Mohana Silai Ch 51 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மோகனச்சிலை – சாண்டில்யன்
அத்தியாயம் – 51 சாஸ்திரியின் நிலை
Mohana Silai Ch 51 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
போர்க்களத்தில் வாளும் கையுமாக வீழ்ந்த சமயத்திலும் தலை வணங்காமல் மல்லாந்து வீழ்ந்து வீர சொர்க்கம் எய்திய பெரும்பிடுகு முத்தரையரை ராஜ மரியாதைகளுடன் தகனம் செய்ய ஏற்பாடு செய்தான் விஜயாலயன். கதிரவனும்,
ஒரு பெரிய வீர சமுதாயத்தின், முந்நூறு ஆண்டுகளாகத் தமிழகத்தில் இருண்ட காலத்தைச் சிருஷ்டித்த களப்பிரரின் கடைசி சந்ததியும் அரசுமான செந்தலை அரசு மறைந்துவிட்டதைப் பார்க்க இஷ்டப்படாதவன் போல் மேலைக் கடலில்
மெள்ள மூழ்கினான்.
எதையும் முன்பே எதிர்பார்க்கும் சுபாவமுள்ள விஜயாலயனும் முன்னமே செய்திருந்த ஏற்பாட்டின்படி ஆயிரம் பந்தங்கள் திடீரெனக் கொளுத்தப்பட்டு ரணகளத்தின் இருளைக் கிழிந்து ஏற்கனவே இருந்த கோரத்தை அதிகப்படுத்தின.
அந்தச் சமயத்திலும் பெரும்பிடுகரின் மார்பு மீது கிடந்து குலுங்கி அழுது கொண்டிருந்த தேவியை நோக்கி, “தேவி! இவரை செந்தலை அரண்மனைக்கு எடுத்துச் செல். உங்கள் குல வழக்கப்படி சகல மரியாதைகளுடன் இவருக்கு ஈமக்
கிரியைகளைச் செய்து முடி” என்று கூறினான். அத்துடன் அருகில் நின்ற தன் மகனை நோக்கி, “ஆதித்தா! தந்தையற்றவள். இனி இவளுக்கு நீதான் சகலமும். இவளுடன் செல்” என்று உத்தரவும் இட்டான்.
ஆதித்தன் மெள்ள தேவியைத் தனது இரு கைகளாலும் தூக்கி நிற்க வைத்தான். “வீரன் மகள் அழக்கூடாது. வா, மேலே நடக்க வேண்டியதைக் கவனிப்போம்” என்று கூறி விட்டு இரு வீரர்கள் வசம் அவளை ஒப்படைத்தான். பிறகு
உட்கார்ந்து, தான் எறிந்த வேலைத் தனது கைகளால் மெள்ளப் பிடுங்கினான். அதனால் பெருகி வந்த குருதியைத் தனது அங்கியைக் கிழித்துச் செருகி அடக்கினான். அடுத்து, நீண்ட இரு வேல்களாலும் குறுக்கு அம்புகளாலும்
சமைக்கப்பட்ட சர ஆசனத்தில் பெரும்பிடுகர் சடலத்தைக் கிடத்தி நான்கு வீரர்களைக் கொண்டு தூக்கச் சொல்லி பந்தங்கள் முன்னும் பின்னும் வர தேவியுடன் செந்தலைக்குள் நுழைந்தான்.
அவர்கள் சென்ற பின்பு போர்க்களத்தில் விஜயாலயன் ஜெயபேரிகை முழங்கிற்று. அதைக்கூடச் சரியாகக் காதில் வாங்காமல் நின்றிருந்த சோழ மாதேவன், பக்கத்தில் நின்றிருந்த படைத்தலைவனை நோக்கி, “இதயகுமாரா! நீ ஏன்
செந்தலைக்குப் போகவில்லை?” என்று வினவினான்.
இதயகுமாரன் சற்றுச் சிந்தித்து விட்டுச் சொன்னான், “இது மகத்தான வெற்றிதான். சோழ சாம்ராஜ்யத்துக்கு இந்த வெற்றி வித்திடுகிறது. இருப்பினும் என் இதயத்தில் மகிழ்ச்சி இல்லை” என்று.
விஜயாலயன் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலையசைத்தான். அடுத்து படைத்தலைவன் கேட்டான், “மன்னர் அனுமதித்தால் நான் கிளம்புகிறேன்” என்று.
விஜயாலயன் புருவங்கள் கேள்வி கேட்பனபோல் எழுந்தன. அதைப் புரிந்துகொண்ட இதயகுமாரன், “வஞ்சிக்குப் புறப்படுகிறேன்” என்றான்.
சோழன் புன்முறுவல் செய்தான். “நாளைக்குக் கிளம்பினாலென்ன?” என்று வினவினான்.
“தாமதிப்பதற்கில்லை” என்றான் படைத்தலைவன் திட்டமாக.
“ஏன்?”
“பெரும்பிடுகர் உத்தரவு.”
“என்ன?”
“ஆம்; மரணத் தறுவாயில் கட்டளையிட்டார்.”
