Mohini Vanam Ch 16 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 16 வாலிபத் துடிப்பு
Mohini Vanam Ch 16 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
புஷ்பாவதியின் மார்புகளுக்கு இடையில் படுத்துக் கிடந்த தீப்சந்த், மகாராணாவிடம் தான் அடிமைப்பட தயார் என்று கூறியதும், தனக்கும் மகாராணிக்கும் நடந்த உரையாடலை அவன் கேட்டுவிட்டான் என்பதை புஷ்பாவதி
உணர்ந்துகொண்டாள். ஆனால், எத்தனை தூரம் கேட்டிருப்பான் என்பதை அறியாததால் சிந்தனையில் இறங்கவே செய்தாள்.
அவளது சிந்தனையைக் குழப்ப இஷ்டமில்லாத தீப்சந்த், நடந்ததைத் தானே விவரிக்க முற்பட்டு, “புஷ்பாவதி! தீப்சந்தின் கண்கள் எப்பொழுதும் ஏமாந்தது இல்லை. சிந்தனையும் ஊகிக்கும் சக்தியை இழந்ததில்லை” என்று கூறினான்.
“உன் சாளரம் திறந்தபோது மகாராணியின் சாளரமும் திறந்து அவள் முகமும் தோன்றியபோதே உன்னுடைய ஒவ்வொரு அசைவையும் மகாராணி கவனிக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டேன். நீ என்னைச் சந்திக்க நந்தவனத்தில்
வந்தபோதும் அவள் கண்கள் உன்னைத் தொடர்ந்து வந்தன. அதனால் தான் அவள் கண்களிலிருந்து உன்னை மறைக்க மரக்கூட்டத்தின் மறைவுக்கு அழைத்துச் சென்றேன். நீ அரண்மனைக்குள் மீண்டும் புகுந்த பின்பும்
மகாராணியின் கண் உன் மீது இருக்கும் என்பதை ஊகிக்க பிரமாதமான சிந்தனைத் திறன் எதுவும் தேவையில்லை. அதுவும் அன்றி, நீ அந்தப்புரத்தை நோக்கி நடந்ததுமே மகாராணியின் சாளரம் மூடப்பட்டதைக் கவனித்த நான்
மகாராணி உன்னை எதிர்பார்த்துக்காத்திருப்பார் என்பதைப் புரிந்து கொண்டு உன்னை மெதுவாகத் தொடர்ந்தேன். உனது அறைக்கு முன்னிருந்த இடைவழியை அடைந்ததுமே மகாராணியும் நீயும் பேசிக்கொண்டிருந்தது காதில்
விழுந் ததால், சிறிது நேரம் அங்கேயே நின்றேன். உங்கள் உரையாடல் மிக இன்பமாயிருந்தது எனக்கு. உன் உதட்டுக் காயத்தைப் பற்றி மகாராணி கேட்டதும் நீ மகாராணிக்குப் பதிலிறுத்ததும் என் மனதை அப் பொழுதே மயக்கிவிட்டன.
அதுவும் கண்ணுக்குப் புலப்படாத இடங்களில் முத்திரை பொறிப்பதைப் பற்றி நீ குறிப்பிட்டாயே, அதைக் கேட்டதும் என் முட்டாள் தனத்தைப் புரிந்துகொண்டேன்” என்றும் தீப்சந்த் சொன்னான்.
இதைக் கேட்ட புஷ்பாவதியின் இதயம் படக் படக்கென்று அடித்துக்கொண்டது. “இதையெல்லாம் ஒட்டுக் கேட்க, கேட்டு என்னிடம் சொல்ல வெட்கமாயில்லை உங்களுக்கு?” என்று கேட்டாள் சங்கடத்துடன்.
புஷ்பாவதியின் மார்புமீது படுத்துக் கிடந்த அந்த வாலிபன் காதில் அவள் மார்பு படபடத்த ஒலி டக்டக் கென்று வேகமாகக் கேட்கவே, அவன் எழுந்து உட்கார்ந்தான் பஞ்சணையில். “உன் மார்பு ஏன் இப்படி அடித்துக் கொள்கிறது?”
