Mohana Silai Ch3 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மோகனச்சிலை – சாண்டில்யன்
அத்தியாயம் – 3. இரத்தினக் கொல்லன் இல்லம்
Mohana Silai Ch3 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
காட்டு மரங்களை ஊடுருவிய காலைக் கதிரவன் கிரணங்களால் கண்களைக் கவரும் கட்டழகுடன் காட்சியளித்த காரிகை அத்தனை தூரம் ஊக்கியும், அவளைக் காவலரிடமிருந்து கவர்ந்து வந்த கள்வன் முதலில் பேச மறுத்தாலும்,
பேசத் துவங்கிய போது அதிர்ச்சி தரும் சொற்களை உதிர்ந்தான். சிறிது சிந்தனைக்குப் பிறகு. “நான் வந்த விஷயத்தைச் சொல்லுமுன்பு நீங்கள்தான் இந்த நாட்டு அரசகுமாரி என்பது எனக்குத் திட்டமாகத் தெரிய வேண்டும்” என்று
கூறிய வாலிபன் அவளைத் தன் கூரிய விழிகளால் ஏறெடுத்து நோக்கினான்.
அவன் சொற்களைக் கேட்டதால் திகைப்பும் அதிர்ச்சியும் சீற்றமும் கலந்த உணர்ச்சிகளால் ஊடுருவப்பட்ட அரசகுமாரியும் தனது வேல் விழிகளை அவன் விழிகளுடன் கலந்தாள். வேல்களுடன் வேல்கள் உராய்ந்தது போன்ற இருவர்
பார்வையும் ஒன்றையொன்று சில விநாடிகள் கவ்வி நின்றதால் இருவரிடையும் ஏற்பட்ட மௌனம் திடீரெனக் கலைக்கப்பட்டது. இளவரசியின் இதயத்தில் எல்லா உணர்ச்சிகளுக்கும் மேலாக எழுந்துவிட்ட சினத்தின் விளைவாக “நீ
வீரனா? பித்தனா?” என்று சீறி வந்த சொற்கள் இதயகுமாரனை எரித்து விடுவன போலிருந்தாலும், அவன் அவள் சீற்றத்தையோ சொற்களையோ சிறிதும் பொருட்படுத்தாமல் சொன்னான், “இந்த நகரத்துக்குள் புகுந்த போது வீரன்,
தங்களைப் பார்த்ததும் பித்தன்” என்று.
இதயகுமாரனின் இந்தத் துணிகர பதில் இளவரசியின் சீற்றத்தைச் சிறிது தணித்ததா, அல்லது விசிறிவிட்ட கோபத்தை அவள் வேண்டுமென்றே மறைத்துக்கொண்டாளா. சொல்ல முடியாது. அவள் விழிகளில் விஷமச் சிரிப்பின்
சாயையொன்று படர்ந்து, அது முகத்திலும் விரிந்து மலர்ந்தது. செவ்விய இதழ்களிலும் சிறிது இளநகையைக் கூட்டிக் கொண்ட அரசகுமாரி எதிரே நின்ற அந்த வாலிபனை ஆராயத் தொடங்கினாள். விடு விடு என்று நிகழ்ந்து விட்ட
சம்பவங்களால் அவனை எடை போட முடியாத அரசகுமாரி மரக்கூட்டங்கள் அளித்த இடைவெளியில் காவலர் அரவமோ இடைஞ்சலோ இல்லாத அந்த நேரத்தில் நன்றாகவே நோக்கினாள் எதிரே நின்ற அந்த வீரனை.
