Jala Mohini Ch25 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
ஜலமோகினி – சாண்டில்யன்
அத்தியாயம் – 25. அடியுண்ட வேங்கை
Jala Mohini Ch25 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
மிதமிஞ்சி எழுந்த ஆத்திரத்தின் காரணமாகப் பத்மினியால் குடிசையிலிருந்து வெளியே தள்ளப்பட்ட ரகுதேவ், வெகு நேரம் ஆகாயத்துக்காகக் கண்களைச் செலுத்தி தீவிரமான யோசனையில் ஆழ்ந்திருந்தான். பத்மினியின் உள்ளம்
பூராவும் தனக்கு அர்ப்பணமாயிருக்கிறதென்பதையும், தன் கரம் அவள்மீது படும் போதெல்லாம் அவள் உணர்ச்சி வெள்ளத்தில் அகப்பட்டுச் சுழல்கிறாளென்பதையும் ரகுதேவ் சந்தேகமற உணர்ந்திருந்தான். அப்படிப் பூரண
இதயத்துடன் அவள் காதல் வசப்பட்டுத் தன்னிடம் அடைக்கலம் புகுந்த ஒவ்வொரு சமயத்திலும், தன் பங்கை மட்டும் வெறும் நடிப்பு எனத் தான் சொல்லி வந்தது அவளுக்கு வேம்பாயிருந்தது என்பதையும் அறிந்திருந்தான். தான்
அவளைச் சற்றுமுன்பு அணைத்ததுகூட நடிப்புக்காகத்தான் எனப் பீம்ஸிங்கைச் சமாதானப்படுத்தச் சொன்ன வார்த்தைகள், அவள் இதயத்தில் பல அம்புகளாகத் தைத்து வேதனைப்படுத்தியதால்தான் தங்களிருவரை அவள்
குடிசையை விட்டு விரட்டினாளென்பதையும் ரகுதேவ் புரிந்து கொண்டிருந்தான். என்ன புரிந்து கொண்டிருந்தும் அபாயத்தின் காரணமாக அடிக்கடி ஏற்பட்ட அந்த ஸ்திரீயின் ஸ்பரிசத்தையும் அவள் பலவீனத்தையும் தனக்கு
அனுகூலமாக உபயோகப்படுத்திக் கொள்ள ரகுதேவ் விரும்பவில்லை. கேவலம் ஆயுள் முழுவதும் கொள்ளைக் காரனாகக் காலத்தைத் தள்ளியிருக்கும் தன் வாழ்க்கையோடு அந்த உத்தமியின் வாழ்க்கையை இணைத்து நாசப்படுத்த
அவன் அடியோடு இஷ்டப்படாததால், தன் உணர்ச்சிகளைக் கூடியவரையில் அடக்கிக் கொள்ளத் தீர்மானித்தான். எப்படியாவது பத்மினியை ஸித்தி அஹமத் தினிடமிருந்தும் அவன் சகாக்களிடமிருந்தும் காப்பாற்றி, அவளை ஊருக்குக்
கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் அதுவே தன் மனதுக்குப் பூர்ண ஆறுதலை அளிக்கும். அதுவே தன் வாழ்க்கையின் சிறந்த சாதனையாகும் என்றும் நினைத்தான். அப்படி நினைத்த போதுகூட பத்மினியின் எழிலுருவம் அவன்
மனக்கண் முன்பு எழுந்து நின்று தன் அழகிய கண்களால் அவன் இதயத்தைக் கூர்ந்து நோக்கியது. அந்த நோக்கினால் இதயம் இரண்டாகப் பிளக்கப்பட்டதால் வேதனை மிகுந்தவனாய்ப் பெருமூச்சு விட்டான் ரகுதேவ்.
ரகுதேவின் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களை அறவே அறியாத பீம்ஸிங், அவன் ஆகாயத் துக்காகக் கண்களை உயர்த்தியதையும், ஏதோ யோசித்ததையும், பிறகு பெருமூச்சு விட்டதையும் பார்த்து, “எதற்காக இப்படித்
திண்டாடுகிறான்?” என்று யோசித்தார். ஏதும் புரியாததால் பத்மினி எதற்காகத் தன்னை வெளியே தள்ளினாள் என்பதைப் பற்றி ஆராய்ந்தார். அதுவும் புரியாததால் ரகுதேவை ஏன் வெளியே தள்ளினாள் என்பதைப் பற்றி யோசித்தார்.
