விசுவநாத் மட்டும் சிறிதும் அசையாமல் பழையபடியே கேட்டார், “தவறு எங்கிருக்கிறது தமிழா?” என்று.
“பேஷ்வாஜி! ஸார்கேல் கனோஜி ஆங்கரே ஒரே ஓர் உத்தரவை எனக்கு அனுப்பினார் நான் கல்யாணியில் இருந்தபோது. உடனடியாக என்னைப் புறப்பட்டு லோஹ்காட்டுக்கு வரும்படி உத்தரவிட்டார். நான். வரவில்லை. அதற்கு அவர் தண்டனை விதிக்கலாம். தாங்கள் விதிக்க முடியாது” என்று பணிவுடன் விண்ணப் பித்துக் கொண்டான். பாலாஜி விசுவநாத்தின் சாம்பல்நிறக் கண்கள் அவனை ஏறெடுத்து நோக்கின ஒரு விநாடி. “ஏன்?” என்ற ஒற்றைச் சொல் கேள்வியை உதிர்த்தன அவர் செவ்விய உதடுகள்.
“பேஷ்வாஜி! அப்பொழுது அவர் சத்ரபதி ஷாஹு கார்யதுரந்தரர் அல்ல. தாராபாயின் ஸார்கேல். ஆகவே, அந்தக் குற்றத்திற்குச் சத்ரபதியின் பிரதிநிதி என்னைத் தண்டிக்க முடியாது. ராணி தாராபாயின் பெயரால் கனோஜி ஆங்கரே அப்பொழுது என்னைத் தண்டித் திருக்கலாம். இப்பொழுது அவர்கூடத் தண்டிக்க முடியாது. தாராபாய்க்குச் செய்த அபவாதத்துக்கு ஷாஹு மன்னரின் ஸார்கேலோ நீதிபதியோ என்னை எப்படித் தண்டிக்க முடியும்?” என்று வினவினான் இதய சந்திரன்.
நீதி மண்டபத்தில் நிசப்தம் நிலவியது. பேஷ்வாவிடம் தமிழன் சட்டம் பேசுவதைக் கண்ட வீரர்கள் திக்பிரமை யால் பேசாமல் நின்றனர். கனோஜியின் இதழ்களில் இள நகை அரும்பியது. பேஷ்வாவை அவர் கண்கள் ஆராய்ந்தன. ஆனால் பேஷ்வா அந்தக் கேள்வியால் சிறிதும் சலனப்பட்டதாகத் தெரியவில்லை. அவருடைய மென்மையான குரல் மீண்டும் ஒலித்தது. “தமிழா! நீ சொல்வது ஒருவகைத் தர்க்கம் தான். அது சாதாரண நியாயத்துக்குப் பொருந்தும். ஆனால் ராஜ்ய நியாயங்கள் வேறு வகைப்பட்டவை. ஒரு நாட்டு அரசு என்பது தொடர்ச்சியாக ஏற்படுவது. ஓர் அரசு போய் இன்னொரு அரசு வரும்போது, பழைய அரசில் குற்றம் செய்தவர்களெல்லாம் விடுவிக்கப்படுவதில்லை, விசாரிக்கப்படுகிறார் கள். தவிர, யார் அரசர், யார் சொல்வதை நாம் கேட்க வேண்டும் என்ற நீதி தனிப்பட்ட வீரனுக்குக் கிடையாது. மேலிருந்து வரும் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டியது அவன் பொறுப்பு. நீ ராணுவத்தைச் சேர்ந்தவன். யார் அரசாள்கிறார்கள் என்று விசாரித்து ஒவ்வொரு ராணுவ வீரனும் அவனிஷ்டத்துக்கு நடந்தால் படை நடக்காது ஓர் அரசாங்கம் நடக்காது. ஆகவே, அரசு தொடர்ச்சி யானது. ஓர் அரசில் செய்யப்படும் குற்றம் மறு அரசிலும் விசாரிக்கத் தக்கது என்பது நீதி தர்மம். நியாயத்தை, யொட்டிக் காரியங்களைச் செய்யும் பிரிட்டிஷாரும் இதை ஒப்புக்கொள்கிறார்கள். ‘கண்டின்யுவடி ஆஃப் கவர்ன் மென்ட்’ என்று அவர்களும் கூறுகிறார்கள்! ஆகவே இதய சந்திரா! ஓர் அரசில் ஒருவன் செய்த குற்றம் அரசு மாறினாலும் படைத் தலைவர்கள் மாறினாலும் அவனை விடாது” என்று அரசு நீதியை மெல்ல மெல்ல உரைத்த. பாலாஜி விசுவநாத், “இரண்டாவது முறை உன்னைச் சிறை செய்ய உத்தரவு அனுப்பினோம் சுகாஜிக்கு” என்றார்.
