Mohini Vanam Ch 12 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 12 அவன் சொன்ன காரணம்!
Mohini Vanam Ch 12 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
புஷ்பத்தைவிட மென்மையான புஷ்பாவதியின் இதழ்கள் தனது வலிய இதழ்களுடன் இழைந்துவிடவே, தனது உணர்ச்சிகளைப் பறக்கவிட்ட அந்தக் கட்டைப் பிரம்மச்சாரி சிறிது நேரம் பெரும் சங்கடத்துக்குள்ளா னான் இதழ்கள் இழைந்த
வேகத்தில், அவள் பாவாடை யால்மறைக்கப்பட்ட பருத்த தொடைகளும் அவன்மீது அழுந்திய நிலையில் அவன் பிரம்மச்சரியம் காற்றில் பறந்து கொண்டிருந்தது. அதன் விளைவாக ஜெபமாலையைப் பிடிக்க வேண்டிய அவன் கை அவள்
இடையில் தவழ்ந்து அவள் மலர் உடலைத் தன்னை நோக்கி இழுத்தது.
அந்தச் சமயத்தில் மலர்போல் தோற்றமளித்த அவள் உடல் கடினப்பட்டதாலும் வேகமாக நெருங்கியதாலும் அந்த வலிமையும் எத்தனை இன்ப அலைகளைத் தனது உடலில் பாய்ச்சுகின்றன என எண்ணி வியந்தான். அந்த வியப்பு அதே
நிலையில் இருந்திருந்தால் தீப்சந்தின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அவளைச் சூழ்ந்துகொள்ள எழுந்த இன்னொரு கையில் அவன் வைத்திருந்த அந்தச் சிறு உச்சிப் பூ சிறிது, உறுத்தவே, எழுந்த கையை அவன்
கீழே போட்டான். அவள் இடையை வளைத்த கையையும் எடுத்துக்கொண்டான். அவளிடம் இருந்து சற்று விலகியும் நின்றான்.
அவன் திடீர் மாற்றத்தைக் கண்ட அவள், அவன் கன்னத்துடன் தனது கன்னத்தை இழைத்து, “ஏன்? என்ன வந்துவிட்டது உங்களுக்கு?’ என்று அவன் காதுக்கருகில் உதடுகளை விரித்து விசாரித்தாள்.
“எதுவுமில்லை” என்று அவன் பொய் சொன்னான்.
“பொய் சொல்கிறீர்கள்” என்று அவள் அவன் மீது குற்றம் சாட்டினாள்.
அவன் சிந்தித்தான் ஒரு விநாடி. “இருக்கலாம் புஷ்பாவதி சில வேளைகளில் பொய்யும் அவசியமாகிறது. என்று திடமாகவே பதில் சொன்னான்.
“இத்தகைய வேளைகளில் இது ஒன்று போலிருக்கிறது.” அவள் குரலில் ஏளனம் இருந்தது.
“ஆமாம் புஷ்பாவதி.”
“இந்த வேளைக்கு என்ன? இடமும் சுகம். நெறி தவறக்கூடியவனுக்கு இதைவிட சிறந்த வேளையும் சிறந்த இடமும் அமைவது கஷ்டம்.”
அவள் அவன் கன்னத்திலிருந்து தனது கன்னத்தை எடுத்து அவன் தோள்களில் தனது இரு கைகளையும் வைத்து அவள் கண்களைக் கூர்ந்து நோக்கினாள். “இதில் நெறி தவறுவதற்கு என்ன இருக்கிறது” என்று கேட்கவும் செய்தாள்.
அவனும் தனது கண்களை அவள் கண்களுடன் உறவாட விட்ட வண்ணம் “என்ன இல்லை? புஷ்பத்தின் மென்மையையும் வசந்தத்தின் உல்லாசத்தையும், தென்றலின் குளுமையையும் தோற்கடிக்கும் பெண்ணொருத்தி அருகில்
இருக்கிறாள். வானில் வெண்மதி இருக்கி கிறான். மறைவுக்கு மரங்கள் இருக்கின்றன. ஒரு மனிதன் கெட்டுப்போவதற்கு இவற்றைவிட வேறு சாதனம் தேவையா?” என்று வினவினான்.
அவன் செய்த தோத்திரத்தாலும், சுட்டிக் காட்டிய அபாயத்தாலும் அவள் சற்றே இதழ்களில் மூறுவல் கொண்ட வண்ணம் “வீரரே!” என்று மெதுவாக அழைத்தாள்.
“என்ன புஷ்பாவதி?” அவன் குரலில் கனிவு இருந்தது.
