Jala Mohini Ch28 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
ஜலமோகினி – சாண்டில்யன்
அத்தியாயம் – 28. நாடகமே நல்லது!
Jala Mohini Ch28 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
காற்று மெல்லவே அடித்துக் கொண்டிருந்ததாலும் சமுத்திரத்தின் எதிர் அலைகள்கூட அதிகமாகக் கிளம்பாத தாலும், தமானா நதி சின்னஞ்சிறு அலைகளையே கிளப்பித் தரையில் மோதவிட்டுக் கொண்டிருந்தது. சுக்லபக்ஷ்த்துச்
சந்திரனும் நன்றாகப் பிரகாசித்துக் கொண் டிருந்ததால் வானத்தில் தெரிந்த மிகச் சில நக்ஷத்திரங்கள் கூட சோபையிழந்து கிடந்தன. தமானாவின் வெள்ளை மணற்பரப்பை வெள்ளி மயமாக அடித்துக் கொண்டிருந்த பால் நிலவு,
காட்டின் எல்லையில் வளர்ந்திருந்த உயர்ந்த மரங்களால் ஓரளவு தடுக்கப்பட்டாலும், மரங்களுக்கிடையேயிருந்த தரையில் வெள்ளிப் பாளங்களைப் போலத் தட்டை தட்டையாகப் பாய்ந்து கிடந்தது. இரா நேரமானதால் பட்சிகள் பல கூட்டை
அடைந்துவிட்டாலும் ஓரிரு ஆந்தைகள் மட்டும் காட்டின் மத்தியிலிருந்து அலறிக் கொண்டிருந்தன; அந்த அலறலுடன் எங்கிருந்தோ கத்திய செந்நாயின் குரலொன்று காட்டின் பயங்கரத்தை அதிகப்படுத்தியது. ஆனால், இத்தனை
சப்தங்களும் ரகுதேவின் காதில் விழவில்லை. ஆகாயத்தை மாறித் தரையையும், தரையை மாறி ஆகாயத்தையும் கண்கள் பார்த்து நின்றனவேயொழிய கருத்து எங்கேயோ சென்று கொண்டிருந்தது. ஜலக்கரைக்குச் சற்று தூரத்தில் காட்டுக்
கட்டைகளை ளிச்சத்துக்காக எரியவிட்டுக் கும்மாளத்துடன் கூத்தடித்துக் கொண்டிருந்த மாலுமிகள்கூட அவன் கண்களில் படவில்லை. பந்தங்களும், பழைய விளக்குகளும் எரிந்து கொண்டிருந்ததால், தரையிலொரு கப்பல் வந்து
விட்டதுபோல் காட்சியளித்த ஸித்தி அஹமத்தின் பெரிய குடிசையும் அவன் கவனத்தைக் கவரவில்லையென்றால் தூரத்தே எழுந்த இதர சப்தங்களும் நிகழ்ச்சிகளும் அவனை எப்படிப் பாதிக்க முடியும்?
அசைந்த திரைக்குப் பின்னே ஒரு கணம் அசைவற்று நின்ற பத்மினி, அவனை அழைக்கவோ திரையைத் தள்ளி உட்கார்ந்து பேசவோ முனையவில்லை. அவளைப்போலவே அவள் உள்ளமும் விவரிக்க இயலாத பல உணர்ச்சிகளால்
பீடிக்கப்பட்டிருந்தமையால், அவள் நின்றுவிட்டு மீண்டும் மஞ்சத்தில் சென்று படுத்துக்கொண்டாள். படுத்தும் உறக்கம் வராமல் உணர்ச்சிகளே மேலெழுந்து கதறின. ரகுதேவ் அன்று காலையில் தன்னைக் கட்டிப் பிடித்ததையும், பிறகு
அது வெறும் நாடகமென்று பகிரங்கரமாகப் பீம்ஸிங்கிடம் ஒப்புக் கொண்டதையும், எண்ண எண்ண அவள் கோபம் எண்ணெய் விட்ட விளக்குபோல் பெரிதாக எழும்பி எரிந்தது. ரகுதேவ் என்னதான் தன்னைப்பற்றி எண்ணிக்
கொண்டிருக்கிறான் என்பதை ஆராய முயன்றாள். ‘நான் வெறும் விளையாட்டுப் பொம்மையென்று எண்ணுகிறாரா? அல்லது உணர்ச்சியற்ற வெறும் மரக்கட்டையென்று எண்ணுகிறாரா? அடிக்கடி ஸித்தி அஹமத்துக்காக நாடகம்
ஆடுகிறாராமே. அந்த நாடகத்தை என்னிடம் ஏன் ஆட வேண்டும்? மைத்துனன் முறைக்குத்தான் பீம்ஸிங் இருக்கிறாரே, அவருடன் ஆடுவதுதானே’ என்று ஏதேதோ யோசித்துப் பதிலேதும் கிடைக்காமலேபடுத்துக் கொண்டிருந்தாள்.
