Jala Mohini Ch7 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
ஜலமோகினி – சாண்டில்யன்
அத்தியாயம் – 7. சரசம்
Jala Mohini Ch7 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
அனாவசியமான ஆத்திரத்தாலும் அசட்டுத்தனத்தினாலும் காரியத்தைக் கெடுத்துவிட இருந்தார் பீம்ஸிங். முழுக்க இரண்டு நாட்கள் கூட பரிச்சயமில்லாத ரகுதேவ், பத்மினியை மனைவியென்றும் தன்னை மைத்துனனென்றும் இரண்டு
பேர் முன்னிலையில் உறவு கொண்டாடியது அவருக்குப் பொறுக்கவில்லை. ஆகையால் அதை மறுக்கும் நோக்கத்துடன், ஏதோ சொல்ல வாயெடுத்துத் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். எதையாவது உளறிக் கொட்டி
ஆபத்தில் மாட்டி வைத்துவிடப் போகிறாரோ என்று நடுங்கிய பத்மினி, அகஸ்மாத்தாகப் பின்னுக்கு வாங்குவதுபோல் சற்று நகர்ந்து பீம்ஸிங்கின் காலைத் தன் காலால் ஊன்றி மிதித்தாள். அந்த மிதிப்பைத் தொடர்ந்து அவள் வீசிய
பார்வையிலும் எச்சரிக்கை கலந்திருப்பதைக் கண்ட பீம்ஸிங், தன்னை அடக்கிக் கொண்டார். பீம்ஸிங்கின் பித்துக்குளித்தனத்தை ரகுதேவும் கவனித்தான். மேற்கொண்டு அவரை அந்த இடத்தில் நிற்கவிட்டால் ஆபத்து என்பதைத் தெரிந்து
கொண்டு, தன் ஆசனத்தை விட்டு எழுந்திருந்து பத்மினியிடம் சென்று அவள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டே, அஹமத்தும் ரஹீமும் இருந்த இடத்தைக் கடந்து அடுத்த அறையின் வாசற்படிக்குச் சென்று, “நீ உள்ளே போ
பத்மினி” என்று சொல்லி பீம்ஸிங்குக்காகத் திரும்பி, “பீம்? ஏன் அங்கே நிற்கிறாய்? இப்படி வா” என்று ஏக வசனத்தில் அழைத்து, மைத்துனன் முறை கொண்டாடினான். மஹாராஷ்டிர சைன்னியத்தின் உபதளபதியான தன்னை,
ஏகவசனத்தில் அவன் அழைத்தது அவருக்கு எவ்வளவோ குறைவாகப்பட்டாலும், அந்தச் சமயத்தில் ஏதும் பேசாமல் அவன் உத்தரவுப்படி அடுத்த அறைக்குள் நுழைந்துவிட்டார்.
அறைக் கதவைச் சாத்திவிட்டுத் திரும்பி வந்த ரகுதேவ், “என்ன செய்கிறது அஹமத்! மனைவிக்காக நான் இந்தப் பைத்தியத்தைக் கட்டிக்கொண்டு அழவேண்டியிருக்கிறது” என்று அலுத்துக் கொண்டான்.
ஸித்தி அஹமத்துக்கு ரகுதேவின் போக்கிலோ, சொற்களிலோ எந்தவித நம்பிக்கையும் பிறக்கவில்லை. பீம்ஸிங்கை முதன் முதலில் பார்க்கும்போதே மிகுந்த சந்தேகக் கண்ணுடன் பார்த்தான். அவருக்கு ஆகியிருந்த வயதையும்
அவன் கவனிக்கத் தவறவில்லை. “அந்தத் தடியன் பெண்ணுக்குப் பாட்டன் மாதிரி இருக்கிறானே” என்று சந்தேகம் பூராவாகத் தொனித்த குரலில் கூறினான்.