அதற்குக் காரணம் அவருக்குத் தெள்ளென விளங்கிவிட்டது. ‘என்ன இருந்தாலும் பத்மினி ராஜபுத்ரப் பெண். ஏதோ உணர்ச்சி வெள்ளத்தினாலும் ஸித்தி அஹமத்திடமிருந்த கிலியினாலும் இந்த ரகுதேவை தொடவிட்டிருக்கிறாள்;
கொஞ்சம் சுயஉணர்வு வந்ததும், இந்தக் கொள்ளைக்காரன் தன்னைத் தொட்டுவிட்டானே என்று வெகுண்டு வெளியே தள்ளியிருக்கிறாள்’ என்று தமக்குள்ளேயே சொல்லிக் கொண்டதன்றி, தமது ஆராய்ச்சியின் பயனாக ஏற்பட்ட
உவகையால் சற்று மந்தகாசமும் செய்தார். அத்துடன் சும்மாயிருக்காமல் ரகுதேவ் செய்தது எத்தனை பிசகென்பதை எடுத்துக் காட்ட அவனுடன் பேச்சுக் கொடுக்கவும் தொடங்கி, “வேதனைப்பட்டுப் பயனில்லை ரகுதேவ்” என்றார்.
“எதைப்பற்றி,” என்றான் ரகுதேவ், சற்று யோசனை கலைந்து பீம்ஸிங்கைப் பார்த்து.
“பத்மினியின் நடத்தையைப் பற்றி” என்று விளக்கினார் பீம்ஸிங்.
ரகுதேவின் கண்கள் பீம்ஸிங்கை ஒரு விநாடி ஏறெடுத்துப் பார்த்தன.
“பத்மினியின் நடத்தைக்கு என்ன வந்துவிட்டது இப்பொழுது?” என்ற சொற்களும் அந்தப் பார்வையைத் தொடர்ந்து உதிர்ந்தன.
பீம்ஸிங் கம்பீரமாக ரகுதேவைப் பார்த்துக் கொண்டு, “பத்மினி, உன்னை வெளியே பிடித்துத் தள்ளினாளல்லவா?” என்றார்.
“நம்மை என்று சொல்லும்” என்று திருத்தினான் ரகுதேவ்.
இந்தப் பதிலைக் கேட்டதும் சற்றுச் சங்கடப்பட்ட பீம்ஸிங், “என்னைத் தள்ளியது கிடக்கட்டும், உன்னைத் தள்ளியதன் காரணத்தைப் புரிந்து கொண்டேன்” என்று சொன்னார்.
“உம்மைத் தள்ளிய காரணம் உமக்குப் புரியவில்லை போலிருக்கிறது”
“அது புரியாவிட்டாலும் பாதகமில்லை.”
“உம்மைப் பற்றிப் புரிந்து கொள்வதைவிட என்னைப் பற்றிப் புரிந்து கொள்வதில் உமக்கு அதிக அக்கறை போலிருக்கிறது?”
ரகுதேவின் இந்த இடக்கான பேச்சினால் மீண்டும் சங்கடப்பட்டார் பீம்ஸிங். இருந்தாலும் ஒருமுறை கனைத்துக் கொண்டு பதில் சொன்னார்: “என்னையும் பத்மினியையும் பற்றிக் கவலையில்லை. உன்னைப் பற்றிக் கவலைப்படக்
காரணமிருக்கிறது.”
“ஏன்?”
“எங்கள் உயிரை நீ காப்பாற்ற வேண்டியவன்.”
“பத்மினியைக் காப்பாற்ற எனக்குக் கடமையிருக்கிறது. உம்மைக் காப்பாற்ற வேண்டிய அவசியமென்ன?”
பீம்ஸிங் இதற்குப் பதில் சொல்ல முடியாததால் ஒரு விநாடி யோசனையில் இறங்கினார். தம்மை எதற்காக ரகுதேவ் காப்பாற்ற வேண்டும் என்பது அவருக்கே புரியாததால் விழித்தார். ஆனால், பத்மினியிடம் மட்டும் இவனுக்கென்ன
அப்படி அபாரக் கவலையென்பதைச் சிந்தித்துப் பார்த்து அந்தச் சிந்தனையில் ஏற்பட்ட கடுப்புடன் “பத்மினியிடம் மட்டும் என்ன கடமை?” என்றார்.
