Mohana Silai Ch 36 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மோகனச்சிலை – சாண்டில்யன்
அத்தியாயம் – 36. காதலும், வெட்கமும்
Mohana Silai Ch 36 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மறுநாள் அரண்மனையின் மேல் உப்பரிகையிலிருந்த வடக்குப்புறத் தாழ்வரையிலிருந்து சோழர்பெருமான் கோட்டை வாசலை நோக்கிக் கொண்டிருந்தபோதுதான் அந்த விசித்திரம் நிகழ்ந்தது. முதலில் விஜயாலயன் கோட்டை
வாசல் மூலம் வந்த மூன்று பேர் கொண்ட பவனியைக்
கவனிக்கவில்லையென்றாலும் திடீரென்று குழுமிய மக்கள் கூட்டத்தாலும் இரைச்சலாலும் சற்றே தனது சிந்தனையிலிருந்து மீண்டு கோட்டை வாயிற்புறத்தில் கண்களை ஓடவிட்டான்.
அங்கு ஒற்றைப் புரவி பூட்டிய சிறு ரதத்தில் ஒரு மனிதனை யாரோ ஒருவன் தாங்கிப் பிடித்து வர, புரவியின் கயிறுகளைப் பிடித்து ஒரு பெண் ரதத்தை நிதானமாக நடத்தி வந்ததையும், ரதத்தைச் சூழ்ந்த மக்கள் கூட்டத்தை அந்தப்
பெண் அதிகார ஒலிகளால் கலைத்து ரதத்தை அரண்மனையை நோக்கிச் செலுத்தி வந்ததையும் கவனித்த விஜயாலயனுக்கு வருவது யாரென்று புரியாவிட்டாலும் ரதத்தில் படுத்திருப் பவன் நோய்வாய்ப்பட்டவன் என்பதை மட்டும்
புரிந்து கொண்டான்.
தவிர, அந்த ரதம் நேராக அரண்மனைக்கு வந்து நின்றதையும், அப்படி நின்ற மறுவிநாடி அரண்மனையிலிருந்து தனது மகனான ஆதித்தன் வேகமாக ஓடி, வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தேரை ஓட்டி வந்த பெண்ணைத்
தனது இரு கைகளாலும் தூக்கி இறக்கிவிட்டதையும், பிறகு இளவரசனால் ஏவப்பட்ட வீரர்கள் நால்வர் தேரில் படுத்திருந்தவனை அசையாமல் தூக்கி அரண்மனைக்குள் எடுத்துச் சென்றதையும் கவனித்த விஜயாலயன், வந்தது
யாரென்பதை ஓரளவு ஊகித்துக் கொண்டதால் முகத்தில் சிறிது கவலையைக் காட்டினாலும், தனது மகன் வீரர்கள் அனைவரும் பார்க்கும் படியாக தேரோட்டி வந்த பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு வாயிலிலேயே நின்று
சம்பாஷிப்பதைக் கண்டு சிறிது புன்முறுவலும் கொண்டான்.
இத்தனையும் அரண்மனை வாயிலிலேயே நடந்தும் மன்னன் விஜயாலயன் இருந்த இடத்தைவிட்டு நகர்ந்தானில்லை. சற்று. நேரம் கழித்து அச்சுதப் பேரறையர் மேலே வந்து “தங்கள் படைத்தலைவர் திரும்பி விட்டார்” என்று
சொன்னபோது சாதாரணமாகவே தலையசைத்தான்.
மன்னன் தனது சொற்களைச் சாதாரணமாக வரவேற்றதைக் கண்ட முதலமைச்சர் உண்மையை அவிழ்க்கத் தொடங்கி, படைத்தலைவர் படைகளை நடத்தும் முறையில் இல்லை” என்று கூறினார்.
அதற்கும் சாதாரணமாகவே தலையசைத்தான் மன்னன். அதனால் சிறிது பொறுமை இழந்த அச்சுதர் “வேறு விசேஷமும் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
இதற்கு மன்னன் தலையைக்கூட அசைக்கவில்லை. அச்சுதரே தொடர்ந்தார். தஞ்சைப் படையெடுப்பு பல சிக்கல்களில் கொண்டுவிடும் போலிருக்கிறது. இதயகுமாரன் தனியாக வரவில்லை…” என்று இழுத்தார் மந்திரி.
