Mohana Silai Ch1 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மோகனச்சிலை – சாண்டில்யன்
அத்தியாயம் – 1. சிலையும் செண்பக மலரும்
Mohana Silai Ch1 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
வராகமலையிலிருந்து வெகு வேகமாக விடுவிடு என்று இறங்கி வந்து வஞ்சி மாநகரை அனைத்தும் சூழ்ந்தும், அம் மாநகரின் வலிய கோட்டையை இடித்து விடுவதுபோல் தனது பேரலைகளால் தாக்கியும், காலைக் கதிரவன்
கிரணங்களால் பளபளத்து மின்னியும், தனது ஆற்றலையும் அழகையும் ஒருங்கே இணைத்துக்காட்டி, ஒரு முரட்டு ஆரணங்கைப்போல் காட்சியளித்த ஆமிராவதியின் அற்புத எழிலையும் செயலையும் கண்ட இதயகுமாரன், நேரம்
போவது தெரியாமல் தனது கருமை நிறப் புரவியில் சிலையென உட்கார்ந்திருந்தான். பாயுமிடங்களிலெல்லாம் கரை நெடுக ஆமிரம் என அழைக்கப்படும் மாமரக் காடுகளை நிரம்ப உடையதாகையால் ஆமிரா நதியென்று
வடமொழியிலும், ஆன்பொருநையென்று தமிழ் மொழியிலும் சிறப்புப் பெயர்களைப் பெற்றதும், கர்ப்பபுரி என்று வடமொழியில் அழைக்கப்பட்டவஞ்சிமாநகரை அணைத்துக் கொண்டதால் சூதநதியென்றொரு இன்னொரு பெயரை
பிங்கல நிகண்டு வால் வழங்கப்பெற்றதும், அதனாலேயே கருவூர் (கரு-கர்ப் பம் – ஊர்) வஞ்சிக்கும் தனக்குமுள்ள ஒற்றுமையை விளக்கிதுமான சூதநதியான ஆன்பொருநை அன்று காலையில் இதயகுமாரன் இதயத்தில் பழம் பெருமைகள்
பலவற்றைக் கிளப்பிவிட்டதால், அவன் கண்களும் அந்த நதியின் அலை களைவிட அதிகமாகவே பளபளத்தன.
“இத்தகைய நதிகள் பாய்ந்ததாலேயே தமிழகம் சீரும், சிறப்பும் வளமும் பெற்றிருக்க வேண்டுமென்ற காரணத்தினால் கவிகள் பலரும் தங்கள் பெரும் காவியங்களை ஆற்றுப்படலத்தை முதன்மையாக வைத்துத் துவங்கினார்கள் போலும்!”
என்று சிறிது காவிய உணர்ச்சியிலும் இறங்கிய இதயகுமாரன், அந்த மகாந்தியின் அப்புறமிருந்த கோட்டையையும், கோட்டைக்கும் அடுத்துத் தெரிந்த மாளிகைகளுக்குமிடையே இருந்த அடர்ந்த காட்டையும் நோக்கினான் சில
விநாடிகள். காடு மிக அடர்த்தியாக வைக்கப்பட்டிருந்ததற்குக் காரணம், எதிரிகள் கோட்டை வாயிலைத் தாண்டினாலும் காட்டுக்குள் ஆயுத வண்டிகள் வரமுடியாதபடி தடுப்ப தற்கேயென்பதையும் புரிந்து கொண்ட இதயகுமாரன்,
ஆற்றைத் தாண்டுவதும் அத்தனை சுலபமல்லவென்பதை உணர்ந்து கொண்டான். ஆற்றின் ஒரு பகுதி கற்களைக் கொண்டு சுற்று வட்டமாக மறைந்திருந்ததன் விளைவாக ஏற்பட்ட அகழியிலிருந்து பெரும் முதலைகள் தரையில்
