Mohana Silai Ch 25 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மோகனச்சிலை – சாண்டில்யன்
அத்தியாயம் – 25. தந்தையும் மகனும்…
Mohana Silai Ch 25 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
சந்திரலேகாவின் அரண்மனையில் தனது மகனைத் தேடி அவன் அறையை நாடி அதன் கதவைத் திறந்துநின்ற பெரும்பிடுகு முத்தரையர், அங்கு நின்றவனைக் கண்டு தனது மகனெனக் கருதி மாறாவென்றழைத்ததும் திரும்பியவன்
முகத்தைக் கண்டதும் சிறிது அதிர்ச்சியையும் சினத்தையும் ஒருங்கே அடைந்தார். இருப்பினும், சினத்தை உதறி, தான் கண்டது மதுவின் இயல்பாயிருக்குமோ என்ற எண்ணத்தில் தனது கண்களை இருமுறை கசக்கிவிட்டு நன்றாக
விழித்துப் பார்க்கவும் செய்தார்.
திரும்பிய முகம் தனது மகனின் முகமில்லாவிட்டாலும் அதைப் போன்ற இன்னொரு அச்சு என்பதை உணர்ந்து கொண்டதால், சிறிது குழப்பமும் அடைந்து ஒரு விநாடி சிந்தனை வசப்பட்டாலும் அந்த சிந்தனையும் பளிச்சென்று
மறைந்தது. ராட்சஸக் கண்களில் வியப்பின் சாயையும் படரலாயிற்று. “இருக்காது! ஒரு நாளும் இருக்காது!” என்று வலிய அவர் உதடுகள் இருமுறை சொற்களையும் உதிர்த்தன வியப்பு பெரிதும் நிரம்பிய குரலில். “இல்லை இல்லை.
அவன்தான். அதே அச்சு. இயற்கை பொய் சொல்லாது. என் காவலர்தான் பொய் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் நல்லதுக்குத்தான்” என்று மீண்டும் சொற்களைக் குடிவெறியுடன் முணு முணுத்தான் பெரும்பிடுகு முத்தரையர்.
இப்படித் தனது காதுக்கு ஏதும் கேட்காமல் அந்த முதியவர் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்ததைக் கண்ட அந்தப் புதுமுகம் உதடுகளைத் திறந்து, “நீங்கள்தான் பெரும் பிடுகு முத்தரையராயிருக்க வேண்டும்” என்று கூறிற்று
சிறிது பலமாகவே.
இதைக் கேட்டதும் முத்தரையர் மதுவின் சேஷ்டையினால் பெரிதாகவே நகைத்தார் கட்டிடம் அதிரும்படியாக. “நல்ல கேள்வி!” என்று நகைப்பின் ஊடே கூறவும் செய்தார் முத்தரையர்.
கேள்வியில் நகைப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று சீறினான் வந்தவன்.
“என் அரண்மனைக்குள் வந்தது மட்டுமின்றி என்னைக் கேள்வியும் கேட்டு நீ உயிருடனிருப்பதே நகைப்புக்கு இடம் கொடுக்கிறது. அது கிடக்கட்டும். உன் பெயரென்ன?” என்று வினவினார் முத்தரையர் தனது சிரிப்பைச் சிறிது
நிறுத்தி.
வந்தவன் ஒருவிநாடி சிந்தித்தான். பிறகு சொன்னான் “இளையவேள்” என்று.
இதைக் கேட்டதும் மீண்டுமொருமுறை இடிபோன்ற நகைப்பு அந்த அறையை உலுக்கியது. இளையவேள்! என்ன மடத்தனமான பெயர்? உனக்கும் வேளிர் குலத்தாருக்கும் என்ன உறவு இருக்க முடியும்?” என்று நகைப்புடன் கேட்ட
பெரும்பிடுகர் உதடுகளில் சட்டென்று நகைப்பு உறைந்தது. அவன் பெரிய வலதுகை சுவரிலிருந்த பெண்ணின் சித்திரத்தைச் சுட்டிக்காட்டியது. “அவளை உனக்குத் தெரியுமா?” என்று கேட்டது இரும்புக்குரல்.
