Mohini Vanam Ch 17 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 17 சோம்ஜியின் காரணம்
Mohini Vanam Ch 17 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மகாராணாவைப் பற்றிய கவலையைத் தான் ஏற்றுக் கொண்டு விட்டதாக தீப்சந்த் சொன்னதும், அது வாலிபத் துடிப்பின் விளைவே தவிர வேறில்லை என்று மகாராணி முதலில் தீர்மானித்தாள். அவள் அந்த முடிவுக்கு வந்ததே
புஷ்பாவதியிடம் அவன் கொண்டிருந்த காதல் வெறியின் விளைவுதான் என்பதிலும் மகாராணிக்குச் சந்தேகமில்லாது இருந்தது. அவள் அவன் பேச்சை அப்படியே நம்பாவிட்டாலும், மகாராணாவுக்கு சலூம்பிராவையே சந்தித்துப்
போராடும் திறனுள்ள ஒரு மெய்க்காவலன் கிடைத்து விட்டானே என்பதில் மட்டும் திருப்தியடைந்தாள். இதனால் தன் மகனின் உயிருக்கு அபாயமில்லாவிட்டாலும் இராஜபுதனத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பிளவினால்
விளையக்கூடிய ஆபத்தை எப்படிச் சமாளிப்பது என்ற கவலையால் மனம் நொந்தாள் மகாராணி.
அதற்கும் தீப்சந்தின் கரம் பெருமளவுக்கு உபயோகப் பட முடியும் என்பதை மகாராணி அன்று அடியோடு உணரவில்லை. தவிர மகாராணாவின் மெய்க்காவலனான தீப்சந்த் அன்று நடுப்பகல் வரை அரண்மனையில் தலை காட்டாதது
ராஜமாதாவுக்கு ஓரளவு சந்தேகத்தையும் விளைவித்தது. எங்கோ திரிந்துவிட்டு நடுப்பகலில் அவன் அரண்மனைக்கு வந்தபோதும் ராஜமாதா கேட்ட கேள்விகளுக்கு அவன் பொறுப்புடன் பதில் சொல்லாத தால் அவள் பெரும்
ஏமாற்றத்தையே அடைந்தாள்.
நடுப்பகலில் அரண்மனைக்குள் நுழைந்து மகாராணாவின் அந்தரங்க அறையை நாடிச்சென்ற தீப்சந்தை நடுவழியில் தடுத்த மகாராணி, “தீப்சந்த்! இத்தனை நேரம் எங்கு சென்றிருந்தாய்?” என்று வினவினாள்.
தீப்சந்த் மகாராணியை ஏறெடுத்து நோக்கினான் சிரிக்கும் கண்களால். “உதயபூரைச் சுற்றிப் பார்க்கப் போயிருந்தேன்” என்றான் நகைப்பொலி தொனித்த குரலில்.
மகாராணியின் விழிகள் ஏளனத்தைக் கொட்டின. “இதற்கு முன்பு நீ உதயபூரைப் பார்த்ததில்லையா?” என்று மகாராணி கேட்டாள் இகழ்ச்சி ததும்பிய குரலில்
“பார்த்திருக்கிறேன் ஒருமுறை” என்றான் தீப்சந்த்.
“இப்பொழுது மறுபடியும் பார்ப்பானேன்?” ராஜ மாதா எரிச்சலுடன் கேட்டாள்.
தீப்சந்த் சிறிதும் சிந்திக்காமலே சொன்னான். “அப்பொழுது பார்த்த கண்கள் வேறு.” என்று.
“இப்பொழுது புதுக் கண்களா?” ராஜமாதாவின் எரிச்சல் அதிகமாக ஒலித்தது குரலில்.
“கண்கள் புதிதல்ல, பார்வைதான் வேறு.”
“அப்பொழுது என்ன பார்வை, இப்பொழுது என்ன பார்வை?”
“அப்பொழுது தலைநகரை வேடிக்கைப் பார்க்க வந்த வாலிபன் பார்வை. இப்பொழுது மகாராணாவின் மெய்க் காவலன் பார்வை.”
ராஜமாதாவின் கண்களில் சிறிது சிந்தனை படர்ந்தது. தீப்சந்த் சொல்வதில் ஏதோ பொருள் இருப்பதைப் புரிந்து கொண்டதால், “இந்தப் புதுப்பார்வையிலிருந்து என்ன தெரிகிற?” என்று வினவினாள்.
“சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே?” என்று வினவினான் தீப்சந்த்.
