Mohana Silai Ch 38 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மோகனச்சிலை – சாண்டில்யன்
அத்தியாயம் – 38. குடும்ப விவகாரம்
Mohana Silai Ch 38 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
இதயகுமாரனுக்கும் கண்ணழகிக்கும் இடையே புகுந்த தலை வாளாவிருக்காமல் கண்ணழகியைச் சிறிது முட்டி அகற்றிவிட்டு இதயகுமாரன் தோள் மீது தனது நீண்ட கழுத்தை வைத்து கன்னத்தால் அவன் கன்னத்தை இழைக்கவே,
மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்த இதயகுமாரன் “விஜயா! நீ எப்பொழுது வந்தாய்? எப்படி வந்தாய்?” என்று கேள்விகளைத் தொடுத்ததன்றி அதன் கழுத்தையும் இறுகஅணைத்துக் கொண்டான்.
அந்தப் புரவி வந்ததும் தன்னை அடியோடு இதயகுமாரன் மறந்து விட்டதைக் கண்ட கண்ணழகி கோபமெய்தினாள். தவிர, அதன் கழுத்தை அவன் கட்டிக்கொண்டதும் கொஞ்சியதும் அவள் சினத்தை உச்சக்கட்டத்துக்குக்
கொண்டுபோகவே திரும்பி அரண்மனையை நோக்கி நடக்கலானாள் கண்ணழகி. இதைக் கண்டதும் எட்ட இருந்தவன் சிரிப்பு முன்னைவிட அதிகமாகவே சட்டென்று நின்று எதிரேகண்களை ஓட்டினாள் சோழன் மகள். அங்கு ஆதித்தன்
நின்று நகைத்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவள் அவனை நோக்கி “அண்ணா! உனக்கு உற்சாகம் அதிகமாயிருக்கிறது போலிருக்கிறது” என்று சீறினாள்.
ஆதித்தன் மேலும் நகைத்தான். “அது மனித இயல்பு” என்றும் சொன்னான்.
“எது?” என்று கோபம் சிறிதும் தணியாமலே வினவினாள் கண்ணழகி.
“ஒருவர் உற்சாகம் குறையும்போது இன்னொருவர் உற்சாகம் அதிகப்படுவது” என்றான் சோழ இளவரசன்.
“யார் உற்சாகம் குறைந்து விட்டது இப்பொழுது? எதற்காகக் குறைய வேண்டும்?” என்று கண்ணழகி கேட்டாள்.
“அவரவர் மனத்துக்கே தெரியும்.”
“மறைபொருளாகப் பேசாதே அண்ணா. திட்டமாகத்தான் சொல்லேன்.”
கண்ணழகியின் இந்த வார்த்தையைக் கேட்ட ஆதித்தன் தங்கையை அணுகி அவள் தோள்மீது ஆதரவாகக் கையை வைத்தான். “கண்ணழகி! புரவியைக் கண்டு நீ பொறாமைப்படக்கூடாது” என்று சமாதானமும் செய்ய முயன்றான்.
அவன் சமாதானம் அவள் கோபத்தை மட்டுமின்றி நாணத்தையும் அதிகப்படுத்தவே “புரவியைக் கண்டு நான் ஏன் பொறாமைப்படவேண்டும்?” என்றாள் குரலில் கோபம் ஊடுருவி நிற்க.
“சொன்னால் கோபிக்கமாட்டாயே?” என்று கெஞ்சினான் ஆதித்தன்.
“எனக்கு எந்தக் கோபமுமில்லை, சொல்” என்ற கண்ணழகியின் பதிலில் கோபம் அள்ளித் தெளித்தது.
அதைக் கேட்டதும், குரலின் ஒலியைக் காதில் பூர்ணமாக வாங்கியதும், மிதமிஞ்சிய சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு முகத்தில் போலித் துயரத்தைப் படரவிட்டுக் கொண்ட ஆதித்தன், “படைத்தலைவனுக்குப் புத்தி
போதாது” என்றான்.
“புத்தி போதாதா?”- கண்ணழகியின் கேள்வியில் வியப்பு இருந்தது.
