Mohini Vanam Ch 14 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 14 நில மோகினி
Mohini Vanam Ch 14 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
புஷ்பாவதி தன் கன்னத்தில் திடீரென அறைந்து விட்டதால் மிதமிஞ்சிய சினத்துக்குள்ளான தீப்சந்த் தனது சுய நிலையை, எதையும் சிந்திக்கும் தன்மையை, அடியோடு இழந்தான். முறை தவறி நடக்கவும் முற்பட்டு, அவளைத்
திடீரென தனது கைகளில் தூக்கிக்கொண்டு அவள் இதழ்களைக் கடித்து ரவிக்கையின் பட்டுக் கயிறுகளை அறுத் தெறிந்தான். மார்பை மூடிய கயிறுகள் அறுபட்டதால் சேலையை நீக்கித் தெரிந்த ஒரு பக்கத்து மார்பின் எழுச்சியை
வெறியுடன் நோக்கினான், பிறகு அவளைத் தரையில் கிடத்தி பக்கத்தில் மண்டியிட்டும் உட்கார்ந்து குரூரமான பார்வையொன்றை அவள் மீது செலுத்தினான்.
இத்தனைக்கும் அவள் எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல், திமிறாமல், அவனிடம் இருந்து விடுபட எந்த முயற்சியையும் செய்யாமல் செயலற்று தரையில் கிடந்தாள், அவள் கண்களில் அதுவரை இருந்த காமம் அகன்று வெறுப்பு
பெரிதும் நிலவியதைக் கண்ட தீப்சந்த், சரேலென தனது துர்ச்செயலை நிறுத்திக்கொண்டு, “என்ன விழிக்கிறாய்? ஏன் செயலற்றுக் கிடக்கிறாய்? உன்னைக் காத்துக்கொள்ள உனக்குத் திராணியில்லை?” என்று வினவினான்.
அவள் மேலும் வெறுப்பு மிகுந்த பார்வையை அவன் மீது செலுத்தி “காத்துக்கொள்ள திராணியிருக்கிறது, ஆனால், அவசியம் இல்லை” என்று சொன்னாள் வெறுப்பு குரலிலும் துலங்க.
தீப்சந்துக்கு ஏதும் விளங்கவில்லை. புஷ்பாவதி தன்னைக் காத்துக்கொள்ளும் சக்தியுள்ளவன் என்பதை அவள் சந்தாவதர்களிடம் இருந்து திமிறியபோதும், சண்டையிட்டபோதும்’ மோகினிவனத்தில் அவனே பார்த்திருந்தான்.
அப்பேர்ப்பட்ட பெண் இப்பொழுது எதற்காக இப்படிச் செயலற்றிருக்கிறாள்? என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான் அந்த வாலிப வீரன். வெளிப்படையாகவும் வினவினான், “ஏன் அவசியம் இல்லை?” என்று.
இவள் மல்லாந்து கிடந்தபடியே கேட்டாள் “நீங்கள் ராஜபுத்திரர் தானே?” என்று.
தீப்சந்தின் சினம் மேலும் அதிகரிக்கவே “ஏன்? இதிலும் சந்தேகமா?’ என்று வினவினான்.
“இந்த இரவின் ஆரம்பம் வரை சந்தேகம் இல்லை…”
“இப்பொழுது.”
“சிறிது சந்தேகந்தான்.”
“ஏன்?”
“உங்கள் செயல் ஒரு ராஜபுத்திரன் செயலாக இல்லை. ஒரு பெண்ணைப் பலவந்தமாக ஆடையைக் கிழித்து அவள் மானத்தைத் திருட முயற்சி செய்பவன் எப்படி ராஜபுத்திரனாக இருக்கமுடியும்?” அவள் மிகுந்த வெறுப்புடன் கேட்டாள்.
அவன் அதற்குப் பதில் சொல்ல இயலாமல் மண்டியிட்ட வண்ணமே உட்கார்ந்திருந்தான். பிறகு கிழிந்த ரவிக்கையையும் கலைந்த மேலாடையையும் சீர்செய்து அவள் அழகுகளை மறைக்கவும் முயன்றான்.