என்று கேட்டு அவள் மார்புமீது கையையும் வைத்தான்.
அவன் கையின் ஸ்பரிசம் அவளுக்குச் சிறிது சாந்தியை அளிக்கவே புஷ்பாவதி சொன்னாள், “அச்சத்தினால்” என்று.
“என்ன அச்சம்?” வைத்த கையை எடுக்காமலே கேட்டான் தீப்சந்த்.
“உங்களை நான் வசப்படுத்துவதாக மகாராணியிடம் சொன்னதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்…” என்று ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொன்னாள் புஷ்பாவதி.
“அது தவறுதான்.”
“எது?’
“ஏற்கெனவே வசப்பட்டுவிட்டவனை வசப்படுத்தப் போவதாகச் சொன்னது.”
“இந்தப் பசப்பு வார்த்தைகளில் நான் ஏமாற மாட்டேன்.”
“பசப்பு வார்த்தையாயிருந்தாலும் கசப்பு வார்த்தையல்லவே?”
“அல்ல” என்று புஷ்பாவதி மயக்கும் விழிகளால் நோக்கி உதடுகளில் மந்தகாசத்தையும் விரித்துக் கொண்டாள்.
இரண்டையும் கண்டான் தீப்சந்த். மெள்ள குனிந்து அவள் இதழ்களைத் தனது இதழ்களால் மெதுவாகத் தொட்டு மீண்டான். “கசப்பில்லை புஷ்பாவதி! மதுரமாயிருக்கிறது” என்றும் சொன்னான்.
“இறையாதீர்கள், யாராவது கேட்கப் போகிறார்கள்” என்றாள் புஷ்பாவதி.
“யார் கேட்கப் போகிறார்கள்?” என்று விசாரித்தான் தீப்சந்த்.
“அந்தக் கதவுக்கு அப்புறம் மகாராணி நின்றிருந்தால்?” என்றொரு கேள்வியை வீசினாள் புஷ்பாவதி.
“கதவு மூடித்தானே இருக்கிறது?” என்றான் தீப்சந்த்.
“மகாராணிக்குப் பாம்புச் செவி” என்று சுட்டிக்காட்டினாள் புஷ்பாவதி.
“ஆமாம்” என்று ஒப்புக்கொண்ட தீப்சந்த், “புஷ்பாவதி! விடிய. இன்னும் ஒரு ஜாமம் தானே இருக்கிறது, உறங்கு!” என்று கூறி அவள் மார்பில் துலங்கிய தனது ஜெபமாலையைக் கூர்ந்து நோக்கினான். அதன் நவரத்தினங்கள், அவள்
மார்பில் புரண்டாலும், அவள் மார்பின் அழகு அதற்கு வரவில்லையென்று அவன் தீர்மானித்தான். “அதனால் தான் மாலை நேராகத் தொங்காமல் அவள் மார்பின் எழுச்சி பள்ளங்களிலும், வளைந்து மறைந்து ஒடுகிறது” என்று தன்னுள்
சொல்லிக்கொண்டான். மாலையைச் சரிப்படுத்தும் சாக்கில் அவள் மார்பையும் தொட்டான்.
“இந்தக் கெட்டிக்காரத்தனமெல்லாம் வேண்டாம், மாலை சரியாகத்தான் இருக்கிறது” என்ற அவள் திரும்பிக் குப்புறப் படுத்தாள்.
அவள் முதுகைத் தடவிக்கொடுத்த தீப்சந்த், “ தூங்கு புஷ்பாவதி! தூங்கு” என்றான். பிறகு எழுந்து கட்டிலில் கிடந்த அவள் உடலைப் பார்த்துக்கொண்டே நின்றான். பிறகு சொன்னான். ‘புஷ்பாவதி! இன்றிரவு முதல் நான் உன்
அடிமை. நாளை முதல் உனக்கும் மகாராணாவுக்கும் அடிமை. ஆனால் மகாராணாவுக்கு அடிமையாயிருப்பதில் சுகம் எதுவும் இல்லை. இரு அடிமைத்தனத்துக்கும் உள்ள வித்தியாசம் அதுதான்.” என்று கூறிவிட்டு அறைக் கதவைத்
திறந்து ஒருக்களித்தான். வாயிற்படியில் தலையை வைத்து நீண்டு படுத்துவிட்டான். படுத்தவன் உடனடியாக உறங்கிவிட்டான்.