இளமை அளவுக்கு அதிகமாகவே சொட்டியதால் அவன் முகம் குழந்தை முகம்போல் காட்சியளித்தாலும், அந்த முகத்தின் குறுக்கே விழுந்து வளைந்து கிடந்த தலைக் குழலின் முரட்டுத்தனமும், கண்களில் விளையாடிய ஆராய்ச்சி
ஒளியும், நெற்றியின் வலது புற உச்சியிலிருந்த சின்னஞ்சிறு கத்தி வெட்டுத் தழும்பும், அவன் அப்படியொன்றும் ஏதுமறியாத குழந்தையல்ல என்பதைப் பறைசாற்றின. மேலுதட்டின்மீது திட்டமாகத் தெரியாமல் அரும்பத்
தொடங்கியிருந்த சிறிய ரோமங்கள்கூட அவன் முகத்துக்குத் தனி அழகையும் வீரத்தையும் அளித்திருந்தன. அவன் காலையில் நீராடி நெற்றியில் அணிந்திருந்த மூன்றாம் பிறைபோன்ற சந்தனத் திலகம் அவன் வீரத்தை அதிகப்படுத்திக்
காட்டியது. அவன் அணிந்திருந்த அங்கி அதிக விலை உயர்ந்ததல்லவென்றாலும் இடது கையை அலங்கரித்த வீர கங்கணம் விலைமதிக்க முடியாத தென்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தது. அதில் பதிக்கப்பட்டிருந்த ஒரே ஒரு
இரத்தினக்கல் காலை வெயிலில் தணல்போல் பிரகாசித்ததன்றி அதன் ஒளி அவன் நெற்றியிலும் பட்டு அதையும் ரத்தச் சிவப்பாக அடித்திருந்தது. அவன் நீண்ட கைகளும் சரி, அவன் கணைக்காலைத் தொட்டுக் கொண்டருந்த நீண்ட
வாளும் சரி, அவன் போரிடவே பிறந்தவனென்பதை எடுத்துக்காட்டுவனபோல் இருந்தன. கைகள் மெலிந்தேயிருந்தாலும் அவற்றின் உரம் எஃகையும் அவமதிக்கும் தன்மையுடன் காட்சியளித்ததாலும், தரையில் ஊன்றிய கால்கள் ஏதோ
இரண்டு இரும்புச் சலாகைகள் பூமியில் நடப்பட்டவை போல் தெரிந்ததாலும், அந்த வாலிபனை எதிரியாக்கிக்கொள்வது விரும்பத்தக்கதல்ல வென்று திட்டமாகப் புலனாகியது. இடையில் வயிற்றுக்கு முன்பாக அவன் சொருகியிருந்த
குறுவாள்கூட ஏதோ எச்சரிக்கை செய்வது போலிருந்தது.
இத்தனையும் கவனித்து அவனை அணு அணுவாக ஆராய்ந்த அரசகுமாரி புரவியின் மீது சாய்ந்த நிலையிலிருந்து விலகி அவனை நோக்கி இரண்டடி எடுத்து வைத்து “வீரரே!” என்றாள் மீண்டும் மரியாதையைச் சொற்களில்
வரவழைத்துக் கொண்டு.
“அரசகுமாரி!” என்று மிகுந்த பணிவுடன் வந்தது இதயகுமாரன் பதிலும்.
இதைக் கேட்ட அரசகுமாரியின் இதழ்களில் மறுபடியும் துளிர்த்தது இளநகை. “என்னை அரசகுமாரி என்று அழைக்கிறீர்களே!” என்று வினவினாள். அவள், உள்ளே எழுந்த நகைப்பு சிறிதளவு குரலிலும் ஊடுருவ.
தடங்கலின்றி பதில் சொன்னான் அந்த வாலிபன், “அதனாலென்ன அரசகுமாரி?” என்று.
“மீண்டும் அதே பிழையைச் செய்கிறீர்கள்” என்றாள் அவள் மறுபடியும்.
“எந்தப் பிழை அரசகுமாரி?”-ஏதுமறியாதது போல் வினவினான் அந்த வாலிபன்.
“என்னை அரசகுமாரி என்று நீங்கள் ஒப்புக்கொள்ளாத போது அரசகுமாரி என்று அழைப்பது பிழையல்லவா?” என்று வினவினாள் அவள்.
இப்படி அவள் சொல்லி அவன் குற்றத்தைச் சுட்டிக் காட்டி சிறிது வாய்விட்டே நகைத்தாள். ஜலதரங்கம் வாசிக்கப்பட்டது போல் மிக இன்பமாக உதிர்ந்த அந்தச் சிரிப்பைக் கேட்ட இதயகுமாரன் இதயத்தில் இசையின்பம் ஊடுருவிச்
சென்றிருக்க வேண்டும். அந்த மயக்கத்தில் சொன்னான். “தங்களை அரசகுமாரி அல்லவென்று நான் சொல்லவில்லை” என்று.
“சற்று முன்பு நீங்கள் சொன்னதென்ன?” என்று வினவினாள் அரசகுமாரி வியப்புடன்.
“நீங்கள் இந்த நாட்டு அரசகுமாரி என்பதற்கு அத்தாட்சி வேண்டுமென்று கேட்டேனேயொழிய நீங்கள் அரசகுமாரியல்லவென்று நான் சொல்லவில்லையே. ஆரம்பத்திலிருந்து அரசகுமாரி என்றுதானே அழைத்து வருகிறேன்” என்று
விளக்கினான் இதயகுமாரன். அத்துடன் சிறிது நிதானித்து விட்டு. “நீங்கள் யாராயிருந்தாலும், என் ஆராய்ச்சியின் முடிவு எப்படியிருந்தாலும், நான் சம்பந்தப்பட்டவரை நீங்கள் ஒரு அரசகுமாரிதான்” என்றும் கூறினான்.