“உத்தரவு வந்தபோது நான் கல்யாண் நகரில் இல்லை” என்றான் இதயசந்திரன்.
“நீ கல்யாண் நகரைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள படைத்தலைவன் தானே?” என்று கேட்டார் பாலாஜி.
“ஆமாம்.’
“பொறுப்பைக் கைவிட்டு ஓடும் படைத் தலைவனுக்கு: என்ன தண்டனை தெரியுமா.”
“தெரியும். மரண தண்டனை. அவனைச் சுட்டு. விடலாம். வெட்டுப்பாறைக்கும் அனுப்பலாம்” என்றான் இதயசந்திரன். அவன் குரல் அச்சம் ஏதுமின்றிக் கம்பீரமாக ஒலித்தது அந்த மண்டபத்தில்.
பாலாஜியின் சாம்பல் நிறக் கண்கள் மீண்டும் அவனை ஏறெடுத்து நோக்கின. “நீ ஒப்புக்கொண்ட இந்த ஒரு குற்றத்துக்கே அந்த ஒரு தண்டனை உண்டு. அது மட்டு மல்ல தமிழா! கனோஜி உன்னிடம் அனுப்பிய தூதனைக் காரணமின்றிக் கைது செய்தாய். உன்னுடன் அவனைப் பலவந்தமாக அழைத்துக்கொண்டு நாட்டைவிட்டு ஓடப் பார்த்தாய். நீ அழைத்துச் சென்ற அந்த நிம்கர், மகாராஷ்டிரத்தின் மாபெரும் வீரன். உயிரைப் பணயம் வைத்து ஸித்திகளிருக்குமிடத்தில் வேவு பார்த்தவன்” என்று சுட்டிக் காட்டினார் பாலாஜி.
நிம்கரைப் பற்றி அவர் பெருமையுடன் பேசியதால் சற்று ஆத்திரமடைந்த இதயசந்திரன் தன் சுயநிலை மறந்தான். “வீரன் என்ற பதத்தில் பராக்கிரமம் மட்டு மல்ல, கண்ணியமும் கலந்திருக்கிறது பேஷ்வாஜி” என்று சீற்றத்துடன் சொற்களை உதிர்த்தான் இதயசந்திரன்.
“கண்ணியத்தில் நிம்கர் எப்பொழுது குறைந்தான்?”
“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாளிகையில் தனது சகவீரனைக் கட்டாரி கொண்டு குத்தியபோது, ஒரு அபலையின் மகனைத் திருடிக்கொண்டு வந்தபோது” என்றான் இதயசந்திரன். மேலும் சொன்னான்: “பேஷ்வாஜி! சட்ட திட்டங்களின் நுட்பம் எனக்குத் தெரியாது. ஆனால், ஆண்டவனின் நியாயம் எது என்பது எனக்குத் தெரியும். அரசியல் சிக்கல்களைப்பற்றி எனக்குத் தெரியாது. அதில் சிக்கித் தவிக்கும் சில பேதைகளைப்பற்றி எனக்குத் தெரியும். மன்னர்களின் நோக்கங்கள் எனக்குத் தெரியமாட்டா. ஆனால், அவர்கள் காமத்துக்கும் ரகசிய இச்சைகளுக்கும் கள்ள விவாகத்துக்கும் பலியான ஓர் அபலையைப்பற்றித் தெரியும். ராஜாராம் மகாராஜா ஒருத்தியை மணக்கவேண்டுமென்றால் பகிரங்கமாக மணந்திருக்கலாம். அப்பொழுது அவர் செல்வனுக்கு அரசு அந்தஸ்து இருக்கும். அதுவும் இல்லை அவனுக்கு. தாய்க்கு ரகசிய ராணி பதவி. தனயனுக்கு ரகசிய சந்ததிப் பதவி. அதை அழிக்க ஒரு ராணி தாராபாய், அந்த ராணியின் கட்டளையை நிறைவேற்ற ஒரு நிம்கர். இதென்ன அரசியல்! இது என்ன நியாயம்?”