“அவள் பெண்” என்ற ரகுதேவின் பதில், அவரை இன்னும் அதிகக் குழப்பத்தில் அழ்த்தியது. அடுத்து அவன் சொன்ன வார்த்தைகள் அவரைத் திக்குமுக்காட வைத்தன. “ஆம் பீம்ஸிங்; அவள் பெண். ஆபத்திலுள்ள பெண்களைக்
காப்பாற்ற வேண்டியது வீரர்கள் கடமை. உம்மைப் போன்ற தடி ஆண் பிள்ளையை எதற்காக நான் காப்பாற்ற வேண்டும்?” என்று ரகுதேவ் வினவினான்.
பதிலேதும் சொல்ல வகையில்லாது போகவே குழைய ஆரம்பித்தார் பீம்ஸிங். “ரகுதேவ்! தவறாக நினைக்காதே. நீ எங்களுக்குச் செய்திருக்கும் உதவியை நான் அல்பமாக நினைக்கவில்லை.” என்ற பீம்ஸிங்கின் வார்த்தையை இடையே
வெட்டிய ரகுதேவ், “சந்தோஷம்” என்றான்.
பீம்ஸிங் தொடர்ந்து பேசினார்: “ரகுதேவ்! எவ்வளவோ சிரமப்பட்டு நீ எங்களை இந்த அரக்கர்களிடமிருந்து காப்பாற்றியிருக்கிறாய். அதற்காக நன்றி தெரிவிக்கிறேன். ஆனால், பத்மினி ராஜஸ்தானத்துப் பெண்.”
“இருந்தாலென்ன?”
“ராஜஸ்தானத்துப் பெண்கள் அக்னி போன்றவர்கள்.”
“உம்.”
“தாங்கள் விரும்பாத ஆண் பிள்ளைகளின் கரம் தங்கள் மீது படுவதைச் சகிக்கமாட்டார்கள்.”
“அப்படியா?”
“ஆமாம்; இப்பொழுது புரிகிறதா உனக்கு?”
“எது?”
“பத்மினியின் நடத்தைக்குக் காரணம்!”
“பத்மினி ராஜபுத்திர பெண். அக்னிக்குச் சமானமானவள். நான் அவளை நடிப்புக்காக அணைத்துப் பிடித்தது கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் தான் குடிசையிலிருந்து விரட்டி விட்டாள். இவ்வளவு தானே” என்றான்
ரகுதேவ்.
“ஆம்” என்று தலையை ஆட்டி அங்கீகரித்தார் பீம்ஸிங், விஷயத்தை ரகுதேவ் உணர்ந்து விட்டானென்ற உவகையில். ஆனால், அந்த உவகை அதிக நேரம் நீடிக்கவில்லை.
“பீம்ஸிங்” என்று ரகுதேவ் ஆரம்பித்தான்.
“என்ன?” என்று ஆவலுடன் கேட்டார் பீம்ஸிங்.
“உம்மை பத்மினி ஏன் குடிசையிலிருந்து தள்ளி விட்டாளென்பது உமக்கு இன்னும் புரியவில்லையே?”
“இல்லை.”
“எனக்குப் புரிந்துவிட்டது.”
“புரிந்து விட்டதா?”
“ஆமாம்; நன்றாகப் புரிந்துவிட்டது பீம்ஸிங்.”
“என்ன காரணம்?”
“சொல்லட்டுமா “
“சொல்லேன்!”
“கோபிக்கமாட்டீரே?”
தமது கோபத்தில் ரகுதேவுக்கு அச்சமிருக்கிறதை நினைத்து அல்ப சந்தோஷப்பட்ட பீம்ஸிங், “கோபிக்கவில்லை. சும்மாச் சொல்” என்றார். ரகுதேவின் பதில் அவர் உள்ளத்தைப் பெரிய எரிமலையாக்கும் வகையில் அமைந்தது.
“பீம்ஸிங்! உமது அசட்டுத்தனத்தை அவளால் பொறுக்க முடியவில்லை” என்று சொல்லிவிட்டு இடிஇடி என்று அத்தனை வேதனையிலும் வாய்விட்டுச் சிரித்த ரகுதேவ், அந்தப் பதிலால் பீம்ஸிங்கின் முகத்தில் எள்ளும் கொள்ளும்
வெடித்ததையோ, மீசை துடித்ததையோ இலட்சியம் செய்யாமல் மாலுமிகள் வேலை செய்து கொண்டிருந்த ஜலக் கரையை நோக்கி விடுவிடு என்று நடந்தான்.
