Mohana Silai Ch 52 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மோகனச்சிலை – சாண்டில்யன்
அத்தியாயம் – 52 நகர்ந்த கதவு! துவண்ட மலர்!
Mohana Silai Ch 52 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
இதயகுமாரன் குரலைக் கேட்டதும் பரம வேகத்துடன் திரும்பிய இளைய வேளின் முகத்தில் வியப்பு, வெறுப்பு, சினம் ஆகிய மூன்று உணர்ச்சிகளும் மாறி மாறித் தெரிந்தன. அறைக்குள் பூனைபோல் நுழைந்த இதயகுமாரன் திறந்த ஒரு
கதவின் மீது சாய்ந்து கொண்டு அலட்சியமாக நிற்பதையும், அவன் கையில் உருவிப் பிடித்திருந்த வாள் அனாயாசமாக ஆடிக் கொண்டிருந்ததையும், முகத்தில் அலட்சியமும் இகழ்ச்சியும் இணைந்த சாயை தவிர, சினத்தின் அறிகுறி
சிறிதும் இல்லாதையும் கவனித்த இளைய வேள், “இதயகுமாரா! நீ ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தாலும் இந்த சாஸ்திரியின் உயிர் வானுலகுக்குப் பறந்து விடும்” என்று கூறி தனது உறுதிக்கு அடையாளமாக அவர் கழுத்தைத் தடவிக்
கொண்டிருந்த தனது வாளின் நுனியை லேசாக அழுத்தவும் செய்தான்.
இத்தனைக்கும் சாஸ்திரியின் முகத்தில் எந்தவித அச்சமும் தெரியவில்லை. தவிர, அவர் படுத்த நிலையிலேயே கைவிரல்களை எண்ணவும் தொடங்கினார். அதைப் பார்த்த இளையவேளின் எரிச்சல் அதிகமாகவே, “சாஸ்திரி! என்ன
எண்ணுகிறாய்?” என்று கேட்டான் எரிச்சல் குரலிலும் விரிய.
“இப்பொழுது கிரகங்களின் நிலையைப் பார்த்தேன்” என்றார் சங்கரநாராயணன்.
கத்தி கழுத்தில் ஊன்றிய நிலையிலும் கைவிரல்களை விட்டு எண்ணிய சாஸ்திரியின் பைத்தியக்காரத்தனத்தை நினைத்த இளையவேள், “என்ன தெரிந்து கொண்டீர்?” என்று கேட்டான்.
“சனி பிரவேசித்து விட்டான் உன் ஜாதகத்தில் எட்டு விநாடிகளுக்கு முன்பு” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் சங்கரநாராயணன்.
“இதயகுமாரனைச் சொல்கிறீரா?” என்று தனது நகைச்சுவையைக் காட்டினான் இளையவேளும்.
“அப்படியும் வைத்துக் கொள்ளலாம். சனி பகவான் அவனைக் கருவியாக உபயோகப்படுத்தலாம்” என்றார் சாஸ்திரி.
“எதற்கு?”- இளையவேள் சீறினான்.
“என்னை அங்க ஹீனப்படுத்த சாஸ்திரியின் சோதிடம் திட்டமாயிருந்தது.
“என்னை அங்கஹீனப்படுத்தவா? ஏன், கொன்றாலென்ன?’ என்று கேட்டு நகைத்தான் இளையவேள்.
சாஸ்திரி மீண்டும் விரல்களை விட்டு எண்ணினார் “ஊஹும், முடியாது” என்றார்.
“எது?” இளையவேள் வினவினான். “கொல்ல முடியாது.”
“அப்படியானால் என் வீரத்தைப் புரிந்து கொண்டு வீட்டீர்?”
“இல்லாததை புரிந்து கொள்ள முடியாது.”
“சாஸ்திரி! அத்துமீறப் போகிறீர்கள்.”
“இல்லை. நிலையைச் சொல்கிறேன். நிராயுதபாணியான என்னைக் கீழே தள்ளி வாளைக் கழுத்தில் ஊன்ற வீரம் தேவையில்லை. ஆனால், இதயகுமாரனுடன் போராட வீரம் வேண்டும்.”
“அதையும் காட்டுகிறேன்.”
“சீக்கிரமாகக் காட்டுவது நல்லது.”
“ஏன்?”
“இல்லா விட்டால் மரணம். இப்பொழுதே துவங்கினால் அங்கஹீனம். இன்னும் அரைநாழியில் இரண்டு நீசக் கிரகங்கள் சனியைப் பார்க்கும். பார்த்தால் உனக்கு மரணம்” என்றார் சாஸ்திரி. சொல்லி நகைத்தார்.