ஆனால் பஞ்சணையில் படுத்திருந்த புஷ்பாவதிக்கு மட்டும் உறக்கம் வரவில்லை. புரண்டு இரண்டு மூன்று தடவை படுத்தாள். பிறகு தலையைத் திருப்பித் தரையில் உறங்கிக்கொண்டிருந்த தீப்சந்தைக் கவனித்தாள்.
உறக்கத்திலும் அவன் முகம் அழகாயிருந்தது. உதடு களில் புன்னகை அப்பொழுதும் அரும்பிக் கிடந்தது. அவன் மூச்சு நிதானமாகவந்துகொண்டிருந்ததைக் கண்ட் புஷ்பாவதி “எந்த அபாயமும் கலைக்க முடியாத இரும்பு மனம்
படைத்தவன் தீப்சந்த்” என்பதை உணர்ந்து கொண்டாள். அப்படிப்பட்ட இரும்பு இதயத்தையும் தன்னால் வளைக்க முடிந்ததை எண்ணி பெருமையும் கொண்டாள். அந்தப் பெருமிதம் முகத்தில் நிலவ, மெதுவாக உறக்கமும் கொண்டாள்.
மகாராணி காலையில் அந்த அறைக்கு வந்தபோதும் புஷ்பாவதி உறங்கிக் கொண்டிருப்பதையும் அவள் முகத்தில் பெருமிதம் விரிந்து கிடந்ததையும் கண்டு தனது எண்ணம் நிறைவேறிவிட்டதைப் புரிந்து கொண்டாள். அதனால்
ஏற்பட்ட உவகையுடன் கட்டிலில் உட்கார்ந்து, “புஷ்பாவதி! என் கண்ணே! எழுந்திரு” என்று அசைத்தாள் அவள் பூவுடலை.
புஷ்பாவதி அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்திருந்து “மகாராணி! நானே வருவதாக இருந்தேன் உங்களைச் சந்திக்க.” என்றாள்.
“யார் வந்தாலென்ன புஷ்பாவதி! காரியத்தைச் சாதித்துவிட்டாய்!” என்றாள் மகாராணி.
புஷ்பாவதி பிரமிப்புடன் மகாராணியை நோக்கி, “உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர் சொன்னாரா?” என்று வினவினாள்.
“அவர் சொல்வானேன். உன் முகத்தைப் பார்த்தேன். புரிந்துகொண்டேன்” என்ற மகாராணி “மகளே! நீ மேவாருக்குப் பெரும் சேவை செய்திருக்கிறாய். மேவார் மீண்டும் பழைய நிலைக்கு வந்தால் உன்னை மறக்காது.” என்று கூறினாள்.
அவள் சொற்களில் நன்றி ஒலித்தது.
“மகாராணி! சிறிதைப் பெரிதாக்குகிறீர்கள். நான் ஒரு பெண்…” என்று மேலும் ஏதோ சொல்லப் போனவளை மகாராணி தடுத்து. “ராஜபுத்திரப் பெண்களால்தான் எந்த நாடும் பிழைக்கிறது, அல்லது அழிகிறது. ராஜபுதனம் இன்று தலை
நிமிர்ந்து நிற்பது பல போர்களில் தோற்ற ஆண்களால் அல்ல, பெண்களின் தியாகத்தால் தான், அலாவு தீனிலிருந்து ஒவ்வொருவர் படையெடுப்பிலும் ஜோஹர் [தீக்குளிப்பு] செய்து கொண்ட மகாபதிவிரதைகளின் தியாகம் இந்த
மண்ணை இன்னும் காத்து வருகிறது. பெண்ணில்லையேல் இந்த ராஜபுதனத்தின் மானம் என்றோ அழிந்திருக்கும்” என்று வீராவேசத்துடன் பேசிய மகாராணி “உன் மணாளன் வந்தால் எனது அறைக்கு அனுப்பு” என்று கூறிவிட்டு
வெளியே செல்ல முயன்றாள்…
“அவர் இன்னும் என் மணாளனாக…” என்று புஷ்பாவதி தடுமாறிப் பேசினாள்.