“கோபத்துக்கு என்ன இருக்கிறது? அஞ்சாமல் சொல்.” என்றாள் ராஜமாதா.
மிகுந்த துணிவுடன் சொன்னான் தீப்சந்த். ‘மகாராணி! இந்தத் தலைநகரம் மகாராணாவைப் போலிருக்கிறது. போருக்கோ ராஜதானியின் தற்காப் புக்கோ லாயக்கற்றது. உல்லாசத்துக்கு நல்லது” என்று. இதைச் சொன்னதோடு
நிற்கவில்லை அவன். “மகாராணி! பழைய தலைநகரம் சித்தூரின் வலு இதற்கு இல்லை. அதற்குள்ள இயற்கைப் பாதுகாப்பும் இதற்குக் கிடையாது. படகில் உல்லாசப் பயணம் செய்ய உதயசாகர ஏரி இருக்கிறது. மோகினி வனம் போன்ற
இயற்கை நந்தவனங்கள் இருக்கின்றன சரசத்துக்கு. ஆனால் பெரும்படைகள் தாக்கினால் எதிர்த்து நிற்க இதன் அரண்கள் போதாது. என்னிடம் பதினாயிரம் வீரர்கள் இருந்தால் இந்தத் தலைநகரை இரண்டு நாட்களில் நான் கைப்பற்றி
விடுவேன்” என்றும் விளக்கினான்.
அவன் சொன்னது முற்றும் உண்மை என்பது மகாராணிக்குத் தெரிந்திருந்தாலும் அரைநாளுக்குள் அவன் எப்படித் தலை நகரின் பலவீனத்தை உணர்ந்தான் என்று விளங்காததாலும், “தீப்சந்த்! மாதக்கணக்கில் வீரர் களால் எடை போட
முடியாத இந்த மாநகரை நடுப்பகலுக்குள் நீ எடை போட்டு விட்டாயா?” என்று வினவினாள்.
- “இங்கிருந்துதான் ராணா பிரதாப் இருபத்திஐந்து ஆண்டு மொகலாய சாம்ராஜ்ஜியத்தை ஆட்டி வைத்தார் என்று அவள் பேச்சை முடிக்கு முன்பே, “மகாராணா பிரதாப்பை வைத்து மற்றவர்களை எடை போடாதீர்கள் மகாராணி. அவர்
ஒரு தெய்வப்பிறவி. எல்லாரும் பிரதாபசிம்மனாகி விட முடியாது. அவருக்குப்பின் இந்த மேவார் ராஜ்ஜியம் என்னவாயிற்று? அவர் புதல்வர் அமர சிம்மன் அரியணை ஏறி சுகவாழ்வில் இறங்கினார். சலவைக்கல் மாளிகை கட்டினார்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து பெரிய கண்ணாடியைத் தமது ஆலோசனை மண்டபத்தில் பொறுத்தினார். அப்படியே காலம் கழித்திருப்பார். ஆனால் அப்பொழுதும் அந்த ஆஸ்தானத்தில் ஒரு சலூம் பிரா இருந்தார். அந்தக் கண்ணாடி மீது
கீழே இருந்த அலங்கார வெண்கலக்கட்டியை எடுத்து எறிந்து கண்ணாடியை உடைத்து அமரசிம்மனை அரியணையிலிருந்து தரதரவென்று இழுத்துக் கொண்டு போருக்குச் சென்றார். இல்லையேல் அப்பொழுதே மேவார் போயிருக்கும்.
இது மேவாரின் சரித்திரம் மகாராணி. சாதாரண வீரர்களின் தியாகத்தோடு மகாராணாவின் தியாகமும் சேர்ந்ததால் அப்பொழுது மேவார் பிழைத்தது. இப்பொழுது மகாராணாவும் சுகவாசி, சலூம்பிராவும் தமது பலத்தை மகாராணாவை
எதிர்ப்பதில் செலுத்துகிறார் உதயபூர் அனாதையாகிவிட்டது. அதன் கோட்டை கொத்தளங்களுக்குப் பாதுகாப்புக் கிடையாது.” என்று வேகமாகப் பேசினான் தீப்சந்த்.
அவன் வேகத்தையும் வீரச்சொற்களையும் கேட்ட மகா ராணி மிதமிஞ்சிய வியப்பினால் திகைத்து நின்றாள்.
பிறகு மெதுவாகக் கேட்டாள், “இப்பொழுதுள்ள பீம்சிங் சலூம்பிராவை நமது வழிக்கு, மன்னரைப் பாதுகாக்கும் பாதைக்குத் திருப்ப முடியுமா?” என்று.