ஊர்ந்து கோட்டைச் சுவர்களை அடுத்துப்படுத்திருந்ததையும், அவை அசைந்த போதெல்லாம் கோட்டைச் சுவர் மீதிருந்த பட்சி ஜாலங்கள் திடீரென்று பறக்கத் துவங்கிவிட்டதையும் கண்ட அந்த வாலிபன், பயங்கரத்திலும் அழகு
கலந்திருக்கிறது என்று தன்னுள் தத்துவத்தையும் சிறிது கலந்து கொண்டு “அதோ இருக்கும் கோட்டைக் கழுகுகள் வெயில் புறப்பட்ட பிறகும் அடக்கமாக உட்கார்ந்திருப்பதை நம்ப முடியாது” என்று நினைத்த தால் தத்துவத்துடன்
மகிழ்ச்சியையும் இணைத்துக் கொண்டான். இப்படி அவன் நினைத்த சமயத்தில் கோட்டை மதிலிலிருந்து கிளம்பி ஜிவ்வென்று சக்கர வட்டமாகப் பறந்து, அம்பு போல் அமராதிவதியின் ஜலமட்டத்தில் இறங்கி ஒரு பெரிய மீனைக் கொத்திக்
கொண்டு போய்விட்ட கழுகொன்றும் அவன் கண்களில் படவே, அதிகப்படியான அடக்கங்கூட ஒரு விஷயத்தில் ஆபத்துதான் என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். பா இப்படி ஆன்பொருநையின் சிறப்பைப் பார்த்துப்
பார்த்துப் பலபடி மகிழ்ந்து கொண்டு நின்ற இதயகுமாரன் சற்று ஏறெடுத்துக் கோட்டைக்கு அப்பால் எழுந்து நின்ற அரச மாளிகையின் விதானங்களையும் பார்த்தான். விதானங்கள் இரண்டு ஆகாயத்தை அளாவி நின்றதாலும்
இரண்டிலும் சேரமான் கொடி பறந்து கொண்டிருந்ததாலும் எது மன்னன் அரண்மனையாயிருக்கும் என்பதை நிர்ணயிக்க முடியாததால், காவலரையே விசாரித்து விடுவோம் என்று தீர்மானித்துக் கொண்ட அந்த வாலிப வீரன் தனது
புரவியை ஆற்றின் இரு கரைகளையும் இணைத்த பாலத்தை நோக்கிச் செலுத்தினான் மெதுவாக. அந்தச் சமயத்தில் கூட “தண்பொருநை புனற்பாயும், விண்பொரு புகழ் விறல் வஞ்சி” என்று புறநானூற்றுப்பாடல் அம் மாநகரத்தைச்
சிறப்பித்த அழகையும், “வருபுனல் வாயில் வஞ்சி” என்று சிறுபாணாற்றுப்படை வழங்கிய சிறப்பையும் எண்ணிப் பார்த்துக் கொண்டே புரவியைக் கோட்டை வாயிற் கருகில் கொண்டு வந்த இதயகுமாரனை, கோட்டை வாயில் காவலர்
இருவர் சிறிது நிறுத்தி, “நீ எந்த ஊர்? யாரைப் பார்க்க வேண்டும்?” என்று விசாரித்தார்கள்.
இதயகுமாரனின் கண்கள் அவ்விருவரையும் ஒரு விநாடி ஏற இறங்கப் பார்த்தன. அவன் இதழ்கள் இளநகை கூட்டின. அப்பார்வையை அடுத்து, “சோழ நாட்டவன். இந்த ஊரைப் பார்க்க வந்தேன். சேரர் நாட்டில் விருந்தோம்பல்தான்
அதிகமே தவிர தடை ஏதும் கிடையாதென்று கேள்விப்பட்டேன்” என்று பதில் கூறினான் இதயகுமாரன், இதழ்களில் படரவிட்ட இளநகையை அடுத்து…
இந்தப் பதிலைக் கேட்ட அந்த வீரரும் ஒரு விநாடி மலைத்தனர். பிறகு அவர்களில் ஒருவன் கேட்டான், “அப்படியானால் நீ நாடோடியா?” என்று.
