Jala Mohini Ch23 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
ஜலமோகினி – சாண்டில்யன்
அத்தியாயம் – 23. கனோஜி ஆங்கரே
Jala Mohini Ch23 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
காண்டேரித் தீவைச் சூழ்ந்து நின்ற அரபிக் கடலின் அலைகள், அத்தீவின் மணற்பரப்பின் மீதும் ஓரிரண்டு இடங்களில் ஜலத்தை அடுத்திருந்த பெரும் பாறைகள் மீதும் கோரமாக எழுந்து தாக்கித் தாக்கிப் பின்வாங்கிக் கொண்டிருந்தன.
அச்சிறு தீவுக்கருகிலிருந்த சமுத்திரம் எப்பொழுதும் உக்கிரமாகவே இருந்து கொண்டிருக்கும். பம்பாய் துறைமுகத்துக்கு நேர் தெற்கில் பதினாறு மைல் தூரத்தில், கோழி முட்டை வடிவத்தில் நெடுக்கில் ஒன்றரை மைலும் குறுக்கே அரை
மைலுமாக அமைந்திருந்த அச்சிறு தீவின் பெரும் பாகம் பாறையாகவே இருந்தாலும் மேற்குத் தொடர்ச்சி மலை அதற்கு வெகு அருகிலேயே உயரமாய் எழுந்து நின்றபடியாலும், வருஷத்தில் முக்கால்வாசி நாள் சூறாவளியாலும் கடற்
கொந்தளிப்பாலும் அந்தத் தீவு பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தது. தீவுக்கு எதிரே கிழக்குக் கரையில் மலைப் பிராந்தியத்துக்கும் கடலுக்கும் இடையே இருந்த கொங்கணிப் பிரதேசங்கூட அந்த இடத்தில் மனித சஞ்சாரமற்ற அடர்த்தியான
காடாகவே இருந்தது. தீவில் எழுந்து நின்ற பாறைகளின் காரணமாகவும் கடலின் உக்கிரத்தின் காரணமாகவும், எதிரேயிருந்த காட்டின் பயங்கரத்தின் காரணமாகவும் சாதாரணமாக கப்பல்களோ படகுகளோ அணுக அஞ்சும் அந்தக்
காண்டேரித் தீவையே தனக்கும் தன் கப்பற்படைக்கும் இருப்பிடமாகக் கொண்டார் மஹா ராஷ்டிரக் கடற்படைத் தலைவனான கனோஜி ஆங்கரே.
இத்தகைய ஒரு தீவில் தன் கப்பல்களையும் படகுகளையும் எப்படி நங்கூரம் பாய்ச்சி கனோஜி ஆங்கரே நிற்க வைக்கிறார் என்பதே ஐரோப்பிய வர்த்தகர்களுக்கும் மொகலாயர்களுக்கும் ஸித்திகளுக்கும் பெரிய ஆச்சரியமாயிருந்தது.