அவன் செயல்களைக் கண்ட புஷ்பாவதி லேசாக நகைத்தாள். “வீரரே! உங்களை ராஜபுதனத்தில் மகா புத்திசாலி என்று எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள். அந்தப் புத்தி எங்கே போய்விட்டது இப்பொழுது?” என்று நகைப்பின் ஊடே
கேட்டாள்.
தீப்சந்த் மவுனமே சாதித்தான். பொறாமையின் காரணமாக தான் செய்யத் துவங்கிய அக்கிரமம் அவனுக்குப் பெரும் அவமானத்தை அளிக்கவே, அவன் பேசும் சக்தியை அறவே இழந்தான்.
புஷ்பாவதி பேசத் தொடங்கினாள். “உங்கள் செய் கையை நான் தடுக்காததற்குக் காரணம் தெரியுமா?” என்று வினவினாள்.
“தெரியவில்லை.” தீனமான குரலில் பேசினான் தீப்சந்த்.
“வீரரே! ராஜபுத்திரப் பெண்மணிகள் ஆயுளில் யாராவது ஒரு புருஷனிடந்தான் மனதைப் பறிகொடுப்பார்கள். அப்படியிருக்க என்னைத் தொட உங்களை அனுமதித்த பிறகு, உங்களை நாடி நான் அந்தப்புரத்தில் இருந்து இங்கு
ஓடிவந்த பிறகு, இந்த மரக்கூட்டத்தின் மறைவில் தங்கியபிறகு, இன்னொரு புருஷனை நான் மனதில் நினைக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? அது மட்டும் அல்ல ; உங்கள் காதலையும் அதன் வேகத்தையும் கூட சற்று முன்பு
நீங்கள் என்னை உணர வைத்து விட்டீர்கள். அந்தக் காதல் உங்கள் கண்களை மறைத்து விட்டது ; சிந்தனையை மழுங்க வைத்துவிட்டது. இல்லாவிட்டால் ராணாவுக்கும் எனக்கும் முடிச்சுப் போட்டு விபரீத நிலையை ஏற்படுத்துவீர்களா?
உங்கள் பொறாமையே உங்கள் சினத்துக்கும் செய்கைக்கும் காரணம் என்பதால் உங்களை அறைந்ததோடு விட்டேன். இல்லாவிட்டால் நான் முதலில் சொன்னபடி, உங்களைக் கொலையே செய்திருப்பேன்” என்று விளக்கமாகப்பேசிய
புஷ்பாவதி தனது கையை உயர்த்தி தான் அறைந்த அவன் கன்னத்தை மெதுவாகத் தடவினாள்.
தீப்சந்த் பிரமை பிடித்து உட்கார்ந்த வண்ணமே இருந்தான். அவன் சிந்தனை மெதுவாக சரியான வழியில் செயல்படவும் தொடங்கிற்று. புஷ்பாவதியை ராணாவுக்கு முன்பே தெரிந்திருந்தால் தான் அவளைத் தூக்கி வந்து அவர்
பள்ளியறைத் தரையில் போட்டதுமே ராணா திகைப்படைந்திருப்பாரே. ராஜமாதாவுக்குக்கூட அவள் இன்னாரென்பது தெரிந்திருக்க வேண்டுமே. இருவரும் அவளை இன்னாரென்று புரியாமல் தன்னைத்தானே விசாரித்தார்கள் என்று
கோர்வையாக நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்தான். அப்பொழுதுதான் தனது காரண மற்ற சீற்றம் அவனுக்குப் புரிந்தது. ஆகவே, அவள் மார்பை நன்றாகவே மூடியதன்றி, அறுத்தப்பட்டுக் கயிறு களைக் கொண்டு, ரவிக்கையை
மீண்டும் பிணைத்தான்.
அவன் பிணைத்தபோது, அவள் தன் கையொன்றால் அவன் கையைப் பற்றி “வேண்டாம் அவை பிரிந்தபடியே இருக்கட்டும்” என்றாள்,
அவன் கண்கள் வெட்கத்துடன் அவளுடைய கண்களைச் சந்தித்தன. வெட்கப்படவேண்டிய அவள் கண்கள் அவனுடைய கண்களைத் தைரியத்துடனே சந்தித்தன. “நீங்கள் தவறு ஏதும் செய்யவில்லை. உங்களைத் துன்புறுத்திக்
கொள்ளா தீர்கள்” என்று கூறி, அவன் இரு கன்னங்களையும் தனது கையால் பிடித்தாள் புஷ்பாவதி.
