Jala Deepam Part 3 Ch6 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 6 பிரும்மேந்திரர் தலையீடு
Jala Deepam Part 3 Ch6 | Jala Deepam | TamilNovel.in
அதட்டலான குரல் வந்த திசையை நோக்கியதும் இதயசந்திரன் அதிர்ச்சியுற்று, வாயடைக்க எழுந்திருக்க முயன்று மீண்டும் ஆசனத்தில் விழுந்து பதுமை போல் உட்கார்ந்து விட்டான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அவன் அந்த இடத்தில் முற்றும் எதிர்பாராத மனிதர் பக்கத்தறையின் திரைச் சீலைகளை விலக்கிக்கொண்டு அதன் வாயிற்படியில் நின்றதன்றி பவர் விளக்கில் பளிச்சிட்ட தமது கூரிய விழிகளைத் தமிழன் மீது நிலைக்கவும் விட்டார். எங்கோ இருப்பதாகத் தான் நினைத்துக் கொண்டிருந்த பிரும்மேந்திர ஸ்வாமி திடீரென்று அந்த இடத்தில் தோன்றியதும், எழுந்திருக்கவோ வணங்கவோ கூடச் சக்தியற்ற நிலையில் உட்கார்ந்து விட்டான் இதயசந்திரன். அந்த இடத்தில் சுவாமிகள் தோன்றியது ஒருபுறமிருக்க என்றும் எந்தக் காரணத்தைக் கொண்டும் சீற்றத்தையோ வேறெந்த உணர்ச்சிப் பெருக்கையோ காட்டாத அவர் விழிகளில் அன்று பெரும் கோபம் ஒளிவிட்டதும் இதயசந்திரன் இதயத்துக்குள் பெரும் அச்சத்தைப் பரவவிட்டது.
சுவாமிகள் ஆஜானுபாகுவாய் அப்பொழுதும் அந்தப் பழைய தடியை ஊன்றிக்கொண்டுதான் நின்றார். முதல் முதலாகக் கொங்கணக் கடற்கரையில் காட்சியளித்த தோற்றத்துக்கும் அன்றைய தோற்றத்துக்கும் முக உணர்ச்சியில் தவிர வேறெதிலும் வித்தியாசமில்லாதிருந்த தைக் கவனித்த இதயசந்திரன் மெள்ளத் துணிவை வரவழைத்துக் கொண்டு, “சுவாமிகளை இங்கு நான் எதிர்பார்க்கவில்லை” என்று மெதுவாகக் கூறினான்.
பிறகு எழுந்து இரண்டடி எடுத்து வைத்து பாதங்களில் வணங்கவும் செய்தான். சுவாமியும் அறை வாயிற்படியை விட்டுக் கூடத்தின் நடுவுக்கு வந்து, “தமிழா! உட்கார் அந்த ஆசனத்தில்” என்று பழைய ஆசனத்தையே சுட்டிக் காட்டி, தானும் அறையிலிருந்த மற்றோர் ஆசனத்தில். அமர்ந்துகொண்டார். பிறகு முதலிலிருந்த கோபத்தையும் உதறித் தள்ளிவிட்டு மெல்லவே கூறினார். “தமிழா! என்னை இங்கு எதிர்பார்க்காதது நீ மட்டுமல்ல. இங்குள்ள கவர்னர் எதிர்பார்க்கவில்லை, உன் ஸார்கேல் எதிர்பார்க்க. வில்லை, எல்லோரையும் விழுங்கக் கூடிய அந்த மிஸ்டர் ப்ரௌன்கூட எதிர்பார்க்கவில்லை” என்று.
இதயசந்திரன் முகத்தில் வியப்புக் குறி பெரிதும் படர்ந்தது. மற்றவர்களைக் குறிப்பிட்டது அவனுக்கு எந்த வியப்பையும் தரவில்லையானாலும் ப்ரௌனைக் குறிப்பிட்டது பெரும் விசித்திரமாயிருந்ததால், “ப்ரௌன் என்ன, சாதாரணக் குமாஸ்தாதானே? கவர்னரின் காரியதரிசி தானே?” என்று வினவினார்.