“ஒரு பெண்ணுடன் வந்திருக்கிறான்” என்று மந்திரியின் வாசகத்தை முடித்த மன்னன் மந்திரியை அருகில் அழைத்து “அச்சுதரே! காதல் விவகாரங்களில் உமக்குப் பரிச்சய முண்டா?” என்று வினவினான்.
சமயாசமயம் தெரியாமல் மன்னன் காதலைப் பற்றிப் பேசத் துவங்கியதும், அதுவும் தன்னை வைத்தே அதைப் பற்றிக் குறிப்பிட முற்பட்டதையும் சிறிது குழப்பத்தின் சாயை படர்ந்தது. “மன்னவா! விளையாட்டுக்கு இது சமயமில்லை”
என்றார்.
“உமக்கும் எனக்கும் சமயமல்ல” என்றான் மன்னன்.
“சொல்வது விளங்கவில்லை” என்றார் அச்சுதர்
“இப்படி வாரும்” என்ற விஜயாலயன் தாழ்வரை கைப்பிடிச் சுவருக்கருகில் அமைச்சரை அழைத்து “அதோ பாரும்” என்று கீழே சுட்டிக்காட்டினான்.
கைப்பிடிச் சுவரில் சாய்ந்து கீழே நோக்கிய அச்சுதர் பிரமித்துப் போனார். அங்கு அப்பொழுதும் இளவரசன் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு ஏதோ மிக சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தான். முதலமைச்சர்
மிகுந்த பிரமையுடன் திரும்பினார் மன்னனை நோக்கி, “சோழ தேவா! சோழ நாட்டு இளவரசர் நடத்தை…” என்று துவங்கி அதற்கு மேல் பேச முடியாமல் தவித்தார்.
மன்னனே அவர் உதவிக்கு வந்து, “முறைகேடானது என்று நினைக்கிறீர்?” என்று வாசகத்தை முடித்தான்.
“ஆம்”- முதலமைச்சர் பதில் திட்டமாயிருந்தது.
“அதற்காகத்தான் கேட்டேன், உமக்குக் காதல் விவகாரங்களில் பரிச்சயமுண்டா என்று.” மன்னவன் பேச்சில் சற்று விஷமம் இருந்தது.
“காதலென்றால் தெருவில் யாரும் பார்க்கும்படியாக…” என்றார் மந்திரி.
“காதலுக்கு இடம், பொருள் ஏவல் தெரியாது. சந்தர் பாசந்தர்ப்பங்கள் தெரியாது. உயர்வு தாழ்வு தெரியாது” என்று மன்னன் விளக்கினான்.
“மன்னவா!…”
“மந்திரி”
“என்ன மகாராஜா?
“ராமாயணம் படித்திருக்கிறீரா?”
“எனக்கு ஓரளவு மூன்று நான்கு மொழிகள் தெரியும் என்பது எனது
நம்பிக்கை.”
“வீணாக அடக்கத்தைக் காட்ட வேண்டாம். உமக்கு வடமொழி நன்றாகத் தெரியும். எனக்கும் ஓரளவு தெரியும். ராமாயணத்தில் ரிஷ்யசிருங்கர் என்ற முனிவரைப் பற்றிப் படித்திருப்பீர்…” என்ற விஜயாலயன் புன்முறுவல் கொண்டான்.
அச்சுதர் முகத்தில் சிறிது எரிச்சலைக் காட்டினார். “இப்பொழுது அதைப் பற்றி என்ன?” என்று வினவினார் எரிச்சலின் ஊடே.
“அவர் பிராமணர்” என்று சுட்டிக்காட்டினான் மன்னன்.
“எந்த குலமாயிருந்தால் நமக்கென்ன?” என்று கேட்டார் மந்திரி.
“அவர் மணந்தது பிராமணப் பெண்ணை அல்ல க்ஷத்திரியப் பெண்ணை. ரோமபாத மகாராஜாவின் பெண்ணை. அது கலப்பு விவாகம்” என்று விஜயாலயன் சுட்டிக் காட்டினான்.
“அதனால் என்ன?”-மந்திரி வினவினார் ஏதும் புரியாமல்.
“ராமாயணத்திலேயே அப்படி நடந்திருக்கும்போது நாம் அதைப் பின்பற்றுவதில் தவறில்லை” என்றான் விஜயாலயன்.
“என்ன சொல்கிறீர்கள் மகாராஜா?” என்று வியப்புடன் கேட்டார் மந்திரி.
