Jala Mohini Ch27 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
ஜலமோகினி – சாண்டில்யன்
அத்தியாயம் – 27. ஸித்தி அஹமத்தின் இரண்டாவது யோசனை
Jala Mohini Ch27 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
அக்கம் பக்கத்தில் கூடிக்கொண்டிருந்த மாலுமிகளோ, அருகே துரிதமாக வந்து கொண்டிருந்த ரஹீமோ அவர்களை அணுகு முன்பாகவே விபரீதமான அந்தக் காரியம் நடந்தேறி விட்டது. சற்றும் எதிர்பாராத விதமாகச் சரேலென்று தன்
கையை உயர்த்தி ரகுதேவின் கன்னத்தில் பளீரென்று அறைந்துவிட்டான் ஸித்தி அஹமத்.
அந்தத் துணிகரச் செயலைக் கண்ட மாலுமிகள் ஏதும் செய்ய வகையறியாமல் திக்பிரமை பிடித்து நின்றார்கள். ரஹீமின் ஒற்றைக் கண்கூட பயங் கலந்த பார்வையொன்றுடன் சுழன்றது. எந்த நிமிஷமும் அந்த இரு விரோதிகளின்
கத்திகளும் உராயலாம் என்று ரஹீமும் இதர மாலுமிகளும் எதிர்பார்த்தனர். அவர்கள் எண் ணத்துக்கு இணங்குவதுபோல் ரகுதேவின் வலது கரமும் இடையிலிருந்த வாளை நோக்கிச் சென்று அதன் பிடியின் மேல் தங்கியது. ஸித்தி
அஹமத்தும் ரகுதேவ் வாளை உருவும் தருணத்தை மிக ஆவலாக எதிர்பார்த்து நின்றான். ஆனால் நீண்ட நேரம்வரை வாளை உருவாமலும் ஸித்தி அஹமத்தை நோக்கி ஒரு வார்த்தைகூடப் பேசாமலும் அவனை உற்றுப் பார்த்துக்
கொண்டே நின்றான் ரகுதேவ்.கோபத்தால் இரு ஈட்டிகளைப் போல் பிரகாசித்த அவன் கண்கள் மெள்ள மெள்ளக் கோபத்தை உதிர்த்துப் பழைய நிலைக்கு வந்தன. வாளைப் பிடித்த கரமும் வாளைவிட்டு எழுந்து அடிபட்ட கன்னத்தை
ஒரு நிமிஷ நேரம் தடவிக் கொடுத்தது. இப்படி அவன் எந்த வித நடவடிக்கைக்கும் முற்படாமல் இடித்த புளிபோல் தன் முன் நிற்பதைக் கண்ட ஸித்தி அஹமத் நிதானத்தை அறவே இழந்து இடி இடியெனப் பெரிதாகச் சிரித்துக் கேட்டான்.
“என்ன ரகுதேவ்! மகாராஷ்டிரர்களைக் கன்னத்திலடித்தால்கூட போருக்குக் கிளம்ப முடியாது போலிருக்கிறதே” என்று.
ரகுதேவ் அவனை ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டுச் சுற்றிலுமிருந்த மாலுமிகள் மீதும் கண்களை ஓடவிட்டான். அவர்கள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதையும் துரிதமாகத் தான் போர் தொடங்காவிடில் அவர்களுக்குத் தன்
மீதுள்ள மதிப்புப் போய்விடுமென்பதையும் ரகுதேவ் சந்தேகமறப் புரிந்துகொண்டான். அவன் புத்தியில் ஏதோ ஒரு யோசனை தோன்றி மறைவதற்கான அறிகுறி சட்டென்று முகத்தில் தெரிந்தது. தன்னை மெள்ளச் சமாளித்துக்
கொண்டு ரகுதேவ் ஸித்தி அஹமத்துக்குப் பதில் சொன்னான்: “அஹமத்! எந்த வீரனும் செய்ய விரும்பாத ஓர் இழிசெயலை இன்று நீ செய்துவிட்டாய். அதில் பெருமைக்கோ பிரதாபத்துக்கோ என்ன இருக்கிறது?”
ரகுதேவின் பதிலைக் கேட்ட ஸித்தி அஹமத்துக்குக் கோபம் அதிகமாயிற்றே தவிர சற்றும் குறையவில்லை. “ஒரு வீரனை இன்னொரு வீரன் போருக்கிழுப்பது இழிசெயலா?” என்று வினவினான்.