காவலர் வழிவிட்டனர். ஆனால் அவர்கள் முகத்தில் ஏதோ கவலை இருப்பதைப் புரிந்துகொண்ட இதயகுமாரன் அதற்குக் காரணம் புரியாமல் வேகமாக வஞ்சிநகர் அரண்மனையை நோக்கிச் சென்றான். அங்கு வாயிலில் பத்துப்
பதினைந்து புரவி வீரர்கள் கிளம்புவதற்குச் சித்தமாக நின்றிருந்தார்கள். அச்சுதரும் உள்ளிருந்து வந்தார் ஆயுதபாணியாக. இதயகுமாரனைப் பார்த்ததும் அவசரமாக மாளிகைப்படிகளில் இறங்கி வந்து, “இரவு முதல் அரசுகுமாரியைக்
காணவில்லை” என்று கூறினார். அவர் உதடுகள் கவலையால் துடித்தன.
இதைக் கேட்ட இதயகுமாரன் சிலவிநாடிகள் சிலையென நின்றான். பிறகு வினவினான், “எப்பொழுது தெரியும் உங்களுக்கு இது?” என்று.
“சற்று முன்பு” அதிர்ச்சி துலங்கப் பேசினார் அச்சுதர்.
“யார் சொன்னது?”
“பணிப்பெண்.”
“என்ன சொன்னாள்?”
“அரசகுமாரி இரவு நந்தவனத்துக்கு உலாவச் சென்றார்களாம். உடன் வர முற்பட்ட பணிப்பெண்ணையும் நிறுத்திவிட்டார்களாம். நள்ளிரவ தாண்டியும் அரசகுமாரி திரும்பா திருக்கவே அவளே சில வேலைக்காரர்களுடன் சென்றாள்.
நந்தவனத்தில் அரசகுமாரியில்லை. அங்கிருந்து நானிருந்த கொல்லர் வீதி இல்லத்துக்குச் சென்றாளாம். அங்கும் காணோமாம்” என்று விடுவிடு என்று பேசினார் அமைச்சர்.
இதயகுமாரன் மேற்கொண்டு ஏதும் பேசவில்லை. புரவி மீது ஏறி அச்சுதப் பேரறையரின் பழைய விடுதிக்குச் சென்றான். அங்கிருந்த நிலவறைக்கும் ஓடினான். நிலவறையிலும் யாரும் இல்லை. அச்சுதரும் அங்கு வந்தார், நிலவறையில்
யாரும் வரவில்லையென்பது புரிந்தது. அரசகுமாரிக்கு ஏதோ ஆபத்து” என்று மட்டும் சொன்னார் அச்சுதர்.
சிறிது சிந்தித்த இதயகுமாரன் அவர் பேச்சைக் கேட்காமல் “யாரும் என்னைத் தொடர வேண்டாம்” என்று கூறி விட்டு வெளிவந்து விஜயன்மீது தாவி கோட்டைக்கு வெளியே வந்து உறையூர் பெருஞ்சாலையில் அதைப் பறக்க விட்டான்.
எங்கும் நிற்காமல் வாயு வேகத்தில் முக்கூடலை அடைந்து சங்கரநாராயணன் விடுதிக்குச் சென்றான். கதவு உள்ளே தாழிட்டிருந்தது. அதைப் பலமாகத் தட்டினான். கதவு திறந்தது தானாக. உள்ளே யாருமில்லை. விடுதி நிசப்தமாயிருந்தது.
இரண்டு கட்டுகளைக் கடந்து சென்றான் இதயகுமாரன். மூன்றாவது கட்டில் இருந்த அறையில் பெரும் முனகல் கேட்டது. அந்த முனகல் வான சாஸ்திரியான சங்கரநாராயணருடையது. அதை அடுத்து பயங்கரமான சிரிப்பொலி. அது
இளையவேளுடையது. அந்த நகைப்புடன் கூறினான் இளையவேள், “டேய்! வானசாஸ்திரி! உன் ஜாதகத்தை நீயே பார்த்துக்கொள். உன் காலம் கிட்டிவிட்டது” என்று.
“நட்சத்திரங்கள் அப்படி சொல்லவில்லை” என்றார் சங்கரநாராயணன் முனகலுக்கிடையே.
“உன் ஜாதகமும் பொய். நட்சத்திரங்களும் பொய். உன்னிடம் ஏமாற நான் சேர மன்னனில்லை. உன்னை இனி நீ நம்பும் கடவுளும் காப்பாற்ற முடியாது” என்று கூறி மீண்டும் நகைத்தான் இளையவேள்.
முதல் சிரிப்பைக் கேட்டவுடனேயே மெள்ளளக் கதவைத் திறந்து கொண்டு பூனைபோல் உள்ளே சென்று உருவிய வாளுடன் நின்ற இதயகுமாரன் “கடவுளை எடைபோடும் அளவுக்கு நீ உயர்ந்து விட்டாயா?” என்று லேசாக
வினவினான்.
அதுவரை வான சாஸ்திரியின் மார்பு மீது காலை வைத்துக் கொண்டு கழுத்தில் தனது வாளின் நுனியை அழுத்திக் கொண்டிருந்த இளையவேள் சரேலென்று திரும்பினான்.