Mohana Silai Ch 30 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மோகனச்சிலை – சாண்டில்யன்
அத்தியாயம் – 30. போலிக் கிழவன்
Mohana Silai Ch 30 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
இரண்டாவது முறையாக ஜுர வேகத்தில் இதயகுமாரன் உளற ஆரம்பித்ததும் முத்தரையர் பூபதியான பெரும்பிடுகர் திடீரென அசைவற்று நின்றுவிட்டு பணிப்பெண்ணையும் அறைக் கதவை மூடும்படி உத்தரவிட்டாரென்றால்
அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. “ஆதித்தன்” என்று ஏதோ சொல்ல முயன்ற இதயகுமாரன் மேற்கொண்டு சொற்கள் வராமல் திண்டாடியதும், அவன் மஞ்சத்தின் பக்கத்தில் ஒரு ஆசனத்தை இழுத்துப் போட்டுக் கொண்டு
உட்கார்ந்தார் பெரும்பிடுகர். பணிப்பெண்ணையும் அருகில் வரும்படி கையைக் காட்டினார். வந்த பணிப்பெண்ணை மஞ்சத்தில் உட்கார்ந்து இதயகுமாரன் தலையை லேசாக அழுத்தும்படியும் கட்டளையிட்டார். பணிப்பெண் வாயைத்
திறக்காமல் இதயகுமாரன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவன் தலையை அழுத்திக் கொண்டே சொன்னாள், “ஜுரம் பொறி பறக்கிறது” என்று.
அதற்குப் பதிலேதும் சொல்லாத பெரும்பிடுகர் இதயகுமாரனை உற்றுப்பார்த்துக்கொண்டே இருந்தார். மீண்டும் இதயகுமாரன் இதழ்கள் மெல்ல அசைந்தன. “ஆதித்தா… அபாயம்… உன்… கிழவேஷம் யாரையும்… உம்… ஏமாற்றாது…
ஓடிவிடு” என்ற சொற்கள் ரகசியமாக வெளிவந்தன. சட்டென்று பேச்சு நின்றது சில விநாடிகள். மறுபடியும் துவங்கியது வறண்ட சிரிப்புடன். “முத்தரையர்… அந்த கொலைகாரன் அல்ல… பெரியவர்… மூர்க்கர்தான். இருந்தாலும் நல்லவர்…
அவரை அழித்து எனது சொந்த வீட்டைப் பெறவந்தேன்…” மறுபடியும் அந்த வெறிச் சிரிப்பு வந்தது. “இளையவேள்… வேளாவது மண்ணாங்கட்டியாவது… நமது குடும்பங்களை அழித்தவன் மகன்… அவனைக் கொல்ல ஆசைதான்…
அப்பா… மண்டை பிளக்கிறது” என்று உளறி திரும்பித் திரும்பித் தலையைப் புரட்டினான் இதயகுமாரன். “மாரவேள்… என் கையை ஏன் கட்டினீர்…” என்று கூறியதும் அவன் கண்கள் திறந்தன. பிறகு மீண்டும் மூடிக்கொண்டன.
இதயகுமாரன் சுவாசம் ஒரே சீராக வந்தது.
பணிப்பெண்ணைப் பார்த்து பெரும்பிடுகர் கேட்டார், “இதில் உனக்கு ஏதாவது விளங்குகிறதா?” என்று.
“ஓரளவு புரிகிறது” என்றாள் பணிப்பெண்.
“புரிந்தவரையில் சொல்” என்றார் பெரும்பிடுகர்.
“இவனை யாரோ ஆதித்தன் என்பவன் உள்ளே விட்டிருக்கிறான்…” என்ற பணிப்பெண் வாசகத்தை முடிக்கவில்லை.
“ஆதித்தன் என்பவன் யாரோ இல்லை. சோழ இளைவரசன். விஜயாலயன் மகன்” என்று பணிப்பெண்ணின் சொற்களை இடைபுகுந்து வெட்டினார் பெரும்பிடுகர்.
பணிப்பெண் முகத்தில் வியப்பின் சாயை பெரிதும் படர்ந்தது. “சோழ இளவரசனா?” என்று வினவினாள் குரலில் வியப்பு ஒலிக்க.
