Mohana Silai Ch 6 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மோகனச்சிலை – சாண்டில்யன்
அத்தியாயம் – 6. துகிலுரி படலம்
Mohana Silai Ch 6 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
இமயத்தின் சிகரமே இடிந்துவிழுந்தாலும் இம்மியும் சலிக்காத இதயகுமாரன் இதயமே இரகசிய சிறையில் இளவரசி காட்டிய காட்சியால் சிறிது சலித்ததென்றால், இளவரசியின் கை அச்சத்தால் அவன் கையை நாடி வந்து அதை இறுகப்
பிடித்ததிலோ நடுங்கியதிலோ விசித்திரம் என்ன இருக்க முடியும்! அந்த அறையின் மங்கலான வெளிச்சத்தில் தன் கண்ணெதிரே விரிந்த காட்சியைக் கண்ட இதயகுமாரன் ஒரே விநாடியில் தன்னுடைய இதயசலிப்பை உதறிக்கொண்டு,
தனது ஆதரவை நாடிவந்த கையை பதிலுக்கு இடது கையால் இறுகப்பிடித்து, உருவிய வாளை உறையில் போட்டு விட்டு அரசகுமாரியை நெருங்கி வந்து வலது கையால் அவள் தோளையும் இறுகப்பிடித்து அவள் அச்சத்தைச் சிறிது
ஆற்றவே செய்தான். அப்படி உடலோடு உடல் லேசாக உராய்ந்த நிலையில் அறை மூலையில் எழுந்த காட்சி மீது இரண்டாம் முறையாகக் கண்களை ஓட்டினான் சோழ நாட்டு வாலிபன். ஓட்டிய கண்கள் நிலைத்தன. அரசகுமாரியின்
கையையும் தோளையும் பற்றிய கைகள் சிறிது அதிகமாக அழுத்தின. நிலத்தில் ஊன்றிய கால்கள் ஏதோ போருக்குச் சன்னத்தமாவது போல் உறுதியுடன் தரையில் அசைந்தன.
அரசகுமாரி சுட்டிக்காட்டிய அந்த அறையின் மூலையில் எழிலுக்கு ஒரு இலக்கணம் வகுக்கவே பிறந்தது போல் நின்றிருந்தாள் ஒரு பேரழகி. அவள் சந்திர பிம்ப முகத்தில் வளைந்து கிடந்த புருவங்களை வில்லுக்கு உவமையாகச்
சொல்ல முடியாது. அந்தப் புருவங்களைப் பார்த்துத்தான் வில் என்ற போர்க்கருவி அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இதயகுமாரன் கருதினான். அவள் கண்கள் அவனை நேராகப் பார்க்காவிட்டாலும், சிறிதே இமை தாழ்ந்த
நிலையிலும் கண்கள் பெருமயக்கத்தை அளித்தன. அவள் கன்னங்களின் லேசான புடைப்பும், எடுப்பான நாசியும், செழுமைக் கன்னக் கதுப்புகளில் படர்ந்திருந்த வெட்கச் சிவப்பும், குண்டு குண்டான பவளத்தைத் திறமையுடன்
யாரோ இழைத்து சமமான நீரோட்டமுள்ள உதடுகளாக்கி விட்ட சிறப்பும், அந்த இதழ்களில் துலங்கிய வெட்கப்புன்முறுவலும், பிறைநுதலுக்கு மேலே நேர்வகிடு எடுக்கப்பட்டுப் பக்கவாட்டில் போடப் பட்ட கருங்குழல் முடிப்பும்,
இதயகுமாரன் மனத்தை அப்படியே ஈர்த்தன. முகத்துக்குக் கீழே இறங்கிய சங்குக்கழுத்தும், அதில் அணிந்திருந்த விலைமதிக்க முடியாத பாண்டிநாட்டு முத்தும் வேங்கி நாட்டு இரத்தினமும் கலந்த ஆபரணமும், அந்த ஆபரணம் மார்பின்
நடுவைத் தொட்டு அக்கம் பக்கத்தில் அளவுடன் எழுந்திருந்த பங்கய மொட்டுக்களை இணைய விடாமல் தடுத்த விந்தையும் சோழ நாட்டு வாலிபன் சிந்தையை நிலைகுலையச் செய்தன.