அவன் பேச்சிலிருந்த சாமர்த்தியத்தையும், அவற்றில் புதைந்து கிடந்த பல விஷயங்களையும் அரசகுமாரி கவனிக்கவே செய்தாள். “ஏதோ ஆராய்ச்சி என்கிறான், முடிவு என்கிறான், இதெல்லாம் என்ன?” என்று தன்னைத்தானே கேட்டுக்
கொண்டாள். பிறகு மேலும் அவனிடமிருந்து விவரங்களை வரவழைப்பதற்காக மிக அன்புடன் பேசத்துவங்கி, “ஆமாம்! முதலில் அரசகுமாரியென்று அழைத்தீர்களே, அது எப்படி? காவலர் உடன் வந்ததாலா?” என்று வினவினாள்.
இதைக்கேட்டதும் இதயகுமாரனும் நகைத்தான். “இல்லை அரசகுமாரி. அதல்ல காரணம். காவலர் அரசகுமாரியுடன்தான் வரவேண்டுமென்பதில்லை. மந்திரிகுமாரியுடன் வரலாம், சேனாதிபதியின் செல்வியுடன் வரலாம். ஏன் என்னை
நீங்கள் சிறை செய்திருந்தால் என்னைச் சூழ்ந்தும் பத்து காவலர் வரலாம். காவலரை வைத்து, பணிமக்களின் தொகையை வைத்து, படாடோபத்தையோ அணிமணிகளையோ வைத்துக்கூட யாரையும் மதிப்புப்போட முடியாது” என்று
நகைப்பின் ஊடே கூறவும் செய்தான்.
“வேறு எதை வைத்து எடை போட்டீர்கள்?” என்று. கேட்டாள் அரசகுமாரி புன்முறுவல் இதழ்களில் அரும்ப, உதடுகள் சிறிதளவு விலகி இரு முத்துக்களை வெளிபடுத்த.
“மலரை வைத்து எடை போட்டேன் அரசகுமாரி” இதயகுமாரன் பதிலில் பணிவு இருந்தது.
“மலரையா!”அரசகுமாரியின் கேள்வியில் குழப்பமிருந்தது.
“ஆம் அரசகுமாரி! நீங்கள் குழலில் சொருகியிருக்கும் செண்பக மலரைக்கொண்டு நீங்கள்தான் அரசகுமாரி என்று தீர்மானித்தேன்” என்று உள்ளதைச் சொன்னான் இதயகுமாரன்.
அரசகுமாரியின் வதனத்தில், புரிந்ததற்கு அடையாளமாக மகிழ்ச்சிச் சாயை படர்ந்தது. “அப்படியா!” என்ற கேள்வியிலும் சந்துஷ்டி இருந்தது.
இதயகுமாரன் அவளுக்கு வெகு அருகில் வந்து, அதோ அந்த செண்பக மலர். அதை எனக்குக் கொடுத்த அர்ச்சகர் திரும்பவும் வாங்கிக்கொண்டார். காரணத்தையும் சொன்னார்” என்று கூறி செண்பக மலரைக் கையால் தொட்டும்
காட்டினான்.
அவன் அப்படித் தனக்கு வெகு அருகில் வந்து விட்டதையும், தலைமீதிருந்த செண்பக மலரைத் தொட்டுக் காட்டியதையும் கண்ட அரசகுமாரி ஏது செய்வதென்று அறியாமல் திணறினாள். இதயகுமாரன் நிலையும் விவரிக்கத்
நகாததாயிருந்தது. அவளருகில் வந்ததும் அவன் நாசியில் அவள் குழலிலிருந்த செண்பக மலரின் வாசனை மட்டுமின்றி, கலையில் ஸ்நானத்திற்காகத் தடவப்பட்டு, அலசி நீராடிய பிறகும் அகலாத வாசனைத் தைலங்களின் சுகந்தமும்,
அவள் உடலில் பூசிக் குளித்திருந்த ஸ்நானப் பொடியின் வெட்டிவேர் முதலான பல வேர்களின் நறுமணமும் கலந்து அவன் நாசியில் புகுந்ததாலும், நெருக்கத்தின் விளைவாக அவன் காலின்மீது லேசாகப்பட்டு உராய்ந்து கொண்டிருந்த
மெல்லிய பட்டுச் சேலையின் நுனி, காற்றில் அலைந்து தடவியதாலும், அவள் விட்ட பெருமூச்சினால் கண்ணுக்கு வெகு அருகாமையில் அவள் மார்பகம் எழுந்து தாழ்ந்ததாலும், உணர்ச்சிகள் உடலெங்கும் வேகத்துடன் சுழன்றதால்
நிலைகுலைந்த இதயகுமாரன், அவள் சமீபத்திலிருந்து விலக முயன்ற சமயத்தில் காட்டின் ஊடே காவலர் ஓடிவரும் சத்தம் கேட்கவே சட்டென்று சுயநிலை அடைந்தான். “அரசகுமாரி! இனி நாம் தாமதிக்க முடியாது. காவலர் நெருங்கி நான்
பிடிபட்டால் வந்த காரியம் கெட்டுவிடும். பிடிபடாமல் போரிட்டு சிலரைக் கொன்றாலும் விளைவு நல்லதல்ல. ஆகவே நான் எது செய்தாலும் தவறாக நிகைக்காதீர்கள்” என்று விடு விடு வென்று பேசினான்.