“உயர்ந்த பிராமணரானவரும் கர்ம நிஷ்டருமான ரிஷ்ய சிருங்கர் அப்படி மணக்கும்போது நாம் முத்தரையருடன் சம்பந்தம் செய்வது தவறாகுமா?”- மன்னன் இப்படியொரு கேள்வியை, அதிர்வெடியை எடுத்து வீசினான் மந்திரி மீது.
மந்திரி திகைத்து நின்றார். “மன்னவா! முத்தரையரை அழிக்க நாம் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறோம்” என்று உணர்ச்சி பொங்கிய குரலில் கூறினார் அச்சுதர்.
சோழர்களின் பெரும் சாம்ராஜ்யத்துக்கு வித்திட இருந்த விஜயாலயன் அப்பொழுதே தான் சாம்ராஜ்யாதிபதியென்பதைக் காட்டினான். “அச்சுதரே! மனிதர்கள் வாழ்க்கையில் அழிவு முக்கியமல்ல” என்றான் நிதானமாக.
“தங்கள் அருமை மனைவியார் சோழர், குலராணியாரின் அழிவுக்குக் காரணமாவர் முத்தரையர்” என்றார் அமைச்சர்.
“முத்தரையர்களில் ஒரு சிலர். முக்கியமாக முத்தரைய பூபதியின் மகன்”
“ஆம்.”
“அவனுக்கும் அவனுடன் வந்தவருக்கும் தண்டனை அளிப்போம்.”
“தண்டனையா!”
“ஆம்; மரண தண்டனை. எந்தக் கத்தியால் என் மனைவி உயிரிழந்தாளோ அதே கத்தியால், என் கையால் அவனை மாய்ப்பேன்” என்று சதாதன் இடையை விட்டு அகலாதிருந்த குறுவாளைத் தட்டிக் காட்டினான் மன்னன். “நமது
நிலங்களைப் பறித்துக் கொண்ட முத்தரையரை முறியடிப்பதும் நமது நோக்கம். அது நடந்தே தீரும். ஆனால், ஒரு சமுதாயத்தின் மீது நமக்கு விரோதமில்லை. சிலர் செய்த பிழைக்காக சமுதாயத்தை நாசம் செய்வது ராஜதர்மமில்லை” என்று
ராஜ நீதியையும் தனது பரந்த மனப்பான்மையும் சுட்டிக்காட்டிய மன்னனைப் பெருவியப்புடனும் அவநம்பிக்கை தாண்டவ மாடிய முகத்துடனும் பார்த்தார் அச்சுதப்பேரறையர். காலம் மன்னன் மன உறுதியை மாற்றிவிட்டதா அல்லது
மகனின் காதல் அதைத் திருப்பி விட்டதா?” என்று உள்ளூர வினவிக் கொண்டார்.
அவர் உள்ளத்திலோடிய எண்ணங்களை மன்னனும் கவனித்துப் புன்முறுவல் கொண்டான். “அச்சுதரே! என் உறுதி எதிலும் தளரவில்லை. சோழ நாட்டைத் துவம்சம் செய்த முத்தரையர் ஒழிக்கப்படுவார்கள் என் மனைவியை
அழித்தவனை நான் அழிக்காமல் விடமாட்டேன். ஆனால், அழிவின் மீது மட்டும் சாம்ராஜ்யங்கள் நிர்மாணிக்கப்படுவதில்லை. நாம் வெற்றிகொள்ளும் மக்களின் அன்பும் ஆதரவும் சாம்ராஜ்யம் நிலைக்கத் தேவை” என்ற மன்னன், “வாரும்
அமைச்சரே! கீழே போய் படைத்தலைவனைப் பார்ப்போம்” என்று கூறி உப்பரிகைப் படிகளில் மந்திரி பின்தொடர இறங்கினான்.
கீழே வந்ததும் அங்கிருந்த காவலன் மன்னனுக்குக் கட்டியம் கூறி, ‘படைத்தலைவர் அந்தப்புரத்திலிருக்கிறார்” என்றான்.
“ஆம் ஆம், அதுதான் படைத்தலைவன் இருக்க வேண்டிய இடம்” என்று சிரிக்காமல் கூறிய சோழவேந்தன், “அமைச்சரே! அந்தப்புரத்துக்குப் போவோமா?” என்று வினவினான்.