அவள் அணிந்திருந்த வெண்ணிறப் பட்டின் ஓரங்களும் இடுப்பில் சுற்றித் தொங்கிவிடப்பட்ட சரிகை வேலைப்பாடுகளும், அந்த வெண்ணிறப் பட்டின் பலவிடங்களில் காட்சியளித்த மலர்ச் சித்திரங்களும், அந்த ஒரு சேலையின் விலையே
மதிப்பிற்கு அப்பாற்பட்டதென்பதை சந்தேகமற நிரூபித்தன. அந்தப் பட்டும் மிக மெல்லியதாயிருந்ததால் அந்தப் பெண்ணின் உடற்கூறுகளும் ஆங்காங்கு லேசாக சந்தன நிறத்தில் உள்ளே தெரிந்ததால் மயக்கம் தலைக்கேறும் நிலைக்கு
வந்துவிட்டான் அந்த வாலிப வீரன். இவை மட்டும் அந்தப் பெண்ணின் மோகன உருவமென்றால் அதிக பிரமையடைந்திருக்க மாட்டான் இதயகுமாரன். ஆனால், அந்தப் பெண்ணின் முடிந்த குழலில் ஒரு செண்பக மலர் இருந்தது. அதுமட்டு
மல்ல, அவள் சாட்சாத் அரசகுமாரியின் இரட்டைப் பிறவி போலவே இருந்தாள். முகம், கண், அவயவங்களின் தொகுப்பு, நின்ற தோரணை எல்லாமே அரசகுமாரியைப் போலிருந்ததால் அரசகுமாரியையும் ஒருமுறை திரும்பிப் பார்த்து
அந்தப் பெண்ணின் முகத்தையும் பார்த்த இதயகுமாரன், அரசகுமாரியின் கையில் தான் கொடுத்திருந்த, புற்றில் கிளறியெடுத்த தந்தச் சிலையையும் பார்த்து “சந்தேகமில்லை, மூன்றும் ஒரே உருவம், ஒரே அச்சு” என்று வாய்விட்டுச்
சொன்னான்.
அதைக் கேட்ட அரசகுமாரியும் தலையசைத்து “ஆச்சரியம்.இவளை நான் பார்த்ததே இல்லை. எதற்காக இவளைச் சிறை வைத்திருக்கிறார்கள்?” என்று வினவினாள்.
இதயகுமாரன் இளவரசியை நோக்கித் திரும்பி “அவளையே கேட்டு விடலாமே” என்றான்.
அது அந்தப் பெண்ணின் காதிலும் விழுந்திருக்க வேண்டுமென்று நினைத்த இதயகுமாரனுக்கு அந்தப் பெண் என்ன காரணத்தாலோ இமைகளை லேசாகத் தூக்கித் தன்னை உற்றுப் பார்ப்பதுபோல் தோன்றியதால் “பெண்ணே! இனி நீ
அஞ்சவேண்டிய அவசியமில்லை. உனக்கு இன்றுடன் இந்தச் சிறை ஒழிந்தது” என்று கூறி நாலடி எடுத்து வைத்தவன் சட்டென்று நின்றான். வெளியே மீண்டும் பழைய வெறி பிடித்த பயங்கரச் சிரிப்பு அவன் காதில் விழுந்தது. அதே
சமயத்தில் அறை மூலையில் அந்தப் பெண்ணுக்கு அருகிலிருந்த சுவரில் பளீரென்று ஒரு கண்தெரிந்து மறைந்தது.
இத்தகைய விசித்திரச் செயல்களின் விளைவாக இதயகுமாரன் நிதானமும் சிறிது அகலவே “இத்தனையும் அந்தக் கிழவன் வேலையாகத்தானிருக்க வேண்டும்” என்று சற்று இரைந்தே சீறிவிட்டு, “கிழட்டுப் பிணமே! உன்னை சீக்கிரம்
கவனிக்கிறேன்” என்றும் தனக்குள் சொல்லிக்கொண்டு மூலையிலிருந்த அந்தப் பெண்ணை அணுகினான். நன்றாக அணுகியதும் பிரமிப்பு உச்சவரம்பை அடையவே, “அரசகுமாரி! இப்படி வாருங்கள்! இந்த விந்தையைப் பாருங்கள்”
என்றழைத்தான். அவன் அழைப்பை ஏற்று அந்தப் பெண்ணை அணுகிய அரசகுமாரியின் கண்களும் அந்த விந்தைக் காட்சியில் வியப்புற்று பெரிதாக மலர்ந்தன. “வெறும் மரச்சிலை” என்றாள் அரசகுமாரி வியப்பு குரலிலும் ஒலிக்க.