அவன் பேசிக்கொண்டிருக்கையிலேயே அவர்கள் இருந்த இடத்திற்கு அருகாமையில் காவலர் காலடிகளும் “இங்குதானிருப்பான், சந்தேகமில்லை” என்று கூச்சலும் கேட்கவே அரசகுமாரி இதயகுமாரனை நோக்கி “எது செய்தாலும்
என்றால்? என்ன செய்ய உத்தேசம்?” என்று வினவினாள்.
இந்தக் கேள்வியை எதற்காகக் கேட்கிறோம். இவன் பிடிபட்டால் என்ன குடிமுழுகிப் போய்விடும் என்ற எண்ணங்கள் அவள் சித்தத்தில் தலைகாட்டாதது அவளுக்கே வியப்பாயிருந்தது. இதற்கு என்ன காரணம் என்று அவள் சிந்திக்கும்
முன்பு “அரசகுமாரி! ஆபத்துக்குப் பாவமில்லை, அஞ்சாதீர்கள்” என்று கூறிக்கொண்டு அவளை குழந்தை போல் ஒரே தூக்காக இரு கைகளாலும் தூக்கித் தோளில் போட்டுக் கொண்ட இதயகுமாரன் வெகு வேகமாக மீண்டும்
காட்டின் நெருக்கமான பாகத்தில் நுழைந்து விட்டான். அப்படிப் பலவந்தமாக முற்றும் எதிர்பாராத விதமாக அவன் தன்னை தோளில் போட்டுக் கொண்டு ஓடியதால் சிந்திக்கும் சக்தியைக்கூட அறவே இழந்தாள் அரசகுமாரி. அவன் இடது
கை அவள் அழகிய உடலின் கீழே காலுக்கு மேல் அழுத்திப் பிடித்திருந்ததாலும், தோளில் தலை சாய்ந்திருந்ததால் தனது வலது கன்னம் அவன் இடது கன்னத்துடன் உராய்ந்ததாலும், அவன் மார்பில் அழுந்திக் கிடந்த தனது மார்பு
அசைந்ததால் ஏற்பட்ட இன்ப இம்சையாலும் உணர்ச்சிகளைப் பறிகொடுத்த இளவரசி ஏதும் நினைக்கவும் வழியில்லாமல் செயலற்றுக் கிடந்தாள்.
இத்தனைக்கும் இதயகுமாரன் மனத்தில் எந்தவித உணர்ச்சிகளும் இல்லை. கடமை உணர்ச்சி, கொக்குக்கு ஒன்றே மதி என்றபடி காரியத்தில் திளைத்துவிட்ட எண்ணம், இவ்விரண்டும் அவனை உணர்ச்சியற்ற மரக்கட்டையாக
அடித்திருந்தது. அதன் விளைவாக மிக வேகமாக அவளைச் சுமந்து ஓடிய இதயகுமாரனைப் பின்பற்றி அவன் புரவியும் வந்தது வெகு வேகமாக.
காட்டின் அடர்ந்த இடத்துக்கு வந்ததும் அரசகுமாரியை விஜயன் மீது ஏற்றிய இதயகுமாரன், “அரசகுமாரி! இன்று காலை நாமிருவரும் சரியான முகத்தில் விழிக்கவில்லை. சின்ன விஷயம், நேராக நடக்க வேண்டிய பணி, அனாவசியமாகச்
சிக்கலை ஏற்படுத்தி விட்டது. எதையும் மனத்தில் வைக்காதீர்கள். எனது புரவியில் கோட்டைச் சுவரிலிருந்து மூன்றாவது தெருவுக்குச் செல்லுங்கள். அங்கு இரத்தினக் கொல்லன் அச்சுதன் இல்லம் இருக்கிறது…” என்றான்.