பிரும்மேந்திர ஸ்வாமி தமது கையிலிருந்த பெரும் தடியை மடியில் குறுக்கே போட்டுக் கொண்டு அதை. இரண்டு மூன்று தடவை தடவினார். அதைத் தடவிய முறையிலிருந்து அவர் யாரையோ அழைக்க முயலுகிறாரென்று முடிவுக்கு வந்தான் தமிழன். அவன் முடிவும் சரியென்பதை பிரும்மேந்திர ஸவாமியின் அடுத்த சொற்கள் நிரூபித்தன. “தமிழா! பிரிட்டிஷாருக்கும். மகாராஷ்டிரருக்கும் ஒருநாள் போர் மூளுமானால் அதற்கு மிஸ்டர் ப்ரௌன் தான் காரணமாயிருப்பான். அவன் தலையைக் குனிந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவன் புத்தி குனிவதில்லை, கண்களும் குனிவதில்லை. இரண்டும் எப்பொழுதும் எந்தப் பக்கத்தையும் ஆராயும். ஆனால் இன்று சாதாரணக் காரியதரிசியானாலும் கவர்னரின் முடிவுகள் எல்லாமே அவன் முடிவுப்படிதான் எடுக்கப்படும் கின்றன” என்று கூறினார் பிரும்மேந்திர ஸ்வாமி.
“என்ன! கவர்னர் ஏஸ்லாபி மிஸ்டர் ப்ரௌனின் கைப்பாவையா?” என்று வினவிய இதயசந்திரனின் குரலில் வியப்பு அதிகமாக ஒலித்தது.
“இல்லை இதயசந்திரா! கவர்னர் பிரபு மிஸ்டர் ப்ரௌனின் கைப்பாவையல்ல. சுயேச்சையாக நினைத்து முடிவெடுக்கத் திறமையுள்ளவர். எடுக்கும் முடிவெல்லாம் அப்படித்தான் எடுக்கிறார். ஆனால், அவருக்கும் தெரியாமல் பல சிறு விஷயங்களை முன்கூட்டித் தொகுத்து வைப்பான் ப்ரௌன். இறுதியில் எந்த முறையில் முடிவு தேவையோ அந்த முடிவு கிடைக்கும். நீ ஆங்கரேயின் சமாதானத் தூதனாக வந்திருக்கிறாய். ஆனால், ப்ரௌன் இஷ்டப்படாவிட்டால் உன் தூது பயனளிக்காது,” என்று கூறினார் பிரும்மேந்திர ஸ்வாமி.
மிஸ்டர் ப்ரௌன் சிறந்த அறிவாளி என்பதையும் அவன் அடக்கத்திலும் ஆழம் இருப்பதையும் இதயசந்திரன் கவர்னர் மாளிகையிலேயே புரிந்து கொண்டிருந்தானானா லும், பிரிட்டிஷ் இந்தியக் கொள்கைகளை இஷ்டப்படி திருப்புமளவுக்கு அவனுக்குச் செல்வாக்கோ சக்தியோ உண்டென்று நினைக்கவில்லை. ஆகவே பிரும்மேந்திர ஸ்வாமி அவன் திறமையைச் சிறிது மிகைப்படுத்திக் கூறுவ தாகவே பட்டது தமிழனுக்கு. அவன் இதயத்திலோடிய எண்ணங்களை சுவாமியும் புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆகவே இதயசந்திரன் ஏதும் கேட்காமலே இருக்கையில் அவரே கேட்டார், “தமிழா! நீ கடலோடிகள் இருக்குமிடத்திலுள்ள சத்திரத்தில் தங்கியிருப்பது எங்களுக்கு எப்படித் தெரியுமென்பதைப் பற்றிச் சிந்தித்தாயா?” என்று.
அதைப்பற்றி உண்மையில் சிந்தித்துக் கொண்டு தானிருந்தான் இதயசந்திரன். தான் கேட்க வேண்டிய கேள்வியை சுவாமிகளே தொடுத்துவிட்டதால், ”ஆம் ஸ்வாமி! எப்படித் தெரியும்?” என்று வினவினான்..