“புத்தி இருந்தால் அப்படிச் செய்வானா?” ஆதித்தன் குரலில் வெறுப்பு தெரிந்தது.
அது போலி வெறுப்பு என்பது அரசகுமாரிக்குத் தெரிந்தேயிருந்தாலும், தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளாமல் வினவினாள் அண்ணனை நோக்கி, “எதைச் சொல்கிறாய்?” என்று.
ஆதித்தன் சிறிது நிதானித்தான் பதில் சொல்லுமுன்பு. பிறகு சொன்னான். என் அழகிய தங்கையிருக்கும் போது போயும் போயும் ஒரு புரவியின் கழுத்தைக் கட்டிக்கொள்வானா, புத்திசாலியாயிருந்தால். இல்லை, குதிரையிடம்
கொஞ்சத்தான் கொஞ்சுவானா? அடே கொஞ்சத்தான் கொஞ்சினான், கோபத்துடன் செல்லும் அரசகுமாரியைக் கவனிக்கக்கூடவா மாட்டான்?” என்று.
இதைக் கேட்ட கண்ணழகியின் கோபம் அதிகமாகவே, “அண்ணா! என்னிடமா விளையாடுகிறாய்?” என்று கேட்டு பக்கத்திலிருந்த ஒரு செடியின் கிளையை உடைத்துக் கொண்டு ஆதித்தனை அடிக்க ஓடினாள். அவளிடமிருந்து தப்ப
ஆதித்தன் ஓடினான். ஓடியவன் புரவியும் இதயகுமாரனும் இருக்கும் பக்கமாக ஓடவே கண்ணழகி வீசிய கிளை இதயகுமாரன் மீது சுளீரென விழுந்தது. அந்த அடியால் சுரணை வரப்பெற்ற இதயகுமாரன் சரேலெனத் திரும்பி, “யாரது?”
என்று சீற முற்பட்டவன் சட்டென்று பேச்சை அடக்கிக் கொண்டான். தன்மீது விழுந்த கிளையைக் கையில் எடுத்துக்கொண்டு தன் பின்னால் பதுங்கிக்கொண்டிருந்த ஆதித்தனையும், எதிரே நின்றிருந்த கண்ணழகியையும் மாறி மாறி
நோக்கினான். “என்ன கண்ணழகி! இதற்கு என்ன அர்த்தம்? இளவரசரை எதற்காகத் துரத்துகிறாய்?” என்று கேள்விகளையும் தொடுத்தான்.
“ஓடுகிறவரைக் கண்டால் துரத்து பவருக்கு எளிது” என்ற பழமொழியைச் சொன்னான் ஆதித்தன்.
ஆதித்தனை உஷ்ணத்துடன் நோக்கினான் இதயகுமாரன். “இளவரசரே! இப்படி ஓடுவது உங்களுக்கு அழகல்ல” என்றான்.
“என் நிலையில் நீ இருந்து பார்த்தால் தெரியும்” என்றான் ஆதித்தன். “தவிர எனக்குப் புரவியுமில்லை” என்றும் சொன்னான்.
“புரவிக்கும் நீங்கள் ஓடியதற்கும் என்ன சம்பந்தம்?” என்று இதயகுமாரன் குழப்பத்துடன் கேட்டான்.
“இதயகுமாரா! நீ செய்த குற்றந்தான் இத்தனைக்கும் காரணம்” என்று ஆதித்தன் சொன்னான்.
இதயகுமாரனுக்கு ஏதும் புரியவில்லை. “என்ன குற்றம் செய்தேன்?” என்று வினவினான்.
“புரவியின் கழுத்தை ஏன் கட்டிக் கொண்டாய்?” என்று ஆதித்தன் கேட்டான்.
“அண்ணா!”-கண்ணழகி எச்சரிக்கைக் குரல் கொடுத்தாள்.