இதைக் கேட்ட அரசகுமாரி அசந்து போனாள். “இந்த அவருக்கு நீங்கள் ஏற்கெனவே வந்திருக்கிறீர்களா?” என்று வினவினாள்.
“இல்லை. இதுதான் முதல் தடவை.”
“அப்படியானால் நகர அமைப்பு, இரத்தினக் கொல்லர் – இல்லம்…”
“எப்படித் தெரிந்ததென்று வியக்கிறீர்கள். விவரிக்க அவகாசமில்லை. அங்கு செல்லுங்கள் அரசகுமாரி, இன்னும் இரண்டு நாழிகைக்குள் உங்களை அங்கு சந்திக்கிறேன்.”
“நான் அங்கு செல்வேனென்பது என்ன நிச்சயம்?”
“செல்வது அவசியம்.”
“ஏன்?”
“அங்கு உங்கள் பிறப்பின் மர்மம் தெரியும். தாமதிக்காதீர்கள், சொல்லுங்கள்” என்று துரிதப்படுத்திய இதயகுமாரன், விஜயனைத் தட்டிவிட்டான். விஜயன் அரசகுமாரியைத் தாங்கி காட்டின் ஊடே பறந்தது. அதன் வேகத்தால் காட்டு
மரக்கிளைகளிலிருந்து தப்ப அரசகுமாரி விஜயன்மீது குனிந்து படுத்துக்கொண்டு கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டாள்…
சித்தத்தை அப்படியே உளைத்துக் குழப்பும் நிகழ்ச்சிகளில் ஏதும் செய்யமாட்டாமல் அச்சுதன் இல்லத்துக்குப் புரவியைச் செலுத்தி வந்த அரசகுமாரி மாளிகை வாயிலில் இறங்கி விஜயன் முதுகின் மீது கடிவாளங்களை விட்டெறிந்து
உள்ளே வேகமாகச் சென்றாள். அரசகுமாரியைக் கண்டதும் புரவிக்கருகில் அவளை வரவேற்க ஓடிவந்த இரத்தினப் பணியாளர்கள் அரசகுமாரி காட்டிய துரிதத்தால் செயலற்று நின்றார்கள்.
அரசகுமாரி அவர்கள் யாரையும் கவனிக்காமல் உள்ளே நுழைந்து மாளிகையில் பல கட்டுகளையும் கடந்து அச்சுதன் தனியாகப் பணிபுரியும் பட்டறைக்குள் நுழைந்தாள். அங்கு தரையில் உட்கார்ந்து ஏதோ ஒரு இரத்தினத்தைப்
பரிசோதித்துக் கொண்டிருந்தவரைக் கண்டதும் “அச்சுதக் கொல்லரே!” என்று அழைத்தாள் அரசகுமாரி பெருமூச்சு வாங்க. இரத்தினத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர் தலையைத் தூக்கினார். அரசகுமாரி பிரமித்தாள். அவளை
நோக்கியது அச்சுதக் கொல்லரல்ல. அவள் அதுவரை கண்டிராத புது மனிதர். வாலிப வயதை சிறிதே தாண்டியவர். அவள் சித்தத்துக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒரு கனவு அவர் கண்களில் விரிந்து கிடந்தது. அந்தக் கனவுக் கண்கள்
.
அரசகுமாரியின் இதயத்தையே பார்த்து விடுவனபோல் நிலைத்தன அவள் மீது.
அரசகுமாரி மெல்ல தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். “அச்சுதக் கொல்லர் எங்கே?” என்று வினவினாள்.
“வந்துவிடுவார், உட்காருங்கள் அரசகுமாரி” என்றார் அந்த மனிதர். அத்துடன் இன்னொரு கேள்வியும் கேட்டார். “அவன் எங்கே?” என்று.
“யாரைக் கேட்கிறீர்கள்?” என்று கேட்டாள் அரசகுமாரி.
“அவன்தான்.உன்னைத் தூக்கி வந்தவன். இதயகுமாரன்” என்ற அந்த மனிதர் “அவனைத் தவறாக நினைக்காதே அரசகுமாரி” என்றும் கேட்டுக்கொண்டார்.
அரசகுமாரிக்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை. சிலையென நின்றாள். வந்த மனிதர் மேலும் சொன்னார். “அரசகுமாரி! இதயகுமாரன் நட்பு ஏற்பட்டது உன் அதிர்ஷ்டம்” என்று.
“உண்மை” என்று கூறிக்கொண்டு இரத்தினக் கொல்லனான அச்சுதனும் உள்ளே நுழைந்தார்.