அவருடைய ஒவ்வொரு பேச்சிலும் சினம் உயர்ந்த இளையவேள், அவர் மீதிருந்த காலை எடுத்தான். கத்தியையும் நீக்கினான். “சாஸ்திரி! உன் சோதிடம் எத்தனை தூரம் பலிக்கிறது பார்ப்போம்” என்று கூறிவிட்டு வாளை
இதயகுமாரனை நோக்கி நீட்டி, “சோழர் படைத்தவைவனே! எங்கே உனது வீரத்தைப் பார்ப்போம்!” என்று கூறிக்கொண்டே அவனை நோக்கிப் பாய்ந்து வாளையும் சரேலென்று தலையில் இறக்கிவிட முயன்றான்.
அவன் வாள் அந்தரத்தில் தடுக்கப்பட்டது. கதவில் சாய்ந்த நிலையைவிட்டுச் சிறிதும் நகராமல் வாளைத் தலைக்கு மேல் உயர்த்தி இளையவேளின் வாளைத் தடுத்து விட்ட இதயகுமாரன், அதைத் தடுத்த நிலையிலேயே தனது வாளைச்
சுழற்றி எதிரி வாளின் போக்கை வேறு புறம் திருப்பிவிட்டு, மேலும் போராட உள்ளுக்குள்ளே நுழைந்தான். அதற்குள் சங்கரநாராயணனும் எழுந்திருந்து தனது கைகால்களை உதறிக் கொண்டார். முடிந்து கிடந்த தனது
முன்குடுமியையும் அவிழ்த்து விட்டுக் கொண்டார்.
உள்ளே நுழைந்துவிட்ட இதயகுமாரன், தனக்குப் போராட நிரம்ப இடங்கொடுத்து விட்டதால் வாளைப் பலமாக வீசிய இளையவேள் சாஸ்திரியின் நடவடிக்கையை ஓரக்கண்ணால் பார்த்து, “குடுமியை ஏன் அவிழ்க்கிறாய்?’ என்று
வினவினான்.
“சாணக்கியன் குடுமியை அவிழ்த்தான், நவநந்தர்களை அழித்தான். திரௌபதி குழல் விரித்தாள், அதர்மம் செய்தவர்கள் அழிக்கப்பட்டார்கள். முடி அவிழ்தலுக்கும் அழிவுக்கும் புராண சம்பந்தமும் உண்டு, வரலாற்றுச் சம்பந்தமும்
உண்டு” என்று விளக்கிய சாஸ்திரி, “சரி, சரி! போரைக் கவனி, என் சோதிடத்தைப் பொய்யாக்கப் போகிறாய்” என்றார் இகழ்ச்சியுடன்.
இரைந்து நகைத்தான் இளையவேள், வாளை எதிரி வாளுடன் மோதிக்கொண்டே. சாஸ்திரியின் மீதிருந்த கோபத்தில் மும்முறை தனது வாள் அளித்த இடைவெளியில் இதயகுமாரன் வாள் புகுந்து விட்டதையோ இதை
வேண்டுமென்றே சோழர் படைத்தலைவன் திரும்ப இழுத்துக் கொண்டதையோ இளையவேள் கவனிக்கவில்லை. “உன் சோதிடம்கூடப் பொய் யாகுமா சாஸ்திரி?” என்று கேட்டான் நகைப்பின் ஊடே.
“உன்னைப் போல முட்டாளுக்குச் சோதிடம் சொன்னால் ஏன் ஆகாது? நீ இதயகுமாரனுக்கு மார்பைத் திறந்து காட்டி பிராணனை விட்டால் சோதிடமா பொறுப்பாளி?” என்ற சங்கரநாராயணன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
அடுத்து இரு எதிரிகளும் போரைத் தொடர்ந்தனர். இதயகுமாரன் வாள்வீச்சின் நிதானத்தால் சினமடைந்த இளையவேள், “இதயகுமாரா! தற்காப்புப் போர் செய்வது வீரனுக்கு அழகல்ல. வா முன்னேறி” என்று கூவினான்.
இதயகுமாரன் அந்தக் கூச்சலுக்குப் பதில் சொல்லவில்லை. “கண்ணழகி எங்கே?” என்ற ஒரு கேள்வியை மட்டும் தொடுத்தான் எதிரி வாளைத் தடுத்துக்கொண்டே. அவன் குரலின் நிதானத்திலேயே பயங்கரம் இருந்தது.
பதிலுக்கு நகைத்தான் இளையவேள். “ஓ! அதை அறிந்து கொள்ளத்தான் இத்தனை நிதானமா? யாராலும் அவளைக் கண்டுபிடிக்க முடியாது. உன்னைக் கொன்ற பிறகு அவளை மணக்கப் போகிறேன்” என்று கூறவும் செய்தான்.
இதை அவன் சொன்னதுதான் தாமதம், இதயகுமாரன் வாளை வெகு வேகமாகச் சுழற்றிக் கொண்டு இளையவேளை அணுகினான். இளையவேளும் எதிரியின் வாளைத் தடுத்தும், சுழற்ற முயன்றும், இடைவெளி கிடைத்தபோது
எதிரியின் பாதுகாப்பை ஊடுருவ முயன்றும் வேகமாகப் போராடினான். இளையவேள் மீதிருந்த அத்தனை சினத்திலும் அவன் வீரத்தையும் வாளைச் சுழற்றும் நேர்த்தியையும் உள்ளூரப் பாராட்டினான் இதயகுமாரன். இத்தனை வீரத்தில்
அதர்மம் கலக்காதிருந்தால் அவன் நாட்டுக்கு எத்தனை பயன்படுவான் என்பதை நினைத்துச் சிறிது துன்பச் சாயையும் முகத்தில் படரவிட்டுக் கொண்டான்.
