Mohana Silai Ch 17 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மோகனச்சிலை – சாண்டில்யன்
அத்தியாயம் – 17. சாஸ்திரியின் சோதிடம்
Mohana Silai Ch 17 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
கண்ணழகியின் கட்டழகைத்தாங்கிய செப்புதகடை அக்னி குண்டத்தின் செந்தணலில் வைக்க மறுத்ததும், சேரமானும் சாஸ்திரியும் பெரிதாக நகைத்ததற்குக் காரணம் புரியாததால் விழித்த இதயகுமாரனுக்கு மேலும் பல விந்தைகள்
அந்த அறையில் காத்திருந்தன. அறையைச் சூழ்ந்திருந்த புகை சட்டென்று மறைந்தது, அறையிலிருந்த அந்தகாரமும் மறைந்து சிறிது வெளிச்சமும் உள்ளே நுழைந்திருந்தது. வெளிச்சத்திற்குக் காரணம் எதுவாயிருக்குமென்று
கூரையிலிருந்த மூன்று துளைகளையும் அண்ணாந்து பார்த்த சோழ வாலிபன் அவற்றில் ஒன்று கூடத்திறக்காததைப் பார்த்து வியப்பின் எல்லையை அடைந்தான். அந்த எல்லையை மீறும் காட்சி அந்த அறையின் நாலாப்புறங்களிலும்
தெரிந்ததால் மீண்டும் மீண்டும் தன்னைச் சுற்றியிருந்த அறைச்சுவர்களையும் அவற்றிலிருந்த பல சித்திரங்களையும் விசித்திரப் பொருள்களையும் கவனித்தான்.
ஒருபக்கச்சுவரில் நவக்கிரகங்கள் நன்றாகத் தீட்டப்பட்டிருந்தன. எந்தெந்தக் கிரகங்களுக்கு எந்தெந்த வண்ணம் தேவையோ அந்தந்த வண்ணங்களே பூசப்பட்டிருந்தன. சனி பகவானையும் அவன் காக்கையையும் நல்ல கரிய
நிறத்திலும், சூரியனையும் அவன் தேரையும் அருணனையும் நல்ல சிவப்பிலும் தீட்டியிருந்தான் ஓவியன். இன்னொரு பக்கச் சுவரில் பெரும் பிசாசுகள் நாக்கை பயங்கரமாகத் தொங்கப்போட்டு கொண்டும் சில பெரும் பற்களைக்
காட்டிப் பயங்கரமாக நகைத்துக் கொண்டும் காட்சியளித்தன. மற்றொரு சுவரில் இவற்றுக்கெல்லாம் நேர் விரோதமாக அப்சர மங்கையர் உருவங்கள் தென்பட்டன. ஆனால், சாஸ்திரியும் தானும் மன்னனும் உட்கார்ந்திருந்த மேடைக்கு
பின்னால் மட்டும் காலருத்திரனும் பிரளய நாராயணனுமாக இருபேருருவங்கள் அபயக்கரங்களுடன் காணப்பட்டன.
இப்படி நாற்புறமிருந்த சித்திரங்களைத் தவிர அறையின் ஒரு மூலையில் குழந்தைகளின் விளையாட்டு வண்டிகளின் சக்கரங்கள் போல் நான்கு சக்கரங்கள் உருண்டு கிடந்தன.இரண்டு பெரிய மண்மோடாக்கள் ஒரு மூலையில் நீர்
நிரப்பப்பட்டு இருந்தன. இவற்றையெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் சேரனையும் சாஸ்திரியையும் பார்த்தபோது அவர்கள் பெருநகைப்பு நின்றிருந்தது. ஆனால் புன்முறுவல் இருவர் உதடுகளிலும் நிரம்பி நின்றது.