“இல்லை. உயிர்ச்சிலை” என்று திருத்தினான் இதயகுமாரன். “அரசகுமாரி! இதுவும் யாரோ ஒரு கைதேர்ந்த சிற்பியால் செய்யப்பட்ட தந்தச்சிலை. இதன் கைகளைப் பாருங்கள். நரம்புகள்கூடத் தெரிகின்றன. ஒவ்வொரு அவயவத்திலும்
உயிர்நாடி இருக்கின்றது. அரசகுமாரி! இந்த ஒரு சிலையை வைத்துக்கொண்டு, இதன் கழுத்திலுள்ள ஒரு ஆபரணத்தை வைத்துக் கொண்டு ஒரு அரசை விலைக்கு வாங்கலாம்” என்று கூறினான்.
“ஆம் வாங்கலாம்” என்றாள் அரசகுமாரி, பிரமையின் மிகுதியால் ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காக.
இதயகுமாரன் அடுத்தபடி எதுவும் பேசவில்லை. தனது கையிலிருந்த மோகனச் சிலையைப் பார்த்தான். மோகனச் சிலையையும் தோற்கடிக்கும் அரசகுமாரியைப் பார்த்தான், இரண்டையும் அர்த்தமற்றதாகச் செய்யக்கூடிய அழகு
வாய்ந்த மூலைச் சிலையையும் பார்த்தான். பிறகு எதிரேயிருந்த அந்த அழகுச் சிலையின் முகத்தைத் தடவினான். உதடுகளில் விரலை வைத்து அழுத்திப் பார்த்தான். திருப்தி அடைந்ததற்கு அறிகுறியாகத் தலையையும் அசைத்துக்
கொண்டான். அடுத்தபடி அவன் தொடங்கிய பணியைத் தான் அரசகுமாரி தடுத்தாள். அந்தச் சிலையின் தோள்மீதிருந்த பட்டுச்சீலையை அவன் அகற்ற முற்பட்ட போது அவன் கையைப் பிடித்துத் தடுத்த அரசகுமாரி, “வேண்டாம்
நிறுத்துங்கள்” என்றாள்.
“ஏன் அரசகுமாரி?” சட்டென்று திரும்பி வியப்பு நிரம்பிய விழிகளை அரசகுமாரி மீது நிலைக்க விட்டான் இதயகுமாரன்.
“நீங்கள் துச்சாதனனல்ல துகிலுரிவதற்கு” என்ற அரசகுமாரியின் குரலில் சீற்றமிருந்தது, சிறிது இகழ்ச்சியுமிருந்தது.
“இவள் பாஞ்சாலியல்ல” என்ற இதயகுமாரன் “இது சிலை அரசகுமாரி” என்றும் சுட்டிக்காட்டினான்.
“சிலையானால் என்ன?”
“சிலையைப் பார்ப்பது தவறா?”
“ஆடையைக் களைந்துதான் சிலையைப் பார்க்க வேண்டுமென்பதில்லை.”
“களைய வேண்டிய அவசியமிருந்தால்?”
“அவசியமா!”- அரசகுமாரியின் கேள்வியில் ஒலித்தது ஆச்சரியமா? அதிர்ச்சியா? இரண்டும் கலந்த உணர்ச்சியா? புரியவில்லை இதயகுமாரனுக்கு.
இதயகுமாரன் சிறிது சிந்தித்தான். பிறகு சொன்னான், “அரசகுமாரி! என் கையை விட்டு நீங்கள் வேறு பக்கம் திரும்பிக் கொள்ளுங்கள்” என்று.