ரகுதேவின் யோசனைகள் இந்த மார்க்கத்தில் செல்லவில்லை. பகலில் நேர்ந்த நிகழ்ச்சிகள் அடியோடு அவன் இதயத்திலிருந்து அழிந்துவிட்டன. ஸித்தி அஹமத் அத்தனை மாலுமிகளுக்கு எதிரில் தன்னை அறைந்தும், தான் கத்தியை
உருவிப் போராடக்கூடிய ஒரு நிலைமை உலாவுகிறதே என்று நினைத்து மனம் புழுங்கிக் கொண்டிருந்தான். தான் அறைபட்ட பின்பு மாலுமிகளுக்குத் தன்மீது என்ன மதிப்பிருக்கும் என்றும் ஆராய்ந்து பார்த்தான். தன்னை அவர்கள்
கேவலம் பேடியென்று நினைப்பார்களென்பதும் பொக்கிஷக் கப்பல்களுக்காகவே தன்னைப் பகிரங்கமாகப் பரிகாசம் செய்திருக்கிறார்களென்பதும், அவனுக்குத்தெள்ளென விளங்கியிருந்தது. ஆனால் இதைப்பற்றிப் பத்மினி என்ன
நினைப்பாள் என்றும் யோசித்துப் பார்த்தபோது சுரீர் என்றது ரகுதேவுக்கு. வீரர்கள் புறமுதுகு காட்டுவதை அறவே வெறுக்கும் ராஜபுத்திர குலத்தில் உதித்த பத்மினி, தான் அடிவாங்கிப் போரிடாமலிருந்ததை எப்படி வெறுக்காம
லிருக்க முடியும் என்று எண்ணிப் பார்த்தான். அவள் நன்றாகத் தன்னை வெறுக்கிறாள் என்பதற்கு ருசுவும் ஏராளமாகக் கிடைத்திருந்தது அவனுக்கு.
குடிசை வாயிற்படியில் அவன் உட்காருவது புதிதல்ல. ஆனால், அவன் வந்து வெகு நேரமாகியும் அவள் வராதது மட்டும் ஒரு புதுமைதான். தான் வந்து உட்கார்ந்த அடுத்த விநாடி திரையை விலக்கிக்கொண்டு உட்காரும் பத்மினி,
அன்று வராமலிருந்ததிலிருந்தே காரணம் பகல் நிகழ்ச்சி தான் என்று தீர்மானித்துக் கொண்டான் ரகுதேவ். தவிர தான் எத்தனை நேரம் கழித்து வந்தாலும் தன்னைச் சாப்பிடாமல் படுக்க அனுமதிக்காத பத்மினி, அன்று அதைப் பற்றிச்
சிந்திக்காமலே திரைக்குப் பின்னால் படுக்கப் போய்விட்டது எதனால் என்றும் யோசித்தான். கன்னத்தில் அடிபட்ட கயவனைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை என்ற உறுதியாகத்தானிருக்க வேண்டும் என்றும் தீர்மானித்துக்
கொண்டான். இத்தகைய எண்ணங் களால் மனது வாட்டப்படவே சோகம் ததும்பும் பெருமூச் சொன்றையும் விட்டான்.
அடுத்த அரை மணி நேரம் இப்படியே கழிந்தது. இருவரும் பேசவில்லை. குடிசையில் பூரண மௌனம் நிலவியது. ஆனால், இறுதியில் அந்த மௌனத்தை ரகுதேவே உடைத்து, “பத்மினி” என்று அழைத்தான். அழைப்புக்குப் பதிலேதும்
வரவில்லை. ஒருவேளை தூங்கி விட்டாளோ என்று எண்ணி இரண்டாம் முறை சற்றுக் குரலை உயர்த்தி, “என்ன பத்மினி! தூங்கிவிட்டாயா?” என்று கேட்டான். பல
“தூங்கவில்லை” ஒரே வார்த்தையில்வந்த பதிலில் சற்றுக் கடுமை கலந்திருந்தது.