அதைத் தவறாகப் புரிந்துகொண்ட இளையவேள், “இதயகுமாரா! இளையவேளை வெற்றி கொள்வது அத்தனை சுலபமல்லவென்று புரிகிறதா?” என்று கேட்டுக்கொண்டே அவன் வேறு எங்கோ பார்த்த சமயத்தில் தனது வாளை
அவன் மார்பை நோக்கிப் பாய்ச்சினான்.
அவன் செய்த தவறுகள் இரண்டு. இதயகுமாரன் கண்கள் அறையின் ஒரு மூலையை நோக்கியதால் தன்னை நோக்கவில்லை என்பது ஒன்று. எதிர்பாராத சமயமென்பது இதயகுமாரன் போர் முறையில் கிடையாதென்பதை அறியாதது
இரண்டு. இந்த இரண்டு காரணங்களால் ஏற்பட்ட ஏமாற்றத்தால்தான் அந்தத் திடீர் விளைவு ஏற்பட்டது. தனது மார்பை நோக்கி வந்த இளையவேளின் வாளைக் குறுக்கே தனது வாளால் தட்டிவிட்ட இதயகுமாரன் அடுத்த விநாடி மின்னல்
வேகத்தில் ஒரு முறை சுழன்றான். எதிரி வாள் மிக வேகமாக வேறுபுறம் திருப்பப்பட்டது. இளையவேளின் வாள் கரத்தில் குறுக்கே இறங்கிய இதயகுமாரன் பட்டையான வாள் அந்தக் கரத்தைத் துண்டித்து விட்டது. துண்டித்த கரம்
சட்டென்று தொங்கிவிட்டதும் பெரிதாக அலறினான் இளையவேள்.
அந்தச் சமயத்தில் அறையின் வேறொரு மூலையிலிருந்து வந்த வான சாஸ்திரி, இளையவேளை அனுதாபத்துடன் நோக்கினார். “சனி பகவான் அடியெடுத்து வைத்தாலே இப்படித்தான். அவன் கால்தான் நொண்டி என்றால்
மற்றவர்களையும் அங்கஹீனப்படுத்துகிறான்” என்று கூறிக்கொண்டு இளையவேளின் கையைப் பரிசோதித்தார். “எலும்பு, தசைகள் எல்லாம் முறிந்தும், அறுபட்டும் விட்டன. இதை எதுவும் செய்ய முடியாது” என்று கூறி,
“இளையவேள்! வா, மெள்ள, உனக்குத் துளி துன்பம் வைக்காமல் கையை எடுத்து விடுகிறேன்” என்றும் சொன்னார். அறையின் ஒரு மூலைக்கு அவனை இழுத்துச் சென்றார். சென்றபோது கேட்டார் இதயகுமாரனை, “இவன் கையை ஏன்
துண்டித்தாய்?” என்று.
“இவன் பாட்டனார் வேண்டுகோள்” என்றான் இதயகுமாரன்.
“யார், மாரவேளா?”
“மாரவேள், பெரும்பிடுகு முத்தரையர் இருவர் வேண்டு கோளும்.”
“கையை வெட்டச் சொல்லியா?”
“இல்லை. கொல்லக்கூடாதென்று வேண்டுகோள்.”
“அப்படியானால் காலை வெட்டுவதுதானே?”
“இடைக்குக் கீழ் வாளை உபயோகப்படுத்துவது அதர்மம். இரண்டாவதாக, பெண்ணைத் தீண்டுபவர்களுக்குப் பெரும்பிடுகர் அளிக்கும் தண்டனை இதுதான்.”
இதைக் கேட்ட சாஸ்திரி முகத்தில் வியப்பைக் காட்டினாலும் வேறெதுவும் கேட்கவில்லை. “இதயகுமாரா! இந்த அறையின் கோடிக்குச் செல். அங்கு ஒரு உருளை இருக்கும். அதைத் திருகு” என்று கூறிவிட்டு நடந்தார் இளையவேளை
இழுத்த வண்ணம்.
அவர் சொற்படி அறை மூலைக்குச் சென்ற இதயகுமாரன், உருளையைத் திருகினான். சுவர் நகர்ந்து வழிவிட்டது. நகர்ந்த சுவரின் அருகில் கண்ணழகி நின்றிருந்தாள். அடுத்த விநாடி துவண்ட மலரென இதயகுமாரன் மீது விழுந்தாள்.
இதயகுமாரன் கைகள் அவளை இறுக்கி அணைத்தன.