“எதற்கு?” என்று வினவினாள் அரசகுமாரி.
“இந்தச் சிலையின் துகிலை எடுத்து ஆராய’ என்றான் இதயகுமாரன்.
இந்தப் பதிலைக் கேட்ட அரசகுமாரி அதிர்ச்சியடைந்து நின்றாள் ஒரு விநாடி. “ஆராயவா?” என்ற கேள்வி அக்னி போல் வந்தது அவள் வாயிலிருந்து, கண்களும் நெருப்பைக் கக்கின.
“ஆம்” என்றான் இதயகுமாரன்.
“வீரரே. உமக்குப் புத்தியிருக்கிறதா இல்லையா?” என்று வினவினாள் அரசகுமாரி.
“அதில் சந்தேகமா?”
“இல்லை. புத்தி அடியோடு இல்லையென்று தெரிகிறது.”
“எப்படி?”
“சிலையின் சீலையை நீக்க முயல்வதிலிருந்து. சிலையானாலும் பெண் சிலை.”
“அதனால்?”
“இப்படி உயிரோடு அதைச் செய்திருப்பவன் உள்ளேயும் உடலை…” வெட்கம் பிடுங்கியதால் பாதியில் நிறுத்தினாள் அரசகுமாரி பேச்சை. திணறவும் செய்தாள்.
“உம்…” ஆயாசப் பெருமூச்சு விட்டான் இதயகுமாரன்.
அரசகுமாரி மேலும் தட்டுத் தடுமாறிச் சொன்னாள், “தவிர, அந்தச் சிலை… என்னைப் போலிருப்பதாகச் சொன்னீர்கள்…” என்று.
இதயகுமாரன் நன்றாகப் புரிந்து கொண்டான் அவள் மன ஓட்டத்தை. அவன் இதயத்திலிருந்து பெருமூச்சொன்று கிளம்பி நாசிமூலம் வெளிவந்தது. அதற்காகத்தான் சொன்னேன் அரசகுமாரி உங்களை வேறு பக்கம் திரும்பிக்
கொள்ள” என்றான்.
அரசகுமாரியின் முகம் பெரிதும் சிவந்தது நாணத்தால். “வீரரே! நீங்கள் பாரத நாட்டுப் பெண்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளவில்லை. இதைச் செதுக்கிய கலைஞன் உள்ளத்தையும் புரிந்து கொள்ளவில்லை. இதை
வைத்திருக்கும் இரத்தினக்கொல்லரின் இதயத்தையும் புரிந்து கொள்ளவில்லை. சிலையாயிருந்தாலும் பெண் அழகுகளை மூடுகிறோம் பண்பாட்டை ஒட்டி. தாயார் விக்கிரகங்களுக்கு பட்டாடைகளை உடுத்துகிறார்கள்
கோவில்களில். ஏன்? இது கலாச்சாரம், பாரதப் பண்பாடு. பெண் அழகு தெய்வீகமானது. எல்லோர் கண்களிலும் படுவதற்காக ஏற்பட்ட தல்ல. இதுதான் காரணம். சிலையைக்கூட உரித்து நிறுத்த முடியாது” என்று விளக்கினாள்
அரசகுமாரி நிலத்தை நோக்கிய வண்ணம்.
இந்த விளக்கத்தைக் கேட்ட இதயகுமாரன் சிறிது சிந்தனையில் இறங்கினான். இதற்காகத்தான் சோழ நாட்டிலிருந்து இங்கு வந்தேன்” என்று கூறினான் சிறிது சிந்தனைக்குப் பிறகு.
“துகிலுரிக்க?”-சீறினாள் அரசகுமாரி.
“அதைத்தவிர வேறுவழியில்லை” இதயகுமாரன் சொற்களில் சங்கடமிருந்தது.
“வழி இல்லையா?”
“இருக்கிறது.”
“அப்படியானால் அதைக் கைப்பிடிப்பதுதானே?”
“அப்புறம் இந்த நாட்டில் நான் தலைகாட்ட முடியாது.”
“ஏன்?”
“தலை போய்விடும். அதாவது…”
“அதாவது?”
“இங்கிருந்து தப்பினால்…”
“ஏன் தப்ப முடியாது?”