“ஆனமாதிரிதான். இன்னும் ஆவதற்கு என்ன இருக்கிறது?” என்று லேசாசப் புன்முறுவல் செய்துவிட்டு, அந்த அறையை விட்டு அகன்றாள் மகாராணி.
மகாராணி சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் நீராடி தனது உடையையும் அணிந்து கச்சையில் வாளையும் தரித்துக்கொண்டு அந்த அறையில் தீப்சந்த் தோன்றினான். அப்பொழுதும் அவள் நீராடாமல் கட்டிலில் உட்கார்ந்து கால்களை
ஆட்டிக்கொண்டிருந்ததைக் கவனித்த தீப்பந்த் “எசமானிக்கு இன்னும் பொழுது விடியவில்லை போலிருக்கிறது?” என்று வினவினான்.
“எப்படி விடியும், இரவு முழுவதும் தூங்காமல் இருந்தால்?” என்று அவள் வினவினாள்.
“யார் தூங்காதிருக்கச் சொன்னது?”
“நீங்கள் தான்”
“நான் தூங்க வேண்டாமென்றா சொன்னேன்?”
“நீங்கள் கொடுத்த தொல்லையில் யார் தூங்க முடியும்?”
“தொல்லையா? என்ன தொல்லை?”
இதைக் கேட்ட அவள் புன்முறுவல் கொண்டாள். “நல்ல கேள்வி!” என்றும் சொல்லிவிட்டு “நீங்கள் மகாராணியைப் பார்த்துவிட்டு வாருங்கள். நானும் நீராடி சித்தமாகிறேன்” என்று கூற; மகாராணியின் அறையை நாடிச் சென்றான்
தீப்சந்த்.
அந்த அறை சாளரத்தை ஒட்டிப் போடப்பட்டிருந்த மஞ்சத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த மகாராணியின் முன்பு மண்டியிட்ட தீப்சந்த், மகாராணியைப் பேசவிட வில்லை. “மகாராணி! உங்கள் உபதேசம் பலித்து விட்டது” என்று தீப்சந்தே
பேச்சைத் தொடங்கினான்.
மகாராணிக்கு அவன் சொன்னது புரிந்தாலும் புரியாதது போலவே நடித்து, “எந்த உபதேசம் தீப்சந்த்?” என்று வினவினாள்.
“புஷ்பாவதிக்குச் செய்த உபதேசம்” என்றான் தீப்சந்த்.
“மகாராணி புன்முறுவல் கொண்டாள். உபதேசத்தின் விளைவு?” என்று வினவினாள்.
“நான் மகாராணாவின் அடிமை.” என்று சொன்னான்.
மகாராணியின் கண்களில் நன்றி ஒளி பளிச்சிட்டது. “மேவார் உனக்குக் கடமைப்பட்டிருக்கிறது” என்றாள்.
“எனக்கு அல்ல புஷ்பாவதிக்கு” என்று மகாராணியைத் திருத்திய தீப்சந்த் “மகாராணி! இனி மாகாராணாவைப் பற்றிய கவலையை விடுங்கள். அதை நான் ஏற்றுக் கொண்டுவிட்டேன்” என்றான்.
மகாராணி திகைத்தாள். மேவார் இன்றிருக்கும் நிலையில் பெரும் படைகளே மகாராணாவைக் காப்பாற்ற முடியாதிருக்க இந்தச் சிறுவன் என்ன செய்வான்? வாலிபத்தின் துடிப்பு இவனைப் பேசச் செய்கிறது” என்று உள்ளூர சொல்லிக்
கொண்டாள்.
ஆனால், அன்று இரவின் நிகழ்ச்சிகள் மகாராணியை அசர வைத்தன. தீப்சந்தின் பேச்சு வெட்டிப் பேச்சல்ல ; வாலிபத் துடிப்பும் வெற்றுத் துடிப்பல்ல என்பதை மகாராணி புரிந்து கொண்டாள்.