இதை மடமடவென்றும் உணர்ச்சி மிகுந்தும் சொல்லி சற்று நிதானித்த இதயசந்திரன், “பேஷ்வாஜி! கண்களில் நீர் திரண்டு நின்ற அந்தத் தாயை நீங்கள் பார்த்திருந்தால் நான் வேகத்துடன் பேசுவதன் காரணம் உங்களுக்குப் புரியும். அவள் கரம் நீட்டி என்னை நோக்கி, “இதயசந்திரா! என் மகன் போனாலும் பாதகமில்லை. மகாராஷ்டிர. அரசு என்னால் குலைய வேண்டாம். அவனைக் கொண்டு சென்றவனைக் கண்டுபிடித்து அழித்து விடு” என்றாள். அந்த ஆணையை மேற்கொண்டு இங்கு வந்தேன். அவளும் ராஜாராம் மகாராஜாவின் மனைவி. அவளும் இந்நாட்டு ராணிகளில் ஒருத்தி. அவள் பிரதிநிதி நான்” என்றும் கூறினான் பெருமிதத்துடன், வேகத்துடன், தான் ஒரு கர்மவீரன் என்ற திடத்துடன்.
நீதி மண்டபத்தில் மேலும் பயங்கர அமைதி நிலவியது. அங்கிருந்த அனைவர் உள்ளங்களும் திக்கு திக்கென்று அடித்துக்கொண்டன. அலட்சியமாயிருந்தவர் இருவர். ஒருவர் கனோஜி; இன்னொருவர் பாலாஜி. பாலாஜியின் உதடுகள் மீண்டும் அசைந்தன. சொற்கள் உறுதியுடன் வந்தன. “நீ சொல்லுவது உண்மைதான் தமிழா! தனி மனிதன் தர்மத்துக்கு உன் வேகம், உணர்ச்சி, நீதி அத்தனையும் இடம் கொடுக்கும். ஆனால் பெரும் அரசுகள் நிறுவப் படும்போது, வேறு தர்மங்கள் தலை காட்டுகின்றன. இந்த விஷயத்தை ராஜியரீதியில் பார்க்கும்போது ஒரு தனிப்பட்ட தாய், ஒரு தனிப்பட்ட வாரிசு. இவர்கள் கஷ்டங்களை, சுகதுக்கங்களை, அந்தஸ்துகளை நாம் பார்க்க முடியாது. ஏராளமான மக்களின் நலன்களைப் பாதுகாக்கத் தனிமனிதர்கள் பலியிடப்படுகிறார்கள். ஒரு ராஜ்யத்தைக் காக்க ஒரு நகரத்தையே பலி கொடுக்கலாமென்று தர்ம சாஸ்திரம் சொல்லுகிறது. இந்த மகாராஷ்டிர நாட்டில் இரண்டாம் முறையாக இப்பொழுது திடமான அரசு நிலைநாட்டப் படுகிறது. முதலில் சத்ரபதி சிவாஜி ஸ்தாபித்த அரசியல் சத்ரபதி ஸம்பாஜியின் காலத்தில் சிறிது உடைந்தது. இப்பொழுது சத்ரபதி ஷாஹு வின் காலத்தில் தலை தூக்குகிறது. நீ ஒரு தாயின் கண் சீரைப் பற்றிப் பேசுகிறாய். சிவாஜி மகாராஜாவுக்கு முன்பு மகாராஷ்டிரம் ஆயிரக்கணக்கான தாய்மார்களின் கண்ணீரைப் பார்த்திருக்கிறது. நீ ஒரு மகனைப் பற்றிக் கவலைப்படுகிறாய். மகாராஷ்டிரம் ஆயிரக்கணக்கான