தங்களை இதயகுமாரன் நோக்கியதும் சாஸ்திரி அவனை நோக்கித் தனது கையொன்றை நீட்டி “‘தகட்டைக் கொடு” என்று கேட்டார். இதயகுமாரன் யோசித்தான் கொடுக்க.”அதைப் பார்” என்று சாஸ்திரி கூறினார் அனுதாபம்
நிறைந்த குரலில். இதயகுமாரன் தனது கையிலிருந்த தகட்டின மீது கண்களை ஒட்டினான். அதிலிருந்த மை அடியோடு மறைந்துவிட்டது. செப்புத் தகடில் காணப்பட்டனசில கோடுகள். சில எழுத்துக்கள். ஆகவே அந்தத் தகட்டை
சாஸ்திரியின் கையில் இதயகுமாரன் கொடுக்க, அதைத் தமது பக்கத்தில் வைத்துக் கொண்ட சாஸ்திரி “இதயகுமாரா! இன்று உன் கதி நிர்ணயிக்கப்பட்டு விட்டது” என்று மிக அடக்கமான குரலில் சொன்னார். தன் இதயகுமாரன் அவரை
வியப்பு ததும்பிய விழிகளுடன் நோக்கினான். “என் கதியா! நிர்ணயிக்கப்பட்டதா? யாரால்?” என்று வினவினான் இதயகுமாரன்.
“சூரியபகவானால்!” என்றார் சாஸ்திரி.
“சூரியபகவானாலா! திடீரென அவருக்கு என்மேல் இத்தனை அக்கறை வரக் காரணம்?” என்று வினவினான் இதயகுமாரன்.
இதைக் கேட்ட சாஸ்திரி புன்முறுவல் கொண்டார். “சோழநாட்டுக் குறும்பு உன் கேள்வியில் தெரிகிறது.ஆனால் இது விளையாட்டு விஷயமல்ல. உனது வலது காலைத் திருப்பிப் பார்” என்று கூறினார் சங்கரநாராயணன்.
உட்கார்ந்த நிலையிலேயே வலது உள்ளங்காலைத் திருப்பிப் பார்த்தான் இதயகுமாரன். அதில் செக்கச்செவேலென்று ஒரு வளையம் இருந்தது. அதன் தோற்றம் பார்ப்பதற்கு சூரியன் போலிருந்தது. “இவன் காலில் சூரிய ரேகையிருக்கிறது”
என்றுதான் முதலில் வந்தபோது சாஸ்திரி சொன்னதை நினைத்துப் பார்த்த இதயகுமாரன், தனது பாதத்தையும் நோக்கி அவரையும் நோக்கினான்.
வான சாஸ்திரியின் கண்கள் இதயகுமாரன் கண்களைக் கவர்ந்து நின்றன சில விநாடிகள். பிறகு அவர் உதடுகள் திறந்து கேள்விகளை உதிர்த்தன.இதை இதற்கு முன்பு பார்த்திருக்கிறாயா?” என்று எழுந்தது சங்கரநாராயணன் முதல்
கேள்வி.
“இல்லை இதயகுமாரன் பதிலில் சிறிது சங்கடம் ஒலித்தது.
“ஏன்?”
“ஏனென்று தெரியவில்லை.”
“மனிதனுக்குப் பல விஷயங்கள் தெரிவதில்லை. அவன் உடலில் இறைவன் பிறப்பின் போதே விதித்த லட்சணங்களை அவன் அறிவதில்லை” என்று பொதுப்படையாக மனித அறிவீனத்தை விளக்கிய சாஸ்திரி, “இதயகுமாரா!
சூரியனுக்கு உன் மேல் என்ன அக்கறை என்று கேட்டாய். சூரியன் அனுக்கிரகத்துடன் நீ பிறந்திருக்கிறாய். அதுமட்டுமல்ல சூரிய வம்சத்திலும் பிறந்திருக்கிறாய். அதனால்தான் சூரியனைச் சற்று முன்பு நீ கண்ணால் பார்க்க முடிந்தது”
என்று சொன்னார்.
இங்கு சேரமன்னன் இடைபுகுந்து குருநாதர் இந்தச் சிறுவனுக்கு இன்னும் சிறிது விளக்கமாகச் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான்.