“ஆம். கிழவேஷம் பூண்டு இங்கு நமது பிரதான வாசல் காவலரோடு கலந்து உறைந்திருக்கிறான். இதயகுமாரனை உள்ளே அனுப்பியது அவன்தான்” என்றார் பெரும்பிடுகர்.
“அப்படியானால் அவனைச் சிறை செய்தால் என்ன?” என்று கேட்டாள் பணிப்பெண்.
“சாதாரண மனிதர்கள் செய்யக்கூடிய காரியம் அது. அதாவது போரில் வெல்ல முடியாதவர்களின் வழி அது. ஆதித்தன் மகாவீரன். தன்னந்தனியாக இங்கு வந்திருப்பதே அதற்கு அத்தாட்சி” என்றார் பெரும்பிடுகர். பிறகு அவர்
பேசவில்லை. தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். நீண்ட நேரத்திற்குப் பிறகு பணிப்பெண்ணை அழைத்து, “நீ பிரதான வாசலுக்குப் போ. அங்கு அந்தக் கிழவனிருந்தால் அவனை உடனடியாகத் தப்பிச்செல்லும்படி கூறு. இதயகுமாரனுக்கு
எந்த ஆபத்தில்லையென்றும் சொல்” என்று உத்தரவிட்டார்.
அந்த உத்தரவைக் கேட்ட பணிப்பெண் அச்சத்துக்கும் அதிர்ச்சிக்கும் உட்பட்டாள். “முத்தரைய பூபதி! இது…” என்று ஏதோ ஆட்சேபணை துவக்கினாள்.
பெரும்பிடுகர் அவளை நோக்கிச்சொன்னார். “பெண்ணே! ஆயிரம் பேரைத் தனியாகச் சந்திக்கச் சொல் போரில். பெரும்பிடுகன் தயங்கமாட்டான். சிறு படையைக் கொண்டு சோழத் தலைநகர் மீது பாயச் சொல். தயாராயிருப்பான்
பெரும்பிடுகன். ஆனால், துணிந்து வந்து சிக்கிய எதிரி மகனைப் பெரும்பிடுகன் கொன்றான் என்பது சரித்திரத்தில் வரக்கூடாது. கொலை,களவுகளுக்கு அஞ்சுவதல்ல என் சுபாவம். ஆனால், அதிலும் ஒரு நேர்மையுண்டு, கூட்டமான
சூரர்களை எதிர்த்து அடியோடு கொன்று போடலாம். பிறர் பணத்தை சாம்ராஜ்யம் என்ற பெயரால் கொள்ளையடிப்பவனை நாமும் கொள்ளையடிக்கலாம். ஆனால், எதிரி மகனைத் தப்ப விடுவதுதான் நாம் இப்பொழுது
செய்யவேண்டிய வேலை. திரும்ப அவன் வரட்டும் படையுடன், தஞ்சையையும் செந்தலையையும் பெற. அவன் தலையை என் வாளின் ஒரே வீச்சினால் நிலத்தில் உருட்டுவேன்.” இதைச் சொல்லி மௌனமானார் பெரும்பிடுகர்.
பணிப்பெண் ஒரு முறை அவரைக் கூர்ந்து நோக்கினாள். பிறகு அறையைத் திறந்து கொண்டு மறுபடியும் கதவை மூடிவிட்டுச் சென்றாள். தனது அறையிலிருந்து ஒரு பெரிய சீலையை எடுத்து முக்காடாகப் போட்டுக்கொண்டு
வெளியே சென்றாள் பின்புறக் கதவின் வழியாக. அங்கிருந்த படிகளில் இறங்கி நந்தவனத்தில் மறைந்தும் மற்ற
மரக்கூட்டங்களில் நுழைந்தும் வெகுலாகவமாக யார் கண்ணிலும் படாமல் பிரதான வாசலை அணுகினாள். அங்கிருந்த இருகாவலர் அவளை மடக்க, முக்காடிட்ட சீலையை நீக்கி முகத்தைக் காட்டினாள். காவலர் இருவரும் அவளுக்குத்
தலைவணங்கி “நாங்கள் என்ன செய்ய வேண்டும்? கட்டளையிடுங்கள்” என்று பணிவுடன் கேட்க, “உங்களிடம் எனக்கு வேலை எதுவுமில்லை. இங்கு யாரோ ஒரு கிழக்காவலன் புதிதாக வேலைக்கு வந்தானாமே, அவன் எங்கே?” என்று
வினவினான்.