“தெரியாது” – இளையவேளின் குரலிலும் இரும்புச் சாயை தெரிந்தது.
“தெரியாவிட்டால் ஏன் அதைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாய்?”-பெரும்பிடுகர் கேள்வியில் கொடுமை இருந்தது.
“தெரியாது.”
“என்ன தெரியாது?”
“காரணம் தெரியாது.”
“நான் காரணம் சொல்கிறேன். அவள் உன் தாயார்” என்ற பெரும்பிடுகர், இளையவேளின் முகத்தில் விளைந்த சந்தேகத்தைக் கண்டு, சந்தேகம் வேண்டாம். அவள் உன் தாயார்தான். அதையறியாமலே ரத்தபாசம் நீ அந்த சித்திரத்தைப்
பார்க்கவும், பார்த்து சிந்திக்கவும் வைத்திருக்கிறது. எனது மகனின் முட்டாள்தனங்களில் இதுவும் ஒன்று” என்று கூறினார்.
இளையவேள் மீண்டுமொருமுறை திரும்பி அந்த ஓவியத்தைக் கண்டான். பெரும்பிடுகன் சொல்வது உண்மை யாகத்தானிருக்க வேண்டும் என்று அவனுக்கே தோன்றியது. மாரவேளின் சித்திரங்களை ரசிக்க முடியாத தனக்கு இந்த
களப்பிரர் அரண்மனைக் கலையை எப்படி ரசிக்க முடிந்தது என்று எண்ணிப் பார்த்தான். அந்த அழகிய பெண்ணின் முகம், அதன் கண்கள் தன்னை ஈர்த்ததற்குக் காரணம் பெரும்பிடுகன் சொன்னதாகத்தானிருக்க வேண்டுமென்ற
தீர்மானமும் அவன் மனத்தில் உதயமாயிற்று. அதனால் கதவருகே நின்ற முதியவனைப் பார்த்து வினவினான், “உங்கள் மகனின் முட்டாள் தனம் என்றீர்களே, அதென்ன?” என்று
உடனடியாகப் பதில் சொல்லவில்லை பெரும்பிடுகு முத்தரையர். தள்ளாடித் தள்ளாடி உட்புறம் நடந்து அங்கிருந்த பஞ்சணையில் உட்கார்ந்துகொண்டு தரையை நோக்கினார். “முட்டாள்தனம்தான் அது. தூக்கி வந்தவர்களைக்
களப்பிரர் காதல் கொள்வதில்லை; கற்பழிக்கிறார்கள் அல்லது பலவந்தமாக மணக்கிறார்கள். ஆனால், என் மகன் தூக்கிவந்தவள் மீது காதல் கொண்டான். அவள் இணங்காததால் கற்பையும் அழித்தான். இருப்பினும் அவளை இந்த
அறையில் சிறை வைத்தான். இவன் காதலித்தாலும் அவள் காதலிக்கவில்லை. ஒரு நாளிரவு அவள் மறைந்தாள். இந்த அறைச் சாளரத்தின் நடுக்கட்டையில் சீலைகளைப் பிணைத்துக் கீழே தொங்கவிட்டு இறங்கி நடந்துவிட்டாள்.
அப்பொழுது என் மகன் முழுக்குடியில் இருந்ததால் மயங்கிக் கிடந்தான். இப்படித் தப்பிச் சென்றவளை யாரும் தடுக்கவில்லை என் மகனின் காதலியென்ற காரணத்தால். அவள் உத்தரவுப்படி காவலர் புரவியும் கொடுத்தார்கள்,
கதவையும் திறந்துவிட்டார்கள் என் மகனுக்குரியவள் ஆணையை மீறமுடியாமல். அவள் வீரப்பெண்; வீரன் மனைவியாயிருக்க சகல தகுதியையும் உடையவள். இன்னும் சில நாள் இருந்தால் மாறன் அவளை மணந்தும் இருப்பான்.
ஆனால், அவள் கொடுத்து வைக்கவில்லை” என்று மெதுவாக வருத்தம் தோய்ந்த குரலில் பழைய கதையைச் சொன்னான் பெரும்பிடுகு முத்தரையர்.