புஷ்பாவதியின் பட்டுக் கைகள் தனது கன்னங்களைத் தடவியதால் அவள் ரவிக்கைப் பட்டுக் கயிறுகளைத் தான் அறுத்தது சரியா என்று உள்ளூர கேட்டுக் கொண்ட தீப்சந்த், அவள் உதட்டில் லேசாக ரத்தம் துளிர்ப்பதைக் கண்டு
“புஷ்பாவதி! நான் ஒரு முரடன் மடையன்” என்று கூறினான். அவள் உதட்டில் தனது பல் பட்ட இடத்தை லேசாக விரலால் துடைத்தான். பிறகு முறை அதுவல்ல என்பதைப் புரிந்து கொண்டு மண்டியிட்ட நிலையில் சற்றே குனிந்து, அவள்
இதழ்களைச் சுவைத்து துளிர்த்த ரத்தத்தைத் தான் ஏற்றுக் கொண்டான்.
அந்த ரத்த வைத்தியம் அவளுக்குப் பேரின்பமாக இருந்தது. அவள் இதழ்களில் அழுத்திய அவன் இதழ்கள் அங்கேயே புரண்டு கொண்டும் திரும்பத் திரும்ப சுவைத்துக் கொண்டும் இருந்தன.
புஷ்பாவதி உணர்ச்சி மிகுதியாலும் மகிழ்ச்சி வெள்ளத்தாலும் மெதுவாகத் தனது நாக்கை அவனுடைய இதழ்களுக்குள் செலுத்தி அவன் நாக்கைத் தொடச் செய்தாள். சொர்க்கம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானித்த
தீப்சந்த், அவள் இதழ்த் தேனைப் பருகிக் கொண்டு மலரில் அமர்ந்து தேனை உறிஞ்சி மீளாத வண்டின் நிலையில் இருந்தான்.
இருவரும் சுயநிலை தவறிய நேரம். பிரிந்த அவளது பட்டுக் கயிறுகளை தீப்சந்த் தன் கையால் நீக்கினான் இதழ்களில் இருந்து மீண்டும் அவள் மார்பை நோக்கினான். பிறகு பெருமூச்சொன்று விட்டு, அவள் மார்பு மீது முகத்தைப்
பொருத்தி அவன் நீண்ட நேரம் செயலற்றுக் கிடந்தான். அந்த் இன்பத்திலும் கூட அவனது உயரிய குணங்கள் மேம்பட்டு நின்றதால் மெள்ள எழுந்த தீப்சந்த், அவள் அழகியங்களை மீண்டும் மறைத்தான் சேலை கொண்டு. பிறகு
சொன்னான் ; “எழுந்திரு புஷ்பாவதி.” என்று.
அவன் பேச்சில் அதிகாரம் இருந்ததைக் கவனித்த புஷ்பாவதி, அவன் தன்னிடம் சொந்தம் கொண்டாடுகிறான், தன்னை அவன் தனது சொத்தாக மதிக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டதல், முகத்தில் மகிழ்ச்சிச் சாயைப் படரவிட்டுக்
கொண்டாள். எழுந்திருக்காமல் நிலத்தில் படுத்தபடி கிடந்தாள். அவளைக் கூர்ந்து நோக்கிய தீப்சந்த் பிரமை பிடித்து நின்றான்.