துடிக்கும் இதயத்துடன் ரகுதேவைப் பார்த்துக் கொண்டே வெகுநேரம் நின்ற பீம்ஸிங், அவன் ஹாஸ்யம் வரவர எல்லை மீறிப் போவதை நினைத்து மனம் தாளாமல் “சமயம் வரட்டும், இந்த அயோக்கியனுக்குச் சரியான பதில்
சொல்கிறேன்” என்று தமக்குள்ளேயே கருவிக்கொண்டு, தமது குடிசைக்குள் சென்று வெயிலின் தாபத்தினாலும் இதயதாபத்தினாலும் இம்சைப்பட்டு மணல் தரையில் தமது மேலங்கியை விரித்துப் போட்டுப் படுத்துக் கொண்டார்.
என்ன படுத்தும் சிறிதும் நிம்மதி கிடைக்காமல் மணலில் புரண்டார். விங்குர்லாவின் பெரிய கோட்டைக்கு உபதளபதியாயிருந்த தாம், துரும்பு போன்ற ஒரு கொள்ளைக்காரனால் இழிவுபடுத்தப்பட வேண்டிய நிலைக்கு வந்துவிட்டதை
நினைத்து ஏங்கினார். எதிரே குடிசைக் கூரையில் கட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்த வாளைப் பார்த்து அதை மாத்திரம் உபயோகிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தால் தாம் யாரென்பதைச் சற்று ரகு தேவுக்குக் காட்டலாம் என்று நினைத்தார்.
அவர் எண்ணங்களைத் தெய்வமே உணர்ந்து கொண்டு அவருக்கு அந்தச் சந்தர்ப்பத்தையும் அளித்திருக்க வேண்டும். அவர் எதை எதையோ நினைத்து அப்படியே கண்ணயர்ந்த சமயத்தில், ரகுதேவ் அவர் குடிசைக்குள் நுழைந்து தன்
வாளால் அவரைத் தட்டி எழுப்பினான்.
அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்திருந்த பீம்ஸிங், “ஏன், என்ன விசேஷம்?” என்ற வினவினார்.
“உமது வாளை எடுத்துக் கொள்ளும்?” என்றான் ரகுதேவ், அவர் கேள்விக்குப் பதில் சொல்லாமலே. ஏதோ அபாயம் வருகிறதென்பதை ஊகித்துக்கொண்ட பீம்ஸிங் தமது இராணுவ உடைகளை எடுத்து அணிய ஆரம்பித்தார்.
“இப்பொழுது அலங்காரத்திற்கெல்லாம் அவசியமில்லை. வாளை மட்டும் எடுத்துக்கொண்டு வாரும்” என்றான்.
“என்ன! இந்த வெறும் லுங்கியுடனா வரச் சொல்கிறாய்? ஓர் உபதளபதி இப்படிக் கிளம்பினால் பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள்?”
“இங்கு உம்மை அழகு பார்ப்பவர் யாரும் இல்லை. சீக்கிரம் கிளம்பும்.”
இஷ்டமில்லாமலே லுங்கியை மட்டும் கட்டிக் கொண்டும், மேலுக்கொரு லுங்கியை மடித்துப் போட்டுக் கொண்டும், வாளைக் கூரையிலிருந்து அவிழ்த்தெடுத்துக் கொண்டு கிளம்பிய பீம்ஸிங், குடிசையை விட்டு வெளியே
கிளம்பியதும், அங்கு எந்தவிதத் தகராறும் இல்லாதிருப்பதைப் பார்த்து, ரகுதேவ் எதற்காகத் தன்னைக் கத்தியை எடுத்துக் கொண்டு வரும்படி கூறினான் என்று வியந்தார். குடிசையைவிட்டு வெளியே வந்த ரகுதேவோ அவர் வியப்பைச்.
சிறிதும் லட்சியம் செய்யாமல் ரஜனிகாந்தை அழைத்து அவன் காதில் ஏதோ குசுகுசுவென்று சொல்லி விட்டு தன்னைப் பின்தொடரும்படி பீம்ஸிங் குக்குச் சைகை காட்டிக் காட்டை நோக்கி வேகமாகச் சென்றான.