“என் புரவியின் கழுத்தை நான் கட்டிக்கொண்டது குற்றமா? அதன்மீது எனக்குள்ள ஆசை எவ்வளவு என்று தெரியுமா உனக்கு?” என்ற இதயகுமாரன், பக்கத்திலிருந்த விஜயன் கழுத்தின்மீது கையைப் போட்டுக் கொண்டு அதன்
மீது சாய்ந்து நின்றான்.
“குற்றம் இரண்டாகிறது” என்றான் ஆதித்தன்.
“விளக்கிச் சொல் ஆதித்தா.”
“என் தங்கையிருக்கம்போது புரவியின் கழுத்தைக் கட்டிக்கொண்டது முதல் குற்றம். அதன்மீது ஆசை அதிகமிருப்பதாகச் சொல்வது இரண்டாவது குற்றம். உனக்கு இனி மன்னிப்பில்லை.”
அதுவரை பொறுத்திருந்த கண்ணழகி அடுத்து இருந்த பவழமல்லிக் கிளையொன்றை உடைத்து எடுத்துக் கொண்டாள். “உங்கள் இருவரையும் என்ன செய்கிறேன் பாருங்கள்” என்று இருவரையும் நோக்கி வந்தாள்.
இம்முறை இளவரசன், படைத்தலைவன் இருவருமே ஓட ஆரம்பித்தார்கள். அவர்கள் ஓடுவதைப் பார்த்த விஜயன் மட்டும் நின்ற இடத்தை விட்டு அகலாமல் தனது பற்களை நன்றாகத் திறந்துகாட்டிக் கனைத்து நகைத்தது. ஓட்டப்
பந்தயத்தில் சேர்ந்துவிட்டது போல் ஓடிய இளவரசனும் இதயகுமாரனும் கண்மண் தெரியாமல் ஓடியதால் ஒரு பெரிய தடையில் முட்டிக் கொண்டார்கள். அவர்கள் தோள்களைப் பிடித்து நிறுத்திய விஜயாலயன், அவர்களைப் பவழமல்லிக்
கிளை கொண்டு துரத்திய கண்ணழகியைப் பார்த்துப் புன்முறுவல் கொண்டான். பிறகு தனது மகனையும் படைத்தலைவனையும் தனது இரும்புப் பிடியிலிருந்து விடுதலை செய்துவிட்டு, “உங்கள் மூவருக்கும் இன்னும்
விளையாட்டுப் புத்தி போகவில்லை” என்று கூறினான் புன்முறுவலின் ஊடே.
மூவரும் பேசவில்லை. அரசன் பக்கத்திலிருந்த இரு ஆண் சிங்கங்களும் தலை குனிந்து நின்றன மௌனமாக. எதிரேயிருந்த கண்ணழகி பூமியில் கட்டை விரலால் கோடு போட்டாள் தலைகுனிந்தவண்ணம். சிறு குழந்தைகளாக
இப்படித்தான் இதயகுமாரனும் ஆதித்தனும் ஓடுவார்கள். வயது வந்தும் இவர்களுக்குப் பழைய புத்தி போகவில்லை. போதாக்குறைக்கு நீயும் சேர்ந்துவிட்டாய் கண்ணழகி” என்று அரசன் கண்ணழகியின் கையிலிருந்த பவழமல்லிக்
கிளையை நோக்கினான். “அதை இப்படிக் கொடு. இவர்களை வீறி விடுகிறேன்” என்று சொல்லி கையையும் நீட்டினான்.
கண்ணழகி கிளையைக் கீழே போட்டாள். “இவர்களை அடிக்க இதை உடைக்கவில்லை” என்று பொய் சொன்னாள்.
“எதற்காக உடைத்தாய்?” என்று கேட்டான் சோழ தேவன் புன்சிரிப்புடன். பிறகு நந்தவனத்தின் புல்தரையில் உட்கார்ந்து மூவரையும் உட்காரச் சொல்லி, ‘சரி, இந்த வழக்கை விசாரித்து ஒரு முடிவு செய்கிறேன்” என்று கூறினான்.
மன்னன் தங்களைப் பார்த்து நகைக்கிறான் என்பதை மற்ற மூவரும் புரிந்து கொண்டதால் ஏதும் பேசமாலிருக்கவே “மன்னன் கேட்டான் கோபம் மிகுந்த குரலில் “இந்தக் குற்றத்தைத் துவங்கியது யார்? யார் வாதி?” என்று.