இந்தக் கேள்வி இதயகுமாரனை லேசாக நகைக்க வைத்தது. “யாத்திரீகர்களுக்கு அப்படியொரு பெயர் தருவதாக இருந்தால் நான் நாடோடிதான்” என்றான் இதயகுமாரன் நகைப்பின் ஊடே.
அவன் ஏளனச் சிரிப்பும் பதிலும் காவலன் சினத்தைக் கிளறிவிடவே, “உன்னைப் பார்த்தால் யாத்திரீகனாகத் தெரியவில்லை” என்று கூறினான் உஷ்ணம் குரலில் ஒலிக்க.
“வேறு எப்படித் தெரிகிறது?”- விஷமம் துளிர்த்தது இதயகுமாரன் கேள்வியில்.
போர்வீரனாகத் தெரிகிறது” என்றான் இன்னொரு காவலன், இதயகுமாரன் இடையிலிருந்த நீண்ட வாளைச் சுட்டிக்காட்டி.
இதயகுமாரன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. இடது கையால் புரவியின் சேணத்தைப் பிடித்தவண்ணம் வலது கையால் முகவாய்க்கட்டையைத் தடவிக் கொண்டான் ஒரு விநாடி. “உங்களிடம் அதை எதிர்பார்த்துப் பயனில்லை”
என்றான் முகத்தில் சிறிது ஏமாற்றத்தைப் படரவிட்டு.
“எதை?”-காவலன் ஒருவன் வினவினான்.
“சரித்திர அறிவை.” இதயகுமாரன் பதிலில் இனம் புரியாத ஒலியிருந்தது.
“சரித்திர அறிவுக்கும் நீ யாத்திரைக்கு வந்ததற்கும் என்ன சம்பந்தம்?” என்ற காவலன் சினம் அதிகப்பட்டது.
“போர்வீரன் யாத்திரீகனாயிருக்க முடியாதென்றாய். ஆனால் உங்கள் மாமன்னர் இமயவரம்பன் கங்கை யாத்திரை செய்திருக்கிறார். அவரும் போர்வீரனாகத்தான் இருந்திருக்க வேண்டும். அல்லது உங்கள் விளக்கப்படி…” சொற்களை
முடிக்கவில்லை இதயகுமாரன், சேணத்தைச் சிறிது இழுத்தான், புரவி அம்பு போல் பாய்ந்துவிட்டது கோட்டைக்குள்.
“பிடி அவனை பிடி” என்ற குரல்கள் கோட்டை வாயிலில் எழுந்தன. புரவிகள் பலவும் இதயகுமாரனைத் தொடர்ந்து பாய்ந்து சென்றன. ஆனால் இதயகுமாரன் அடுத்த கணத்தில் கோட்டைக்கும் ஊருக்கும் இடையேயிருந்த
பெருங்காட்டில் மறைந்துவிட்டதாலும், அவன் எந்தப் புறமாகச் சென்றான் என்பது தெரியவில்லையாதலாலும் சேர மன்னன் வீரர்கள் காட்டின் பல பகுதிக்குள் நுழைந்து சல்லடை போட்டு அரிக்கத் தொடங்கினார்கள்.
