Mohini Vanam Ch 13 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 13 பொறாமை எனும் முள்செடி!
Mohini Vanam Ch 13 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
தங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க முடியாது என்பதற்கு தீப்சந்த் சொன்ன காரணத்தைக் கேட்டதும் புஷ்பாவதி அதிர்ச்சியுற்றுப் பல விநாடிகள் நின்று விட்டாள்.
“என் தந்தை உங்களை எதற்காகக் கொன்றுவிட சபதம் செய்தார்? நீங்கள் அப்படி என்ன தவறு செய்தீர்கள்?” என்றும் விசாரித்தாள் அதிர்ச்சியின் ஊடே.
அவன் முகத்தை ஒருமுறை ஏறெடுத்தும் நோக்கி, “சிறிதும் களங்கமற்ற இந்த வீர முகத்துக்கு உடையவர் எந்த அபவாதத்தைச் செய்திருக்க முடியும்?” என்று உள்ளுக்குள்ளும் கேட்டுக்கொண்டாள்.
தீப்சந்தின் கண்கள் அவளை ஊடுருவி அளவெடு தன. அவள் முகத்தில் முதலில் விரிந்த அதிர்ச்சியையும் கவனித்தான். பிறகு தனது முகத்தை ஆராய்ந்து உள்ளுக்குள் வினா எழுப்பிக்கொண்டு குழம்பிய பார்வையையும்
கவனித்தான். இவற்றின் விளைவாக அவளிடம் அனுதாபம் கொண்டு “பெண்ணே! நான் தவறு எதுவும் செய்யவில்லை. ஆனால் ராஜபுதனம் இன்றிருக்கும் நிலையில் தவறு எது, சரி எது என்று நிர்ணயிக்கவும் முடியாது. மேவார்
ராணாவைப் பாதுகாக்க வேண்டிய சந்தாவதர்களும் சக்தாவதர்களும் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளத் தயாராயிருக்கிறார்கள். இதனால் ராஜபுதனம் அழிந்துவிடும் என்ற கவலை அவர்களுக்குக் கிடையாது. கடந்த காலத்தில்
ராணாவுக்குப் பாதகமாக நடப்பது ராஜதுரோகம் என்று கருதப்பட்டது. ராஜதுரோகம் செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இப்பொழுது ராஜதுரோகம் நாட்டுத் துரோகம் அனைத்தும் சாதாரணமாகிவிட்டது.” என்றான்
தீப்சந்த்.
தான் கேட்ட கேள்விக்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல் தீப்சந்த் சுற்றி வளைத்துப் பேசுவதைக் கண்ட புஷ்பாவதி சீற்றத்துக்குள்ளானாள். “நான் இந்த நாட்டு சரித்திரத்தைப் பற்றிக் கேட்கவில்லை. ராணாவின் நிலை பற்றியும்
கேட்கவில்லை. ராஜதுரோகத் தத்துவங்களைப் பாடம் கேட்கவும் இங்கு வரவில்லை” என்று சூடாகப் பேசினாள்.
தீப்சந்த் மெதுவாக அவள் தோளைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்து வேறு என்ன பாடம் கேட்க வந்தாய்?” என்று வினவினான்.
சாதாரண மனநிலையில் இருந்தால் புஷ்பாவதி அவன் கேள்விக்குச் சரியான பதில் கொடுத்திருப்பாள், அல்லது பதிலுக்குப் பதில் அவன்மீது சாய்ந்து செயல்பட்டு இருப்பாள். ஆனால் திகிலுற்ற நிலையில் அவள் மனம் அத்தகைய
விளையாட்டு எதற்கும் இடங் கொடுக்காததால் நேரிடையாகப் பேசுங்கள். நான் கேட்ட கேள்விக் குத் திட்டமான பதில் வரட்டும். உங்களுக்கும் என் தந்தைக்கும் விரோதம் வரக் காரணம் என்ன?” என்று வினவிய அவள் குரலில் சற்றுக்
கடுமையும் இருந்தது.
அப்பொழுதும் உடனடியாக பதில் சொல்லவில்லை, தீப்சந்த், தனது கச்சையில் இருந்த உச்சிப்பூவை எடுத்து ஆராய்ந்தான் ஒருமுறை. “அப்பா இதன் மகிமை பெரிது. நாம் சந்தித்த சில விநாடிகளுக்குள்ளாகவே நம்மைப் பிரித்துவிடும்
போலிருக்கிறது” என்று சொன்னான் துயரம் தோய்ந்த குரலில், “அந்தக் கதையைச் சொல்கிறேன் கேள். பிறகு நாம் மணக்கமுடியுமா என்பதை நீயே முடிவு செய்.” என்ற தீப்சந்த் “முதலில் ஒரு கேள்விக்குப் பதில் சொல். நாகராமக்ரா
இங்கிருந்து 16 மைல் இருக்கிறது. அங்கிருந்து நீ எதற்காகத் தனித்து மோகினி வனம் வந்தாய்?” என்று வினவினான்.