ஆகட்டும் என்பதற்கு அடையாளமாக முன்குடுமியை அசைத்து சங்கரநாராயணன், “இதயகுமாரா! நீ சூரியனை எதன் மூலம் கண்டாய்?” என்று வினவினார்.
“மைத் தகட்டின் மூலம்” என்றான் இதயகுமாரன்.
“அதைக் கேட்கவில்லை. சூரிய வெளிச்சம் தகட்டின் மேல் எங்கிருந்து விழுந்தது?”
“மேலிருக்கும் துளை மூலம்.”
“அது சாத்தியமா?”
“ஏன் சாத்தியமில்லை?”
“பகல் ஏறியிருக்கிறது. ஆனால் உச்சிவேளை வரவில்லை.”
இதைக் கேட்டதும் சிறிது தயங்கினான் இதயகுமாரன். “ஆம் உச்சிவேளை வரவில்லை. நான் நீராடி இங்கு வந்தபோது சூரியன் உதித்து ஆறு நாழிகைகள் இருக்கும்” என்று கூறினான் முடிவில்.
“அப்படியிருக்க, சூரிய வெளிச்சம் மேலிருந்து எப்படி வரும்?” என்று வினவினார் சாஸ்திரி.
இதற்குப்பதில் சொல்ல இதயகுமாரனுக்குத் தெரியாதிருக்கவே சாஸ்திரியே சொன்னார்: “சூரியோபாஸக மந்திர உச்சாடனத்தால் அவன் பிம்பத்தை நாம் வரவழைக்கிறோம். தவிர, மேலேயுள்ள துளைகளில் கிழக்குப் புறமாக இருப்பது
சிறிது சாய்த்து அமைக்கப்பட்டிருப்பதால் பிம்பத்தைச் சற்றுச் சாய்த்து மையில் அமைக்கவும் முடிகிறது. அதல்ல பெரிய விஷயம்…”
உச்சிக்கு வராத சூரியனை, கிழக்குப் பக்கத்திலிருந்தாலும் பார்க்க முடியாத நிலையில், மைத்தகட்டில் காட்டுவது இத்தனை சுலபமில்லை என்பதை அறிந்திருந்த இதயகுமாரன், “அதுவும் பெரிய விஷயந்தான்” என்றான்.
“அல்ல; அதல்ல பெரிய விஷயம். உனக்கு சூரிய கங்கணம் தெரிந்தது பெரிய விஷயம். அதன் விளைவுகள் தெரியுமா உனக்கு?”
“தெரியாது.”
“சொல்கிறேன் கேள். பெரிய உத்பாதங்கள் ஏற்படும் காலங்களில் இந்தமாதிரி சூரிய வளையம் தெரியும். ஆகையால் இந்த நாட்டில் பெரும் போர்கள் நிகழும். அதற்குப் பூர்வாங்கமாக ஒரு பேரரசுக்கு வித்திடப்படும், அதுவும் உன்
கையால். கங்கணமும் எல்லோர் கண்களுக்கும் தெரியாது. சூரியரேகை கையிலோகாலிலோ உள்ளவனுக்குத்தான் தெரியும். உன்காலில் சூரியரேகை இருப்பதை முன்பே அறிந்தேன். அதனால்தான் உனக்கு சூரியபகவான் கங்கணமாகக்
காட்சியளித்தார். நீ பெரும் காரியங்களைச் சாதிக்க இருக்கிறாய். உன் கையால் பெரிய ரகசியங்களின் சிக்கல்கள் அவிழ்க்கப்படும்” என்று சங்கர நாராயணன் சொப்பனத்தில் பேசுவதுபோல் பேசினார். அவர் கண்கள் மூடிக்கிடந்தன.
“நீ கண்டெடுத்த மோகனச்சிலையின் ரகசியம் உன்னால் தான் உடைக்கப்படும். அதன் முதுகில் ஒரு பேருண்மை புதைந்து கிடக்கிறது. அதன் முதுகிலுள்ளதையலைக்கண்ணழகி பிரிப்பதை இப்பொழுது நீ தடுத்துவிட்டாய்…” என்று
மேலும் சொன்ன சாஸ்திரியை இடைமறித்த இதயகுமாரன், “அது தந்தச்சிலை. நல்ல பழுப்பேறிய யானைத்தந்தம். அதன் முதுகை எப்படி தைக்க முடியும்?” என்று கேட்டான்.