“போருக்கிழுப்பது இழி செயலல்ல. ஆனால், அழைக்கும் முறை, அழைக்கும் சந்தர்ப்பம் இவைகள் இழி செயல்களாக இருக்கலாம்” என்றான் ரகுதேவ்.
“என் மூளை கட்டையென்று நீ பழித்தாய். பதிலுக்கு நான் அறைந்தேன். இதில் இழிசெயல் எதுவுமில்லை. போருக்கு அழைக்கச் சந்தர்ப்பமென்ன வேண்டியிருக்கிறது? இருக்கும் சந்தர்ப்பந்தான் சரியான சந்தர்ப்பம்” என்று பதில்
சொன்னான் ஸித்தி அஹமத்.
“உனக்குச் சரியான சந்தர்ப்பந்தான் ஸித்தி அஹமத்! உன்னிடம் மாலுமிகள் ஏராளமாக இருக்கிறார்கள். நான் தனிக் கப்பலுடனும் என் மாலுமிகளுடனும் வந்திருந்து உன்னைப்போல் எனக்கும் பக்க பலமிருந்தால் கதை வேறா கலாம்.
ஆனால், நாங்கள் நால்வர் உன்னிடமும் உன் மாலுமிகளிடமும் சிக்கியிருக்கிறோம். அதில் ஒருத்தி பெண். நாமிருவரும் சண்டையிட்டு நான் உன்னைக் கொன்றுவிட்டாலும் பெருவாரியாக இருக்கும் உன் மாலுமிகள் என்னைக்
கொன்றுபோடுவார்கள். இயற்கையாக உனக்கு வீரமில்லாவிட்டாலும் பக்க பலமிருக்கும் துணிச்சலால் என்னை வலுச்சண்டைக் கிழுத்துக் கொல்லப் பார்க்கிறாய். சந்தர்ப்பம் உனக்கு அனுகூலமாயிருக்கிறது. எங்களுக்குப்
பிரதிகூலமாயிருக்கிறது. இதை உபயோகப்படுத்துவது இழிசெயல்” என்று விளக்கினான் ரகுதேவ்.
“ரகுதேவ்! வீரனாயிருப்பவன் எந்தச் சந்தர்ப்பத்திலும் சண்டையிடத் தயாராயிருக்க வேண்டும். உனக்கு வீரமிருந்தால், வாளை உருவிக்கொள். உயிரின்மேல் ஆசையிருந்தால் குடிசைக்கு ஓடிவிடு”. என்று கூறிவிட்டுப் பெருமையாக
அக்கம் பக்கத்திலிருந்த மாலுமிகளைப் பார்த்தான்.
ரகுதேவும் மாலுமிகளைக் கவனித்தான். அவர்கள் பார்வையில் இகழ்ச்சி ததும்புவதைக் கண்டான். போரிட்டு விடலாமா என்று கூட அவனுக்கு ஒரு கணம் தோன்றியது. ஆனால், அந்த மன எழுச்சியைச் சிரமப்பட்டு அடக்கிக்
கொண்டு, “அஹமத்! ஆள் பலமிருப்பதால் அதிகமாகும் உன் வீரத்தை மெச்சுகிறேன். ஆனால், என் நலன் மட்டும் இதில் சிக்கியிருந்தால் இப்பொழுதே உன்னிடம் போரிடுவேன். ஆனால், மற்றவர்கள் நலனும் இதில் சிக்கியிருக்கிறதே
என்றான.
“யார் நலன்?” என்று கேட்டான் ஸித்தி.
“மாலுமிகளின் நலன்.” பளிச்சென்று வந்தது பதில்.
“என்ன, மாலுமிகளின் நலனா?”
“ஆம்; மாலுமிகளின் நலன்தான். எனது மனைவியை அடைவதற்காக நீ ஒப்பந்தத்தை மீறி என்னைக் கொல்ல முயற்சித்தாலும் நான் ஒப்பந்தத்தை மீறமுடியாது பார்.”