கொள்ளைக்காரனாக வாழ்க்கையை ஆரம்பித்த கனோஜி ஆங்கரேக்கு மட்டும் அந்தத் தீவின் அனுகூலங்கள் எப்பேர்ப்பட்டவை என்பது ஆரம்பத்திலேயே புலனாகிவிட்டது. சங்க பாலர்கள் வம்சத்தில் உதித்தபோதிலும்
மொகலாயர்களின் இடைவிடாக் கொடுமையால் மனம் வெறுத்து அவர்களை வேரறுக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு சாதாரணமாலுமியிலிருந்து பெரும் கடற்கொள்ளைக்காரனாக மாறிய கனோஜி ஆங்கரே, யாரும் எளிதில் அணுக
முடியாமலிருப்பதே அந்தத் தீவுக்குப் பெரிதும் பந்தோபஸ்தை அளிக்கிறது எனத் தீர்மானித்தார். அத்துடன் தீவைச் சுற்றிச் சமுத்திரம் மற்ற இடங்களைவிட மிக ஆழமாக இருந்ததால் இயற்கையாக அது துறை முகமாக
அமைந்திருப்பதையும் கண்டார். இது தவிர தீவும் பம்பாய்க்குச் சரியாக பதினாறு மைல் தெற்கிலும் ஜன்ஜீராவுக்கு வடக்கே முப்பத்தி ஒன்பதாவது மைலிலும் இருந்தபடியால், அந்தத் தீவைத் தன் தலைமைத் தளமாகக் கொண்டால்
பம்பாயிலிருந்த ஐரோப்பியர்களையும் ஜன்ஜீரா ஸித்திகளையும் ஏக காலத்தில், கவனித்துக் கொள்ளலாம் என்றும் மனத்தில் தீர்மானித்தார். இத்தனை யோசனைக்கு மேல் அதைத் தலைத் தளமாகக் கொண்டு பதினேழாவது
நூற்றாண்டின் ஆரம்பத்திற்குள் அரபிக்கடல் பிராந்தியத்தில், பெயரைக் கேட்ட மாத்திரத்தில் ஐரோப்பி யரும் மொகலாயரும் அபிஸீனியரும் நடுங்கும்படியான நிலைமைக்கு வந்துவிட்டார். அவருடைய இந்தச் செல்வாக்கை
உபயோகப்படுத்திக் கொள்ள இஷ்டப்பட்ட மஹாராஷ்டிர ராணி தாராபாயும் ஆங்கரேயையே மகா ராஷ்டிர கடற்படைத் தலைவனாக அங்கீகரித்து அவருக்குத் ‘தாரியா ஸாரங்’ (ஜலத்தின் தலைவன்) என்ற பட்டப் பெயரையும் அளித்தாள்.
இந்தச் செய்கையால் தாராபாய் மஹாராஷ்டிரத்தை இரண்டாகப் பிளந்துவிட நினைத்தாள். மஹாராஷ்டிர சக்கரவர்த்தி பீடத்தில் ஷாஹு உட்காருவதை விரும்பாத தாராபாய் அரபிக் கடலில் அவனுக்கு ஒரு எதிரியைச் சிருஷ்டித்து மலை
நாட்டிலும் கிளர்ச்சியைக் கிளப்பிக் கொண்டிருந்தாள். ஆனால், மகா தந்திரசாலியான பேஷ்வா பாலாஜி விசுவநாத், மஹாராஷ்டிரத்தை இந்தப் பெரிய அபாயத்திலிருந்து காப்பாற்ற ஆங்கரேயை தானே நேரில் சந்தித்து நிலைமையை
விளக்கிச் சொன்னார். மஹாராஷ்டிரத்தின் ஒற்றுமை குலைந்தால் மீண்டும் மஹாராஷ்டிர மக்கள் மொகலாயர்களின் கொடுமைக்கு ஆளாக வேண்டியிருக்குமென்பதை எடுத்துக் காட்டினார். “உன் கடற்படை எதற்கு உபயோகப்படப்
போகிறது? தாய் நாட்டைக் காக்கவா? அழிக்கவா?” என்று பேஷ்வா கொள்ளைக்காரனான ஆங்கரேயின் மனத்தில்கூட ஆழப் பதியும் படியாகக் கேட்டார். ஆங்கரேயும் மனம் கரைந்து சக்கரவர்த்தி ஷாஹுவின் பக்கமே சேவை செய்ய
ஒப்புக்கொண்டார். சக்கரவர்த்திக்கும் ஆங்கரேக்கும் ஒரு சந்திப்பையும் ஏற்படுத்தினார் பேஷ்வா பாலாஜி விசுவநாத். அந்தச் சந்திப்பில் ராஜவிஸ்வாசப் பிரமாணம் எடுத்துக் கொண்ட கனோஜி ஆங்கரே, கண்டபடி எல்லோரையும்
கொள்ளையடிப்பதை விட்டு ஐரோப்பியக் கப்பல்களையும், மொகலாயக் கப்பல்களையுமே கொள்ளையடிக்கத் தொடங்கியதோடு, அவ்வப்பொழுது கடற்கரையோரமிருந்த மொகலாயக் கோட்டைகள் மீது திடீர் திடீரெனப் பாய்ந்து
அவற்றைக் கைப்பற்றவும் தொடங்கினார். அப்படி அவர் கைப்பற்றத் தொடங்கிய கோட்டைகளில் ஒன்று மாத்திரம் கைக்கெட்டாமலே நின்று வந்தது. அதுதான் கேரியா என்ற விஜயதுர்க்கம். இதைப்பற்றித் தீவிரமாக யோசித்தவண்ணம்
காண்டேரித் தீவின் மத்தியிலிருந்த தன் கோட்டைச் சாளரத்திலிருந்து கொந்தளித்துக் கொண்டிருந்த கடற்பிரதேசத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் தாரியாஸராங் அங்கரே.