“பீமுக்கு வயது கொஞ்சம் அதிகம்தான். அவன் தான் என் மாமனாருக்கு மூத்த பிள்ளை. அவன் பிறந்து வெகு நாள் குடும்பத்தில் குழந்தையேயில்லை. மாமனாரின் வயோதிக காலத்தில் என் மனைவி பிறந்தாள். இவள் பிறந்ததும்
மாமனார் மாமியார் இருவரும் தவறி விட்டார்கள். குடும்ப பாரம் முழுவதும் பீமின் தலைமேல் விழுந்தது. பாவம் கவலையின் காரணமாக பீமின் தலை நரைக்க ஆரம்பித்ததோடு, முகமும் சற்று வயதைக் கொஞ்சம் அதிகமாகக்
காண்பிக்கிறது” என்றான் ரகுதேவ்.
ரகுதேவின் குடும்ப வரலாற்றில் சிறிதும் கவலை கொள்ளாத ரஹீம், “இந்த விஷயங்களைப் பற்றி நமக்கென்ன கவலை? நமக்குத் தெரிய வேண்டிய ரகசியத்தைப் பற்றிக் கவனிப்போம்” என்றான். ஸித்தி அஹமத்தும் அப்பொழுதுதான்
சற்று விழித்துக் கொண்டான். “ஆமாம் ரகுதேவ்! எதைப் பேசுவதற்காக என்னைக் கூப்பிட்டனுப் பினாய்?” என்ற கேட்டான்.
“இதோ! ஒரு நிமிஷத்தில் சொல்லுகிறேன்! ரஜினிகாந்த் அதோ ஆகாரத்தைக் கொண்டு வந்துவிட்டான். சாப்பிட்டுக்கொண்டு பேசுவோம்” என்று ரகுதேவ் சொல்லி முடிப்பதற்கும், ரஜினிகாந்த் ஆகாரங்களை வெள்ளித் தட்டுகளில்
கொண்டுவந்து அவர்களுக்கிடையேயிருந்த மஞ்சத்தில் வைப்பதற்கும் சரியாயிருந்தது. தட்டிலிருந்த அரபிக் கிண்ணங்களில் மதுவையும் சிறிது சிறிதாக ரஜினிகாந்த் ஊற்றி முடிந்ததும், கிண்ணங்களை எடுத்து மூவரும்
உறிஞ்சிக்கொண்டே பேசலானார்கள்.
“அஹமத்! உன்னைக் கண்டுபிடிக்கத்தான் இந்தக் கப்பலில் விங்குர்லாவிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கிளம்பினேன்” என்று பேச்சைத் தொடங்கிய ரகுதேவை நோக்கி ரஹீம் பயங்கரமாகச் சிரித்து, “ரகுதேவ்! உன் தந்திரங்களை
எங்களிடம் காட்டாதே. நாங்கள் இந்தக் கப்பலை இடையில் பிடிப்போமென்று உனக்கென்ன ஜோசியம் தெரியுமா?” என்றான்.
“ஆமாம்! இந்தக் கப்பலின் வழியில் நான் வருவேனென்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று அஹமத்தும் கலந்து கொண்டான்.
“கப்பல் தலைவனுக்குத் தகுந்த உபதலைவன்! ஊகத்தில் இரண்டுபேரும் புலிகள்! இந்தக் கப்பலின் வழியில் நீங்கள் வருவது எனக்குத் தெரியுமென்று யார் சொன்னது?” என்று கோபத்துடன் கேட்ட ரகுதேவ். ஏதோ பதில் சொல்ல
முயன்ற ரஹீமை மேற்கொண்டு எதுவும் பேசவிடாமல் தடுத்துத் தானே பேசலானான். “அஹமத்! விங்குர்லாவிலிருந்து புறப்படும்போது உன் கப்பல் இடையே வருமென்று நான் கனவில் கூடக் கருதவில்லை. இந்தக் கப்பலில் நான்
மால்வானுக்குப் புறப்பட்டேன். மால்வானில் என் மைத்துனனையும், மனைவியையும் எங்கள் உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, வேறு ஒரு கப்பலையும் ஆட்களையும் அமர்த்திக்கொண்டு, உன்னைத் தேடிவரத் திட்டமிட்டிருந்தேன்.
அதிர்ஷ்ட வசத்தால் உன்னை வழியில் சந்தித்தேன்” என்றான்.