புஷ்பாவதி சிறிதும் சிந்திக்காமலேயே பதில் சொன்னாள் : “சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்” என்று.
“பரவாயில்லை சொல்.” என்றான் தீப்சந்த்.
“மகாராணாவைப் பார்க்க வந்தேன்.” என்றாள் புஷ்பாவதி தலைகுனிந்து.
இதைக் கேட்டதும் தீப்சந்துக்குத் தூக்கிவாரிப் போட்டது. “என்ன!- மகாராணாவைப் பார்க்க வந்தாயா?” என்று வியப்புடன் வினவினான்.
“ஆம்.”
“உனது தந்தையே அனுப்பினாரா?”
“ஆம்.”
“மகாராணா இப்போது குழந்தையில்லை.”
“தெரியும் எனக்கு.”
“வாலிபத்தை எட்டிவிட்டார்.”
“ஆமாம்.”
“அவரிடம் நீ வருவதாகத் தெரிந்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?”
“மற்றவர்கள் நினைப்பதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை.”
இதைக் கேட்டதும் தீப்சந்தின் உள்ளம் பெரிய எரி மலையாகிக் கொண்டிருந்தது. இருப்பினும் அதை வெளிக்குக் காட்டாமல், ‘மகாராணாவை உனக்கு முன்பே தெரியுமா?’ என்று வினவினான்.
புஷ்பாவதி அவன் கேள்விகளின் போக்கை, மனத்தின் நிலையை, சொற்களில் ஒலித்த சந்தேகத்தை, கவனிக்கவே செய்தாள். “ஆண்களுக்கு எடுத்ததற்கெல்லாம் சந்தேகந்தான்” என்று உள்ளூர சொல்லிக்கொண்டாள். அப்படி அவன்
சந்தேகப்பட்டதும் உள்ளூர மகிழ்ச்சியையே அளித்தது. சந்தேகம் காதலில் முளைக்கும் முள்செடி என்பதை உணர்ந்ததால், உள்ளூர இன்பமடைந்த புஷ்பாவதி “தெரியும்” என்று கூறினாள்.
சந்தேகத்தின் உச்சகட்டத்தை அடைந்த தீப்சந்த், “எப்படித் தெரியும்? எங்கு சந்தித்திருக்கிறாய்?” என்று வினவினான் சீற்றத்தைக் குரலில் அள்ளித் தெளித்து.
புஷ்பாவதி அவன் சந்தேகத்தை மேலும் கிளற இஷ்டப்பட்டு, ‘நாகராமக்ராவிலேயே சந்தித்திருக்கிறேன்” என்றாள்.
“ஓகோ! அங்கேயே சந்தித்திருக்கிறாயா?” என்று இகழ்ச்சியுடன் வினவினான் தீப்சந்த்.
“அங்குதான்.” என்று திட்டமாகச் சொன்னாள்.
“அங்கு சிங்கம் அடிக்கடி வருமே” என்று தீப்சந்த் அதிக இகழ்ச்சியுடன் கேட்டான்.
“அங்கு புலிகள் தான் அதிகம். நாகராமக்ரா என்றால் புலிமலை அல்லவா?”
“புலி இருக்கிற மலைக்காட்டுக்குச் சிங்கம் வரக்கூடாது என்ற விதி இருக்கிறதா?”
“சிங்கமா! என்ன உளறுகிறீர்கள்?”
“பீம்சிம்மம், அதுதான் பீம்சிங், அடிக்கடி வருகிறது அல்லவா?”
அவன் கொண்டு செல்லும் பாணியை உணர்ந்த புஷ்பாவதிக்கு மெல்ல திகில் உண்டாயிற்று.’ நான் அதிக சாமர்த்தியத்தைக் காட்டிவிட்டேனோ இந்த விளையாட்டில்?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள் ஆகவே சற்று
நிதானப்பட்டு எச்சரிக்கையுடன் பேச முற்பட்டாள். “தீப்சந்த்! கண்டபடி பேசாதீர்கள். நாகராமக் ராவில் மகாராணா வேட்டைக்காக விடுதி ஒன்றை அமைத்திருக்கிறார். அங்கு எப்படி வராமல் இருப்பார்?” என்று வினவினாள்.
“அந்த விடுதியில் நடப்பது புலிவேட்டையல்ல என்று கேள்வி. கேள்வியென்ன எனக்கே தெரியும். அங்கு ஒரு அழகிய ஆடு வருகிறது. அதை சிங்கம் வேட்டையாடினாலும் அது சாவதில்லை. அந்த வேட்டையில் ஆடும் ஒத்துழைக்கிறது…”
பேச்சை முடிக்கவில்லை தீப்சந்த். அரைகுறைப் பேச்சை அனர்த்தத்தை விளைவிப்பதாயிருந்தது, அத்துடன் நிற்கவில்லை. தீப்சந்த். “நீயும் அங்கு தான் ராணாவைச் சந்திப்பாயோ?” என்று ஒரு கணையையும் கொடுத்தான்.