ஆங்கரேயின் கோட்டை, தீவின் நடு மத்தியிலிருந்த பெரும் பாறைகளின் மேல் கட்டப்பட்டிருந்தது. பாறைகள் மீது இறங்கிவர அதன் “நாலா பக்கத்திலும் படிகள் செதுக்கப்பட்டிருந்தன. கோட்டைப் பாறைகளுக்கும் சமுத்திரத்துக்கும்
இடையே பெரும்பாலும் மணற்பரப்பும் சில இடங்களில் செங்குத்தான பாறைகளும் இருந்தன. கோட்டை வேறு, கனோஜி ஆங்கரேயின் மாளிகை வேறு என்று வித்தியாசமில்லாதபடி மாளிகை, மாலுமிகள் வீடு, கோட்டை எல்லாம் சேர்ந்தே
நிர்மாணிக்கப்பட்டிருந்த படியால் எல்லாமாகச் சேர்ந்து ஒரே கோட்டையாகத்தான் காட்சியளித்தது. மாளிகையை இணைந்து நின்ற மாலுமிகள் வீடு சற்று சிறியனவாகவும் நடுவிலிருந்த மாளிகை பெரியதாகவுமிருந்த படியால் கொத்து
நில சம்பங்கிச் செடிகளில் பூவிடும் செடி மட்டும் தனித்து எழுந்து நிற்பது போல் மாளிகை தனித்துக் காட்சியளித்தது. அந்த மாளிகையில் தீவிர சிந்தனையுடன் கடற்பிரதேசத்தைப் பார்த்து நின்ற ஆங்கரேயின் முகத்தில் பரந்து கிடந்த
கவலையோடு அவ்வப்பொழுது சிறிது சந்தோஷத்தின் சாயையும் படரலாயிற்று.
அது மாலை நேரம்; விளக்கு ஏற்றுவதற்கு அதிகப்படியாகப் போனால் அரை மணி நேரம் ஆகலாம். ஏனென்றால் ஆதவன் இந்தியர்களை அடக்கிச் சாந்தி பெறும் முனிவன் போல், தன் சுடு கதிர்களையெல்லாம் உள்ளே அடக்கிக்
கொண்டு, சிவந்த பெரும் பழம்போல் மாறிக் கடலின் குளிர் ஜலத்தில் நீராடுவதற்காக ஜல மட்டத்தை லேசாகத் தொட்டுக் கொண்டிருந்தான். அப்படித் தொட்டுக் கொண்டிருந்தவன் குளிருக்குப் பயப்படும் சிறு குழந்தைபோல் மிக
மெள்ள மெள்ளவே நீருக்குள் இறங்கிக் கொண்டிருந்தான். ஆதவன் அணுகிய தால் சேணுகிய தாய்போல் ஆழ்கடலும் தன் அலைக் கரங்களை எழுப்பி ஆசையுடன் அவனை வரவேற்றது. அலைக் கரங்கள் எழுந்ததால் காண்டேரிக்கருகே
ஆடி ஆடிக் கொண்டிருந்த கப்பல்கள் கண்ணுக்கு எல்லையற்ற இன்பத்தைக் கொடுத்தன. சாதாரணக் கண்களுக்கே இக்காட்சி பேரின்பம் பயக்கும். தன் கடற்படையில் மிகப் பெருமை கொண்டிருந்த கனோஜி ஆங்கரேக்குத் தன்
கப்பல்களையும் படகுகளையும் காணுவதால் உண்டாகும் இன்பம் விவரிக்க முடியாதது.