“அரசகுமாரி!…”
“உம்…”.
“உங்கள் இடையில் குறுவாள் இருக்கிறதல்லவா?”
“இருக்கிறது…”
“அதைக் கொண்டு நீங்களே என்னைக்குத்திப் போடுவீர்கள்.”
“உங்களை நான் ஏன் குத்த வேண்டும்?”
இதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை இதயகுமாரன். பதில் சொன்னபோதும் மிகுந்த தயக்கத்துடன் அரைகுறையாகப் பேசினான்.”அரசகுமாரி! உங்கள் பிறப்பின் மர்மம் இரத்தினக் கொல்லன் வீட்டில் தெரியும் என்று
சொன்னேன். அந்த மர்மத்தை அறிய ஒன்று நான் இந்தச் சிலையின் சீலையைக் களைய வேண்டும். அல்லது… அதைப் போலவே அச்சாக வளர்ந்திருக்கும் உங்கள்…” சொற்களை முடிக்கவில்லை சோழநாட்டு வாலிபன்.
அப்படி அவன் அரையும் குறையுமாக விட்ட சொற்களால் அரவு தீண்டியள் போல் நடுநடுங்கிப் பின்னடைந்தாள் அரசகுமாரி. இடையில் மேலாடை மறைப்பிலிருந்த குறு வாளை உருவி எடுத்துக் கொண்டாள். “கிட்டே வந்தால்
பிணமாகிடுவாய்” என்று நடுக்கமும் சீற்றமும் கலந்த குரலில் கூறினாள் அரசகுமாரி.
இதயகுமாரன் முகம் உணர்ச்சியற்ற கல்லாயிருந்தது. “இதைத்தான் முன்பே சொன்னேன் அரசகுமாரி” என்று வறண்ட குரலில் பேசிய இதயகுமாரன் மேலும் பேசத் தொடங்கினான். “என் ஊகம் சரியானால் உங்கள் மார்புக்குச் சிறிது மேலே
புலியைப் போன்ற ஒரு மச்சமிருக்க வேண்டும். அதே மச்சம் இந்தச் சிலையின் மார்பிலும் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் இந்தத் தமிழ்நாட்டுக் கதை பெருங்கதையாக மாற இருக்கிறது. ஆகவே என்னைத் தடுக்காதீர்கள்” என்ற
இதயகுமாரன் கண்ணிமைக்கும் நேரத்தில் அரசகுமாரியை அணுகி குறுவாளைப் பிடித்த கையை இறுகப் பிடித்து உதறினான். குறுவாள் நிலத்தில் விழவே அதைக் காலால் உதைத்து தூரத் தள்ளினான். பிறகு அரசகுமாரியை நோக்கிச்
சொன்னான். “அப்புறம் திரும்பிக் கொள்ளுங்கள் அரசகுமாரி. அந்தச் சிலையின் மார்பை நான் பார்க்க வேண்டும். சேலையைச் சிறிது நெகிழ்த்தித்தான் ஆக வேண்டும்” என்று.
இம்முறை அவள் பதிலுக்கு அவன் காத்திருக்கவில்லை. சட்டென்று சிலையிடம் சென்று சேலை மீது கையை வைத்து அகற்ற முயன்றாள். அதே விநாடியில் எங்கிருந்தோ பறந்து வந்த குறுவாளொன்று அவன் வலது கையில்
பாய்ந்திருக்கா விட்டால் துகிலுரி படலம் முடிந்திருக்கும். குறுவாள் பாய்ந்ததைக்கூட இதயகுமாரன் லட்சியம் செய்யவில்லை. குறுவாள் பாய்ந்த சமயத்தில் வீறிட்டு அலறிய அரசகுமாரியின் சோகக்குரல் அவனைச் சரேலென்று திரும்ப
வைத்தது. மிக விபரீதமான காட்சி அவன் கண்ணெதிரே எழுந்தது. அரசகுமாரியின் வாயை ஒருவன் அழுத்திப் பிடித்திருந்தான். அவனது கூரிய பெரிய வாள் அரசகுமாரியின் கழுத்துக்குக் குறுக்கே அழுந்திக் கிடந்தது.