ரகுதேவ் எந்தத் திக்கில் தன்னைக் கொண்டு போய்ச் சாய்க்கப் பார்க்கிறான் என்பதை ஓரளவு உணர்ந்து கொண்ட ஸித்தி அஹமத், கோபம் தலைக்கேறக் கத்தினான்; “மாலுமிகளைப்பற்றி நீ கவலைப்பட வேண்டியதில்லை” என்று.
“நீதான் கவலைப்படவில்லை. நானும் கவலைப்படாவிட்டால்?” என்றான் ரகுதேவ்.
“யாரும் கவலைப்பட வேண்டாம்.”
“அதை அவர்கள் ஒப்புக் கொள்கிறார்களா?”
“ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.”
“அதை அவர்கள் வாயிலாகவே சொல்லிவிட்டால் நாம் போரில் இறங்கலாம் ஸித்தி அஹமத்! இந்தத் தமானா நதிக்கரைக்கு உன்னை அழைத்து வந்ததே விளையாடுவதற்காக அல்ல; காதல் வெறியாட்டங்களை நடத்துவதற்காகவும் அல்ல.
பொக்கிஷக் கப்பல்களைப் பிடித்து ஏராளமான ஐஸ்வரியத்தை மாலுமிகளுக்கும் கொடுத்து நானும் எடுத்துக் கொள்ளலாம் என்பதற்காக வந்தேன். இதில் என் ஒருவன் நலன் மட்டும் இருந்தால் இதோ இப்பொழுதே வாளை உருவி ஒரு
கை பார்த்து விடுவேன். போரில் நீ மடிந்தால்கூட மாலுமிகளுக்கு நஷ்டமில்லை!”
“என்ன, நான் மடிந்தால் நஷ்டமில்லையா?”
“இல்லை! நீ மடிந்தால் தலைவன்தான் நஷ்டம்; வேறு தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். நான் மடிந்தால்…”
“நீ மடிந்தால்?”
“பெரிய ஐசுவரியம் நஷ்டம். ஆயுள் முழுவதும் அவர்கள் சுகஜீவனம் செய்வதற்கான செல்வம் நஷ்டம். அத்தகைய செல்வத்தை நான்தான் அவர்களுக்கு அளிக்க முடியும். ஏனென்றால் பொக்கிஷக் கப்பல்கள் வரப்போகும் மார்க்கம்,
மடக்க வேண்டிய இடம், சமயம் எல்லாம் எனக்குத்தான் தெரியும். நான் இறந்தால் அவர்கள் ஆயுளின் பெரிய சந்தர்ப்பத்தை, அனுகூலத்தை இழப்பார்கள். ஆகையால்தான் நம்மிருவர் சண்டையில் அவர்கள் அத்தனைபேரின்
வாழ்க்கையையும் நான் பணயம் வைக்க விரும்பவில்லை. அவர்கள் இஷ்டம் என்னவென்று கேட்டுப் பார்.”
ஸித்தி அஹமத் மாலுமிகளைப் பார்த்தான். மாலுமிகள் ஸித்தி அஹமத்தைப் பார்த்தார்கள். மாலுமிகளின் முகங்களில் அவர்கள் எண்ணம் நன்றாகப் பிரதி பலித் திருப்பதையும், ரகுதேவின் பக்கம் அவர்கள் சித்தம் சாய்ந்து விட்டதையும்
ஸித்தி அஹமத் கண்டான். பொக்கிஷ வெறியில் அவர்கள் தன்னைக்கூட லக்ஷியம் செய்ய மாட்டார்களென்பதையும், சண்டை தொடங்கினாலும் நிச்சயம் நிறுத்தப்படுமென்பதையும் ஸித்தி அஹமத் சந்தேகமறப் புரிந்துகொண்டான்.
மேற்கொண்டு தான் எதைச் சொன்னாலும் அவர்களிடம் எடுபடாதென்பதை அறிந்து கொண்ட ஸித்தி அஹமத் பெரிதாகச் சிரித்தான். “அடியைத் துடைத்துவிட்டு உயிர் வாழ வேண்டுமானால் வாழ்ந்து போ” என்று சொல்லிவிட்டுச்
சரேலெனத் திரும்பி தன் குடிசையை நோக்கி நடக்கத் தொடங்கினான். நடந்து சென்ற அவன் உள்ளம் அடக்க வொண்ணாத உணர்ச்சிகளால் கொதித்துக் கொண்டிருந்தது. பின்னால் வந்த ரஹீமைக்கூடக் கவனிக்காமலே விடுவிடு
என்று நடந்தான் ஸித்தி அஹமத். ஆனால், ரஹீம் அவனை எட்டிப் பிடித்துப் பக்கத்தில் நடந்த வண்ணம் பேச்சுக் கொடுத்து, “எசமான்! என்ன இப்படி அவசரப்பட்டு விட்டீர்கள்?” என்று வினவினான்.