சுவாமிகள் அவனை உற்று நோக்கிய வண்ணம், ”மிஸ்டர் ப்ரௌன் தெரிவித்தார்” என்று கூறினார்.
“மிஸ்டர் ப்ரௌனா!” வியப்பிருந்தது தமிழன் கேள்வியில்.
“ஆம்.”
”’மிஸ்டர் ப்ரௌன் கவர்னருக்கு எதிராகச் சதி செய்கிறாரா?”
“சதி என்று அதைச் சொல்ல முடியாது.”
“பின் வேறென்ன?”
“மிஸ்டர் ப்ரௌனுக்கும் பிரிட்டிஷ் நலத்தில் அக்கறைஉண்டு.”
”அதற்காக?”
” அதற்குத் தேவையானதைச் செய்கிறார்.”
“என்னை வேவு பார்ப்பது அந்தத் தேவைகளில் ஒன்றா?”
இதயசந்திரனின் கேள்வியில் உண்மையிருந்ததால் சற்று நிதானித்துவிட்டே பதில் சொன்னார் சுவாமிகள். “இதயசந்திரா! அரசியல் சதுரங்கத்தில் பெயர்களுக்கு அதிகப் பொருளிருப்பதில்லை. ஓர் அரசில் ஒரு சிலரால் ஒருவன் துரோகியென்றும், இன்னும் சிலரால் அவனே தேசபக்தனென்றும் அழைக்கப்படுகிறான். பெயர்களைப் பற்றிச் சர்ச்சை செய்ய வேண்டாம். மிஸ்டர் ப்ரௌன் எங்கள் பக்கலில் இருக்கிறார். எங்களுக்குத் தேவையான தைச் செய்கிறார்” என்று சொன்ன ஸ்வாமிகள் சற்று நிதானித்துவிட்டு, “நீ யார் பக்கம்?” என்று வினவினார் உறுதி நிறைந்த குரலில்.
சுவாமிகள் கடையில் கேட்ட கேள்விகள் மிக விசித்திர மாக இருந்தது இதயசந்திரனுக்கு. ”நான் யார் பக்கமா!” என்று அவன் கேட்ட கேள்வியில் வியப்பும் ஒலித்தது.
“ஆம். யார் பக்கம்?”- பிரும்மேந்திர ஸ்வாமி கேள்வியைத் திருப்பினார் கடுமையான குரலில்.
இதயசந்திரன் உடனடியாகப் பதிலேதும் சொல்லவில்லை. தீவிர சிந்தனையில் இறங்கினான். தான் யார் பக்கமென்பது, அவர்களுக்குத் தெரிந்திருந்தும் கேள்வி யொன்றைத் தொடுப்பதால் அத்தக் கேள்விக்கு அஸ்திவார மான காரணம் ஏதோ இருக்கிறதென்று ஊகித்துக் கொண்டான் அவன். பிரும்மேந்திர ஸ்வாமி, பானுதேவி, மிஸ்டர் ப்ரௌன் அனைவருமே தன்னிடத்தில் அதிக அக்கறை காட்டுவதில் ஏதோ விசேஷமிருக்க வேண்டும் என்பது அவனுக்குப் புரிந்தது. இருப்பினும் அது எதுவா யிருக்கக்கூடும் என்பது மட்டும் விளங்கவில்லை அவனுக்கு. பானுதேவி தன்மீது வேவு பார்ப்பதாகக் கவர்னர் கூறு கிறார். கவர்னர் தன்மீது வேவு பார்ப்பதாகவும், அதற் காகவே விருந்துக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், பானுதேவி கூறுகிறாள். இடையே இதில் பிரும்மேந்திர ஸ்வாமியும் தலையிடுகிறார். இன்னொருவன் அந்த அயோக்கியன் மானுவல் டீ காஸ்ட்ரோவும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறான். பலர் சேர்ந்திருக்கிறார்கள் பம்பாயில். எல்லோரும் பிரிட்டிஷ் தயவை நாடச் சேர்ந்திருக்கிறார்களா அல்லது வேறு உத்தேசமா? என்று இப்படிப் பலவிதமாகச் சிந்தித்த இதயசந்திரன் கடைசி யாகக் கேட்டான் நிதானமான குரலில், “சுவாமி! தங்கள் கேள்வி விசித்திரமாயிருக்கிறது. தங்கள் சீடர் உத்தரவுப் படிதானே நான் இங்கு வந்திருக்கிறேன்” என்று.