அவன் சொல்லிய வார்த்தைகளில் ஒன்றைக்கூட அஹமத்தோ ரஹீமோ நம்பவில்லையென்பதை அவர்களின் முகஜாடையே காட்டியது. எந்தவித பதிலும் சொல்லாமல் ஸித்தி அஹமத் கிண்ணத்தில் மதுவைப் பருகிக் கொண்டு,
பக்கத்து அறையின் மார்க்கத்திலேயே கண்ணை ஓட விட்டுக் கொண்டிருந்தான். பேச்சில் கவனமாயிருந்த ரஹீம் மட்டும் கேட்டான், “நீ சொல்லுவதை நாங்கள் ஏன் நம்ப வேண்டும்? எங்களை நம்ப வைப்பதற்கு அத்தாட்சி என்ன
இருக்கிறது?” என்று.
“நீங்களிருவரும் இங்கு என்னுடன் உட்கார்ந்திருப்பதே அத்தாட்சி.”
இந்தப் பதிலின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் விழித்த ரஹீம், “நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை” என்றான்.
“விளங்காது. ஆனால், விளங்க வைக்கிறேன். எனக்குக் கடற்போரில் சிறிது பரிச்சயமுண்டென்பது உனக்குத் தெரியுமல்லவா?”
“கொஞ்சமென்ன? அரபிக்கடல் பிராந்தியத்தில் உலவும் சிறந்த கடல் வீரர்களில் நீ ஒருவன் என்பதை உன் எதிரிகள் கூட ஒப்புக் கொள்வார்கள்?”
“அப்படியானால் ஒன்று மட்டும் நிச்சயம். நான் இஷ்டப்பட்டு இந்தக் கப்பலின் தலைவனுக்கு யோசனை சொல்லியிருந்தால், இந்தக் கப்பலை நீங்கள் பிடித்திருக்க முடியாது.”
இந்தப் பதிலைக் கேட்டதும், ஸித்தி அஹமத் குடிப்பதை நிறுத்தி இடிஇடியென்று மிகப் பயங்கரமாகச் சிரித்தான். “கேட்டாயா ரஹீம்! நாம் இந்தக் கப்பலைப் பிடித்திருக்க முடியாதாம். நம்மிடம் இருக்கும் பீரங்கிகள் எத்தனை? இந்தச்
சண்டைக்காய்க் கப்பலில் இருக்கும் பீரங்கிகள் எத்தனை? வீரர்கள் எத்தனை? இந்தச் சுண்டைக்காய்க் கப்பலில் இருக்கும் வசதி எவ்வளவு? அல்லாஹ்! அல்லாஹ்!” என்று சிரிப்புக்கு நடுவே பேரிரைச் சலுடன் சொன்னான், ஸித்தி அஹமத்.
ரஹீமும் அந்தச் சிரிப்பில் கலந்து கொள்ளவே அறை அதிர்ந்தது. ஆனால், அந்தச் சிரிப்பு அதிக நேரம் நீடிக்கவில்லை. ரகுதேவின் முகத்திலிருந்த இகழ்ச்சிப் பார்வையும் வெறுப்பும் அந்தச் சிரிப்புக்கு இடையே பாய்ந்து திடீரென
முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. அவன் வார்த்தைகளும் மிகக் கடுமையாக வெளிவந்தன. “அஹமத், உன் உபதலைவனை எனக்கு அதிகமாகப் பழக்கமில்லை. ஆனால், நீ பெரிய கடல் வீரன் என்பது எனக்குத் தெரியும். நீயும் அவனுடன்
சேர்ந்து முட்டாள்தனமாகச் சிரிப்பதுதான் எனக்கு வருத்தத்தைத் தருகிறது. உன்னிடம் அதிக பீரங்கிகள் இல்லையென்று நான் சொன்னேனா? ஆட்கள் தான் இல்லையென்று மறுத்தேனா? ஆட்களும் பீரங்கிகளும் உபயோகிக்கப்பட்டால்
இந்தக் கப்பலை நீ கண்டிப்பாய் பிடித்திருக்கலாம். ஆனால் கேள்…” என்று ஏதோ ரகசியத்தைச் சொல்வதுபோல் அஹமத்தின் அருகில் தன் தலையைச் சாய்த்து அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கிக் கொண்டே சொன்னான். “அஹமத்! உன்
கப்பல் கண்ணில் பட்டவுடன் இந்தக் கப்பலின் தலைவன் தூரதிருஷ்டிக் கண்ணாடியை என்னிடம் கொடுத்து அது யார் கப்பல் பார் என்று சொன்னான். நான் ஊன்றிக் கவனித்தேன். கப்பல் உன்னுடையதுதானென்று சொன்னேன்.