பலதரப்பட்ட கப்பல்கள், படகுகள் காண்டேரித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி இருந்தன. இரண்டு பாய் மரங்களே உள்ளதால் மெதுவாகவே செல்லக்கூடிய பீரங்கிப் படகுகளான குராப்புகள், பல பாய்மரங்களுடன் மிக வேகமாகச்
செல்லக்கூடிய பெரும் யுத்தக் கப்பல்களான காலிவாத்துகள், சரக்கு ஏற்றிச் செல்லப் பயன்படும் வியாபாரப் படகுகளான ஷிபார்கள், பெரிய வியாபாரக் கப்பல்களான மஞ்ச்வாஸ்கள், ஆக அத்தனை ரகங்களும் ஏராளமாக நின்றன அந்தத்
துறைமுகத்திலே. மணற்பரப்பில் மாலுமிகள் சதா சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். தீவைச் சுற்றிலும் காவல் சதா இருந்துகொண்டிருந்தது. மாலை நேரமாதலால் வலைஞர்கள் தாங்கள் அன்று பிடித்த மீன்களையெல்லாம் படகுகளிலிருந்து
எடுத்துக் கூடைகளில் போட்டுக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர் வலைகளில் சிக்கியிருந்த ஓரிரு மீன்களைக் கையாலெடுத்து மீன் குவியலில் ஏறிந்து கொண்டிருந்தார்கள். சில மீன் படகுகள் நேரமாகிவிட்டதால் துறைமுகத்துக்கு
வேகமாக வந்து கொண்டிருந்தன. கடற்கடையோரம் முழுவதும் மீன் வாங்குவோர், விற்போர் கூச்சல் மிக அதிகமாயிருந்தது காண்டேரித் தீவு கடற்படைத் தளமாயிருந்தாலும் அதில் சாதாரண மக்களும் சிலர் இருந்து வந்தார்கள், சிலர்
மொகலாயக் கப்பல்களிலிருந்து விடுவிக்கப்பட்ட அடிமைகள். இன்னும் சில குடும்பங்கள் கரையோர ஊர்களிலிருந்து மொகலாயர் கொடுமைக்குப் பயந்து ஓடி வந்து விட்டவர்கள். இவர்கள் எல்லோரும் அச்சிறு தீவில் சிறு ஓட்டு
விடுகளையும் குடிசை வீடுகளையும் கட்டிக் கொண்டு ஆங்கரேயின் ஆதரவில் நிர்ப்பயமாக வாழ்ந்து வந்தார்கள். பயமின்மையால் மக்களிடையே மிதமிஞ்சி மகிழ்ச்சியும் கோலாகலமும் இருந்து வந்தன. ஆங்கரே, பல நாட்கள்
காண்டேரியில் இருக்கமாட்டார். ஆனால், அவர் சமுத்திரத்தின் எந்தப் பாகத்திலிருந்தாலும் காண்டேரியின் மீது ஒரு கண்ணை வைத்திருப்பாரென்று காண்டேரியின் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல எதிரிகளுக்கும் தெரிந்தே இருந்தது.