சிறுவர்களைப் பலி கொடுத்திருக்கிறது. சதா மொகலாயர் படையெடுப்பில் கற்பிழந்த கன்னியர், சேயிழந்த தாய்மார், கணவனிழந்த மங்கையர், கணக்கிடலங்க மாட்டார்கள். கண்ணீரும் கம்பலையும் துடைக்க வந்தார் சிவாஜி மகாராஜா மகாராஷ்டிரம் ஒரு ராஜ்யமாயிற்று. அதை மீண்டும் உருப்படுத்த அதன் லட்சக்கணக்கான மக்களைப் பயமின்றி வாழ வைக்க, ஹிந்து தர்மம் செழிக்க, ஹிந்து மதம் அழியாதிருக்க, கோவில்கள் இடிப்படாமலிருக்க நாம் முயல்கிறோம். இந்த முயற்சி அரசியல் தர்மம். அதற்குக் குறுக்கே தனி நபருக்கு வரும் இன்னல்கள் பெரிய தர்மத்தில் அடிபட்டுப் போகும். இந்தக் கண்ணைக் கொண்டு தஞ்சையைப் பார். மகாராஷ்டிரத்தைப் பார். ஏன், அகில பாரத ஹிந்துக் களைப் பார்” என்ற பாலாஜி, “இதயசந்திரா! இந்தத் தர்மப்படி, இந்தச் சட்டப்படி, நீ சத்ரபதி ஷாஹுவின் ராஜ்யத்துக்கு எதிராக, அதன் நன்மைக்கு எதிராக அலுவல் புரிந்தவன். இந்தக் குற்றத்துக்கு உனக்கு நான் தண்டனை விதிக்காமலிருக்க முடியாது” என்றார்.
இதயசந்திரன் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது. “அப்பொழுதும் நீங்கள் எனது ஆணையை நிறைவேற்று கிறீர்கள்” என்றான்.
“எப்படி!” என்றார் பாலாஜி.
“நான் தஞ்சை இரகசிய ராணியிடம் சொல்லி வந்தேன், ‘என் அலுவலை நிறைவேற்ற முடியாவிட்டால் உயிருடன் திரும்பமாட்டேன் தஞ்சைக்கு’ என்று. அதன்படி ஆணையும் இட்டு வந்தேன். அதை பேஷ்வாவான தாங்களே நிறைவேற்றுகிறீர்கள்” என்றான் இதயசந்திரன், இதழ்களில் இளநகை கூட்டி. எதற்கும் அசையாத பேஷ்வா பாலாஜி விசுவநாத்தையும் அந்தப் பதில் அசைய வைத்தது. சற்று ஆசனத்தில் நகர்ந்து அவனைக் கூர்ந்து நோக்கினார் தமது சாம்பல் நிறக் கண்களால் . “தீர்ப்பு நாளை சொல்கிறேன்” என்று அவர் உதடுகளிலிருந்து உதிர்ந்த சொற்களில் லேசாக உணர்ச்சியும் இருந்தது.
அந்தச் சொற்களை உதிர்த்ததும், அவன் செல்லலாம் என்பதற்கு அறிகுறியாகக் கையையும் ஆட்டினார் பாலாஜி. இதயசந்திரன் பேஷ்வாவுக்குத் தலை வணங்கி விட்டு நீதி மண்டபத்தை விட்டு வெளியே சென்றான். கனோஜி பாலாஜியை நோக்கினார். பாலாஜியின் முகம் உணர்ச்சியற்றுக் கல்லாயிருந்தது.