Mohana Silai Ch 40 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மோகனச்சிலை – சாண்டில்யன்
அத்தியாயம் – 40. அமைச்சர் ஒரு சனியன்
Mohana Silai Ch 40 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
செடிகளும் கொடிகளும் அளித்த மறைவில், கீழே இயற்கை விரித்து விட்ட சக்கர வட்ட பசும்புல் மரகதப்பாயில் படுத்துக்கிடந்த சோழன் பைங்கிளியைச் சற்றே தூக்கிச் சுற்றி வளைத்து நொறுக்கிவிட்ட இதயகுமாரன், அந்தப்
பைந்தளிர் மேனிக்கு வலித்துவிடுமோ என்ற அச்சத்தால் தனது இடது கையால் அவள் உடலை மட்டும் தாங்கி வலது கைக்கு விடுதலையளித்தான். விடுதலை சாதாரணமாக நல்லதுதான். நல்லவர்கள் கையில் அது அமுதம், அது அல்லவர்
கையில் துன்பம் விளைவிக்கும் கடுமையான கருவி. பிந்திய வர்க்கத்தைச் சேர்ந்ததாயிருக்க வேண்டும் அந்த வாலிபனின் வலது கை. அது செய்யத் துவங்கிய துஷ்டத்தனத்தால் பெரும் இம்சைக்கு உள்ளானாள் கண்ணழகி.
இடது கையால் தூக்கப்பட்டிருந்த அவள் சந்திர பிம்ப முகத்தின் வழவழத்த கன்னத்தை அவன் கை மிக மெதுவாகத் தடவியது. இத்தனைக்கும் அவன் முகம் கன்னத்தைக் காணவில்லை, கண்கள் திண்ணிய மார்பில் புதைந்திருந்த
காரணத்தால். உணர்ச்சிகள் புரளும்போது கண்கள் தேவையில்லையென்பதை அடுத்த நிகழ்ச்சிகள் நிரூபித்தன. கன்னத்தில் பதிந்து தடவிய கை பிறகு கழுத்திலும் இறங்கி அதில் தேங்கி நின்றது சில விநாடிகள். பிறகு அந்த வெண்சங்கை
விட்டு அகன்று அவள் அழகிய இடது தோளின் மீத பதிந்து அதை நொறுக்கிப் பிடித்தது.
அந்த முரட்டுக்கையின் பிடிப்பு பெரும் வேதனையைத் தந்தாலும் அந்த வேதனை அவளுக்கு வேண்டியே இருந்தது. ஆனால், அளவுக்கு மீறி துன்பப்படுத்திவிட்டோமோ என்ற நினைப்பில் அந்தக் கை அதே தோளை வருடி
சாந்தப்படுத்தி விட்டு முதுகில் தவழ்ந்தது பலவிடங்களில். முதுகில் தவழ்ந்த கை கீழிறங்கி தோளுக்கு அளித்த தண்டனையை இடைக்கும் அளித்ததாலும், பிறகு அத்துமீறி அங்கிருந்தும் இறங்க முயன்ற தாலும் கண்ணழகி இன்பப்
பெருமூச்சு விட்டாள். “உம்” என்ற உஷ்ண ஒலியை உதிர்த்தாள். அவள் தேகம் லேசாக நெளிந்து புரண்டது. இதயகுமாரன் மெள்ளத் தலையைத் தூக்கி, “என்ன கண்ணழகி?” என்று விசாரித்தான்.
“ஒன்றுமில்லை” என்றது அவள் உதடுகள். அவள் ஒரு கை பின்னழகில் பதிந்து கிடந்து அவன் கையை நெருங்கிப் பிடித்து அகற்ற முயன்றது. ஆனால் அந்த முயற்சியே அந்தக் கையின் துஷ்டத்தனத்தை மிகப்படுத்தியது. பிடித்த அவன்
கையை அவன் கையும் திரும்பப் பற்றியது. அகற்ற முயன்றது அவள் கை. இருப்பிடத்தை விட்டு நகர மறுத்தது அவன் கை. இந்தக் கைகளின் போராட்டத்தில் அவள் கை பலவிடங்களில் பட்டுவிடவே அவள் உணர்ச்சி அலைகளில்
கொந்தளித்தாள். பிறகு சட்டென்று அவனிட மிருந்து விலகி தரையில் படுத்து விடவே தரைக்கும் திண்ணிய எழிலுக்கும் இடையே சிறைப்பட்ட அவன் கைக்குக் கிட்டியது சொர்க்கம். சிறிது நேரத்திற்குப் பிறகு கையை
விடுவித்துக்கொண்ட இதயகுமாரன், “கண்ணழகி!” என்று மெதுவாக அழைத்தான்.
“என்ன கண்ணழகிக்கு?” போலி எரிச்சலுடன் எழுந்தது அவள் கேள்வி.
“உன் உடல் ஒரு பூஞ்சோலை” என்ற இதயகுமாரன் தனது கைகளில் ஒன்றால் அவள் பாதத்தைப் பிடித்தான்.