சங்கரநாராயணன் கண்களைத் திறக்காமலே பதில் சொன்னார். அந்தச் சிலையை நீ சரியாகப் பார்க்கவில்லை. கடைந்த சிலையின் முதுகு இரண்டாகப் பிளக்கப்பட்டிருக்கிறது. அதன் உட்புறம் நடுவில் குடையப்பட்டு தந்தம்
தகடுபோலாக்கப்பட்டிருக்கிறது. யானைத் தந்தங்களை நரம்பு போல் செய்தவர்கள் அதை மூன்று துளைகளில் கோத்து வாங்கியிருக்கிறார்கள். தையலுக்குமேல் காய்ச்சிய யானைக்கொழுப்பு பச்சிலை கலந்து தடவப்பட்டிருப்பதால்
தையல் மறைக்கப்பட்டிருக்கிறது. தையலைப் பிரித்து கத்தியால் இருபுறமும் நீக்கினால் உட்புறம் பேழைபோல் லேசாகத் திறக்கும். அந்தப் பேழையில் ஒரு தந்த ஓலை இருக்கிறது. அதில் சோழர்களின் பிற்காலம் முழுவதும்
சொல்லப்பட்டிருக்கிறது” என்று கூறினார் சாஸ்திரி.
“என்ன எழுதியிருக்கிறதென்று சொல்ல முடியுமா?” என்று விளவினான் இதயகுமாரன்.
“முடியாது.”
“தங்களால்கூடவா?”
“ஆம்.”
“மந்திரத்தால் கூடவா?”
“மந்திரம் என்பது நல்லதற்கு ஏற்பட்டது. மனிதர்களின் ரகசியங்களை அறிய உபயோகப்படுத்தப்படுவதில்லை.”
இந்த சமயத்தில் சேரமன்னன் இடைபுகுந்தான். “குருநாதர் இந்த சமயத்தில் சோழநாட்டுடன் போர் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். அவர் போதனையை நான் பின்பற்றுகிறேன். விஜயாலயன் சோழ சாம்ராஜ்யத்தை அமைப்பான்.
அவன் மகன் ஆதித்தன் அதை விரிவுபடுத்துவான் என் உதவியுடன் என்பதும் குருநாதர் சொல். அவர் சொல்வது நடக்கும். நீ சோழன் மகள் கையைப் பிடிக்காவிட்டால் சோழநாட்டின் பிற்காலத்தை முழுதும் அறிந்திருக்கலாம். ஆனால்,
சயமத்தில் கெடுத்து விட்டாய்” என்று குற்றம்சாட்டினான் தாணு ரவி.
“கண்ணழகி உங்கள் மகளல்ல என்பது முன்னமே தெரியுமா?” என்று வினவினான் இதயகுமாரன்.
“தெரியும். இருந்தாலும் என் மகள் போல் வளர்த்தேன். சேரநாட்டு பலவீனத்திற்கும் சோழ நாட்டு பலவிருத்திக்கும் அவளும் காரணமாவாள். இது குருநாதர் சொன்னது” என்றான் தாணு ரவி.
“தெரிந்தும் ஏன் வளர்த்தீர்கள்?” என்று கேட்டான் சோழ வாலிபன்.
“அவள் என்னை மயக்கிவிட்டாள். குழந்தையில் அவள் என்னைப் பார்த்த பார்வை! அதிலிருந்து யார் தப்பமுடியும்?” என்று விளக்கினான் தாணு ரவி. “அதை நினைத்துத்தான் சிரித்தேன். பிம்பத்தைத் தணலில் வைக்கக்கூட நீ
தயங்கினாயே. உன்னை அவள் எத்தனை மயக்கியிருப்பாள்? நீ வரும் முன்பு குருநாதர் சொன்னார், உன் வளர்ப்பு மகள் இதயகுமாரனை மய்கிவிட்டாள் என்று. இதை நீயும் நிரூபித்தாய், குருநாதர் கட்டளையை மீறியதால். அவரும்
அதனால்தான் நகைத்தார். கண்ணழகி என்று அவளுக்கு இயற்பெயர் என்பதையும் குரு நாதர்தான் சொன்னார்” என்று விளக்கினான் தாணு ரவி.
