Mohana Silai Ch 50 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மோகனச்சிலை – சாண்டில்யன்
அத்தியாயம் – 50 மகாவீரன் மரணம்
Mohana Silai Ch 50 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
செந்தலைக்கு வெளியே இருந்த பெரிய நிலப்பரப்பில் நின்றிருந்த விஜயாலயன் பெரும்படைப் பிரிவை, மூன்று பிரிவுகளாக, அல்ல மூன்று புயல்களாக வந்த பெரும்பிடுகு முத்தரையரின் வாயுவேகக் குதிரைப்படை வெகு
சீக்கிரத்தில் ஊடுருவியதைத் தவிர, அக்கம்பக்கமிருந்த சோழ வீரர்களையும் வெட்டிச் சாய்க்கத் தொடங்கிற்று. எதிரியின் படை அம்புபோல் நடுவில் ஊடுருவும், அதை ஊடுருவவிட்டு இரு பக்கம் அதைத் தாக்கலாம் என்று கணக்குப்
போட்டிருந்த விஜயாலயனுக்கு இந்த மூன்று அம்புத் தாக்குதல் எதிர் பாராத தாயிருந்தாலும், போரின் நுட்பங்களை அணு அணுவாக உணர்ந்திருந்த சோழ தேவன் திடீரென தனது சங்கை மும்முறை ஊதினான். வாளையும் உயரத்
தூக்கி மும்முறை ஆட்டினான். கையிலிருந்த வேலையும் பலமாக ராட்சதன் போல் தனது வீரர்களை வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்த மாறன் பரமே சுவரன் மீது எறிந்தான். வேல் குறி தவறாமல் மாறன் வலது தோள்மீது பாய்ந்து
விட்டதால் மாறன் வாள் கை தொங்கிவிட்டது. வாளும் நிலத்தில் விழ இருந்தது. வாளை இடது கைக்கு மாற்றிக்கொண்ட மாறன் அந்தக் கையாலும் போரிடலானான்.
அதே சமயத்தில் விஜயாலயன் வாள்வீச்சுக் குறிப்பை அறிந்த புரவிப் படை, திடீரென மூன்றாகப் பிரிந்து, நடுவிலிருந்த காலாட்படையை ஊடுருவிட்ட எதிரியின் மூன்று பிரிவுகளையும் நேருக்கு நேர் சந்தித்தது. போர்
மும்முரமாகியது. நன்றாக சாஸ்திர ரீதியில் பயிற்சியளிக்கப்பட்டிருந்த விஜயாலயன் புரவிப்படை எதிரியை விட்டு திடீரெனப் பக்கவாட்டில் ஒரே முகமாக நகர்ந்தும் பிறகு திடீரென சுவர் போல் நெருங்கித் தாக்கியும் எதிரி பிரமிக்கும்
வண்ணம் போரிட்டது.
இப்படி புரவிப்படை மூன்றாகப் பிரிந்து எதிரியைச் சமாளித்துவிட்டதால், சோழன் காலாட்படையினர் மண்டியிட்டு உட்கார்ந்து எதிரி புரவிகளின் வயிறுகளைக் குறித்து வேல்களை எய்தார்கள். அதே விநாடிகயில் ஏதோ
சொல்லிவைத்தாற் போல் தூரத்தில் சக்கர வட்டமாக நின்றிருந்த ரதப்படை நகர்ந்து அவற்றிலிருந்த வில்லவர் விற்களை வளைத்து எதிரி வீரர்களை நோக்கி எய்தார்கள். காலாட்படையினர் வேல்களால் தாக்கப்பட்ட புரவிகள்
மரணகர்ஜனையிட்டு நிலத்தில் வீழ்ந்தன. அவற்றில் ஆரோகணித்திருந்த முத்தரைய வீரர்கள் நிலத்தில் குதிக்கு முன்பு சோழ ரத வீரர்களின் அம்புகள் அவர்கள் மீது பாய்ந்ததால் சிலர் செயலிழந்தார்கள், சிலர் மார்பில் பாய்ந்து விட்ட
கணைகளால் மாய்ந்து விழுந்தார்கள்.