இளையவேள் ஏதும் பேசவில்லை. எதிரே தலைகுனிந்து உட்கார்ந்திருந்த பெரும்பிடுகனைத் தனது வாளால் வெட்டிப் போட்டாலென்ன என்ற ஆத்திரம் அவன் மனத்தில் உருவெடுத்து அவன் முகத்தைப் பெரும் பயங்கரமாக
அடித்திருந்தது.
அந்த சமயத்தில் சிறிது தலையைத் தூக்கி தனது ராட்சஸக் கண்களால் இளையவேளின் முகத்தைப் பார்த்த முத்தரையரின் பெரிய இதழ்களில் லேசாக புன்னகை மலர்ந்தது. “என்னை வெட்டிப்போட நினைக்கிறாய். முத்தரையர் ரத்தம் உன்
உடலில் ஓடுவதற்கு அதுவே அத்தாட்சி. ஆனால் உன்னைப்போல் நூறு பேர் வந்தாலும் என்னை வெட்ட முடியாது. நீ வாளை உருவும் சத்தம் எனது நரம்புகளை விநாடி நேரத்தில் முடுக்கிவிடும். நீ வாளை உருவியதும் என்
கையொன்று உன் கையைப் பிடித்து எலும்பை முறித்துவிடும். இஷ்டப்பட்டால் உன் கழுத்தையும் திருகிவிட என்னால் முடியும்” என்று சர்வசகஜமாய் புன்முறுவலுடன் கூறிய பெரும்பிடுகு முத்தரையர், “இல்லை, உன்னைக் கொல்ல
நான் இஷ்டப்படவில்லை. நீ இந்த சந்திரலேகாவைவும் தஞ்சையையும் சுற்றுப்புறத்தையும் ஒரு நாள் ஆளவேண்டியவன்” என்று கூறினார்.
மேலும் கதையைத் தொடர்ந்தார். “அவள் ஓடிப்போன பின்பு மாறன், உன் தந்தை, பைத்தியம் பிடித்தவன் போல் ஆனான். அவளுக்குப் புரவி கொடுத்த இருகாவலரை வெட்டவும் முயன்றான். நான் தடுத்திருக்காவிட்டால் வெட்டியும்
இருப்பான். பிறகு பல தினங்கள் இந்த அறையிலேயே உட்கார்ந்திருந்தான் பித்தனைப்போல். மையும் இறகும் கொண்டு அந்தச் சுவரிலிருக்கும் ஓவியத்தை அவன்தான் தீட்டினான்…”
இந்த இடத்தில் இடைபுகுந்த இளையவேள், “முத்தரையருக்கு சித்திரம் தீட்டவும் தெரியுமா?” என்று வினவினான்.
“தெரியும்” என்ற முத்தரையர் நகைத்தார். “பெரிய வீரர்களாக தமிழகத்தில் நுழைந்த களப்பிரர் முத்தரையர்களாகி தமிழர் சகவாசத்தால் இந்த சோம்பேறிக் கலைகளைக் கற்றுக் கொண்டார்கள். அதனால் வீரப்பயிற்சிகளை இழந்தார்கள்.
என் மகனும் இந்தப் பைத்தியக்காரக் கலையைக் கற்றுக் கொண்டான். ஒரு ஓவியனைச் சிறைப்பிடித்து வந்து இந்த அரண்மனையிலேயே கற்றுக்கொண்டான். அதன் பயன் இந்த சித்திரம். நினைப்பிலிருந்தே இதை எழுதினான். ஆனால், எந்த
மாறுதலும் இல்லை. உன் தாயின் அழகு முழுவதும் இதில் வடிக்கப்பட்டிருக்கிறது” என்றும் சொன்னார்.