கண்ணழகியின் தாபம் மிகுந்த விழிகள் இதயகுமாரனை நோக்கின. “நீங்கள் அசடாகிவிட்டீர்கள்” என்றாள் அவள் நகைத்து.
“எப்படி அரசகுமாரி?” இதயகுமாரன் அவள் கண் வருடன் தனது கூரிய விழிகளைக் கலந்தான்.
“பூஞ்சோலையென்று சற்று முன்புதான் சொன்னீர்கள்.”
“ஆமாம்.”
“திரும்பவும் சொல்கிறீர்கள்.”
“ஆயிரம் தடவை சொல்வேன்.”
“சொன்னதைத் திரும்பச் சொல்வது அசட்டுத்தனம்”
இதயகுமாரன் அவள் காந்தக் கண்களை நோக்கினான், அழைப்பை விடுத்த கன்னங்களை நோக்கினான், கழுத்தையும் நோக்கினான். அவளை நோக்கி நன்றாகக் குனிந்தான். “அரசகுமாரி” என்று ரகசியமாக அழைத்தான்.
“உம்.”
“தெய்வத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள்.”
“ஆம்.”
“அதில் நூற்று எட்டு தடவை உண்டு.”
“ஆமாம்.”
“ஆயிரத்து எட்டும் ஒன்று.”
“உண்டு.”
“திரும்பத் திரும்ப அதே அர்ச்சனையைச் செய்கிறார்கள்.”
“ஆமாம்.”
“அதை அசட்டுத்தனம் என்று சொல்லமுடியுமா?”
இதைக் கேட்ட கண்ணழகி அவன் கண்களுடன் தன் கண்களை நன்றாகவே உறவாடவிட்டாள். “படைத்தலைவரே!” என்று மெதுவாக அழைத்தாள்.
“சொல் கண்ணழகி” என்று அவனது உதடுகள் முணு முணுத்தன.
“நன்றாக அர்ச்சனை செய்கிறீர்கள்” என்ற கண்ணழகி மதுரமாக நகைத்தாள்.
“இல்லை” என்றான் படைத்தலைவன்.
“என்ன இல்லை?”
“ஆயிரந்தடவை அர்ச்சனை செய்யவில்லையே.”
அரசகுமாரி இளநகை காட்டினாள், இரண்டு முத்துக்கள் மட்டும் தெரியும் அளவுக்கு. கெம்புப்பட்டைகளின் இடையே முத்துக்கள் பதிக்கப்பட்டால் இதைவிட அழகாயிருக்க முடியாது என்று எண்ணினான் இதயகுமாரன். “செவ்விய
நீரோட்டமுள்ள இதழ்கள் எத்தனை அரிய முத்துக்களை மறைத்து வைத்திருக்கின்றன?” என்று உதடுகளிடம் கோபமும் கொண்டான். அவற்றுக்குத் தண்டனை கொடுத்தால் என்ன?” என்றும் தனக்குள் கேட்டுக்கொண்டான். அவன்
சித்தத்தில் கனவு சுழல்வதைக் கண்களில் கண்டாள் கண்ணழகி. “உம்… யோசனை இங்கில்லை” என்றும் சொன்னாள் மெதுவாக.
இதனால் திடீரென எழுப்பப்பட்ட படைத்தலைவன் “அரசகுமாரி! அர்ச்சனை போதவில்லையா?” என்று அவள் கழுத்தை நெருக்கினான்.
“எந்த அர்ச்சனையைச் சொல்கிறீர்கள்?” என்று அவள் கண்களை மூடியவண்ணம் கேட்டாள்.
“எதை ஆயிரந்தடவை செய்யவில்லை என்று சொன்னாய்?” என்ற படைத்தலைவன் உதடுகள் கழுத்திடம் அடைக்கலம் புகுந்தன.
அவள் பதில் சொல்லவில்லை. கண்களும் இதழ்களும் மூடிக்கிடந்தன. ஒருமுறை இதழ் மட்டும் விரிந்து அடிஇதழ் மடிந்து முத்துப் பற்களில் படிந்து ஏதோ வேதனையைப் புலப்படுத்தியது. “உம் உம்” என்று இருமுறை முனகினாள்
அரசகுமாரி.
இதயகுமாரன் அந்த ஒலிகளைக் கேட்டான். அவள் கண்களும் மூடிக் கிடந்தன. உதடுகள் கழுத்தில் அழுந்திக் கிடந்தன். “கண்ணழகி! கண்ணழகி!” என்ற சொற்கள் தழு தழுத்து வந்தன.
“உம்உம் – அவள் – பதில்கள் உங்கார ஒலிகள்
இருவர் புறக்கண்களும் மூடிக்கிடந்ததால் அகக்கண்கள் விழித்துக் கொண்டன. விழித்ததால் விளைந்தது வெட்கம்.