ரணகளத்தில் எங்கும் வீரர்களின் வீரகோஷமும், புரவிகளின் மரணக்கூச்சலும் ஆயுதங்களோடு ஆயுதங்கள் மோதும் பயங்கர ஒலிகளும் போர்க்களத்தில் விபரீத சங்கீதத்தை விளை வித்துக்கொண்டிருந்தன. எதிரிப் படைகளுக்கு
நடுவே புகுந்து போரிட்டுக் கொண்டிருந்த விஜயாலயனும், ஆதித்தனும் தங்கள் படை அணிவகுப்பும், பிரிந்து தாக்கிய தந்திரமும் எதிரியை அசைக்கவில்லையென்பதைப் புரிந்துகொண்டார்கள். இன்னொரு பகுதியில் தனது
புரவிப்படையை முன்னேற்றிக் கொண்டிருந்த இதயகுமாரனைத் தூரத்திலிருந்து கண்ட விஜயாலயன், மாறனை தனது படைத்தலைவன் நெருங்கி விட்டதையும், இருவரும் தனித்தனியாகப் போரிடுவதையும் கண்டு அந்த இடத்துக்குத்
தானும் விரைய முற்பட்டு வாளை பயங்கரமாகச் சுழற்றி எதிரிலிருந்தவர்களை வெட்டி சாய்த்துக்கொண்டு முன்னேறினான்.
இதைக் கண்ட பெரும்பிடுகு முத்தரையர் பலமாகச் சிங்கநாதம் செய்தார். தமது படைகளைச் சட்டென்று ஒருபுறம் திருப்பி விஜயாலயனை நோக்கி விரைந்தார். பெரிதாக மும்முறை, “ஹோ!ஹோ!” என்று முழங்கினார். அந்த ஒவ்வொரு
முழக்கத்துக்கும் அவர் படைப்பிரிவு அசைந்தது, எதையும் நசுக்கும் தேர்ச் சக்கரம் போல. பெரும்பிடுகரே அந்த ரணகளத்தில் ராட்சதன் போலிருந்தார். அவர் வாள் சுழற்றலுக்கு முன்னால் நிற்க முடியாத சோழ வீரர்கள் அவரை விட்டுத்
தப்பிக்க முயன்றார்கள். புறமுதுகு காட்டாவிட்டாலும் சிலர் பின்னால் நகர்ந்தார்கள். பலர் மாய்ந்தார்கள்.
ராமாயணப் போரில் கும்பகர்ணன் போரிட்டபோது வானர வீரர்கள் இப்படித்தான் ஓடியிருக்க வேண்டும் என்று நினைத்தான், தூரத்திலிருந்த விஜயாலயன் அவரைப் பார்த்து. களப்பிரர் முதலில் தமிழகத்தில் நுழைந்தபோது எத்தனை
வேகத்துடன் நுழைந்திருப்பார்கள் என்பதையும் பெரும்பிடுகர் போரிலிருந்து விஜயாலயன் புரிந்து கொண்டான். போர் முற்றிவிட்ட சமயத்திற்குள் புரிந்துகொண்டான். போர் முற்றி விட்ட சமயத்திற்குள் அவர் தோளில் இரண்டு
அம்புகள் பாய்ந்திருந்தன. உடலில் இரு கத்திகள் பாய்ந்திருந்தன. அந்தக் காயங்களிலிருந்து குருதியும் வந்து கொண்டிருந்தது. அத்தனையையும் பெரும்பிடுகர் லட்சியம் செய்யவில்லை. தைத்த அம்புகளைப் பிடுங்கி எறிந்தார் இடது
கையால், அதிலிருந்த வேலை விடாமலும், வலது கை வாள் சுழற்றலை நிறுத்தாமலும்.
அவரைச் சுற்றிலும் சோழ வீரர்கள் மடிந்து கொண்டிருந் தார்கள். இருப்பினும் முத்தரைய ராட்சதர் அதைப் பற்றி லட்சியம் செய்யவில்லை. போரின் அநீதிகளைத் தடுக்க முடியாதென்று தமது பெரும் புரவியை முன்னால் தூண்டினார்.
அதைக் கவனித்த இதயகுமாரன், மாறனை விட்டு அவரை நோக்கித் திரும்பினான். சோழர் படையின் எண்ணிக்கை பலத்தாலும், விஜயாலயன் சாஸ்திரீய அணிவகுப்பாலும் போராலும் முத்தரையர் படையில் பாதி அழிந்து போயிற்று.