ஆனால், வேறொரு விஷயத்தை மட்டும் சொல்லவில்லை.”
ஸித்தி அஹமத்தின் கண்கள் ரகுதேவின் முகத்தை ஏதோ கேள்வி கேட்கும் தோரணையில் ஏறெடுத்துப் பார்த்தன. “உன் கப்பலின் அடிப்பாகத்தில் அரையடி கனத்துக்குப் பாசியும் கிளிஞ்சலும் ஒட்டிக் கிடப்பதை நான் சொல்லவில்லை”
என்றான் ரகுதேவ்.
ஸித்தி அஹமத்தின் கண்கள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. வாயில் வைத்திருந்த மதுக்கிண்ணத்தை ரஹீம் கூட சரேலென்று அகற்றினான். “அதிக நாள் கடல் சஞ் சாரத்திலேயே நானிருந்ததைக் கவனித்தாயா?” என்றான் அஹமத.
“கவனித்தேன். ஆனால், உன்னைச் சந்திக்கக் கருதி அதைச் சொல்லவில்லை. இந்தக் கப்பலின் தலைவன் நானாயிருந்தால் உன் கப்பலின் அடிப்பாகம் பாசியால் கனத்திருப்பதையும் போதிய வேகம் உனக்கில்லாதிருப்பதையும்
கண்டிப்பாகக் கவனித்திருப்பேன். அப்படிக் கவனித்ததும் எல்லாப் பாய்களையும் விரித்துவிட்டு, தெற்கத்திக் காற்று வாட்டத்தில் பறந்திருப்பேன். உன் கைகளில் அகப்பட்டிருக்க மாட்டேன்” என்று ரகுதேவ் விவரித்தான்.
ஸித்தி அஹமத் பெரிய கொள்ளைக்காரனாயிருக் கலாம். காமப்பித்தனாயும் நடத்தை கெட்டவனாயுமிருக்கலாம். ஆனால் இன்னொரு கடல் வீரனுடைய சாமர்த்தியத்தை மட்டும் அவனால் வியாக்காதிருக்க முடியவில்லை.
“உண்மைதான் ரகுதேவ்! இந்தத் தகவலை நீ மட்டும் கப்பல் தலைவனுக்குச் சொல்லியிருந்தால் இந்தக் கப்பலை நான் பிடித்திருக்க முடியாது” என்று ஒப்புக் கொண்டான்.
“இப்பொழுதாவது என்னிடம் சற்று நம்பிக்கை பிறந்திருக்கிறதா? போதிய அத்தாட்சியைக் கொடுத்து விட்டேனா?” என்று ரஹீமை விசாரித்தான் ரகுதேவ். ரஹீம் பதில் சொல்லாமல் அங்கீகாரத்துக்கு அறிகுறியாகத் தலையை
அசைக்கவே, ரகுதேவ் மீண்டும் ஸித்தி அஹமத் துக்காகத் திரும்பி, “அஹமத்! கப்பல் தலைவனிடம் நான் உன் கப்பலின் நிலைமையைச் சொல்லாததற்கு உன்னைச் சந்திக்க வேண்டும் என்பது மட்டுமல்ல காரணம். நான் இப்பொழுது
செய்து முடிக்கும் வேலைக்கு உன் கப்பலைத் தவிர வேறொரு கப்பல் வேண்டியிருந்தது. அதை உத்தேசித்துத்தான் மால்வானுக்குப் பயணமானேன். இடையில் நீ வரவே, உன்னிடம் இக்கப்பலைச் சிக்கவிட்டால் விலை கொடுக்காமலேயே ஒரு
கப்பல் அகப்படுமோயென்று யோசித்தேன்.” என்று இழுத்தான்.
அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டே இரு கொள்ளைக்காரர்களும் நகைத்தார்கள். தன் வேலைக்கு ஒரு கப்பல் வேண்டுமென்பதற்காக ஒரு கப்பல் தலைவனையும், அதிலிருந்த வீரர்களையும்பலி கொடுத்த ரகுதேவின் சாமர்த்தியம்
கொலை, கொள்ளைகளிலேயே காலத்தைச் செலவிட்டு வந்த அவ்விருவருக்கும் பெரிதும் பிடித்திருந்தது. இப்படி அவர் சந்துஷ்டியைக் கிளறிவிட்ட ரகுதேவ், “அஹமத்! இனி நான் உன்னைத் தேடி வந்த விஷயத்தைச் சொல்கிறேன் கேள். நீ
சொப்பனத்தாலும் நினைக்காத அஷ்டைசுவரியம் உன்னைத் தேடி வருகிறது” என்று ஆரம்பித்தான்.
“எங்கு வருகிறது” என்று அஹமத் கேட்டான்.
“மூன்று கப்பல்களில் வருகிறது. மூன்றும் வெள்ளைக்காரக் கப்பல்கள். பத்து லக்ஷம் மொஹராக்கள் பெறுமான தங்கக் கட்டிகளுடனும், ஐந்து லக்ஷம் பெறுமான வைர வைடூரியக் கற்களுடன் மூன்று கப்பல்கள் புறப்பட
இருக்கின்றன” என்றான் ரகுதேவ்.
இதைக் கேட்டதும் மதுக்கிண்ணத்தைச் சட்டெனத் தட்டில் வைத்துவிட்டு, “பத்து லக்ஷம் பெறுமான தங்கக் கட்டிகளா?” என்று வாயைப் பிளந்தான் ரஹீம்.
“அத்துடன் ஐந்து லக்ஷம் பெறுமான கற்களும் இருக்கின்றன” என்று சுட்டிக் காட்டினான் ரகுதேவ்.
ஸித்தி அஹமத்தின் முகத்திலிருந்து வெறி விலகி விட்டது. நன்றாக எழுந்து ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு “எந்த இடத்திலிருந்து கப்பல்கள் புறப்படுகின்றன” என்று விசாரித்தான்.
“அதைச் சொல்வேனென்று எதிர்பார்க்கிறாயா அஹமத்…?”
“ஏன்? சொல்லமாட்டாயா?”
“சொன்னால் இந்த இடத்திலேயே என்னைக் கொன்று போட்டு நீயே அந்தக் கப்பலைப் பிடிக்க எத்தனிக்கலாமே?”
“அப்படியானால் என்னிடம் நம்பிக்கையில்லையா?”
“பரஸ்பரம் நாம் ஒருவரையொருவர் எவ்வளவு தூரம் நம்பலாம் என்பது உனக்கே தெரியும். இப்பொழுது என்னிடம் பெரிய செல்வத்தின் ரகசியமிருக்கிறது. அதைக் கவர உன்னிடம் பலமிருக்கிறது. இரண்டும் ஒன்று சேர்ந்தால்தான்
காரியம் சித்திக்கும். அந்தக் கப்பல்கள் புறப்பட்டு வரும் மார்க்கத்திற்கு உன்னை அழைத்துப் போவது என் பொறுப்பு, சரக்கு சிக்கியதும் பங்கு போட்டுக் கொண்டு பிரிந்துவிடுவோம். அதுவரையும் நமக்குள் ஒற்றுமை வேண்டும்.”
“இந்தக் கப்பல்கள் எப்பொழுது புறப்படும்?”
“இன்னும் ஒரு மாதத்தில்”
“ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டுமா?”
“ஆம்.”
“எந்த இடத்தில் அந்தக் கப்பல்களை நாம் சந்திக்க முடியும்?”
“அந்த இடத்துக்கு அழைத்துப் போகத்தான் நான் இருக்கிறேனே!”
மேற்கொண்டு கப்பல்களைப்பற்றி எந்தவிதத் தகவலையும் ரகுதேவ் சொல்லமாட்டானென்பதைத் தெரிந்து கொண்ட ஸித்தி அஹமத்தின் உள்ளத்தில் உக்கிராகாரமான கோபம் பொங்கியெழுந்தும், எதிர்பார்க்கும் கொள்ளையின்.
