Jala Mohini Ch6 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
ஜலமோகினி – சாண்டில்யன்
அத்தியாயம் – 6. புதிய உறவு
Jala Mohini Ch6 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
முழு மதியைப் பழிக்கும் பத்மினியின் எழில் வதனம், ஸித்தி அஹமத்தின் சித்தத்தில் மூட்டிவிட்ட காமக்கனலின் உக்கிரத்தையோ, அந்த உக்கிரத்தால் ஏற்படக்கூடிய விபரீத விளைவுகளையோ புரிந்துகொள்ள ரகுதேவுக்கு அரை
விநாடி கூட ஆகவில்லை. படிகளில் இறங்கி வந்ததும் அஹமத்தின் பார்வை அறைக்குள் பாய்ந்ததையும், பாய்ந்த மறுகணம் அவன் கண்களில் விவரிக்க இயலாத வெறி வீசியதையும் கண்ட ரகுதேவ், அபாயம் உச்சநிலைக்குப் போகிறதை
அறிந்து கொண்டான். இஷ்டப்பட்ட பொருளுக்கு இடைஞ்சலாக நிற்கும் தன்னை வெட்டிப் போட்டு உள்ளே நுழைய அஹமத்துக்குப் பூரண சக்தி இருந்ததென்பதிலோ, அவசியமானால் வெட்டிப் போடத் தயங்கவும் மாட்டான்
என்பதிலோ ரகுதேவுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஸித்தி அஹமத்துக்குப் பின்னால் யம கிங்கரர்கள் மாதிரி நின்றிருந்த வீரர்கள் எந்த நிமிஷத்திலும் தன்மேல் பாயக்கூடும் என்பதையும் ரகுதேவ் நன்றாக உணர்ந்தே இருந்தான்.
ஆகவே அதிகாரம் நிரம்பிய குரலில் ஸித்தி அஹமத் தன்னை விலகி நிற்கும்படி இட்ட உத்தரவும், அந்த உத்தரவைத் தொடர்ந்து மூர்க்கத்தனமாக அறைக்குள்ளே நுழைய அவன் முனைந்த வேகமும், ரகுதேவுக்கு எந்தவித
ஆச்சரியத்தையும் அளிக்கவே இல்லை. ஆனால் இத்தனை ஆபத்திலும் ரகுதேவ் இருந்த இடத்தை விட்டுச் சிறிதும் அசையாமல் வழியை மறித்தது மறித்த படியே நின்றிருந்தான்.
தான் இட்ட உத்தரவை அலட்சியம் செய்து, அறை வாசற்படியை அடைத்து நின்ற ரகுதேவை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தான் ஸித்தி அஹமத். ஆபத்து தலைக்கு மிஞ்சிய அந்த நேரத்திலும் ரகுதேவ் அதிகாரத் தோரணையுடன்
எஜமான்மாதிரி நின்றிருந்தது ஸித்தி அஹமத்துக்கு வியப்பை அளிக்கவே, முன்னுக்கு வைத்த காலைச் சிறிது பின்னுக்கு இழுத்து, ரகுதேவ்! நீ துணிச்சல் மிகுந்தவன் என்பது எனக்குத் தெரியும். ஆனால், துணிச்சலைக்கூட
காலமறிந்துதான் கையாளவேண்டும். வழியை விடு” என்றான்.
“துணிச்சலுக்குக் காலம் அகாலம் என்பதெல்லாம் கிடையாது. பயமும் நிர்ப்பயமும் உடம்போடு பிறக்கும் குணங்கள். எந்தச் சந்தர்ப்பமும் பயங்கொள்ளியை வீரனாகவோ, வீரனைப் பயங்கொள்ளியாகவோ மாற்ற முடியாது” என்று
ரகுதேவ் பதில் சொன்னான்.