இனி தமது படையின் கதி அதோகதிதானென்பதைப் புரிந்து கொண்ட பெரும்பிடுகர் தமது போரைக் கடுமைப்படுத்தினார். வேல் கையிலிருந்த தமது புரவியின் சேணத்தை உதறிவிட்டு வலது கை வாளினாலும் இடது கை வேலாலும்
எதிர்ப்பட்டவரை மாய்க்க துவங்கினார். அவரை நோக்கி வந்த இதயகுமாரன் அவர் போர்த்திறமையைக் கண்டு வியந்து நின்றான் ஒரு விநாடி. பிறகு அவரை நெருங்கலானான்.
பெரும்பிடுகரின் போர் இத்தனை மூர்க்கமாகவும் அசாஸ்திரியமாகவும் இருந்ததென்றால், மாறன் பரமேசுவரனை நோக்கிச் சென்ற விஜயாலயன், போரிலும் கலை உண்டு என்பதைக் காட்டினான். அனாயசமாக அவன் கையில்
லாவகமாகச் சுழன்ற வாள் யாரையும் வெட்டவில்லை. பக்கவாடடிலும் எதிரிலும் ஏதோ சிலம்பம் போல் சுழன்று எதிரி வீரர்களின் ஊட்டிகளில் பாய்ந்து கொண்டிருந்தது. அவன் வாள் எப்பொழுது பாய்கிறது, என்ன செய்கிறது
என்பதை அறியு முன்பு வீரர்கள் மாண்டு விழுந்துகொண்டிருந்தார்கள். மாறனை வெகு சீக்கிரம் நெருங்கிவிட்ட விஜயாலயன் திடீரென ராட்சதனாக மாறினான். அவன் கண்முன்பு அவன் மனைவியின் பிணமிருந்த கோரக் காட்சி
எழுந்தது. அவள் மீது தான் செய்த சபதம் எழுந்தது. அந்த வேகத்தில், அந்த உணர்ச்சியில் திடீரென தனது வாளை மாறன் கழுத்தில் பாய்ச்சிப் பாய்ச்சி இரு முறை இழுத்துவிட்டான். மாறன் நிலத்தில் விழுந்தான் பெரும் சத்தமிட்டு.
மகன் விழுந்ததைத் தூரத்திலிருந்து கவனித்த பெரும்பிடுகர் கண்களை அந்தப் பக்கம் ஒரு முறை ஓடவிட்டார். பெரிதாக ஒரு முறை வீரக் கூச்சல் கூவினார். அடுத்த விநாடியில் எதிரிகள் கூட்டத்துள் நுழைந்தார். சோழ வீரர்கள்
மாண்டு மாண்டு குவிந்தார்கள். ஆனால், அவர் வெறி தீரவில்லை. “விஜயாலயா இப்படி வா!” என்று கூவிக்கொண்டு அந்தப் பக்கம் தமது புரவியைத் திருப்பினார். அவரது பெரிய உடம்பு உணர்ச்சியால் துடித்தது. ஆனால் அவர் கல்
மனம் மாண்ட மகனை நினைக்கவில்லை. எதிரியை நினைத்தது. அந்த வேகத்தில் அவர் போர் கடுமையாயிற்று. சீக்கிரம் விஜயாலயனை நெருங்கினார். அந்த சமயத்தில் ஆதித்தன் வீசிய வேல் அவர் மார்பில் புதைந்தது. அதனால் சிறிது
தள்ளாடினார். நிலத்தில் விழ இருந்தவரை விஜயாலயன் புரவியிலிருந்து குதித்து தனது இரு கைகளாலும் தாங்கிக் கொண்டான். அவன் செய்த சைகையால் யுத்த நிறுத்த சங்கங்கள் எங்கும் முழங்கின.
கதிரவன் மறைய இன்னும் இரண்டு நாழிகைகள் இருந்தன. போர்க்களத்தில் மெள்ள பெரும்பிடுகரைப் படுக்க வைத்தான் விஜயாலயன். அம்புகளும் வேல்களும் நிறைந்த அந்த இடத்தில் பீஷ்மர் சரதஸ்பத்தில் கிடந்தது போல் கிடந்தார்
பெரும்பிடுகர். விஜயாலயன் அவர் முன்பு மண்டியிட்டுக் குனிந்து அவர் மார்பிலிருந்த வேலைப் பிடுங்க முற்பட்டான். வேண்டாமென்று கையை ஆட்டினார் பெரும்பிடுகர். “விஜயாலயா! நீ மாகவீரன். போர்க்களத்தில் என்னைச் சாகவிடு.