“ஐயோ அவனா!” என்றான் ஒரு காவலன் பீதியுடன்.
“ஏன் அவனுக்கென்ன?” என்று வினவினாள் பணிப்பெண்.
“சுத்த பைத்தியம். சில நாட்களுக்கு முன்புதான் வந்தான். சரியென்று வேலைக்கு வைத்தோம். அவன் பைத்தியமென்பது பிறகுதான் தெரிந்தது. தன்னை மகாராஜா என்கிறான், இளவரசன் என்கிறான். சில வேளைகளில் முரண்டு
பிடித்து அவனே பிரதான வாசலைக் காக்க வேண்டு மென்கிறான்…” என்று காவலன் விளக்கினான்.
“அவன் எங்கே இப்பொழுது?” என்று வினவினாள் பணிப்பெண்.
“அதோ காவலர் அறையொன்றில் அடைத்திருக்கிறோம்” என்றான் காவலன்.
அவனைக் காட்டு” என்றாள் பணிப்பெண்.
எதற்கு அம்மணி?”
“மகாராஜா அவனுக்கு ஒரு வேலை கொடுத்திருக்கிறார்.”
“அவனால் எதுவும் செய்ய முடியாது.”
“அது மகாராஜாவின் தொல்லை. நமக்கென்ன? தவிர, அவர் உத்தரவை எதிர்த்துச் சொல்ல நம்மால் முடியுமா?” என்று வினவினாள் பணிப்பெண்.
காவலன் ஏதோ முணுமுணுத்தான். பிறகு “இப்படி வாருங்கள்” என்று பணிப்பெண்ணை அழைத்துக்கொண்டு சற்று எட்ட இருந்த காவலர் விடுதிகளை நோக்கிச் சென்றான். அங்கிருந்த ஒரு இருண்ட அறையைக்காட்டி, “அறை சாவி
இதோ” என்று ஒரு சாவியையும் பணிப்பெண்ணிடம் கொடுத்தான். “அவன் அறைக்குள் செல்லுங்கள். ஏதாவது அபாயம் நேர்ந்தால் குரல் கொடுங்கள். நான் வந்து அவனை வெட்டிப் போடுகிறேன்” என்றும் கூறிவிட்டுத் திரும்பி
காவலுக்குச் சென்றான்.
“பணிப்பெண் தனது முக்காட்டை நன்றாக இழுத்து மூடிக் கொண்டாள். பிறகு மிகுந்த எச்சரிக்கையுடன் கதவைத் திறந்து உள்ளே சென்றாள். அறை மிகச் சிறியதாயிருந்தது. அதன் மூலையில் வெளுத்த மயிருடன் ஒரு கிழவன்
முடங்கிக் கிடந்தான். மேலேயிருந்த சிறு சாளரத்தின் மூலம் பாய்ந்துவந்த விடியற்கால நிலவுக்கிரணங்கள் அந்தக் கிழவன் மீது விழுந் திருந்ததால் அந்தக் கிழவன் கூனிக்குறுகிப் படுத்திருந்தது அவளுக்கு நன்றாகத் தெரிந்தது.” “சோழ
இளவரசனுக்கு வேஷம் நன்றாகப் பொருந்தியிருக்கிறது” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். பிறகு மெள்ள அழைத்தாள், “ஐயா கிழவனாரே!” என்று.
கிழவனார் பதில் சொல்லவில்லை. இரு முறை இருமினார் லொக்கு லொக்கென்று. உம், உபுக், உபுக்கென்று சில கிழ ஒலிகளையும் கிளப்பினார் உதடுகளின் மூலம். பணிப்பெண் முறுவல் செய்தாள். அடுத்து கிழவன் அருகில் சென்று
குனிந்து, “போலிக் கிழவனாரே! உமது சாயம் வெளுத்து விட்டது” என்று கூறினாள்.
அடுத்த விநாடி அவள் கிழவனின் இரும்புப்பிடியில் இருந்தாள். கிழவனின் இரும்புக் கைகள் அவளைத் தாவிப் பிடித்துக் கட்டி தன் உடலுடன் இணைத்துக்கொண்டன. அப்படியே அவளைத் தரையில் புரட்டி தான் மேலே புரண்டு
அழுத்திய வண்ணம், “ஏய்! வாயைத் திறக்காதே. திறந்தால் கழுத்தை நெரித்துவிடுவேன்” என்றது போலிக்கிழம்.