அடுத்து இளையவேளைக் கேள்வி கேட்கவிடாமல் தொடர்ந்து பேசினார் பெரும்பிடுகர். “அவள் மீதிருந்த காதல் என்ன முட்டாள்தனமான பெயர்- என் மகனுக்கு மாறவில்லை. அவளைத் திரும்பவும் தூக்கிவர முயன்றான். முதல்
தாக்குதலுக்குப் பிறகு விஜயாலயன் உறையூரின் படையைப் பெரிதும் வலுப்படுத்தி விட்டதால் அது முடியவில்லை. பிறகு அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும், அவள் இறந்து விட்டதாகவும் செய்தி கிடைத்தது. என்ன
குழந்தை என்று திட்டமாகத் தெரியாவிட்டாலும் அதையாவது கொண்டுவரத் துடித்தான் மாறன். எதிரி நாட்டுக்குள் மீண்டும் நுழைவது விவேகமில்லையென நான்தான் தடுத்தேன். பிறகு மாறன் ஒரு நிலையில் இல்லை. வெறியனாக
மாறினான். பல இடங்களை என் உத்தரவின்றி கொள்ளை அடித்தான். பெண்ணின் பிரிவு எந்த முத்தரையனையும் இத்தனை பைத்தியமாக அடித்ததில்லை. ஆனால், இனிமேல் அவன் வெறி குறையலாம். நீ வந்துவிட்டாய். மகனைக் கண்டு
அவன் மனம் சிறிது சாந்தி யடையலாம்” என்று கதையை முடித்த பெரும்பிடுகு முத்தரையர் கட்டிலிலிருந்து எழுந்திருந்து இளைய வேளிடம் சென்று அவனை அணைத்துக்கொண்டார்.
இயைவேளின் கைகளையும், தோள்களையும், புடைத்த கன்னங்களையும் தடவிப்பார்த்தான், சிறிது பின்னடைந்து தனது கையை முஷ்டி பிடித்து இளையவேளின் மார்பில் குத்தினான் பலமாக. இளையவேள் அந்தக் குத்தை லட்சியம்
செய்யாததைக் கண்டு பெரும்பிடுகர் முகத்தில் திருப்தி நிலவியது. “நான் முன்பு சொன்னது தவறு. நீ நூற்றுக்கு நூறு களப்பிர முத்தரையன்தான்” என்று பாராட்டவும் செய்தான், திருப்தி குரலிலும் ஒலிக்க.
இளையவேள் பெரும் பிரமையில் இருந்தான். தன் வாழ்க்கைச் சரிதத்தை அவன் ஓரளவு உணர்ந்திருந்தாலும். அதன் முழு விவரம், முழு சோக நிலவரங்கள், பெரும்பிடுகு முத்தரையன் சொன்னபிறகுதான் அவனுக்கு வெட்ட வெளிச்ச
மாயிற்று. ஒரு முறை திரும்பி தனது தாயின் உருவத்தைப் பார்த்தான். மீண்டும் பெரும்பிடுகனைப் பார்த்தான். அவன் முகத்தில் விவரிக்க இயலாத சிந்தனையும் குழப்பமும் விரிந்தது.
“ஏன் குழம்புகிறாய்?”- போதை மாறியதால் பெரும்பிடுகர் குரலில் கடுமை கடுகளவு தெரிந்தது.
“ஒரு குழப்பம் இருக்கிறது” என்றான் இளையவேள்
“என்னகுழப்பம்?” பெரும்பிடுகர் வினவினார் வியப்புடன்.
“உங்கள் மகனை என் தந்தையென்பதால் விட்டுவிடுவதா, எனது தாயை அழித்தவர் என்பதால் கொன்றுவிடுவதா என்று புரியவில்லை எனக்கு. அதனால் குழம்புகிறேன்” என்றான் இளையவேள்.
எதிரே நின்ற பாட்டன் முகத்தில் பரிதாபம் விரிந்தது. “இங்குதான் வேளிர் ரத்தம் வெளிப்படுகிறது. சற்று பலவீனம் தெரிகிறது உன் குணத்தில். உன் தந்தையாயிருந்தால் என்னைக் கொன்றுவிட்டுப் பிறகு குழம்புவான்” என்ற
பரிதாபத்துடன் கூறிய பெரும்பிடுகர், “தவிர குழந்தாய்! உன் தந்தையை அவன் தூங்கும்போதுதான் கொல்ல முடியும். விழித்திருக்கும் போது முயலாதே. ஒரு விநாடியில் உன்னை வெட்டிப் போடுவான்” என்றார் பெரும்பிடுகு
முத்தரையர்.
“அத்தனை பெரிய வீரனா உங்கள் மகன்?” என்று வினவினான் இளையவேள். அவன் குரலில் பயங்கர ஒலி இருந்தது.