பதிலின் அர்த்தத்தை நன்றாக அறிந்துகொண்ட அஹமத், “அப்படியானால் வழிவிட உத்தேசமில்லையா?” என்று மிகக் கடுமையான குரலில் கேட்டான். அந்தக் குரலில் இருந்த கடுமையின் காரணமாக அஹமத்துக்குப் பின்னாலிருந்த
வீரர்கள் அவசியமானால் ரகுதேவின் மேல் பாய ஆயத்தமாக நின்றார்கள். எரிமலை போல் வெடிக்கும் வகையில் நிலைமை முற்றுகிறதை உள்ளிருந்து கவனித்த பீம்ஸிங், மனத்திற்குள் ரகுதேவைச் சபித்துக் கொண்டிருந்தார். அத்துடன்
நில்லாமல், “இவன் கிளறிவிடுகிறான் பார்” என்று பத்மினியின் காதிலும் ரகசியமாகச் சொன்னார். பத்மினி பதிலேதும் சொல்லவில்லை. தன் உயிரைத் திருணமாக நினைத்து ஒரு புருஷன் தங்களைக் காப்பாற்ற முயலும்போது, பீம்ஸிங்
கண்டபடி உளறுவது அவள் செவிக்கு வேம்பாயிருந்தது… ஆகவே அவர் பக்கமாக முகத்தைக்கூடத் திருப்பாமல் வாயிற்படியில் நடக்கும் நாடகத்தைக் கவனித்தவண்ணம் சிலைபோல் நின்றிருந்தாள்.
வாயிற்படியில் நின்ற ரகுதேவ் ஸித்தி அஹமத்தின் குரலில் தொனித்த கடுமையையும் லட்சியம் செய்யவில்லை. நேரடியாகப் பதிலும் சொல்லவில்லை. சம்பாஷைணையை வேறு ஏதோ மார்க்கத்தில் திருப்பினான். “அஹமத்! உன்
நட்பையும் உதவியையும் கோரி உன்னைத் தேடி வந்திருக்கிறேன். நீயோ என்னை விரோதியாகப் பாவித்து மிரட்டுகிறாய்! மிரட்டலுக்கு நான் பணியா மாட்டேனென்பது உனக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயம்” என்றான். பகவதம்
இதைக் கேட்டதும் ஸித்தி அஹமத்தின் கண்களில் சந்தேகமும் ஆச்சரியமும் கலந்து தாண்டவமாடின. “என்ன? என் நட்பைக் கோரி வந்திருக்கிறாயா? என்னை ஒழித்துக் கட்டப் பரிசளிக்க முன்வந்திருக்கும் மஹாராஷ்டிரக் கடற் படைத்
தலைவனின் உபதளபதியான உனக்கு, என்மேல், இத்தனை அன்பு எத்தனை நாளாக ஏற்பட்டது” என்று இகழ்ச்சி கலந்த குரலில் கேட்டான்.
“அவசியத்தினால் அன்பு ஏற்படுவது உண்டு. அவசியத்தினால் விரோதிகளும் நண்பர்களாவது மனிதசரித்திரத்தில் புதிய சம்பவமல்ல” என்றான் பதிலுக்கு ரகுதேவ்.
“நமது இந்த நட்புக்கு இப்பொழுது என்ன அவ்வளவு அவசியம்? உன் உயிர் ஆபத்திலிருக்கிறதே அதனால் ஏற்பட்ட அவசியமா?” என்று கேட்டான் அஹமத்,
“உயிருக்கு நான் பயந்தவன் அல்லவென்பது உனக்கும் தெரியும். யார் உயிர் ஆபத்திலிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவேண்டுமானால், என் வலது கையைக் கவனித்துப் பார்” என்ற ரகுதேவின் வார்த்தைகளைத் தொடர்ந்து
கண்களை ஓட்டிய ஸித்தி அஹமத் ரகுதேவின் வலது கரம் அவன் அங்கிப் பைக்குள் ஒளிந்திருப்பதையும், அந்தக் கையிலிருக்கும் சிறு துப்பாக்கியின் குழல் தன் வயிற்றுக்கு நேராகக் குறிவைக்கப்பட்டிருப்பதையும், கவனித்தான்.
அதனால் சிறிது சஞ்சலமடைந்த ஸித்தி அஹமத்தைப் புன்முறுவலுடன் நோக்கிய ரகுதேவ், “அஹமத்! இஷ்டப்பட்டால் இந்த விநாடியில் உன்னைச் சுட்டுக் கொன்றுவிட என்னால் முடியும். உன் நட்பு எனக்குத் தேவையில்லாவிட்டால்
அதைச் செய்யவும் தயங்க மாட்டேன். ஆனால், நான் செய்யவிருக்கும் வேலைக்கு உன் உதவி மிக அவசியம். என் உதவியும் உனக்கு அவசியம். ஆகையால் தற்சமயம் நம்மிருவரில் யார் இறந்தாலும் இன்னொருவருக்கு நஷ்டம்.