என்னைக் காப்பாற்றாதே. என் மாளிகைக்கும் அனுப்பாதே. இதைவிட மாளிகைப் பஞ்சணை வீரனுக்குச் சுகமா?” என்று கேட்டார். “தேவிக்குச் சொல்லியனுப்பு” என்றும் கூறினார்.
விஜயாலயன் கண்ணசைப்பைக் கண்ட ஆதித்தன் விரைந்தான் முத்தரையர் அரண்மனையை நோக்கி. அடுத்த சில நிமிடங்களில் வந்த தேவி, பெரும்பிடுகரை நோக்கி அலற வாயைத் திறந்தாள். பெரும்பிடுகர் மெள்ளத் தமது
இடதுகையால் அவள் வாயைப் பொத்தினார். தேவி! நீ வீரன் மகள். முத்தரையர் இளவரசி. அழுவது முத்தரையர் சரித்திரத்தில் கிடையாது” என்றார்.
அப்படியும் தேவி முக்கினாள், முனகினாள். அவள் கண்களில் நீர் வழிந்தோடியது. அவளைக் குனியும்படி சைகை செய்தார் பெரும்பிடுகர். அவர் மூச்சு பெரிதாக வந்து கொண்டிருந்தது. அத்தனை சிரமத்திலும் “தேவி! மரண
சமயத்தில் உன் பிறப்பு மர்மத்தை வெளியிடுவதாகச் சொன்னேன். நினைப்பிருக்கிறதா?” என்று கேட்டார், மெதுவாக. அவர் குரல் பல வீனப்பட்டிருந்தது.
தேவியால் பேசமுடியவில்லை. ‘நினைப்பிருக்கிறது’ என்பதைக் குறிக்கத் தலையை மட்டும் ஆட்டினாள்.
“இது அந்த சமயம். கேள். நீ என் மகளல்ல. என் சாதியுமல்ல. சேரன் மகள். உன்னை நான்தான் தூக்கி வந்தேன். அதற்கு அத்தாட்சி கிடையாது. ஆனால் உண்மை. நான் செய்த செய்கைக்காக என்னை வெறுக்காதே” என்றார்.
அவன் கண்கள் பஞ்சடைவதைக் கண்ட தேவி, “அப்பா!” என்று அலறினாள். அவள் பக்கத்தில் நின்ற ஆதித்தன் அவள் தோளை ஆதரவுடன் பற்றினான். முத்தரையர் கண்சற்று அகல விரிந்தது. இருவரையும் கவனித்தது, புன்முறுவல்
கொண்டது. பிறகு “இதயகுமாரன் எங்கே?” என்று முணுமுணுத்தார் முத்தரையர்.
இதயகுமாரன் நிலத்தில் மண்டியிட்டு அவரை நோக்கிக் குனிந்தான். அவன் காதில் ஏதோ சொன்னார் அவர். அடுத்து அவர் தலை புரண்டது நிலத்தில். தேவி அவர் மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.
சோழ வீரர் வெற்றிச் சங்குகளை முழங்கத் துவங்கினார்கள். தனது கையசைப்பினால் அதைத் தடுத்தார் விஜயாலய சோழ தேவர். “மகாவீரன் இறந்திருக்கிறான்” என்று கூறி தமது வாளை பெரும்பிடுகர் உடலை நோக்கித் தாழ்த்தினான்.
அதைத் தொடர்ந்து ஆயிரம் வாட்கள் தாழ்ந்தன. வீரனாக வாழ்ந்த பெரும்பிடுகர் வீரனாக உயிர் நீத்தார். மாறனைப் பற்றி யாருமே நினைக்கவில்லை. ஏதோ ஓரிடத்தில் அவன் சடலம் கேட்பாரற்றுக் கிடந்தது. சில பாவங்கள் மனிதர்களை
விடுவதில்லை என்ற விதிக்கு அத்தாட்சியானான் மாறன் பரமேசுவரன்.