“காதல் குற்றமாகுமா?” என்று அவள் கேட்டாள். அவள் குரலில் நெகிழ்ச்சி இருந்தது.
“முறையான காதல் குற்றமாகாது.” என்றான் தீப்சந்த்.
“இது முறையற்றதா?
“அப்படித்தான் தோன்றுகிறது.”
“எப்படி முறையற்றதாகும்?”
“நாம் இருவரும் ரகசியமாகச் சந்தித்திருக்கிறோம்.”
“அதனால் என்ன?”
“திருட்டுத்தனம் எதிலும் உதவாது.”
“காதல் பகிரங்கமாக நடக்குமா? உங்களுக்குப் புத்தியிருக்கிறதா?”
“இல்லை. உன்னைக் கண்ட தினத்திலிருந்து புத்தி சரியாக வேலை செய்யவில்லை.”
“விளையாடாதீர்கள்.” என்று கடிந்து கொண்டாள் புஷ்பாவதி.
“புஷ்பாவதி! இத்தனை நேரம் நான் விளையாடவில்லை என்று குற்றம் சாட்டினாய். இப்பொழுது விளையாடுவதாகக் குற்றம் சாட்டுகிறாய். முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே விவகாரம்.”
“முன்னுக்குப் பின் முரணாயிருப்பது தான் காதல். இது புரியவில்லையா உங்களுக்கு?”
“இது என்ன? காதலைப் பற்றி எதுவுமே தெரியாது. யாரும் சொல்லிக் கொடுத்ததும் கிடையாது.”
“சொல்லிக் கொடுக்க வேண்டிய கதையல்ல இது” என்று கூறிய புஷ்பாவதி மீண்டும் அவனை நெருங்கி அவன் மார்பு மீது சாய்ந்தாள்.
அவன் கைகளும் மெதுவாக அவளைச் சுற்றிச் சென்றன. “உன் பெயர் புஷ்பாவதிதானே?” என்று அவள் காதில் குனிந்து கேட்டான்.
அவன் மார்பில் முகத்தைப் புரட்டியபடி அவள் கேட்டாள் “அதிலென்ன சந்தேகம்?” என்று.
அவன் சற்று தலையைத் தூக்கி அவள் குழல்களை முகர்ந்தான், “மேனகையா, ரம்பையா என்று சந்தேகம் வந்தது” என்றான், அவள் குழலில் இருந்து வீசிய தைலத்தின் நறுமணத்தை இழுத்து முகர்ந்து.
சொர்க்க நிலைக்குப் போயிற்று அவள் மனம். “நான் அத்தனை அழகா?” என்று வினவிய அவள் குரலில் சந்துஷ்டி, வெட்கம் இரண்டுமே கலந்து ஒலித்தன.
“அவர்களை விட அழகு.”
“புகழ்ச்சி அதிகமாயிருக்கிறது.”
“புகழவில்லை. உண்மையைச் சொல்கிறேன்… அவர்கள் மனோபலமற்ற விசுவாமித்திரன் தவத்தை…”
“கெடுத்தார்கள் என்று சொல்வதுதானே? ஏன் விழுங்குகிறீர்கள் சொற்களை?” என்று அவள் சீறினாள்.
“மனோபலமற்ற தவசியை ஒருத்தி வசப்படுத்தினாள், மற்றொருத்தி அவருக்குக் கோபமூட்டினாள். ஆனால் மனோபலமுள்ள என்னையே நீ ஆட்டிவிட்டாய்” என்ற தீப்சந்த் “புஷ்பாவதி! இன்றுவரை எனது உணர்ச்சிகள் எந்தப்
பெண்ணைப் பார்த்தும் அசையவில்லை. ஆனால் மற்றவர்கள் சாதிக்க முடியாததை நீ சாதித்துவிட்டாய், இருப்பினும் உன் தூய்மையைக் கெடுக்க நான் விரும்பவில்லை. திருமணமான பின்பு கவுரவமாக உன்னை ஏற்பேன்” என்ற தீப்சந்த்
தனது கைகளை நீக்கினான் அவள் பூவுடலில் இருந்து.
அவள் மனம் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. “ஏன் இப்பொழுது திருமணத்துக்கு என்ன தடை?” என்று அவள் முணுமுணுத்தாள் அவன் மார்பில் கிடந்தபடி.
“இங்கா? இப்பொழுதா?” அவன் குரலில் பெரும் வியப்பு இருந்தது.
“ஆம். இங்கேயே, இப்பொழுதே!” என்றாள் புஷ்பாவதி.
“அது எப்படி சாத்தியம்?”
“ஏன் சாத்தியமில்லை? நீங்கள் க்ஷத்திரியர் தானே?”