பிரும்மேந்திர ஸ்வாமியின் கண்களில் ஒரு வினாடி பெருமையின் சாயை படர்ந்து மறைந்தது. அவர் சொற்கள் வருத்தத்துடன் உதிர்ந்தன. “தமிழா! கனோஜி என் சீடன்தான். ஆனால் அவன் இப்பொழுது ஈடுபட்டுள்ள பணி மகாராஷ்டிரத்தை அழித்துவிடும். தனது மன்னனுக்கு எதிராகப் போருக்குச் சித்தமாகி விட்டான்” என்று கூறினார் ஸ்வாமிகள்.
இதயசந்திரன் சற்று நிதானித்துவிட்டுச் சொன்னான்: “மன்னனும் ஸார்கேலை அழிக்கப் படை திரட்டிவிட்டதாகத் தெரிகிறது.”
“நாட்டுக்கு எதிராக நடப்பவர்களை அடக்குவது மன்னன் கடமை” என்றார் ஸ்வாமி.
“நாட்டு விரோதிகளின் தயவால் மன்னனாகி, அவர்கள் உதவி கொண்டு தன்னை நசுக்க முற்படும் மன்னனிடத்தில் தனிப்பட்ட வீரன் எப்படி நடந்து கொள்வான்?” என்று வினவினான் இதயசந்திரன்.
பிரும்மேந்திர ஸ்வாமிக்கு இதயசந்திரன் சொற்களின் பொருள் நன்றாகப் புரிந்திருந்தது. மொகலாயர் துணை கொண்டு ஷாஹு அரியணை ஏறியதை அவன் குறிப்பிடு கிறானென்பதையும் இன்னும். ஷாஹுவுக்கு மொகலாய ரிடம் சாய்கால் இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறா னென்பதையும் உணர்ந்து கொண்டதால் கூறினார்: “இதயசந்திரா! சரித்திரப் பிரவாகத்தை, அந்தப் பிரவாகத்தில் வரும் சக்திகளை யாரும் திடீரென உதறி விட முடியாது. நீ நினைக்கிறபடி ஷாஹு மன்னர் இப்போது மொகலாயர் பரிவாலும், துணையாலும் அரசாளவில்லை தவிர, தாராபாயின் சக்தியும் நிலத்தில் அடங்கிவிட்டது. சத்ரபதி சிவாஜியின் நேர் வாரிசான ஷாஹுவுக்கு இப்பொழுதிருக்கும் ஒரே விரோதி கனோஜி தான். ஒன்று அவர் அகப்படவேண்டும், அல்லது அழிக்கப்பட வேண்டும். மகாராஷ்டிரம் ஒரே அரசாக, பலமுள்ள அரசாக நிலைபெறுவதற்கு வேறு வழியில்லை’” என்று .
இதயசந்திரன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்து சுவாமி களை நெருங்கி வந்து நின்று கொண்டு, “ஸார்கேலை. அழிப்பதோ, அடக்குவதோ சாத்தியமென்று நினைக்கிறீர்களா?” என்று வினவினான்.
‘சாத்தியமா அல்லவா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நாட்டு நன்மைக்கு இரண்டிலொன்று அவசியம். கனோஜி கடற்போரில் நிகரற்றவர். நிலப் போரிலும் ஓரளவு நிகரற்றவராயினும் நிலப்போரின் சூட்சுமங்களை உணராதவர். ஆனால் நீ ஒருவன் வந்து சேர்ந்தாய் அக்குறையை நிவர்த்திக்க. ஆகவே…” என்ற சுவாமிகள் வாசகத்தை முடிக்காமல் விட்டார்.