புரவியைக் கண்ணிமைப்பதற்குள் பறக்கவிட்ட இதயகுமாரன் காட்டின் கிழக்குப் பகுதியில் புகுந்து மேற்குப் புறமாகத் திரும்பி கோட்டைச் சுவரின் வேறொரு பகுதிக்கு வந்தான். எதிரே கோட்டை மதில்மீது காவல் புரிந்த
வீரரையும், விற்கூடங்களைக் கொண்ட ஸ்தூபிகளையும் பார்த்து மகிழ்ச்சிகொண்டு மீண்டும் ஊரின் வடபுறத்துக்கு வந்து சற்று எதிரே தெரிந்த பெரும் கோயிலைக் கண்டான். கோயில் விதானத்தைக் கண்டதும் வெளியே தெரிந்த இரு
விதானங்களில் அதுவும் ஒன்றென்பதைப் புரிந்து கொண்ட தோடு, அதன் பொன்மயமான விளிம்புகளைக் கண்டு பெருவியப்பும் கொண்டான். “சிவ பக்தனான சேர மன்னன் இந்தப் பெருமாள் கோயிலுக்கு எதற்காகப் பொன்
வேய்ந்தான்” என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டு “தமிழ் மன்னர்களிடத்தில் குறுகிய நோக்குக் கொண்டவர்கள் சிலரே தவிர பெரும்பாலும் சமய சமரசம் உடையவர்களே” என்று சமாதானமும் சொல்லிக் கொண்டு அதனால்
பெருமையும் அடைந்தான். இப்படிப் பெருமை உள்ளத்தில் துள்ள புரவியிலிருந்து கீழே குதித்து அதன் முதுகில் சேணத்தை எறிந்து விட்டுக் கோவிலை நோக்கி நடந்தான். புரவியும் அவனைத் தொடர்ந்தது. கோவில் முன்வாயிலில்
நுழைந்து பிராகாரத்தில் பிரதட்சணமாகச் சென்ற இதயகுமாரன் ஒருமுறை பின்னால் திரும்பி புரவியை நோக்கி, “விஜயா! நீயும் பெருமாளைச் சேவிக்க வேண்டுமா?” என்று வினவினான்.
“ஆமாம்” என்பதற்கு அறிகுறியாக விஜயன் தலையசைக்கவே, “நான் இவ்வூர் வந்தது பெருமாளைச் சேவிக்க அல்லவே” என்றான்.
“இல்லை” என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தது அந்தக் கருமை நிறப் புரவி.
இப்படி அந்த வாலிபன் புரவியுடன் பேசிக்கொண்டு நின்றதைக் கண்டு வியப்படைந்த மக்கள் பலர் அங்கேயே நின்று வேடிக்கை பார்த்ததால் இதயகுமாரன் மேலே நடக்க ஆரம்பித்தான். புரவி பின்தொடர ஒருமுறை கோவிலை
பிரதட்சணம் செய்தவன் உள்ளே சென்று அங்கிருந்த அரங்கநாத பெருமானைச் சேவித்தான். அன்று பெருமானுக்கு அலங்காரம் பலமாயிருந்ததால் கண்களை அரங்கன் கம்பீர முகத்திலும் அருள் தரும் திருவடிகளிலும் மாறி மாறி நிலைக்க
வைத்தான். அந்தச் சமயத்தில் கற்பூரத் தட்டேந்தி வந்த அர்ச்சகர் அர்ச்சனை புஷ்பப் பிரசாதத்தைப் பலருக்கும் கொடுத்து வந்த சமயத்தில் ஒரு தனி செண்பகப்பூ இதயகுமாரன் கையில் விழவே பிரமை பிடித்து நின்றார். “அப்பா! இதைத்
தவறி எடுத்து வந்து விட்டேன். திருப்பிக் கொடுத்துவிடு. வேறு பிரசாதம் தருகிறேன்” என்று கேட்டார். அவர் குரலில் அச்சம் ஒலித்தது அதிகமாக.
அந்தச் செண்பக மலரைக் கண்ணில் ஒற்றிக்கொண்ட இதயகுமாரன் “இந்த மலருக்கென்ன அத்தனை சிறப்பு?” என்று வினவினான்.
“இது அரண்மனைத் தோட்டத்திலிருந்து வருகிறது. அரசகுமாரிக்காக ஏற்பட்டது. தயை செய்து கொடுத்து விடு” என்று மன்றாடினார் பட்டர்.