ஆகையால்தான் உன்னைச் சும்மா விடுகிறேன்” என்றான்.
ரகுதேவ் என்ன சொல்கிறான், எதைப் பற்றி பிரஸ்தா பிக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத ஸித்தி அஹமத், “என் உதவி உனக்கு எந்த விஷயத்தில் தேவை? என்ன வேலையை நீ செய்ய எத்தனிக்கிறாய்?” என்று வினவினான்.
“அதோ பின்னால் நிற்கும் உன் வீரர்களை அனுப்பி விடு. அறைக்குள் சென்று இருவரும் பேசுவோம். விஷயம் மிக ரகசியமானது” என்றான் ரகுதேவ்.
ஸித்தி அஹமத்தின் முகத்தில் மீண்டும் சந்தேகச் சாயை படரலாயிற்று. எல்லோரையும் அனுப்பிவிட்டு இவனுடன் தனியாக அறையில் மாட்டிக் கொள்வது உசிதமா என்று யோசித்தான். அவன் யோசனையை நிமிஷ நேரத்தில் ஊகித்த
ரகுதேவ், “அஹமத்! சந்தேகம் உன் பிறவிக்குணம் உன்னைக் கொல்வதானால் இப்பொழுதே கொல்லலாமே! அறைக்குள் அழைத்துப் போக வேண்டிய அவசியமேயில்லையே. அப்படி அறைக்குள் அழைத்துப் போய் கொல்வதாக
வைத்துக் கொள். அதனால் லாபம்? கப்பல் உன் கையிலிருக்கிறது. நீ இறந்த மறுகணம் உன் வீரர்கள் என்னை வெட்டிப் போட்டுவிட மாட்டார்களா?” என்றான்.
ரகுதேவின் பேச்சில் உண்மை நிரம்ப இருப்பதை ஸித்தி அஹமத் உணர்ந்து கொண்டாலும் போதிய நம்பிக்கை அவனுக்கு ஏற்படாமற் போகவே, “நான் இறந்த பின் என் வீரர்கள் உன்னை வெட்டிப் போடுவதால், எனக்கென்ன
பிரயோசனம்?” என்று கேட்டான்.
அந்தக் கேள்வியிலிருந்த ஹாஸ்யம் ரகுதேவின் இதழ்களிலும் சிறிது புன்சிரிப்பை வரவழைத்தது. “வாஸ்தவம் அஹமத்! அப்படித் தனியாக என்னுடன் பேச உனக்குப் பயமாயிருந்தால், துணையாக ஓரிரண்டு வீரர்களை மட்டும்
அழைத்துக்கொள், எனக்கு ஆட்சேபனையில்லை” என்றான்.
பயம் என்பதை இன்னதென்றறியாத தனக்கு ரகுதேவ் பயங்கொள்ளிப் பட்டத்தைக் கட்டுவதை ரசிக்காத ஸித்தி அஹமத், தன் வீரர்களுக்காகத் திரும்பி, “ரஹீம் மட்டும் என்னுடனிருக்கட்டும். மற்றவர்கள் போய் கப்பலிலுள்ள
சரக்குகளைக் கணக்குப் பார்த்து ஓரிடத்தில் சேமித்து வையுங்கள்” என்று உத்தரவிட்டான். உத்தரவைக் கேட்டதும் வீரர்கள் தடதடவென்று படிகளில் ஏறித் தளத்தில் மறைந்தார்கள். ரகுதேவும் வலது கையைத் தன் அங்கிப் பையிலிருந்து
எடுத்து ஸித்தி அஹமத்தின் கையைப் பிடித்து, “உள்ளே வா அஹமத்” என்று சொந்தமாகக் கூப்பிட்டு அறைக்குள் அழைத்துச் சென்றான். அரை குறையாக வளர்ந்திருந்த மீசையாலும், திட்டுத் திட்டாகக் காணப்பட்டதாடியாலும், ஒரு கண்
அறவே போயிருந்ததாலும் மிகப் பயங்கரமாகக் காணப்பட்ட ரஹீமும் அவர்களைப் பின் தொடர்ந்தான்.