ஸித்தி, நடையை நிறுத்தி அவனைத் திரும்பிப் பார்த்தான். “இது அவசரமா ரஹீம்? அந்தப் பேடிப் பயலின் அயோக்கியத்தனத்தை எத்தனை நாள் நான் பொறுத்துக் கொண்டிருப்பது?”
“என்ன அயோக்கியத்தனம் செய்தான்?”
“இன்று காலையில் நடந்தது உனக்குத் தெரியாது போலிருக்கிறது.”
“தெரியாது எசமான்.”
“நான் அவர்கள் குடிசைக்குப் போயிருந்தேன்.”
“எதற்காகப் போனீர்கள்?”
பதில் சொல்ல முடியாமல் ஒரு விநாடி திகைத்த ஸித்தி அஹமத் மெள்ள சமாளித்துக் கொண்டு, “அவன் மனைவிக்குச் சில நகைகளைப் பரிசளிக்கப் போனேன்” என்றான்.
“அவன் மனைவிக்கு நீங்கள் பரிசளிப்பானேன்?”
ஸித்தி அஹமத் சிரித்து, “அரே அல்ல! ஒரு புருஷன் பெண்ணுக்கு எதற்காகப் பரிசளிப்பான்?” என்று கேட்டான்.
ரஹீமின் முகத்தில் சிரிப்புக்குப் பதில் அச்சமே உதயமாயிற்று. குடிசையில் என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவு புரிந்து கொண்டான். இருந்தாலும் தலைவன் வாயாலேயே அதைக் கேட்போமென்று, “புரிந்தது. மேலே சொல்லுங்கள்”
என்றான்.
“நகைகளை அவளிடம் கொடுத்துக் கொண்டிருந்த போது ரகுதேவ் வந்தான்.”
“உம்.”
“என்னை மிரட்டினான். வெளியே போகச் சொன்னான்.”
“பிறகு?”
“நகைகளை அவளிடமிருந்து வாங்கி என்மீது விட்டெறிந்தான்.”
“அப்படியா?”
“ஆம் ரஹீம்! அந்த நிமிஷமே தீர்மானித்துக் கொண்டேன். இவனை வெட்டிப் போடுவதென்று. சந்தர்ப்பம் வந்தபோது சண்டைக்கிழுத்தேன். ஆனால் அவன் வருவதாயில்லையே.”
“அவன் வராதது தங்களுக்கு நல்லது.”
“என்ன நல்லது?”
“மாலுமிகளை நீங்கள் கவனிக்கவில்லையே!”
“கவனித்தேன்.”
“அவர்கள் அப்பொக்கிஷ ஆசையால் அவன் பக்கம் சாய்வது உங்களுக்குப் புரியவில்லையா?”
“புரிந்தது ரஹீம்! அதனால்தான் அவனைச் சும்மா விட்டேன். ஆனால், உன்னுடன் நடந்துகொண்டே வந்த சென்ற சில நிமிடங்களில் வேறொரு அற்புத யோசனை எழுந்திருக்கிறது என் உள்ளத்தில். இதனால் நானும் பழி வாங்கிக்
கொள்வேன். மாலுமிகளுக்கும் நஷ்டமில்லை.”
“என்ன யோசனை எசமான்?”
ஸித்தி அஹமத் விவரிக்கலானான்: “ரஹீம்! ரகுதேவின் சக்தி இப்பொழுது அவனிடமிருக்கும் ரகசியத்திலிருக்கிறது. பொக்கிஷக் கப்பல்கள் எப்பொழுது வரும்? எங்கு அவற்றைத் தாக்கலாம் என்ற தகவல்கள் தற்சமயம் அவனுக்குப்.
பெரும் தற்காப்பு ஆயுதமாயிருக்கிறது” என்றான் ஸித்தி அஹமத்.