அப்பொழுதுதான் அந்த அறையின் அருகே வந்த மாறன் பரமேசுவரன், “என் வீரத்தைப்பற்றிச் சந்தேகப்படுபவன் யார்?” என்று வினவிக்கொண்டே உள்ளே நுழைந்தான். அங்கிருந்த நிலை கண்டு வாயிற்படியிலேயே அசைவற்று
நின்றான் பல விநாடிகள்.
தந்தையும் மகனும் ஒருவரையொருவர் நோக்கினார்கள். இருவர் கண்களும் பரஸ்பரம் கவர்ந்து நின்றன பல விநாடிகள். பெரும்பிடுகு முத்தரையன் இருவரையும் நோக்கினான் ஒரு முறை. “நீங்களிருவரும் பேசவேண்டியது நிரம்ப
இருக்கும். நான் வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கிளம்ப முயன்றான்.
“நாங்கள் பேசவேண்டியது ஏதுமில்லை. எங்கள் வாட்கள்தான் பேச வேண்டும்” என்று குடியில்லாததால் நிதானத்துடன் பேசிய மாறன் பரமேசுவரன் தனது உறையிலிருந்த வாளை உருவினான்.
எதிரே நிறபவன் தனது தாயின் மரணத்துக்குக் காரணமானவன் என்ற நினைப்பினால் ஏற்பட்ட சீற்றத்தால் இளையவேளும் உருவினான் தனது வாளை.
இந்தப் புதிய திருப்பத்தில் பெரும்பிடுகு முத்தரையன் தலையிடவில்லை. தந்தையும் மகனும் வாளை உருவியதும், சற்றுப் பின்னடைந்து பழையபடி மஞ்சத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்கலானார்.
இருவர்வாட்களும் மோதிய முறையே பெரும்பிடுகனுக்குத் திருப்தியை அளித்திருக்க வேண்டும். “நல்லது! நல்லது!” என்று மகிழ்ச்சிக் குரல் கொடுத்தார் பெரும்பிடுகர்.
அதே சமயத்தில் மாறன் முகத்தில் பெருவியப்பு தெரிந்தது. அதுவரையில் அத்தனை திடமாக அவனது வாளை அவன் தந்தையைத் தவிர வேறு யாரும் தடுத்து நிறுத்தியதில்லை. எதிரே நின்ற இளைய ராட்சஸன் வாள் மிக உறுதியாகவும்,
அலட்சியமாகவும் தனது வாளைத் தடுத்து நிறுத்தியதைக் கையின் நிதானத்திலிருந்தே புரிந்து கொண்ட மாறன் பரமேசுவரன், மகன் வாளைத் தடுத்த நிலையிலேயே திரும்பி தந்தையை நோக்கி “இவன் யார்?” என்று கேள்வியொன்றை
வீசினான்.
அடுத்த கேள்விக்கு இடமில்லை. இளையவேளின் வாள் வேகம் மாறன் வாளை அவன் தலைக்கு மேலே தூக்கி விட்டது. வேறெவனாயிருந்தாலும் இளையவேளின் வாளுக்கு அன்று பலியாயிருப்பான். ஆனால் பல போர்களைக் கண்ட
மாறனுக்கு அது வெறும் விளையாட்டாயிருந்தது. அடுத்த விநாடி இளையவேளின் வாளைத் தனது வாளால் ஒரு திருகு திருகினான் மாறன். அதனால் சற்று அகன்ற இரு வாட்களும் மீண்டும் மோதின; தொடர்ந்து மோதலாயின.
வாட்களின் மோதல் ஒலி பெரும்பிடுகன் காதில் அமுதமென விழுந்தது. பரம உற்சாகத்துடன் பரமேசுவரனுக்கும் இளையவேளுக்கும் தொடர்ந்த வாட்போரைக் கவனித்துக்கொண்டிருந்தார் பெரும்பிடுகர். அந்தச் சமயத்தில் உள்ளே
.
நுழைந்த பணிப் பெண்ணையும், அவர்களுக்கிடையில் தலையிட வேண்டாமென கையின் சைகையால் தடுத்தார்.