வெட்கத்தால் நிலை சிறிது குலைந்தது. மெள்ள அவன் மட்டும் கண்களைத் திறந்தான். அவள் மார்பு மீது தான் சிருஷ்டித்த மரமல்லி மலர்ச் சூரியன் கலைந்து கிடந்தான். அவள் மனமும் அப்படித்தான் கலைந்துவிட்டது, அவள் உறுதி
குலைந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டான் அந்த வாலிபன்.
அந்த மலர்களில் ஒன்றை எடுத்து காம்பொன்றைக் கிள்ளினான் பாதிவரை. பிறகு வாயில் வைத்து ஊதினான். அது வெளியிட்ட மெல்லிய சப்தம் கண்ணழகியின் செவிக்கு அமுதமாயிருந்தது. மெள்ள அவள் மூடியிருந்த கண்களை
விழித்து அவனை நோக்கினாள். “என்ன சிறுபிள்ளைத்தனம் இது?” என்று கேட்டாள், அவன் வாயில் இருந்த மரமல்லி மலரைப் பார்த்து.
“சிறுபிள்ளை முதல் இந்தப் பழக்கம் உண்டு.”
“அப்படியா!”
“இதே அரண்மனை நந்தவனத்தில் இதே மரவல்லி மலர்களின் காம்பை வைத்துக் குழல் மாதிரி ஊதியிருக்கிறேன். இத்தகைய ஒரு ஒலியைக் கிளப்ப இந்த மலரால்தான் முடியும்” என்று விளக்கினான் அவன்.
“குழல் ஊதுகிறீர்களா?” என்று அவள் நகைத்தாள்.
“ஆம்” என்று அவனும் நகைத்தான்.
“கண்ணன் என்று நினைப்போ?”
“எதற்குக் கேட்கிறாய்?”
“கண்ணன் குழல் ஊதினால் சகல ஜீவராசிகளும் மயங்கும் என்று ஆழ்வார் பாடியிருக்கிறார்.”
“எல்லா ஜீவராசிகளையும் மயக்க நான் இஷ்டப்படவில்லை.”
“ஏன்?”
“ஒரு ஜீவராசி போதும் எனக்கு.”
“ஏனோ?”
“கிருஷ்ணனைப் போல் ராஸக்கிரீடை நடத்த என்னால் முடியாது.”
கண்ணழகி அவனை நோக்கினாள். புன்முறுவல் கொண்டாள். முடிந்தால் நடத்துவீர்கள் போலிருக்கிறது?” என்று கேட்டாள் புன்முறுவலின் ஊடே.
இதயகுமாரன் அவனைக் கூர்ந்து நோக்கினான் கண்களிலிருந்து கால்வரை. “கண்ணழகி” என்று அழைத்தான் முடிவில். அவனே தொடர்ந்து பேசினான். “உன் கேள்விக்கு இடமில்லை” என்று.
“என்ன என் கேள்விக்கு?” என்று கேட்டாள் கண்ணழகி.
“கண்ணன் ராஸக்கிரீடை செய்தால் அவன் சுதந்திரன்” என்றான் இதயகுமாரன்.
“நீங்கள்?”
“அடிமை.”
“அடிமையா!”
.
“ஆமாம்; பல விலங்குகள் பூட்டப்பட்டிருக்கின்றன எனக்கு.”
“விலங்குகளா!”
“ஆமாம். இதோ, இதோ, இதோ” என்று அவள் உடலின் அழகிடங்களை லேசாகத் தொட்டுக் காட்டினான்.
“அரசகுமாரி சங்கடத்தால் அசைந்தாள். “நீங்கள் பெரிய போக்கிரி” என்றாள்.
“போக்கிரியாக அடித்தது நீ” என்றான் படைத்தலைவன்.
“இன்னும் போக்கிரியாக அடித்தால்?”
“விளைவுக்கு நான் பொறுப்பாளியல்ல.”
“என்ன விளைந்துவிடுமாம்?”
“அரசகுமாரி! என்னைத் தூண்டாதே!” என்ற அவன் சொற்களில் வேட்கை மூட்டிய துன்பமும் இன்பமும் கலந்து ஒலித்தன.
“பாவம்!” என்று பரிதாபச் சொற்களை உதிர்த்தாள் அரசகுமாரி. மேலும் பேசியிருப்பாள், அழகிய அவள் உதடுகள் அவள் வசத்திலிருந்திருந்தால்.
அந்த சமயத்தில் வெளியிலிருந்து வந்தது அமைச்சரின் குரல், “படைத்தலைவரே, படைத்தலைவரே!” என்று. “எங்கிருக்கிறீர்கள்?” என்று கேள்வியும் பிறந்தது சற்று இரைந்து.
“இந்த அமைச்சர் பெரிய சனியனாகிவிட்டார்” என்று சபித்துக்கொண்டே எழுந்து நின்றான் இதயகுமாரன்.
அவன் சினத்தைக் கண்டு கண்ணழகி மிக இன்பமாக நகைத்தாள்.