“தூங்கவில்லையா? அப்படியானால் முதலில் கூப்பிட்டது காதில் விழுந்திருக்குமே.”
“விழுந்தது.”
“விழுந்துமா பதில் சொல்லவில்லை?”
“ஆமாம்.”
“ஏன்?”
“என்னிஷ்டம்”
இந்தப் பிடிவாதத்திற்கு எப்படிப் பதில் சொல்வதென்று ரகுதேவுக்குப் புரியாமற்போகவே “பத்மினி! உன் கோபத்திற்குக் காரணம் எனக்குத் தெரியும்?” என்றான்.
“சந்தோஷம்” என்றாள் பத்மினி பதிலுக்கு.
எந்தவிதமாகச் சம்பாஷணையைத் தொடங்கினாலும் ஒரே வார்த்தையில் பதில் சொல்லி மேற்கொண்டு சம்பாஷணை நடைபெறாதபடி அவள் வெட்டுவதைக் கண்ட ரகுதேவ் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் சிறிது
நேரம் திகைத்துவிட்டு மறுபடியும் கூப்பிட்டான்: “சற்று எழுந்து இப்படி வருகிறாயா பத்மினி?” என்று. அதற்குப் பதில் வரவில்லை. பத்மினி வந்தாள் திரையை விலக்கிக் கொண்டு. வந்தவள் வழக்கம்போல் அவன் பின் உட்காரவில்லை.
திரையை விலக்கி நின்ற வண்ணம் கேட்டாள்: “எதற்காகக் கூப்பிட்டீர்கள்?” கேள்வியில் கோபத்துடன் வெறுப்பும் கலந்திருந்தது.
“உட்கார், சொல்கிறேன்.”
“அவசியமில்லை; சொல்லுங்கள்.”
“அப்படிச் சட்டென்று சொல்லக்கூடிய விஷயமில்லை பத்மினி.”
“நிதானமாகவே சொல்லுங்கள். என்னால் நிற்க முடியும்.”
“ஏன் இப்படிப் பிடிவாதம் செய்கிறாய்?”
“பிடிவாதம் என் பிறவிக்குணம்.”
“இத்தனை நாளாக ஏன் அதைக் காட்டவில்லை?”
“அடக்கி வைத்திருந்தேன்.”
“இப்பொழுது அதை இஷ்டப்படி அவிழ்த்துவிடக் காரணமென்ன?”
“அடக்கவேண்டிய அவசியமில்லாததால்.”
ரகுதேவ் சொல்லத் தெரியாமல் திணறினான். “உண்மைதான் பத்மினி. என்னைக் கண்டால் நீ வெறுப்பதற்குக் காரணமிருக்கிறது. நீ ராஜபுத்ரர் மரபில் உதித்தவள். வீரர்களைத்தான் விரும்புவாய்” என்று சற்று நேரத்திற்குப் பிறகு
சொன்னான்.
அவன் வார்த்தைகளை உஷ்ணத்துடன் வெட்டினாள் பத்மினி, “உங்களை வீரரல்லவென்று யார் சொன்னது?” என்று கேட்டாள்.
“சொல்ல வேண்டுமா பத்மினி? – அவரவர்கள் நடத்தையிலிருந்து ஊகிக்க முடியாதா?”
“அப்படி ஊகிப்பதற்கு என் நடத்தையில் என்ன வந்துவிட்டது?”
“நான் கூப்பிட்டதற்கு நீ பதில் சொல்லவில்லை. இங்கு வந்ததும் என்னருகில் உட்காரவில்லை.”
“இதற்கும் உங்கள் வீரத்துக்கும் என்ன சம்பந்தம்? நான் உங்கள் பக்கத்தில் உட்கார்ந்தால்தான் நீங்கள் வீரராக முடியுமா?”
“அப்படியல்ல. வீரர்கள் பக்கத்தில் தானே நீ உட்காரு வாய்? நீ உட்காராத காரணம் எனக்குத் தெரியும் பத்மினி.”
“என்ன காரணம்?”