சங்கரநாராயணன் உரையாடலுக்கு அத்துடன் முற்றுப் புள்ளி வைத்தார். “இதயகுமாரா! உன் பெற்றோர் யாரென்று உனக்குத் தெரியுமா?” என்று வினவினார்.
“தெரியாது” என்றான் இதயகுமாரன்.
“உன்னை வளர்த்தது?”
“சோழ மன்னர். அவர் அரண்மனையில் அவர் உத்திரவின்படி ஒரு வீரனால் வளர்க்கப்பட்டேன்.”
“ஆகவே அவர் உன் வளர்ப்புத் தந்தை.”
“அப்படி வைத்துக்கொள்ளலாம்.”
“வைத்துக்கொண்டால் கண்ணழகி உனக்கு சகோதரி ஆவாள்” என்றார் சாஸ்திரி. இதைச் சொன்ன போது சொற்களை மெள்ள உதிர்த்தார். இதைக் கேட்டதும் இதயகுமாரன் உடல் ஒருமுறை ஆடியது. என் சகோதரி! சகோதரி!” என்று
துன்பம் தோய்ந்த குரலில் சொன்னான் இதயகுமாரன்.
.
சாஸ்திரியின் வதனத்திலும் துன்பக்களை படர்ந்தது. “விதி நம்மைப் பல வழிகளில் இழுத்துச் செல்கிறது. என்ன செய்யலாம். ஆனால், கலங்காதே. அவளைத்தான் நீ மணம் புரிவாய்” என்றார் சாஸ்திரி துன்பம் குரலிலும் துலங்க.
“நீங்கள் சொல்வது முரண்பாடாயிருக்கிறது” என்றான் இதயகுமாரன்.
“வாழ்க்கையே முரண்பாடு. அதன் வழிகளே விசித்திரம். நீஅவள் சகோதரனல்ல. நீ வேறொரு வம்சம். உன் கரமே இந்த வம்சத்தின் எதிரி. ஆகையால் இங்கிருந்து சோழனிடம் செல்லும் போது இங்கு நடந்தது அனைத்தையும் மறந்துவிடு”
என்றார்.
அத்துடன் தாணு ரவி கூறினான், “இன்று நானும் திருமுக்கூடலை விட்டுச் செல்கிறேன். இளையவேளின் திட்டம் பலிக்கவில்லை என்பதை மாரவேளிடம் சொல். அவர் புரிந்து கொள்வார்” என்று.
“நீ மீண்டும் கருவூரில் நுழையும்போது அரண்மனை செல்லாதே. அரண்மனை நந்தவனத்திற்குச் செல்” என்று சாஸ்திரி கூறினார்.
“இனிதாமதிக்காதே, புறப்படு” என்றான் தாணு ரவி. அந்த அறையை விட்டுக் கிளம்பினான் இதயகுமாரன். வாயிலில் வந்தபோது அவன் புரவி சேணமிட்டு பயணத்துக்குச் சித்தமாக நின்றிருந்தது. அதன்மேல் தாவினான் சோழநாட்டு
வீரன். புரவி பறந்தது. அன்றிரவு அவன் கருவூரில் நுழைந்து நேராக அரண்மனை செல்லாமல் சாஸ்திரி கூறியபடி அரச நந்தவனத்தில் நுழைந்தான். அங்கிருந்த வாவியில் கண்ணழகி நீந்திக்கொண்டி ருந்தாள் பிறந்தமேனியுடன். அவள்
சீன கரையில் இருந்தது. அதன்மீது மோகனச் சிலைபடுத்திருந்தது.