தீப்சந்த் சிறிது சிந்தித்தான். சிறிது நடந்தான் அப்படியும் இப்படியும் மகாராணி முன்பாக. பிறகு ஒரு முடிவுக்கு வந்து “இன்றிரவு எப்படியும் சலூம்பிராவைச் சந்திக்கப் போகிறேன்” என்றான் மெதுவாக.
“இன்றிரவா?” என்று வினவினாள் மகாராணி.
“ஆம் மகாராணி. வந்து முடிவைச் சொல்கிறேன்!” என்று கூறினான்.
“எதைப்பற்றி?” என்று மகாராணி கேட்டாள்.
“நாட்டைக் காப்பது பற்றி.” என்றான் தீப்சந்த்.
அதற்குமேல் ஏதும் பேச மறுத்த தீப்சந்த் மகாராணாவை நாடிச் சென்றான். மகாராணியும் அவனைத் தொடர்ந்தாள்.
மகாராணாவின் அறைக்கு முன்பு நின்று தனது வரவை அறிவிக்கும்படி அங்கிருந்த காவலனிடம் கூறிய போதும். “நீ போகலாம் உள்ளே. மெய்க்காவலருக்கு அனுமதி தேவையில்லை.” என்று சொன்ன மகாராணி தீப்சந்துடன் தானும்
உள்ளே நுழைந்தாள்.
மகாராணாவின் பள்ளியறை முதல் நாளைவிட நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரண்டு பெண்கள் வீணை வாசித்துக் கொண்டிருந்தார்கள். மகாராணா தலையை அசைத்து இசையை அனுபவித்துக் கொண்டிருந்தார்.
மகாராணி உள்ளே நுழைந்ததும் சங்கீதம் சட்டென்று நின்றது. இரு பெண்களும் வீணைகளை வைத்துவிட்டு எழுந்தார்கள். மகாராணியின் ஒரு பார்வை அவர்களை வெளியே ஓட்டிவிட்டது. ராஜமாதா மகனை வெறுப்புடன்
நோக்கினாள். மகாராணாவும் வெறுப்பை முகத்தில் காட்டத் தவறவில்லை. “எங்கு வந்தீர்கள்?” என்று மகாராணியையும் தீப்சந்தையும் நோக்கிப் பொது வாகக் கேட்டார் மகாராணா. அவர் குரலில் கோபம் பெரிதும் ஒலித்தது.
“நான் உன்னைப் பார்க்க வரவில்லை. தீப்சந்த் வந்தான். நானும் உடன் வந்தேன்.”
“என்ன விசேஷம்?” என்று வினவினார் மகாராணா.
“தீப்சந்த் உன் மெய்க்காவலனாக இருக்க ஒப்புக் கொண்டுவிட்டான்” என்று ராஜமாதா தெரிவித்தாள்.
“நாமும் ஒப்புக்கொண்டுவிட்டோம். நீ உணவு அருந்திவிட்டு வா” என்றார் மகாராணா தீப்சந்தை நோக்கி.
மகாராணாவைக் கோபமாக நோக்கிய மகாராணி, “என் விருப்பத்துக்கு இணங்கி இந்த வேலையை வீரனான தீப்சந்த் ஒப்புக்கொண்டான். உனக்காக அல்ல” என்றாள்.
“எனக்காக அல்ல?”
“அல்ல.”
“அப்பொழுது தீப்சந்த் உனக்கு மெய்க்காவலனா? எனக்கா?”
“உனக்குத்தான்” என்று அழுத்திச் சொன்னாள் மகாராணி.
அப்பொழுது தீப்சந்த் சொன்னான்: “மகாராணா! நான் உங்கள் மெய்க்காவலன் மட்டுமல்ல…” என்று.
“வேறென்ன?” என்று மகாராணா கேட்டார்.
“உங்கள் படைப்பிரிவு ஒன்றுக்கும் தலைவன்.”
இதைக்கேட்ட மகாராணா மகாராணி இருவருமே திகைத்தார்கள்.
“ஏது இங்கே படைப் பிரிவு, நீ தலைமை வகிக்க?” என்று மகாராணி கேட்டாள்,
“இன்னும் சில தினங்களில் வரும். நாளைக்கே செய்தி அனுப்புகிறேன்” என்றான் தீப்சந்த்.