“பகலில் நடந்த நிகழ்ச்சி. ஸித்தி அஹமத்திடம் அறைபட்டும் நான் அவனிடம் போரிடவில்லை. அப்பேர்ப்பட்ட பேடியிடம் நீ எப்படிப் பேசுவாய்?”
இந்த வார்த்தையைக் கேட்ட பத்மினி, ஒருகணம் திரையை இழுத்துப் பிடித்துத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டாள். அவள் மனோபாவம் அடியோடு மாறி அது வரையிருந்த கோபமெல்லாம் எங்கோ பறந்தோடி விட்டது. கோபம்
துளிர்த்த கண்கள் நீரை உகுத்தன. திரையைப் பிடித்த கையும் கீழே இறங்கி அவன் தோளைப் பற்றியது. அவள் அவனை நோக்கிக் குனிந்து, “அப்படிச் சொல்லாதீர்கள்” என்று தழுதழுத்த குரலில் கூறினாள்.
ரகுதேவ் ஆச்சரியத்தால் ஸ்தம்பித்தான். மேலிருந்து உதிர்ந்த உஷ்ணமான கண்ணீர் கழுத்தின் பக்கவாட்டில் இதமாக விழுந்ததையும், அதைப் பின்பற்றிக் கரமும் தோளைப் பிடித்ததையும் கவனித்த அவன், சொர்க்கத்தில் தனக்கு
இன்னும் இடமிருக்கிறதென்று தீர்மானித்துக் கொண்டான். அந்த உவகை உள்ளே பொங்க, “அப்படியானால் நீ என்னைப் பேடியென்று நினைக்கவில்லையா பத்மினி?” என்று வினவினான்.
“நினைக்கக் காரணமில்லையே” என்று சொல்லிக் கொண்டே அவள் வழக்கம்போல் அவன் பின்பக்கமாக உட்கார்ந்து கொண்டாள். அவள் கரத்தைத் தன் கரத்தில் சுவாதீனமாக இழுத்து வைத்துக்கொண்டான். பின்புறத்தில் பத்மினி
அவனோடு ஒன்றி முகவாய்க்கட்டையை அவன் தோள்மேல் வைத்துக்கொண்டாள். அந்த நிலையில் அவன் கேட்டான்: “காரணமில்லையா பத்மினி? உண்மை யாகவா?”
“ஆமாம்; உண்மையாகத்தான்.”
“நான் அடிபட்டது.”
“எனக்காக.”
“உனக்காகவா?”
“ஆமாம், எனக்காகத்தான்! நீங்கள் செய்யும் தியாகம் பீம்ஸிங்குக்குப் புரியாதிருக்கலாம். என்னையும் பீம்ஸிங் என்று நினைத்துக் கொண்டீர்கள் போலிருக்கிறது?”
“அப்படி நினைக்கவில்லையே பத்மினி.”
“அப்படி நினைக்காவிட்டால் இந்தக் கேள்விக்கே அர்த்தமில்லையே. எத்தனையோ ஆபத்துக்களைச் சமாளித்து எங்களைக் காப்பாற்றியிருக்கும் வீர புருஷன் அவசியமில்லாமல் அடிபடமாட்டான் என்பது எனக்குத் தெரியாதா? காலையில்
இங்கு நீங்கள் அவனை அவமானப் படுத்தியதற்காக ஸித்தி அஹமத் உங்களை வலும் சண்டைக்கு இழுத்துக் கொல்ல பார்த்திருப்பான். அவனை நீங்கள் கொன்றாலும், உங்களை அவன் கொன்றாலும், என்பாடு திண்டாட்டமாயிற்றே
என்பதற்காக அடியைப் பொறுத்துக் கொண்டீர்கள். இந்தச் சின்ன விஷயங்கூடவா எனக்கு விளங்காது!”
ரகுதேவ் மிதமிஞ்சிய ஆச்சரியத்தாலும் நன்றியறிதலாலும் அவளை நன்றாக இழுத்து அணைத்துத் தன் கன்னத்தோடு அவள் கன்னத்தை வைத்துக்கொண்டான் பத்மினி மெல்லி குரலில் சொன்னாள்: “இப்பொழுது ஸித்தி அஹமத்
இல்லையே” என்று.
“ஸித்தி அஹமத் எதற்கு?” என்று ஏதும் புரியாமல் கேட்டான் ரகுதேவ்.
“இங்கு அவன் இந்தச் சமயத்தில் இல்லையே…” என்றாள் பத்மினி இழுத்தாற்போல்..