பீம்ஸிங்கும் தமது பெரிய தேகத்தை ஆட்டிக்கொண்டு அவ்வப்பொழுது லுங்கி கால்களில் தடைபட்டு பட்பட்டென்று அடித்துக்கொள்ள அவனைப் பின்பற்றிச் சென்றார். வெயில் மிகக் கடுமையாக ஏறிக்கொண்டிருந்தாலும் காட்டின்
அடர்த்தியின் காரணமாக அவ்வளவாக உஷ்ணம் தெரியவில்லை. உஷ்ணம் தெரியாவிட்டாலும் கீழே கல் முள் குத்தியதாலும் தேக பளுவின் காரணமாகவும் பீம்ஸிங்கால் நிதானமாகத்தான் நடக்க முடிந்தது. மெள்ள அவரைக் காட்டின்
அடர்த்தியான ஒரு பகுதிக்கு அழைத்து வந்த ரகுதேவ் தன்னுடைய மேலங்கியையும் களைந்துவிட்டு வாளை உறையிலிருந்து உருவிக்கொண்டான். பிறகு மரங்களுக்கிடையே அதிக தடங்கலில்லாத ஓர் இடத்தைப் பார்த்துத்
தரையிலிருந்து ஓரிரு சுள்ளிகளைக் கத்தியாலேயே தூக்கி எறிந்துவிட்டு, “பீம்ஸிங்? தயாராக இருக்கிறீரா?” என்று வினவினான்.
வாளைத் தரையில் ஊன்றியவண்ணம் அவன் செய்கைகளை வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்த பீம்ஸிங், “நாம் இருவருமா சண்டை போடவேண்டும்?” என்று ஆச்சரியத்துடன் வினவினார்.
“எதற்காக?”
“உமக்காக?”
“உமக்கு வாள் பயிற்சி எத்தனை தூரம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியவேண்டும்.”
இதைக் கேட்ட பீம்ஸிங் புன்முறுவல் செய்தார். இந்தக் கொள்ளைக்காரப் பயல் தானாகவே நமது வலையில் வந்து விழுகிறானே, என்று நினைத்து உள்ளத்தில் பேரு வகை கொண்டார். கடைசியாக தாம் இன்னார் என்பதை அவனுக்குப்
புரிய வைக்கவேண்டுமென்ற உறுதியில் மேல் லுங்கியை ஒரு மரக்கிளையின்மீது விட்டெறிந்து, இடை லுங்கியைக் கீழ்ப் பாய்ச்சாக இழுத்துக் கட்டினார். சராய் அணிந்திருந்த ரகுதேவுக்கு இந்த ஏற்பாடுகள் அவசியமில்லாது போகவே
அவன் உருவிய வாளுடன் பீம்ஸிங்கை எதிர்பார்த்து நின்றான். பீம்ஸிங் தமது ஏற்பாடுகளை ஒருவாறு முடித்துக்கொண்டு வாளைக் கூர்பார்த்து மீசையை ஒருமுறை தடவி விட்டுக் கொண்டு போருக்கு சித்தமானார். அடுத்த விநாடி
இருவர் கத்திகளும் உராய்ந்தன.
பீம்ஸிங் மற்ற விஷயங்களில் அசடானாலும் வாட் போரில் அசடல்லவென்பதை வெகு சீக்கிரம் புரிந்துகொண்ட ரகுதேவ் அதுபற்றி ஓரளவு மகிழ்ச்சியுடனேயே போரிட்டான். மிகுந்த அலட்சியத்துடனும் தன் போர்த் திறமையில்
ஓரளவு கர்வத்துடனும் போரைத் தொடங்கிய பீம்ஸிங்குக்கும் ரகுதேவ் எப்பேர்ப்பட்ட வாள் வீரன் என்பது சிறுகச் சிறுகப் புலனாயிற்று. திடீர் திடீரெனப் பாய்ந்து தாம்வாளால் தாக்கிய சமயங்களிலெல்லாம் வெகு அநாயாசமாகத் தமது
வாளை ரகுதேவ் தடுத்து விட்டதையும் எந்த இடத்தில் தமது வாள் சுழன்றாலும் அங்கெல்லாம் ரகுதேவின் வாள் மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்ததையும் கண்ட பீம்ஸிங் மனத்தில் தமது போர்த் திறமையைப் பற்றிச் சந்தேகம் ஏற்படத்
துவங்கிய தோடு ஓரளவு அச்சமும் ஏற்படலாயிற்று. ஆகவே, தமது போர்முறைகளை மிகக் கடுமையாக்கிக் கொண்ட பீம்ஸிங் முரட்டுத்தனமாகவும் தாக்கலானார். முன்னால் பாய்ந்தும் பின்னடைந்தும் போரிட்டதால் அவர் தேகத்தில்