இதயகுமாரன் அந்த மலரை வியப்புடன் நோக்கினான். “பட்டரே! அரசகுமாரி நந்தவனத்தில் இப்படிப் பல மலர்களிருக்கும். நான் வெளியூர்க்காரன். ஆண்டவன் அருளியதைத் திரும்பிக் கொடுக்க முடியாது. பதிலுக்கு இதை வைத்துக்
கொள்ளுங்கள்” என்று ஒரு பொன் நாணயத்தைத் தட்டில் போட்டான்.
பட்டர் மலைத்தார். நடுங்கினார். “அப்பா! இந்தப் பொற்காசைப் போல் இரண்டு நான் தருகிறேன். மலரைக் கொடுத்துவிடு” என்று கெஞ்சினார்.
இதயகுமாரன் சிறிது நேரம் சிந்தித்தான். பிறகு மலரை இருமுறை கண்களில் ஒற்றிக்கொண்டு பட்டர் காட்டிக் கொண்டிருந்த தட்டில் வைத்துவிட்டுத் திரும்பினான் கர்ப்பக் கிரக வாயிற்படியை நோக்கி.
“அப்பா! இந்தா உன் பொன் நாணயம்” என்று கூவிய பட்டர் அந்த நாணயத்தையும் கையில் எடுத்துக் காட்டினார்.
ஆனால் இதயகுமாரன் அவரைத் திரும்பிப் பார்க்காமலும் அவர் சொன்னதைக் காதில் வாங்காமலும் வெளியே நடந்தான். அதுவரை கர்ப்பக்கிரகத்துக்கு அப்பால் வாயிலில் நின்றிருந்த விஜயனும் அவனைத் தொடர்ந்தது. அப்பெருங்
கோயிலின் வாயிலுக்குக் கால்நடையாக வந்த இதயகுமாரன், வாயிலை அடைந்ததும் புரவி மீது ஏறிக்கொண்டு
“அரண்மனைக்கு வழி எது?” என்று வினவினான், பக்கத்திலிருந்தவர்களை நோக்கி.
“அதோ அந்தச் சிறுகாட்டுக்கு அப்பாலிருக்கிறது” என்று அங்கிருந்த ஒருவர் சுட்டிக் காட்ட, அந்தக் காட்டுக்குள் புரவியைச் செலுத்திய வண்ணம் சிந்தனையில் ஆழ்ந்து விட்டான். ஊருக்குள் இருந்த காடானாலும், காடு உண்மையில்
முழுக்காடாகவும் புதர்கள் நிறைந்ததாகவும் இருந்தது. சில புதர்களைச் சுற்றியும், சில புதர்களைத் தாண்டியும் சென்ற விஜயன், ஏதோ ஒரு பாதைக்கு அருகில் வந்ததும் சட்டென்று நின்றது? அப்படித் திடீரெனப் புரவி நின்று
விட்டதால் சிந்தனையிலிருந்து மீண்ட இதயகுமாரன் எதிரேயிருந்த பாறையை நோக்கினான். பாறை ஓரளவு பெரிதாக இருந்த தன்றி அதை அடுத்து வளர்ந்த புதர் பார்ப்பதற்குப் பயங்கரமாயிருந்ததையும் கவனித்தான். இருப்பினும்
அதைப் பற்றி லட்சியம் செய்யாமல் புரவியை மேற்கொண்டு நடத்தச் சேணத்தைத் தட்டினான்.