“ஆமாம், இல்லை. அதற்கென்ன?”
“இல்லாதபோது நாடகம் எதற்கு?”
“எந்த நாடகம்?”
“இப்பொழுது நீங்கள் ஆடும் இந்த உணர்ச்சி நாடகம் தான்.”
“இதையென்ன நாடகமென்றா நினைக்கிறாய்!”
“நீங்கள் சொன்னதுதானே!”
“நான் சொன்னேனா?”
“காலையில் பீம்ஸிங்கிடம் சொல்லவில்லையா?”
சரேலென்று புத்தியை மறைத்திருந்த ஒரு திரை விலகியது போலிருந்தது ரகுதேவுக்கு. அவள் கோபத்தின் காரணம் அவனுக்கு நன்றாக விளங்கியது. இப்படித் தன்னை மனப்பூர்வமாக நேசித்துத் தான் அவளிடம் காட்டும்
பரிவையும் காதலையும் நடிப்பு என்று வெளி உலகத்துக்காகச் சொல்லும் போதெல்லாம் அந்தக் கட்டழகி கொதித்து எழுகிறாளென்பதையும், அவள் கோபத்துக்கு அதுதான் காரணமென்பதையும் சந்தேகமறப் புரிந்து கொண்டான்
ரகுதேவ். இருந்தாலும் பத்மினியின் பலவீனத்தை எக்காரணத்தைக் கொண்டும் உபயோகப்படுத்தக் கூடாதென்ற திடசித்தத்தால், “பத்மினி” என்று மெள்ள அழைத்தான்.
“உம்…”
“இது நாடகமாக இருப்பதுதான் உனக்கு நல்லது பத்மினி.”
“ஏன்?”
“நான் வேறு. நீ வேறு. நீ பரிசுத்தமான வாழ்வு படைத்தவள்.” இ “நீங்கள்?” கத்தகம் வாங்க போதும்
“நான் கொள்ளைக்காரன், புரியாத குற்றம் உலகில் இல்லை.”
“உலகில் மற்ற எல்லோரும் குற்றமற்றவர்களோ?”
“குற்றமற்றவர்களல்ல. ஆனால், என்னைப்போல் குற்றம் செய்திருக்கமாட்டார்கள்.”
“குற்றத்தை மன்னிப்பதுதானே மனித குணம்.”
“ஆமாம்.”
“நான் உங்களை மன்னித்துவிட்டேன்.”
“அதற்காக என் உயிரையே உனக்குக் கொடுக்கச் சித்தமாயிருக்கிறேன்.”
“உயிரைக் கொடுக்க வேண்டாம்.”
“பின்?”
“உயிர் உடல் இரண்டும் சேர்ந்து முழுசாயிருங்கள்.”
“பத்மினி! இந்த மயக்கம் இன்னும் இரண்டு நாட்களில் உனக்குத் தீர்ந்துவிடும்.”
“இது வெறும் மயக்கமில்லாவிட்டால்?”
“தவறாகும்.”
“தவறு என்று நான் கருதாவிடில்?”
“நீ செய்ய விரும்பும் தியாகத்துக்கு நான் உட்படமாட்டேன்.”
“நான் வற்புறுத்தினால்…”
“வற்புறுத்தாதே பத்மினி. நீ காட்டும் பரிவினால் என்னை எவ்வளவோ பரிசுத்தமாக அடிக்கிறாய். அத்தடன் திருப்தியடைந்துவிடு. தெய்வத்தன்மை பொருந்திய உன் அன்பைப் பெற நான் அறவே தகுதியற்றவன். மிஞ்சினால் இன்னும்
இரண்டே நாட்கள் நாம் சேர்ந்திருக்கும் இந்தப் படலம் முடிந்துவிடும்” என்று வருத்தத்துடன் சொன்னான் ரகுதேவ்.
“இன்னும் இரண்டு நாட்களில் என்ன நடக்கப் போகிறது?” என்று கேட்டாள் பத்மினி.
பதில் இரண்டு நாட்களில் கிடைத்தது. இரண்டாவது நாள் ரகுதேவ் தொடங்கிய நடவடிக்கையைக் கண்டு பத்மினி மட்டுமென்ன, தமானா நதிப் பிரதேசத்திலுள்ள அத்தனைபேருமே திகைத்துப் போனார்கள்.