“உண்மைதான் எசமான்” என்று ரஹீம் ஒத்துப் பாடினான்.
“அந்தத் தற்காப்பு ஆயுதத்தைப் பிடுங்கிவிட்டால்?”
“எப்படிப் பிடுங்குவது?”
ஸித்தி அஹமத் பதிலுக்கு ஒரு ராட்சஸச் சிரிப்பை உதிர்த்தான். “ரஹீம்! நான் அவனைச் சண்டைக் கிழுத்தாலும் கொல்லாமல் விட்டுவிடும் பட்சத்தில் காரியம் ஈடேறுமல்லவா?” என்று கேட்டான்,
“நீங்கள் சொல்வது புரியவில்லையே?” என்றான் ரஹீம்.
“ரகுதேவைக் கொல்லாமல் அவனைப் படுகாயப்படுத்தி விட்டால் அவன் நமது தயவிலிருப்பான். பிறகு நமது வழக்கமான முறைகளை உபயோகப்படுத்தி ரகசியத்தை வரவழைத்துக் கொண்டாலென்ன?”
“ரகுதேவ் நமது முறைகளுக்குப் படியாவிட்டால்?”
“எப்படிப் படியாமலிருக்க முடியும்? முதலில் அவன் விரல்களை வெட்டுவேன். பிறகு ஒரு கையைத் துண்டிப்பேன். அதற்கும் இணங்காவிட்டால் இன்னொரு கையும் போகும். பக்ஷியின் சிறகை ஒவ்வொன்றாகப் பிடுங்குவது போல்
அவன் அவயவங்களைச் சிறுகச் சிறுக நீக்கினால் ஏன் சொல்லமாட்டான்? அத்தனைக்கும் படியா விட்டாலும் வேறொரு மார்க்கமிருக்கிறது.”
“என்ன அது எசமான்?”
“அவன் மனைவி இருக்கிறாளே, அந்தப் பஞ்சவர்ணக் கிளி! அவள் சிறகுகளைப் பிய்க்க ஆரம்பித்தால்…?” என்று வாசகத்தை முடிக்காமலே விட்ட ஸித்தி அஹமத்தை ஆச்சரியம் ததும்பும் கண்ணுடன் பார்த்தான் ரஹீம். “எசமான்!
அவளுக்காக அவன் எதையும் செய்வான். இந்த யோசனை உங்களுக்கு எப்படித் தோன்றியது?” என்று கேட்டான்.
“அது மட்டுமல்ல ரஹீம்! அவளை ஹிம்ஸிப்பதாகப் பயமுறுத்தி இவனிடமிருந்து ரகசியத்தைக் கழற்றிக் கொண்டு இவனைச் சுவர்க்கத்துக்கு அனுப்பிவிட்டால் அந்தப் பெண்ணுக்கும் ஆண் துணை வேண்டியிருக்கும். அது…”
“அது தாங்கள் தான்” – இதைச் சொல்லி ரஹீம் கடகடவென நகைத்தான்.
இந்தச் சர்ச்சையின் கதாபாத்திரங்களான இருவர் மட்டும் தங்களைச் சூழவிருக்கும் பேராபத்தைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் வேறு துறைகளில் தங்கள் எண்ணங்களை ஓடவிட்டுக் கொண்டிருந்தார்கள். ஜலக் கரையிலிருந்து
காட்டுக்காகத் திரும்பிய ரகுதேவ் இரவு மட்டும் குடிசைப் பக்கமே தென்படவில்லை. ரஜனிகாந்தை அழைத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றவன் படுக்கும் நேரத்திற்குத் திரும்பி வந்தான். வந்ததும் சாப்பிடக்கூட இல்லாமல் ஏதோ
யோசித்த வண்ணம் பத்மினியின் குடிசை வாயிற்படியில் உட்கார்ந்து கொண்டான். தன் எண்ணங்களுக்குத் துணையாக அழைக்கவோ என்னவோ தமானாவின் சிறு அலைகளையும் வானத்து மின் மினிகளையும் மாறிமாறிப்
பார்த்தான். யோசனையில் மனம் ஆழ்ந்திருந்ததால், அவனுக்குப் பின்னாலிருந்த சிறு திரை அசைந்ததுகூட அவனுக்குத் தெரியவில்லை.