காண்டேரித் தீவைத் திடீரெனத் தாக்கப் பல முறை. முயன்று ஜன்ஜீராவின் ஸித்திகள் பல நஷ்டத்துடன் திரும்பினர். அவர்கள் தாக்க முயன்ற ஒவ்வொரு சமயத்திலும் கடல் சஞ்சாரம் போயிருந்த கனோஜி ஆங்கரே திடீரென எங்கிருந்தோ
தோன்றி அவர்கள் கப்பல்களைச் சுட்டு வீழ்த்துவார். தவிர காண்டேரியில் யாரும் காலை வைப்பது எளிதல்ல. தீவின் நடுவிலிருந்த கோட்டையின் மலைப்பாறை ஒவ்வொன்றும் குடையப்பட்டு பீரங்கிகள் சமுத்திரத்தின் நாலா
பக்கத்தையும் நோக்கிப் பொருத்தப்பட்டிருந்தன. தவிர தீவைச் சுற்றிலும் போர்க் கப்பல்களைத் தாக்கி அழிக்க வேண்டும்; பிறகு கரையிலிறங்க வேண்டும்; பிறகுதான் கோட்டையை அணுகலாம். முதலில் கப்பல்களை அழிப்பது
பிரம்மப் பிரயத்தனம். பிறகு கரையிலிறங்கினால் பீரங்கிப் பிரயோகத்திலிருந்து தப்புவது அதைவிட துர்லபம்! தீவு மிகக் குறுகியதால் தரையில் காலை வைத்தவுடனேயே தலையில் பீரங்கிக் குண்டு விழும்படியான நிலைமையிருந்தது
காண்டேரியில்.
ஆகவே காண்டேரித் தீவைப் பிடிக்கச் செய்த முயற்சிகளெல்லாம் வீணாயின. “காண்டேரித் தீவும் கனோஜி ஆங்கரேயும் ஒன்றுதான். கனோஜியை எப்படிப் பிடிக்க முடியாதோ அப்படிக் காண்டேரியையும் பிடிக்கமுடியாது” என்று
மஹாராஷ்டிரர்கள் பெருமையாகப் பேசி வந்தார்கள். ஆகவே கனோஜி ஆங்கரேக்குத் தன் தீவிடமும் கப்பற் படையிடமும் அபார வாத்ஸல்ய மிருந்ததில் ஆச்சரியமில்லையல்லவா? தன் கடற்படையைச் சேர்ந்த ஒவ்வொரு படகின்
அசைவையும், கப்பலின் சலனத்தையும் தன் தசைகள், நரம்புகள் இவற்றின் அசைவு சலனத்தைப் போலவே கனோஜி ஆங்கரே நினைத்துப் பெருமித மடைந்ததில் தான் ஆச்சரியமென்ன இருக்கிறது, அந்தப் பெருமிதத்தின் காரணமாக
அத்தனை தீவிர சிந்தனையிலும் துறைமுகத்திலிருந்த கப்பல்களைக் கண்டபோதெல்லாம் அவர் முகத்தில் அடிக்கடி சந்தோஷச்சாயை படர்ந்ததிலும் வியப்பில்லையல்லவா?
இவ்விதம் சிந்தனையும் சந்துஷ்டியும் மாறி மாறிப் பாய்ந்த முகத்துடன் கோட்டைச் சாளரத்தில் நின்றிருந்த கனோஜி ஆங்கரே, நடுத்தர வயதையடைந்து விட்டாலும் சதா இருந்துகொண்டிருந்த உழைப்பின் காரணமாக உள்ள
வயதைவிட ஐந்து பிராயங்கள் குறைந்தவராகவே காணப்பட்டார். சாதாரணமாக மஹாராஷ்டிரர்களைப் போல் குள்ளமாயிராமல் ஆஜானுபாகுவாய்க் கட்டு மஸ்தான தேகத்துடன் கனோஜி ஆங்கரேயின் தோற்றம் பார்ப்பதற்கு
பயங்கரமாகவே இருந்தது. மூன்று பட்டையாக இழுக்கப்பட்ட சந்தனக் கோடுகளுடன், இடையே பெரிய குங்குமப் பொட்டுடனும் விசாலமாகத் துலங்கிய நெற்றியுடன் காணப்பட்ட பெருத்த முகத்திலிருந்த பெரிய மீசையும் ஈட்டிகள்
போல் ஜொலித்த கண்களும் அந்தப் பயங்கரத்தை அதிகப்படுத்தின. தலையில் துணியைச் சுருட்டிச் சுருட்டி நிர்மாணிக்கப்பட்ட தலைப்பாகையும், தலைப்பாகையிலிருந்து தொங்கிய முத்துச் சரங்களும் அவர் பதவியை