நிலமோகினி என தரையில் கிடந்தாள் புஷ்பாவதி. அவள் கால்களை லேசாக மடித்திருந்ததால் அவள் பக்க அழகுகள் தங்கள் பரிமாணத்தைக் காட்டின. அவள் செவ்விய உதடுகளில் புன்னகை படர்ந்திருந்தது. முகமலர் மிகவும்
மென்மையடைந்து அந்த ஆடவனை வெற்றி கொண்டதால் ஏற்பட்ட பெருமையை மிகவும் பெரிது படுத்திக் காட்டியது. அவள் லேசாக ஒருக்களித்ததால் அவள் ஒருபுற மார்பு கட்டாந்தரையில் அழுந்திக் கிடந்தது. அந்த மலர் உடல்
கட்டாந்தரையின் சிறு கற்களால் என்ன அவதிப்படுமோ என்று நினைத்த தீப்சந்த் குனிந்து மெள்ள அவளை இரு கைகளாலும் தூக்கி நிறுத்தி அவள் சேலையை சரிசெய்து குழல்களை யும் கையால் சரிப்படுத்தினான்.
அவனது செய்கையைக் கண்ட அவள் மெதுவாக நகைத்து, “நான் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் நீங்களே செய்கிறீர்களே!” என்றாள்.
அவள் நகைப்பு பேச்சு, இரண்டிலுமே மதுரம் இருந்ததைக் கவனித்த தீப்சந்த் “தவறு புஷ்பாவதி. இது நான் செய்ய வேண்டியதுதான். குற்றம் புரிந்தவன் தானே அதைத் தவிர்க்க வேண்டும்.” என்று கூறினான்.
“அது குற்றமா?” என்று கேட்டாள் புஷ்பாவதி அவனை ஏறிட்டு நோக்கி.
“உன்னை அலங்கோலப்படுத்தியது குற்றமல்லவா?”
“இல்லை.”
“ஏன் இல்லை?”
“உங்கள் சொத்தை நீங்கள் எதைச் செய்தால் யார் கேட்க முடியும்?”
“எதைச் செய்தாலுமா?”
“ஆம்.”
“முறைகேடாக…?”
“நீங்கள் சம்பந்தப்பட்டவரை எதுவும் முறைகேடு அல்ல.”
“அது?”
“அதுவுந்தான்.”
இதற்குமேல் அவள் பேசவில்லை. அவன்மீது லேசாகச் சாய்ந்து “நேரமாகிறது. நான் வருகிறேன்” என்றாள்.
“நான்?” என்று அவன் வினவினான்.
“நீங்கள் சிறிதுநேரம் கழித்து வாருங்கள்” என்றாள் அவள்.
“ஏன்?”
“நாம் இருவரும் ஒன்றாகச் சென்றால் சந்தேகப்படுவார்கள்.”
“அதனால் நமக்கென்ன?”
“உங்களுக்கு எதுவுமில்லை. நான் பெண். மகாராணி ஏதாவது சொல்வார்கள்.”
இப்படிக் கூறிய அவள் வேகமாக அந்த இடத்தை விட்டு நடந்தாள் அந்தப்புரத்தை நோக்கி.
தீப்சந்த் நின்ற இடத்திலேயே நின்று தீர்க்க சிந்தனையில் ஆழ்ந்தான். மறுநாள் இரவு அவன் சலூம்பிராவை சோம்ஜி இல்லத்தில் சந்திக்க வேண்டியிருந்ததையும் நினைத்தான். சற்று முன்பு ஏற்பட்ட நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தான்.
பிறகு வீரன் வாழ்க்கை நிலையில்லா வாழ்க்கை என்று நினைத்துப் பெருமூச்செறிந்து அந்தப்புரத்தை நோக்கி மெதுவாக நடக்கலானான்.
அவனுக்கு முன்பே அந்தப்புரப் படிகளில் ஏறிச் சென்றுவிட்ட புஷ்பாவதி மாடிப்படியின் கதவை ஓசைப் படாமல் மெதுவாகத் திறந்துகொண்டு தனது அறையை நோக்கி அடிமேலடி வைத்து நடந்தாள். அவள் அறைக் குள் நுழைந்து
மெதுவாகக் கதவைச் சாத்த முயன்றாள். முடியவில்லை. வாயிற்படியில் ராஜமாதா புன்முறுவல் முகத்தில் தவழ நின்றிருந்தாள். அறைக்குள் நுழைந்த சித்தினி சித்தம் கலங்கி முகம் குபீரென குங்குமமாகச் சிவக்கப் பதறும் நிலைக்கு
வந்தாள்.