பணிப்பெண்ணின் நிலைமை பெரும் சங்கடத்திலிருந்தது. தன்மீது சோழ இளவரசனின் உடல் அழுந்திக்கிடந்தது பெரும் வேதனையை அளித்தது அவளுக்கு. ஆதித்தன் முரட்டுப் பிடியால், அணைப்பால் கன்னிவிட்ட மார்பகத்தின்
மூலம் ஊடுருவிய உணர்ச்சிகள் சொல்லத்தர மல்லாததாயிருந்தன.
அதே சமயத்தில் ஆதித்தன் சட்டென்று நிமிர முயன்றான். தன்னை எழுப்பியது ஆணல்லவென்பதும் ஒரு பருவப் பெண் என்பதும் ஸ்பரிசத்தால் புலனானதால் அவளைச் சுற்றிய கைகளைச் சட்டென்று விட்டான். அவள் மீதிருந்து
எழுந்திருக்கவும் முற்பட்டான். இம்முறை பணிப்பெண்ணின் கைகள் அவனை முரட்டுத்தனமாகப் பிடித்துக்கொண்டன. “என்னை முத்தமிடுங்கள், சரசமாடுவதுபோல் நடியுங்கள்” என்றாள்.
“ஏன்? நீ யார்?” என்ற கேள்விகள் ஆதித்தனிடமிருந்து ரகசியமாக வெளிவந்தன.
“நான் பெரும்பிடுகர் பணிப்பெண். நன்றாகக் குனி” என்ற பணிப்பெண் அவன் காதில் ஏதோ ஓதினாள் ரகசியமாக.
ஆதித்த கிழவன் எழுந்தான் மெதுவாக. உடலை நடுக்கியவண்ணம், ‘இத்தகைய அபாய வேலைக்கு நான் எதற்கு? நான் வயதானவன். வேறு யாரையாவது அனுப்பு” என்றான்.
“பிரபுவின் ஆணை. போகாவிட்டால் உன் உயிர் அரைச் காசு பெறாது” என்றாள் பணிப்பெண் கடுமையான குரலில்.
கிழவன் நகைத்தான் பெரிதாக. “சரி, சரி! எங்கு செத்தாலென்ன? போய்வருகிறேன். மாலைக்குள் வராவிட்டால் நான் செத்துவிட்டேனென்று பூபதியிடம் சொல்லிவிடு” என்று கூறிவிட்டு எதையோ தேடினான்.
“என்ன தேடுகிறாய்?” அதிகாரத்துடன் கேட்டாள் பணிப்பெண்.
“எனது வாள்” என்று மீண்டும் அங்குமிங்கும் தள்ளாடி நடந்தான் போலிக்கிழவன்.
“அதோ அந்த மூலையில் இருக்கிறது. எடுத்துக் கொண்டு சீக்கிரம் புறப்படு. இல்லாவிட்டால் பெரும்பிடுகரிடம் சொல்லி உன்னை இப்பொழுதே வெட்டிப்போடுவேன்” என்று சீற்றத்துடன் கூறினாள் பணிப்பெண்.
கிழவன் வாளை எடுத்து இடையில் கட்டிக்கொண்டு தள்ளாடி அறை வாசலைக் கடந்தான். அவனுடன் வெளியேறிய பணிப்பெண், அங்கு தோன்றிய காவலனை நோக்கி, “இவனுக்கு ஒரு புரவியைக் கொடுத்து சீக்கிரம் அனுப்பு”
என்று உத்தரவிட்டாள். காவலன் கொடுத்த முரட்டுப் புரவியில் தத்தி ஏறிய கிழவன், கடிவாளத்தை இழுக்க முயன்ற சமயத்தில் பணிப்பெண்ணின் கரத்தை மாறன் பரமேசுவரன் கரம் வலியப் பிடித்தது. “அந்தக் கிழவனை இறங்கச்
சொல்லுங்கள்” என்ற உத்தரவும் கடுமையுடன் வந்தது. மாறன் பரமேசுவரனின் ராட்சத உருவம் ஆதித்த கிழவனை நோக்கி நடந்தது. பணிப் பெண்ணை இழுத்த வண்ணம்.