எடுத்துக்காட்டின. முகத்திலும், சட்டை மறைக்காத நுனிக் கைகளிலும் காணப்பட்ட தழும்புகள் அவர் எத்தனையோ போர்களைக் கண்ட மாபெரும் வீரன் என்பதற்கு மறையாச் சான்றுகளாக இருந்தன. இடையில் பெரும் சிவப்பு
நாடாவில் கட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்த நீண்ட வாள் அவர் பாதத்தைத் தடவிக் கொண்டிருந்தது. வாளைத் தவிர இடையில் கைத் துப்பாக்கிகள் இரண்டு சொருகப்பட்டிருந்தன. ஆங்கரே நாகரிகமான உடையை
அணிந்திருந்தாலும் நாகரிகத்திற்கும் அவருக்கும் அதிக சம்பந்தமில்லையென்பதை அவர் பேச்சிலிருந்த முரட்டுத்தனமும், அவர் நடந்து கொண்ட முறையும் தெள்ளென எடுத்துக் காட்டின. ஆங்கரே உலாவிக் கொண்டிருந்த அறையில்
ஆங்கரேக்கு நேர் விரோதமான வேஷத்துடனும் குணத்துடனும் இன்னொரு மனிதரும் உட்கார்ந்திருந்தார் மிக வயோதிகரான அந்த மனிதர் முகத்தில் சாந்தம் பரிபூர்ணமாகக் குடிக்கொண்டிருந்தது. ஆங்கரேயைப் போலவே முகத்தில்
சந்தனப் பட்டைகளையும், குங்குமத்தையும் தீட்டியிருந்தார். அவர் உடுத்தியிருந்த காவியுடை, அவர் துறவியென்பதைப் புலப்படுத்தியது. இன்னொரு சாளரத்தில் வைக்கப்பட்டிருந்த கமண்டலம் முதல் ஊகத்தை ஊர்ஜிதப்படுத்தியது.
அந்த சாதுவும் ஆங்கரேயைப் போலவே தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். இருவருக்கும் இடையிலிருந்த ஓர் ஆசனத்தில் ஆங்கிலேயர்களால் துணியில் வரையப்பட்ட தேசப்படமொன்று விரிந்து கிடந்தது. கடற்கரையிலிருந்து வந்த
காற்றில் பறக்காதிருப்பதற்காக அதன்மேல் கனோஜி ஆங்கரே உடை வாளொன்றையும் வீசியெறிந்திருந்தார்.
சாளரத்தருகே நின்ற கனோஜி ஆங்கரே, நீண்டநேரம் ஏதும் பேசாமலிருக்கவே பேச்சை சாதுவே தொடங்கி “கடைசியில் என்னதான் செய்வதாக உத்தேசம்?” என்று வினவினார்.
சாளரத்திலிருந்து சரேலெனத் தலையைத் திருப்பிய ஆங்கரே, “என்ன கேட்கிறீர்கள் குருஜி?” என்றார்.
குருஜி கேள்வியை விளக்கி, “விஜயதுர்க்கத்தைத் தாக்க முதலில் போட்ட திட்டம் பலிக்காததால் என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்டேன்” என்றார்.
“பலிக்காமல் போய்விட்டது என்றும் நிச்சயமாகச் சொல்ல முடியாது” என்று பதில் கூறினார் கனோஜி ஆங்கரே.
“இந்தத் தர்க்கத்தால் பயனில்லை கனோஜி! விஜயதுர்க்கத்தை நாம் இன்னும் ஒரு வாரத்தில் பிடித்தாக வேண்டும். இல்லையேல் ஜன்ஜிரா ஸித்திகள் டில்லியிலிருந்து திரும்பி விடுவார்கள்.”
“இப்பொழுது டில்லிக்கு எதற்காகப் போயிருக்கிறார்கள்!”
“மொகலாய சக்கரவர்த்தியுடன் புது ஒப்பந்தம் செய்து கொள்ள.”
“எதைப் பற்றி ஒப்பந்தம்?”