“ஆகவே?” இதயசந்திரன் கேள்வியில் சந்தேகம் ஒலித்தது.
“நீ ஒன்று எங்கள் பக்கம் சேரலாம்…”
“அல்லது?”
“இங்கு சிறையிருக்கலாம்.’
‘ “இங்கா?”
“ஆம்.”
“என்னைச் சிறைப்படுத்திப் பாதுகாக்கப் போதிய காவலர் இருக்கிறார்களா?”
“இந்த வீட்டில் இல்லாவிட்டாலும் துறைமுகத்திலுள்ள கப்பலில் இருக்கிறார்கள்.”
“கப்பலில் கொண்டுபோய்ச் சிறை வைப்பீர்களா?”
“ஆம்” என்றார் ஸ்வாமிகள் சர்வ சாதாரணமாக. அதுவரை அந்தக் கூடத்தின் மூலையிலுள்ள ஆசனத்தில் சிலைபோல் அமர்ந்திருந்த பானுதேவியும், “ஆம்” என்று கூடப் பாடினாள்.
“என்னைப் பிடித்துக் கப்பலுக்குக் கொண்டு செல்லத் தேவையான மாலுமிகள் இருக்கிறார்களா?” என்று வினவினான் இதயசந்திரன்.
இதயசந்திரன் சுவாமிகள் மீது இருந்த கண்களைப் பானுதேவியை நோக்கி நிலைக்கவிட்டான். “அப்படியே என்னைச் சிறை செய்தாலும் கவர்னர் சும்மா இருப்பாரா? விசாரிக்க மாட்டாரா?” என்று வினவினான்.
“அதைப்பற்றிக் கவலையில்லை. தேவையான சமா தானத்தை மிஸ்டர் ப்ரௌன் சொல்லிக் கொள்வார்” என்றாள் பானுதேவி.
“என்ன சொல்வார்?”
“உங்களை உடனே திரும்பி வரும்படி ஸார்கேல் உத்தரவிட்டிருந்ததால் நீங்கள் திரும்பிப் போய்விட்டதாகவும் மன்னிக்கச் சொன்னதாகவும் தெரிவித்து விடுவார்.”
இதயசந்திரன் இதழ்களில் இளநகை அரும்பிற்று.. “பானுதேவி! ஏற்பாடுகள் திட்டமாகத்தானிருக்கின்றன. அரசியலுக்காக உங்கள் காதலனைக்கூட ஒழித்து விடுவீர்கள் போலிருக்கிறது” என்று கூறினான் இகழ்ச்சியுடன்.
இந்தச் சமயத்தில் பிரும்மேந்திர ஸ்வாமி குறுக்கிட்டு, “அந்தப் பேச்சை நிறுத்து” என்றார்.
“ஏன்?” என்று சீறினான் இதயசந்திரன்.
“காரணங்கள் இரண்டு” என்றார் ஸ்வாமி.
“ஒன்று?”
“நீ சபல சித்தன், நிலை கெட்டவன், அரசகுமாரியின் அன்பை மதிக்காதவன்.”
“இரண்டு?”
“அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.”
“யார் அந்தப் பாக்கியசாலி?” என்று வினவினான் இதயசந்திரன் கோபத்துடன்.
பிரும்மேந்திர ஸ்வாமிகள் பதிலை மெள்ளக் கூறினார். சொற்களை நிதானமாக உச்சரித்தார். உச்சாடனத்தில் மதிப்பிருந்தது, மரியாதையும் தொனித்தது. ஆனால் அதைக் கேட்ட இதயசந்திரன் இதயத்தில் சொல்லொணா வியப்பு பிறந்தது. மகாராஷ்டிரத்தில் போரை நிறுத்த முடியாதென்று தீர்மானமும் உதயமாயிற்று.
“மகாராஷ்டிரத்தின் கதியை நீங்களே தீர்மானித்து விட்டீர்கள் ஸ்வாமி” என்று அந்தக் கூடமே அதிரும்படியாக இரைந்து கூவினான் தமிழன்.