“இந்தக் கேள்விக்கு நானே உங்களைக் கொன்றுவிடுவேன் “ என்றாள் புஷ்பாவதி, சீற்றத்தால் காலையும் தரையில் உதைத்தாள்.
“தகப்பன் எப்படி, அப்படி மகள் “ என்று சொன்னான் தீப்சந்த்.
“என்ன உளறுகிறீர்கள்?” அத்துமீறிய சினத்துடன் எழுந்தது புஷ்பாவதியின் கேள்வி.
என்ன காரணத்தாலோ திடீரென நிதானத்துக்கு வந்துவிட்டான் தீப்சந்த். “உளறவில்லை புஷ்பாவதி! நீ என்ன காரணத்திற்காக என்னைக் கொல்வதாகச் சொல்லியிருக்கிறாயோ அதே காரணத்திற்காகத்தான் உன் தந்தையும் என்னைக்
கொல்ல சபதம் செய்திருக்கிறார். சென்ற ஆண்டு நான் புலி மலைக்கு வந்திருந்தேன். இரவு நேரம். தூரத்தில் இருந்து விளக்கொளி பார்த்து வேட்டை விடுதிக்குச் சென்றேன். அங்கு ஒரு சாளரத்தில் விளக்கு வெளிச்சத்தில் இந்த மகாராணா
நின்றிருந்தார். அவரை நோக்கித் தலை முக்காடிட்ட ஒரு பெண் வந்தாள். மகாராணா அவள் முக்காட்டை நீக்கினார். அதற்குள்ளிருந்து முகம் மிக அழகாயிருந்தது. அடுத்த விநாடி அவளை இறுகத் தழுவினார் மகாராணா. நான் அதிர்ச்சி
யுற்று நின்றேன். திடீரென என் கழுத்தில் ஒரு கை விழுந்தது. நான் திருப்பிப் பார்த்தேன். உன் தந்தை நின்றிருந்தார். “யார் நீ?”“ என்று வினவினார்.
“நான் பெயரைச் சொன்னேன்.”
“நீ இன்று பார்த்தது யாரும் அறியாத ரகசியம். இது வெளியே வந்தால் மேவார் சிதைந்துவிடும். ஆகையால் என்னுடன் வா.” என்றார் உன் தந்தை.
“எதற்கு?” என்றேன்.
“இங்கு அனுமதி பெறாமல் வருவதற்குச் சிறை தண்டனை உண்டு. முதலில் வா. சிறையில் பேசிக்கொள்வோம்” என்றார்.
“நான் செல்ல மறுத்தேன். அவர் கத்தியை ஓங்கி னார். நான் அதைப் பிடுங்கித் தூர எறிந்தேன். அவர் கையை முறுக்கிக் கீழே தள்ளினேன்.”
“அடுத்த முறை இங்கு வா! உன்னைக் கொன்று போடுகிறேன். என் வாளின் மேல் ஆணை “ என்றார்.
‘நான் அங்கு நிற்கவில்லை. விரைந்து சென்று விட்டேன். அந்தப் பெண்ணும் நல்ல அழகி. ஆனால் ராணா வண்டு என்று கேள்வி. மலருக்கு மலர் தாவும் பழக்கம் உண்டாம். நீயோ அவரைச் சந்தித்திருப் பதாகச் சொல்கிறாய்
நாகராமக்ராவில். உன் தந்தை இப்பொழுது மகாராணாவிடம் உன்னையே அனுப்புகிறார். காரணம் எனக்குத் தெரியவில்லை” என்று பழைய கதையை முடித்துப் புதிய கதைக்கும் வித்திட்டான் தீப்சந்த்.
புஷ்பாவதியின் மனம் எரிமலையாயிற்று. “உங்கள் மட்ட புத்தியைக் காட்டாதீர்கள். நான் வந்த காரணத்தை சலூம்பிராவிடம் கேளுங்கள். மகாவீரனான அவன் ஏன் என்னைத் தூக்கிச் செல்ல முயன்றான் என்று விசாரியுங்கள்” என்றாள்.
தீப்சந்தின் பொறாமை எல்லை மீறியதால் அவன் நிதானந்தை இழந்து, “சலூம்பிராவைக் கேட்பானேன்? என்னால் ஊகிக்க முடியாதா என்ன?” என்று வினவினான்.
அடுத்த விநாடி அவனே, திகைக்கும் நிகழ்ச்சி ஏற்பட்டது.
புஷ்பாவதி தனது வலது கையைத் தூக்கிப் பளீரென அறைந்துவிட்டாள் தீப்சந்தின் கன்னத்தில். நிசப்தமான அந்தச் சூழ்நிலையில் அவளது அறையின் ஒலி நந்தவனம் எங்கும் ஊடுருவிச் சென்றது. அந்த அறையைவிட பயங்கர
நிகழ்ச்சியொன்று அடுத்து தொடர்ந்தது மின்னல் வேகத்தில்.