“இங்குள்ள போர்ச்சுக்கீஸியர், ஆங்கிலேயர், டச்சுக்காரர் இவர்களுடன் மொகலாய சக்கரவர்த்தி சார்பில் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரம் பெறுவது பற்றி.”
“அதிகாரம் பெற்றுவிட்டால்?”
“உனக்கெதிராக ஸித்திகள் கடற்படையும் ஐரோப்பியக் கடற்படையும் ஒன்றாக இணைந்துவிடும்.”
இதைக் கேட்டதும் கனோஜி இடிஇடியென்று முரட்டுத்தனம் சொட்டச் சிரித்துவிட்டு, “இப்படி வாருங்கள்” என்று குருஜீயை சாளரத்துக்காக அழைத்து, “அதோ பார்த்தீர்களா என் கப்பற்படை. இதை உடைக்க எந்தப் படை வந்தாலும்
முடியாது” என்று கூறிவிட்டு, “தவிர அவர்கள் இணைப்பைப் பற்றிச் சொல்கிறீர்களே! இப்பொழுது மாத்திரமென்ன அவர்கள் இணையாமலா இருக்கிறார்கள்?” என்று வினவினார்.
“இப்பொழுது இணைந்திருக்கிற முறை வேறு இது வரை உன்னை எதிர்க்கவேண்டும் என்ற அபிப்பிராயத்தில் இணைந்திருக்கிறார்களே யொழிய, படைகளை இணைக்கவில்லை. இனிமேல் எல்லோர் கடற்படையும் ஒன்றாகச் சேர்த்துக்
.
காண்டேரியைச் சூழ்ந்து இந்தத் தீவையே பொசுக்கிவிட ஏற்பாடு நடக்கிறது” என்றார் குருஜி சாந்தமாக.
“அதைத் தடுக்க என்ன வழி?” என்று கனோஜி வினவினார்.
“விஜயதுர்க்கத்தைச் சீக்கிரம் பிடிக்க வேண்டும்.”
“விஜயதுர்க்கத்தைப் பிடித்தால்…”
“வடக்குக் கோடியில் உள்ள பாலாஜி விஸ்வநாத்தின் சொந்தக் கோட்டையான ஸ்ரீவர்த்தனத்துடன் தெற்கிலுள்ள விஜயதுர்க்கக் கோட்டையையும் இணைத்து ஒரு பெரும் படை அரணை பேஷ்வா ஏற்படுத்துவார். கரையில்
அரணிருந்தால் இந்தத் தீவின் பக்கம் எதிரிகள் வருவது சாத்தியமல்ல.”
இந்தப் பதிலுக்குப் பின் மீண்டும் சிந்தனையிலாழ்ந்தார் ஆங்கரே. பிறகு சொன்னார்: “குருஜீ! விஜயதுர்க்கத்தைப் பிடிப்பதில் ஒரு கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.”
“என்ன?”
“ஸித்தி அஹமத் அங்கில்லை”
“இல்லாவிட்டால் நல்லதுதானே.”
“அப்படிச் சொல்ல முடியாது. நான் கப்பல்களை நங்கூரம் பாய்ச்சிக் கோட்டையைப் பிடித்தவுடன் அவன் திடீரெனத் தோன்றிக் கப்பல்களைத் தாக்கினால்…?”
குருஜீ வெகுநேரம் யோசித்தார். பிறகு எதிரே மஞ்சத்தில் கிடந்த தேசப்படத்தை எடுத்து ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்தார். கவனிக்க கவனிக்க அவர் உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள் உதயமாவதை முகம் நிரூபித்தது.
உள்ளேயிருந்த பிரமிப்பை, “அப்படியா!” என்று வெளியே கொட்டிய குருஜீ, “கனோஜி! இப்படி வா. இதைப் பார்” என்றார்.
அவர் அப்படிக் காட்டியதைக் கண்ட ஆங்கரே வெகுநேரம் படத்தை உற்றுக் கவனித்தார். ஒரு விநாடி இருவர் கண்களும் சந்தித்தன. பிறகு இருவரும் பெரிதாக வெறி பிடித்தவர்கள் போல் சிரித்தார்கள்.