ஆசையால் தன்னைப் பெரிதும் அடக்கிக் கொண்டு, “ஒரு மாதம் வரையில் நாம் என்ன செய்வது” என்று வினவினான்.
“செய்ய வேண்டிய வேலை நிரம்ப இருக்கிறது. மூன்று கப்பல்களும் பெரியவை. அவற்றில் இரண்டில் கப்பலொன்றுக்குப் பத்துப் பீரங்கிகளாவது இருக்கும். அவற்றைச் சமாளிக்க நமது இரு கப்பல்களையும் தயார் செய்து கொள்ள
வேண்டும். ஜலமோகினி சாதாரண வியாபாரக் கப்பல். முதலில் அதை யுத்தக் கப்பலாக மாற்றி இன்னும் சில பீரங்கிகளையும் இணைக்க வேண்டும்” என்றான் ரகுதேவ்.
“இந்த வேலைகளையெல்லாம் எங்கு செய்வதாக உத்தேசம்?” என்று ரஹீம் கேட்டான்.
“சந்தேகமென்ன? விஜயதுர்க்கத்தில்தான். அங்குதான் ஸித்தி அஹமத்துக்கு வசதிகள் நிரம்ப இருக்கின்றன” என்று ரகுதேவ் பதில் கூறினான்.
இந்தப் பதில் இரண்டு கொள்ளைக்காரர்களுக்கும் பூரண நம்பிக்கையை அளித்தது. சிங்கத்தின் வாயில் தலையை நுழைப்பதுபோல், தங்களுக்குச் சொந்தமான விஜயதுர்க்கத்துக்கே ரகுதேவ் வரத் தயாராயிருப்பதால்,
கொள்ளைக்காரக் கப்பல்களைப் பற்றிய தகவல் உண்மை யாகத்தான் இருக்கும் என்பதை இருவரும் நம்பினார்கள். பிறகு கொள்ளைக்காரர் வழக்கப்படி கொள்ளையில் பங்கு எப்படி என்பதைப் பற்றி விவாதம் நடந்தது. கிடைக்கும்
பொக்கிஷத்தில் தனக்குக் கால் பங்கு கொடுக்க வேண்டும் என்று ரகுதேவ் பிடிவாதம் செய்தான். தவிர ஜல மோகினியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், ஏற்கெனவே போரில் கொல்லப்படாத ஜலமோகினி மாலுமிகளைக்
கொண்டு தான் கப்பலை நடத்துவதாகவும் நிபந்தனைகள் போட்டான்.
பொக்கிஷத்தில் ஆறிலொரு பங்குக்கு மேல் கொடுக்க ஸித்தி அஹமத் ஒப்பவில்லை. கடும் சச்சரவுக்குப் பின் ஐந்திலொரு பாகத்தையும், ஜலமோகினையையும் ரகு தேவுக்குக் கொடுப்பதென முடிவாகவே ஒப்பந்தத்தை எழுத
தளத்திலிருந்து மாலுமிகள் சிலர் வரவழைக்கப்பட்டார்கள். ஒப்பந்தங்களை எழுதி முடித்து ஸித்தி அஹமத்தும் ரகுதேவும் கையெழுத்திட்டு, ரஹீம் முதலிய நாலு கொள்ளைக்காரர்கள் சாட்சிக் கையெழுத்தும் போட, தகராறு ஒரு வழியாக
முடிந்தது.
ஒப்பந்தப்படி ஜலமோகினியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ள ஸித்தி அஹமத்தை அழைத்துக் கொண்டு தளத்துக்குச் சென்றான் ரகுதேவ். ஸித்தி அஹமத்துக்கு அந்த அறையை விட்டு நகரவே இஷ்டமில்லை. அவன்
பார்வையெல்லாம் பக்கத்து அறையை நோக்கியிருந்தது. ஆனால் இஷ்டப்படி நடக்கும் நிலைமையில் அவன் அந்தச் சந்தர்ப்பத்தில் இல்லை. தன் மாலுமிகளுக்குப் பொக்கிஷத் தின் விஷயம் தெரிந்துவிட்டால் பாதிப்பேர் ரகுதேவின்
பக்கத்திலேயே சாய்வார்களென்பதை உணர்ந்திருந்தான். தலைவன் பெண்ணாசைக்காகத் தங்கள் பொன்னாசையை மாலுமிகள் நழுவவிடத் தயாராயிருக்கமாட்டார்களென்பதும் அவனுக்குத் தெரியும். ஆகவே வேண்டா வெறுப்பாகத்
தளத்தின் மேல் ஏறிச் சென்றான்.
