Mohana Silai Ch 23 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மோகனச்சிலை – சாண்டில்யன்
அத்தியாயம் – 23. “எங்குதான் போயிருப்பான்?”
Mohana Silai Ch 23 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மாரவேளின் உடலிலிருந்து உயிர் பிரிந்ததும் அவர் சடலத்துக்கு சோழ தேவனும் சேர மன்னனும் செலுத்திய மரியாதையைச் சற்று எட்ட இருந்ததே கவனித்துக்கொண்டிருந்த அரசகுமாரியும் இதயகுமாரனும் மிதமிஞ்சிய துக்கத்துடன்
வியப்பையும் அடைந்தார்கள். ஒரு சோழநாட்டு உபதள பதியாயிருந்து ஓவியராகவும் ராஜதந்திரியாகவும் மாறிவிட்ட மாரவேளை அவருக்கு எதிரியாயிருக்கவேண்டிய சேரன்கூட மதித்ததை எண்ணியதால் தமிழகத்தின் ஒரு பெரிய தியாகி,
மகான் இறந்துவிட்டாரென்ற பெரிய உண்மையையை இருவருமே புரிந்து கொண்டார்கள். அவர் செய்த தியாகத்தின் பயன் இளையவேளையும் காப்பதை நினைத்துப் பார்த்த இதயகுமாரன், எந்த நல்ல காரியத்திலும் ஒரு கரும்புள்ளியும்
கலப்பதை எண்ணிப் பெருமூச்சு விட்டான்.
அரசகுமாரி தனது கண்களில் பிரவாகித்துக்கொண்டிருந்த நீரை நன்றாகத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள். “என்ன யோசிக்கிறீர்கள்?” என்றுவினவவும் செய்தாள் இதயகுமாரனை நோக்கி.
“இளையவேளின் யோகத்தைப் பற்றி. இரண்டு பெரு மன்னர்களின் பாதுகாப்பு அவனுக்கிருக்கிறது” என்றான் இதயகுமாரன் சலிப்புடன்.
“ஏன், ஒரு மகாவீரரின் பாதுகாப்பும் இருக்கிறது” என்றாள் அரசகுமாரியும் குரலில் சலிப்பைக் காட்டி.
இதயகுமாரன் சிந்தனை பல திசைகளில் இழுபட்டிருந்ததால் அரசகுமாரியின் சொற்களை முழுதும் மனத்தில் வாங்காமல் “யாரது?” என்று கேட்டான்.
“என் பக்கத்தில் நிற்பவர்தான். இளையவேளைக் கொல்வதில்லையென்று நீங்களுத்தான் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறீர்கள்” என்ற அரசகுமாரியின் குரலில் சினம் – பெரிதும் ஒலித்தது.
அவள் சொன்னதில் பொருளிருப்பதையும், இளையவேளின் உயிர் பல பக்கங்களிலும் பாதுகாக்கப்பட்டிருப்பதையும் எண்ணி இதயகுமாரன் சிறிது வருந்தவும் செய்தானென்றாலும் “அரசகுமாரி…” என்று மெள்ள அழைத்தான்.
“ஏன்?”
“ஒரு நல்ல மனிதரால், அவர் செய்யும் புண்ணியத்தால், அவரது பிற்கால சந்ததிகள் பலனடைகின்றன என்று சொல்கிறார்கள். அது உண்மை என்பதற்கு இளையவேள் உதாரணம்.”
இதைக் கேட்ட அரசகுமாரியும் ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தாள்.அந்த சமயத்தில் சேர மன்னனிடம் நின்றிருந்த வான சாஸ்திரியான சங்கரநாராயணன், “இதயகுமாரா! கண்ணழகி! இப்படி வாருங்கள்” என்று அழைக்க,
இருவரும் அவர் இருந்த இடத்தை அணுகினார்கள்.