அறைக்குள்ளே உட்கார ஸித்தி அஹமத்துக்கும் ரஹீமுக்கும் அசனங்களைக் காட்டிய பிறகு அவர்களுக்கு எதிரில் தானும் உட்கார்ந்துகொண்ட ரகுதேவ், “அஹமத்! போரினால் நீங்களிருவரும் மிகவும் களைத்திருக்க வேண்டும்.
ஆகவே முதலில் சிறிது ஆகாரம் கொண்டுவரச் சொல்கிறேன். சாப்பிட்டுவிட்டுப் பேசுவோம்” என்று சொல்லிவிட்டு, “ரஜினிகாந்த்!” என்று கூப்பிட்டான். பக்கத்து அறையிலிருந்து ரஜினிகாந்த் வந்ததும், எங்கள் மூவருக்கும் ஆகாரம்
கொண்டு வா. நல்ல மதுவும் தேவை. விருந்தாளிகள் சாமான்யமானவர்கள் அல்ல. சீக்கிரம் ஆகட்டும்” என்று உத்தரவிட்டான். உத்தரவை நிறைவேற்ற ரஜனிகாந்த் சென்றதும். ரஹீம் ரகுதேவை நோக்கி “உணவுக்கு அவசரமில்லை. முதலில்
விஷயம் என்னவென்பதைச் சொல்” என்று கேட்டான்.
“ஆம், ஆம்! விஷயததைச் சொல்” என்று ஸித்தி அஹமத்தும் கலந்து கொண்டான். ஸித்தி அஹமத் எதோ ஒப்புக்குத்தான் பேசுகிறானென்பதையும், அறைக்குள் வந்தது முதல் அவன் பார்வை சாளரத்தருகில் உட்கார்ந்திருந்த
பத்மினியையே வட்டமிட்டுக் கொண்டிருந்ததையும் ரகுதேவ் கவனித்துக் கொண்டிருந்தான். காமத்தால் வெறி பிடித்த அவன் பார்வை படப்பட்ட பத்மினியின் தேகம் நாணத்தால் ஒடுங்கி ஒடுங்கி அவள் சொல்ல வொண்ணா
வேதனையால் குன்றிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த ரகுதேவ்,, அந்த நிலையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரக் கருதி, “சாப்பிட்டுக் கொண்டே விஷயத்தைப் பேசுவோம். அதற்குள் இவர்களிருவரையும் அனுப்பிவிட்டு
வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே எழுந்திருந்து, “பத்மினி, நீயும் பீம்ஸிங்கும் சற்றுநேரம் பக்கத்தறையில் இருங்கள். நான் இவர்களுடன் பேசிவிட்டு வருகிறேன்” என்றான். பத்மினி இருந்த இடத்தைவிட்டு எழுந்து வந்தாள். அறை
மிகச் சிறியதாகையால். ஸித்தி அஹமத்தும் ரஹீமும் உட்கார்ந் திருந்த இடத்தைத் தாண்டித்தான், அவள் பக்கத்தறைக்குச் செல்ல வேண்டும். ஆகவே அவள் அருகில் வந்ததும், அவள் லாவண்யத்தைப் பூராவாகப் பார்த்த ஸித்தி அஹமத், “யார்
இவள்? இவளை எதற்காகப் பக்கத்து அறைக்கு அனுப்ப வேண்டும்? இங்கேயே ஏன் இருக்கக் கூடாது” என்று கேள்விகளை வீசினான்.
இதற்கு ரகுதேவ் சொன்ன பதில் பீம்ஸிங்கை அசர வைத்துவிட்டது. “இவள் என் மனைவி” என்றான் ரகுதேவ் அமைதியாக.
இந்தப் புதிய உறவு முறையைக் கேட்ட பீம்ஸிங்கின் கோபம் எல்லை கடந்தது – அதன் காரணமாகப் பெருமூச்சு உள்ளே இழுத்தான். ஸித்தி அஹமத்தின் அடுத்த கேள்வி எழுந்தது. பீம்ஸிங்கைச் சுட்டிக்காட்டி, “அது யார்?” என்று
சீறினான்.
“என் மைத்துனன்” என்றான், ரகுதேவ் சிறிதும் சலனமில்லாமல்.
உள்ளே இழுத்த மூச்சை ஆத்திரத்தால் அப்படியே இறுகப் பிடித்துக்கொண்ட பீம்ஸிங், வெடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்.