தளத்தை அடைந்ததும், ரகுதேவ் கப்பலின் சொந்தக்காரன்போல் ஆணையிட ஆரம்பித்தான். “டேய்? யார் அங்கே, அந்தப் பிணங்களைத் தூக்கிக் கடலில் எறியுங்கள். தளத்திலிருக்கும் ரத்தத்தை ஜலம் விட்டுக் கழுவுங்கள்’ என்று
உத்தரவிட்டுக் கொண்டு மேல்தளப் படிகளில் ஏறப் போனான். முதல் படியில் ரத்தவெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த ஓர் உருவம் அவன் காலைத் தடுத்தது. அது யாரென்று உற்றுப் பார்த்த ரகுதேவ், சிறிது நேரம் அசைவற்று நின்றான். அவன்
காலடியில் விழுந்து கிடந்தது ஜலமோகினியின் கப்பல் தலைவனின் பிணம். மண்டையிலிருந்த வெட்டுக் காயத்திலிருந்து பெருகி கட்டித்தட்டிக் கிடந்த இரத்தம், கப்பல் தலைவன் இறுதி நிலையை எப்படி அடைந்தான் என்பதை
அறிவுறுத்தியது. இது தன் கடைசிப் பயணம் என முதல் நாள் சொன்னது இந்த விதத்திலா நிறைவேற வேண்டும் என்று பெருமூச்சு விட்டான் ரகுதேவ். அதிகப்படி சிந்தித்தால் ஸித்தி அஹமத் கவனிக்கப் போகிறானே என்ற காரணத்தால்,
தன் அலுவல் வேலைகளைக் கவனிக்கக் கப்பல் தலைவன் உடலைத் தாண்டி மேல் தளத்திற்குச் சென்றான். சிறிது நேரத்தில் அவன் உத்தரவுப்படி தளங்கள் சுத்தப்படுத்தப்பட்டன. ஸித்தி அஹமத், கப்பலை ரகுதேவிடம் ஒப்படைத்து
விட்டுத் தன் வீரர்களுடன் தன் கப்பலுக்குப் புறப்பட்டான். அவன் சென்றதும் மீண்டும் அறைக்கு வந்த ரகுதேவ், உள்ளே பீம்ஸிங் பத்மினியுடன் பேசும் குரல் கேட்கவே சற்று நேரம் வாயிற்படியிலேயே நின்றான்.
“பத்மினி! இப்போது ரகுதேவின் உண்மை சொரூபம் தெரிகிறது. இக்கொள்ளைக்காரன் தன் சுயநலத்துக்காக இந்தக் கப்பலையே அந்த அபிஸீனிய போக்கிரிகளிடம் ஒப்படைத்து விட்டானே, என் உயிரும் உன் கற்பும் இவனிடம்
பத்திரமாயிருக்குமென்பது என்ன நிச்சயம்?” என்று பீம்ஸிங் சொல்லிக் கொண்டிருந்தார்.
சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான் ரகுதேவ். “பீம்ஸிங்! உன் உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை.” என்று ஆரம்பித்தவன், திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு, அறை வாயிற்படி கதவைச் சாத்தினான். அவசர அவசரமாக பீம்ஸிங்கைப்
பக்கத்து அறைக்குள் இழுத்துக் கொண்டு போய்த் தள்ளி, அந்தக் கதவையும் மூடிவிட்டுப் பத்மினியின் அருகில் வந்து கொள்ளைக்காரர்களைவிட மோசமாக அவளுடன் சரசமாடத் தொடங்கி, “பத்மினி! வா இப்படி!” என்று
கூப்பிட்டுப் பலாத்காரமாகப் பிடித்து இழுத்து, தன் இரு கைகளாலும் அவளைத் தழுவத் தொடங்கினான்.