மன்னன் தன்னைப் பார்த்து நகைக்கிறானென்பதைப் புரிந்து கொண்ட மந்திரி, சற்று எட்ட நின்றிருந்த மனிதனைப் பார்த்து, “யார் நீர்? இங்கு எதற்காக நிற்கிறீர்?” என்று வினவினார்.
அந்த மனிதன் தலைதாழ்த்தி வணங்கினான் அமைச்சருக்கும் அரசனுக்கும். “அடியவன் முத்தரையர் குல மருத்துவன்” என்றான்.
“இங்கு எதற்காக வந்தீர்?” என்று மந்திரி கேட்டார்.
“சோழர் படைத்தலைவரை ஜாக்கிரதையாகக் கொண்டு வந்து ஒப்படைக்க” என்றான் முத்தரையர் மருத்துவன்.
“அவரைப் பாதுகாக்கத்தான் அவள் வந்தாளே?” என்றார் மந்திரி.
“பெரும்பிடுகர் மகளை அவள் இவள் என்று பேசினால் பெரும்பிடுகர் உங்கள் கண்ணைப் பிடுங்கிவிடுவார். நாவைக் கூட…”
“அறுத்துவிடுவார்!”
“ஆம், சந்தேகமில்லை.”
அச்சுதப்பேரறையர் அதைக் கேட்டுப் பேயறைந்தது போல் நின்றார். பிறகு கேட்டார், முத்தரைய பூபதிக்குப் பெண் ஏது? ஒரே மகன்தானே?” என்று.
“வளர்ப்புப் பெண். சொந்தப் பெண்ணைவிட அதிகமாக நேசிக்கிறார். ஆகவே தாங்கள் தேவியாரை மரியாதையுடன் பேசுவது நல்லது” என்றான் மருத்துவன்.
“தேவியாரா?” அச்சுதர் பிரமித்தார்.
“ஆம். பெருந்தேவியார்” என்றான் மருத்துவன்.
பெருமாள் பெரிய பெருமாளான கதையாவதைக் கண்ட அச்சுதர், வேறெதுவும் பேசாமல் வீரர்களை விளித்து மருத்துவரை அழைத்துச் செல்லுமாறு பணித்தார்.
அணுகிய வீரர்களை எட்ட நிற்கும்படி சைகை செய்தான் மருத்துவன். “எனக்கு எந்த உபசாரமும் வேண்டாம். இப்பொழுதே செந்தலைக்குப் புறப்பட இருக்கிறேன். ஆனால், முதலில் உங்கள் படைத்தலைவர் காயத்தைப் பரிசோதித்து
புதுக்கட்டுப் போடவேண்டும். ரதத்தில் நீண்ட தூரம் பயணம் செய்திருக்கிறார்” என்றான் மருத்துவன்.
.
“சோழ நாட்டில் மருத்துவர்களுக்குப் பஞ்சமில்லை” என்றார் மந்திரி.
“இருக்கலாம். ஆனால், எனக்குக் கடமை இருக்கிறது. படைத்தலைவரைப் பார்க்காமல் நான் நகர முடியாது” என்றான் மருத்துவன்.
“சரி, அவரும் வரட்டும்” என்று மன்னன் அந்த சம்பாஷணைக்கு முடிவு காட்டினான்.
மூவரும் அந்தப்புரத்துக்குள் சென்றதும் பணித்பெண்கள் இளவரசியின் அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர்கள் கண்ட காட்சி மன்னனுக்கு விசித்திரமாயில்லை. மந்திரிக்கும் மருத்துவனுக்கும்
விசித்திரமாயிந்தது. இதயகுமாரன் தலையை மடியில் வைத்தவண்ணம் பஞ்சணையில் உட்கார்ந்து அவன் மார்புக் காயக்கட்டைப் பிரித்துக் கொண்டிருந்தாள் கண்ணழகி. கட்டிலுக்குப் பக்கத்தில் தேவியின் இடையை அணைத்தவண்ணம்
நின்றிருந்தான் ஆதித்தன்.
“வெட்கம் வெட்கம்” என்று முணு முணுத்தார் முதலமைச்சர்.
“காதல் வரும்போது அது குலைந்துவிடுகிறது. வெட்கத்தை அழிப்பது காதல்” என்று அச்சுதர் காதுக்கருகில் முணுமுணுத்தான் விஜயாலயன்.