“அதைக் கேட்டுப் பயனில்லை” என்றான் ஆதித்தன் மெதுவாகத் தலை நிமிர்ந்து.
“ஏன்?” என்று மன்னன் கேட்டான்.
“வாதி ஒரு…’“ ஆதித்தன் இழுத்தான்.
“ஒரு…”
“புரவி.”
“புரவியா!”- மன்னன் குரலில் வியப்பு இருந்தது.
“ஆம். வேண்டுமானால் இளவரசியாரைக் கேளுங்கள்” என்றான் ஆதித்தன்.
“அண்ணா!”-சீறினாள் கண்ணழகி.
“மன்னர் முன்பு நாம் உண்மையைச் சொல்ல வேண்டும். வழக்கு விஷயத்தில் மன்னர் – மகள், மகன் என்று உறவு முறையைக் கவனிக்க மாட்டார்” என்று ஆதித்தன் கண்டிப்பான குரலில் சொன்னான்.
கண்ணழகி எழுந்திருக்க முயன்றாள். “உட்கார். வழக்கு முடிந்து நான் தீர்ப்புச் சொல்லும் வரை யாரும் எழுந்திருக்கக் கூடாது” என்று அரசன் உத்தரவிட கண்ணழகி உட்கார்ந்து தரையை நோக்கினாள். தன் ஆள்காட்டி விரலால்
புல்லைப் பெயர்க்கலானாள்.
“கண்ணழகி! நடந்தது என்ன?” என்று வினவினான் மன்னன்.
இதற்கு இதயகுமாரன் பதில் சொன்னான். “விஜயனை நான் சில நாட்களாகக் காணவில்லை. செந்தலையில் விட்டிருந்தேன். எப்படி வந்தானோ தெரியவில்லை. வந்ததும் அன்பு காட்டி நான்…” என்று வார்த்தையை முடிக்காமல் விட்டான்
படைத்தலைவன்.
“அதில் என்ன தவறு?” என்று விஜயாலயன் கேட்டான்.
“விஜயன் மட்டும் அன்பு காட்டவில்லை” என்று இடை புகுந்தான் இளவரசன்.
“வேறு யார் காட்டியது?”
“படைத்தலைவர்.”
“யாரிடம்?”
“அப்படிக் கேளுங்கள். காட்ட வேண்டியவரிடம் காட்டவில்லை. விஜயன் கழுத்தைக் கட்டிக்கொண்டார். அதனால் ராஜத் துரோகத்துக்கு ஆளானார்.”
ஆதித்தன் சொன்னதைக் கேட்ட விஜயாலயன் “ராஜத் துரோகமென்று சொல்” என்றான்.
“இல்லை. ராஜத்துரோகந்தான். ராஜாவுக்குத் துரோகம் செய்வது ராஜத்துரோகம். அதுவே பெண்பாலானால் ராஜித்து ரோகம்” என்ற ஆதித்தன் நகைத்தான். மன்னனும் உடன் நகைத்தான்.
அந்தச் சமயத்தில் அங்கு தோன்றிய அச்சுதப் பேரறையர் “இங்கு என்ன நடக்கிறது?” என்று கேட்டார்.
“நீதி விசாரணை” என்றான் விஜயாலயன்.
.
“நீதி விசாரணையை முதலில் அமைச்சரல்லவா நடத்த வேண்டும்?” என்றார் அச்சுதர் குழப்பத்துடன்.
“இந்த விசாரணையை நீர் நடத்த முடியாது” என்றான் மன்னன்.
“ஏன்?”
“இது குடும்ப விவகாரம். தவிர…”
“தவிர…”
“அமைச்சரே…” என்று அரசன் தயங்கினான்.
“என்ன மன்னவா?” என்று அச்சுதர் கேட்டார்.
“குதிரையை விசாரிக்கத் தெரியுமா உமக்கு?” என்று வினவினான் மன்னன்.