“ஆம்.”
“நானும் க்ஷத்திரியப் பெண் தான்.”
“அது எனக்குத் தெரியும். உன் உச்சிப்பூவே அதை நிரூபிக்கிறது.”
“க்ஷத்திரியர்களுக்கு காந்தர்வம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.” என்று மெதுவாகச் சொன்னாள்.
தீப்சந்த் இந்த விவாதத்தில் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, “பெண்ணே! உன் தாய் தந்தை யார் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் அனுமதியின்றி நான் உன்னைத் தொடுவதும் தவறு. பழைய தர்மங்கள் இப்பொழுது நாட்டில்
இல்லை. ஆகையால் நமக்கு சௌகரியமான விஷயங்களுக்கு பழைய சட்டதிட்டங்களை உபயோகிக்கிறோம். காந்தர்வம் நமக்கு இந்த சமயத்துக்கு உபயோகமானது. பின்னால் தீவிர விரோதங்களில் கொண்டு விடும் “ என்றான் தீப்சந்த்.
“தவிர நான் அதிக நாள் உயிருடனிருப்பேன் என்று சொல்லவும் முடியாது.” என்றும் சொன்னான்.
அவள் முகத்தில் திகில் தெரிந்தது. “என்ன சொல்கிறீர்கள்? ஏன் இப்படி சகுனக குறைவாகப் பேசுகிறீர்கள்?” என்று கேட்டாள் திகிலுடன்.
“புஷ்பாவதி! ராஜபுதனத்துக்கு நான் இந்த வாளை அர்ப்பணித்திருக்கிறேன். இந்த நாடு சீர்படும்வரை அல்லது அடியோடு சீர்படாது என்ற நிலைமை வரும் வரை, எந்தப் பெண்ணை நான் மணந்தாலும் அவள் வாழ்க்கைப் பயனற்றுப்
போகும். உடந்தையாயிருக்க நான் விரும்பவில்லை” என்று திட்டமாகச் சொல்லிவிட்டு “வா அந்தப்புரத்துக்குப் போவோம்” என்று அவள் கையைப் பிடித்தான்.
அவள் கையை உதறி விடுவித்துக் கொண்டாள். “நான் வரவில்லை. நீங்கள் போங்கள் “ என்றாள் கோபத்துடன்.
“புஷ்பாவதி! நான் மணப்பதானால் உன்னைத்தவிர வேறு யாரையும் மணக்க மாட்டேன். இது சத்தியம். இப்படி வா.” என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான். அவள் அருகில் வந்ததும் தனது கச்சையில் இருந்த நவரத்தின
ஜெபமாலையை எடுத்து அவள் கழுத்தில் போட்டு “இது உன்னை. எந்த நிலையிலும் காப்பாற்றும். எந்தக் காரத்தை முன்னிட்டும் இதைக் கழற்றாதே” என்று கூறினான்.
அந்த மாலையின் ஸ்பரிசம் அவனே அவளை ஸ்பரிசிப்பது போலிருந்தது. மார்பில் அது புரண்டது. அவனே புரள்வது போலிருந்தது அவளுக்கு. அந்த உணர்ச்சியில் அவள் ஈடுபட்டிருக்கையில் அவன் கேட்டான். “புஷ்பாவதி! நீ
சக்தாவதர்களைச் சேர்ந்தவள் என்பதைப் புரிந்துகொண்டேன், சக்தாவதர்கள் உன்னைத் தூக்க முயன்றதில் இருந்து. ஆனால் நீ யார்? எந்த ஊர்? உன் தந்தையின் பெயர் என்ன?” விசாரித்தான்.
முதலில் அவள் ஊரைச் சொன்னாள். “எனது ஊர் நாகராமக்ரா.” என்று. –
அதைக் கேட்ட தீப்சந்த் பிரமை பிடித்து அதிர்ச்சியின் எல்லையை அடைந்து நின்றான். “நாகராமக்ராவா!” என்று மீண்டும் கேட்டான்.
“ஆம்.”
“அப்படியானால் நீ?”
“அதன் தலைவரின் மகள்.”
இதைக்கேட்ட தீப்சந்த் பெரிதாக கத்தான், “நமது திருமணம் நடந்த மாதிரிதான், என்றான் நகைப்பின் ஊடே.
“ஏன்?” ஏதும் புரியாமல் கேட்டாள் புஷ்பாவதி.
“உன் தந்தை என்னைக் கொன்றுவிடுவதாக சபதம் செய்திருக்கிறார்.”
இதை சர்வசாதாரணமாகச் சொன்னான் தீப்சந்த்.