சேணம் பட்ட மாத்திரத்தில் பறக்கும் அப்புரவி இருந்த இடத்தை விட்டு நகர மறுத்தது. அதன் காரணத்தை அறியப் புரவியிலிருந்து குதித்த இதயகுமாரன் செவிகளில் யாரோ பெருமூச்சு விடும் சத்தம் கேட்கவே அவன் சுற்று முற்றும்
நோக்கினான். சத்தம் புதரிலிருந்து வருவதை உணர்ந்து அதற்கருகில் சென்று நோக்கினான். புதருக்குள் பெரும் நாகசர்ப்பம் ஒன்று பயங்கரமாக மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட இதயக்குமாரன் தனது இடைக்கச்சையிலிருந்த
குறுவாளை எடுத்துக் கொண்டான். மனிதன் காலடி அரவம் கேட்ட காரணத்தலோ என்னவோ நாகசர்ப்பம் பெரிதாகப் படமெடுத்து அவனை நோக்கிச் சீறி வந்தது. அது படமெடுத்து ஊர்ந்ததுமே குறுவாளை அதன் படத்தில் வீசிவிட்ட
இதயகுமாரன், படத்தை ஊடுருவிய குறுவாளின் பிடியைப் பாம்புடன் எடுத்து இருமுறை சுழற்றி பாம்பைத் தூரத்தில் எறிந்தான். அத்துடன் ஆபத்து நீங்கிவிட்டதென்ற நினைப்பில் திரும்ப முயன்றவன் புதருக்குள்ளேயிருந்த புற்றில்
ஏதோ ஒரு தலை தெரிவதைக் கண்டு மீண்டும் புதருக்கருகில் சென்று தன் குறுவாளால் புற்று மண்ணைக் கிளறி அகற்றினான். மண் அகல அகல ஒரு அழகிய சிலையின் மேற்பகுதி கண்ணுக்குத் தெரியவே அதைப் பிடித்து ஆட்டி மேலே
எடுத்தான். எடுத்தவன் பிரமை பிடித்துப் பல விநாடிகள் நின்றுவிட்டான்.
அழகிய ஒரு பெண்ணின் சிலை நாட்டிய பாணியில் நல்ல பழுப்பேறிய யானைத் தந்தத்தால் செய்யப்பட்டிருந்தது. அந்தச் சிலையின் வளைவுகளும் வேலைப்பாடுகளும் இதய குமாரன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. அந்தச்
சிலைப் பெண் அவனுடன் தன் மூடிய கண்களாலேயே உறவாடினாள். அவள் இதழ்கள்கூடத் திறந்து ஏதோ பேசுவதைப் போன்ற பிரமையை விளைவித்தன சோழ நாட்டு வாலிபனுக்கு.
நேரம் போவது தெரியாமல் நின்றுவிட்ட அவனை “அதை இருந்த இடத்தில் வைத்துவிடு” என்ற ஆணைக் குரல் சட்டென்று திரும்ப வைத்தது.
புதரிலிருந்து பத்தடி தூரத்தில் பைந்தொடி ஒருத்தி நின்றிருந்தாள். அவள் கண்களில் சீற்றம் மிதமிஞ்சித் தெரிந்தது, கண்களும் அவனைக் கவரத்தான் செய்தன. ஆனால், கண்களைவிட அவள் தலைக்குழல் அவன் கவனத்தைப் பளீரென
ஈர்த்தது. அர்ச்சகர் தனக்கு அளிக்க மறுத்த செண்பக மலரை அவள் சூடியிருந்தாள்.
அதைக் கவனித்ததால் பிரமிப்புக்குள்ளான இதயகுமாரனுக்கு அவள் விடுத்த அடுத்த ஆணை அதிக பிரமிப்பை அளித்தது. “இவனைச் சிறை செய்யுங்கள்” என்று அவள் தனக்குப்பின்னால் நின்ற காவலருக்கு உத்தரவிட்டாள். பத்துக்
காவலர்கள் உருவிய வாட்களுடன் அவனை நோக்கி வந்தார்கள். அந்தப் பிசகை அவள் செய்திராவிட்டால் ஒரு பெரிய உண்மை புலப்பட்டிருக்காது. அந்த உண்மை புலப்பட்டிருக்காவிட்டால் தமிழகம் அதுவரை காணாத ஒரு பேரரசும் உருவாகி இருக்காது.