வியர்வை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. பெருமூச்சும் பலமாக வந்தது. ரகுதேவ் நின்ற இடத்திலிருந்து சிறிதும் அப்புறம் இப்புறம் திரும்பாமலும் சிறிதும் சளைக்காமலும் விளையாடுவது போலவே போரிட்டான். அவன் கத்தி சில
சமயம் தமது கண்களுக்கு நேராகவும், சிலசமயம் மார்புக்கு நேராகவும் வருவதைப் பார்த்து அந்த வீச்சுக்களிலிருந்து தப்பித்துக் கொள்ள அப்புறமும் இப்புறமும் குதித்தார் பீம்ஸிங். சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் வாள் கன
வேகமாகச் சுழலத் தொடங்கிவிட்டதையும் தமது கை வலுவிழப்பதையும் அறிந்து பிரமித்தார். அதை நினைத்து அவர் திகைத்த விநாடியில் திடீரென ரகுதேவின் வாளால் அவர் வாள் பலமாகத் தாக்கப்பட்டுத் தரையில் வீழ்ந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் ரகுதேவின் வாள் தமது நெஞ்சுக் குழியைத் தடவிக்கொண்டிருப்பதையும், நெஞ்சில் மெள்ள மெள்ள அழுந்துவதையும் கண்ட பீம்ஸிங் மித மிஞ்சிய அச்சத்தாலும் கலவரத்தாலும் நிலை தடுமாறி, “என்ன
ரகுதேவ் இது” என்று கூறினார்.
ரகுதேவ் சிரித்துக்கொண்டே தன் கத்தியை அவர் நெஞ்சிலிருந்து அகற்றி, “பயப்படவேண்டாம். உம்மைக் கொல்ல நான் இங்கு அழைத்து வரவில்லை” என்றான்.
“பின் எதற்காக இந்தப் போர்?”
“உமது வாள் பயிற்சி கெடாதிருக்க.”
“எதற்காகக் கெடாதிருக்க வேண்டும்?”
“இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பெருத்த அபாயம் நம்மைச் சூழலாம். அதில் ஒரு வேளை நான் பலியாகி விட்டாலும் நீராவது பத்மினியைக் காப்பாற்ற வேண்டுமல்லவா?” என்று சொல்லிக் கொண்டே ரகுதேவ் தனது மேலங்கியை
எடுத்துக் கொண்டு மீண்டும் குடிசைக்குத் திருபிச் செல்லப் புறப்பட்டான். பீம்ஸிங் மௌனமாகவே அவனைப் பின்தொடர்ந்தார். இருவரும் குடிசைகளுக்கருகில் வந்ததும் மீண்டும் ரகுதேவ் நதிக் கரையை நோக்கிப் புறப்பட்டான்.
“சாப்பிடவில்லையே. இதற்குள் எங்கு போகிறாய்?” என்று பீம்ஸிங் அவனைத் தடுத்தார்.
“மாலுமிகளுடன் பேசப்போகிறேன்” என்றான் ரகுதேவ்.
“அப்புறம் போகலாமே.”
“இல்லை. இப்பொழுதுதான் போக வேண்டும். அதோ பாரும் ஸித்தி அஹமத் அவர்களுடன் இல்லை.”
“இருந்தால்தானென்ன?”
“அவன் இருக்கும்போது அவர்களுடன் பேசுவதில் ஆபத்திருக்கிறது?”
“என்ன ஆபத்து?”
“ஸித்தி அஹமத் கோபத்துக்கு நாம் ஆளாக நேரிடும்.”
“அவனிடம் உனக்குப் பயமா?”
ரகுதேவ் அவரைத் திரும்பிப் பார்த்து, “பயந்தான் பீம்ஸிங். இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு. அதுவரையில் அவனை விரோதித்துக்கொள்ள நான் இஷ்டப்படவில்லை” என்று சொல்லிவிட்டுக் கரையை நோக்கி
நடந்தான்.
ஆனால், ஸித்தி அஹமத்தின் திட்டம் வேறாயிருந்தது. நகைகளால் தாக்கப்பட்ட அவன் அடியுண்ட வேங்கை போல் ரகுதேவை அன்றே ஒழித்துத் தீர்த்துவிடப் பயங்கரமான ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தான்.