“எதற்கு இப்பொழுது இன்னொரு படைப்பிரிவு, சந்தாவதர்கள் சக்தாவதர்கள் படைப்பிரிவுகள் போதாதா இங்கு மோதிக்கொள்ள?” இதை மகாராணி கேட்டாள்
“அந்த மோதலை என் படை தடுக்கும்” என்ற தீப்சந்த், “மகாராணி! எப்பொழுது நான் மகாராணாவைப் பாதுகாக்க ஒப்புக்கொண்டேனோ அப்பொழுதே எனது படைப்பிரிவை அழைப்பதென்று முடிவு செய்து விட்டேன்” என்று
கூறிவிட்டு “மகாராணி! நான் மகாராணாவை மீண்டும் சந்திக்கிறேன்” என்று சொல்லி விட்டு புஷ்பாவதியின் அறைக்குச் சென்றான்.
அங்கு புஷ்பாவதி நீராடி குழல் முடித்து மலர் சூடி மஞ்சத்தில் அமர்ந்திருந்தாள்.
அவளை விழுங்கி விடுபவன் போல் பார்த்த தீப்சந்த், “புஷ்பாவதி நாகராமக்ராவில் இருந்து எதற்காக மன்னனைப் பார்க்க வந்தாய்?” என்று கேட்டான்.
புஷ்பாவதி சிறிது சிந்தித்தாள். “சலூம்பிராவையே கேளுங்கள். அவருக்கே தெரியும்” என்று முன்பு சொன்னதை மீண்டும் சொன்னாள்.
“புஷ்பாவதி?” இழுத்தான் தீப்சந்த்.
“என்ன?” என்று கேட்டாள் புஷ்பாவதி.
“உச்சிப்பூவைப்பற்றி உன்னைக் கேட்கச் சொன்னார் சலூம்பிரா நீ வந்த காரணத்தை அவரைக் கேட்கும்படி நீ சொல்கிறாய். உங்களுக்குள்ளேயே பல மர்மங்கள் இருக்கின்றனவே” என்றான் தீப்சந்த்.
புஷ்பாவதி சிறிது சிந்தித்தாள். பிறகு சொன்னாள். “இந்த ஆபரணத்தை மகாராணாவிடம் கொடுத்து உள் நாட்டுப் போரைத் தவிர்க்கச் சொன்னார் தந்தை” என்று.
தீப்சந்த் தீவிர சிந்தனையில் இறங்கினான். பிறகு கச்சையிலிருந்த அந்த ஆபரணத்தை எடுத்து நோக்கினான். அதை அவள் தலையில் வைத்து அழகு பார்த்தான். அது வைக்க வேண்டிய இடத்தில் அடிபட்ட காயம் அப்பொழுதும்
ஆறவில்லை, “இந்த ஆபரணம் இவள் மண்டையை உடைத்ததோடு நிற்கட்டும். நாட்டு மண்டையை உடைக்காதிருக்கட்டும்” என்று உள்ளூர சொல்லிக் கொண்டான்.
பிறகு அவளிடம் விடைபெற்று இரவு வருவதாக சொல்லிப் போனான்.
அன்றிரவு உதயபூர் அரண்மனையில் இருந்து நாலாவது மாளிகையில் இருந்த அமைச்சர் சோம்ஜியின் அறைக்குச் சென்றான். அங்கு அவனைச் சந்திக்க சோம்ஜி சித்தமாக உட்கார்ந்திருந்தார்
.
சில நிமிடங்களுக்கெல்லாம் சலூம்பிராவும் வந்து சேர்ந்தார். அவ்விருவரையும் இருக்கைகளில் உட்கார வைத்த சோம்ஜி ஒரு முறை திரும்பித் தமக்குப் பின்னால் இருந்த அறையை நோக்கினார்.
அறையின் கதவைத் திறந்து அறைக்குள்ளிருந்து ஒரு வாலிபன் வெளியே வந்தான். அவன் அலட்சிய நடை நடந்து வந்தான். நீண்ட வாளின்மீது கையையும் வைத் திருந்தான்.சலூம்பிரா அவனை மிக சூடாகப் பார்த்தார்.
அந்த வாலிபன் வரவால் சலூம்பிராவுக்கு ஏற்பட்ட சினத்தை சோம்ஜி கவனித்தார். “நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் நண்பர்களாகக் காட்டிக்கொள்ளுங்கள்” என்றார் சோம்ஜி.
“ஏன்?” என்று கூச்சலிட்டார் சலூம்பிரா.
திடுக்கிடும் காரணத்தைச் சொன்னார் சோம்ஜி.
அதைக் கேட்டதும் எதற்கும் அஞ்சாத சலூம்பிராவே ஒரு விநாடி அச்சத்தின் வசப்பட்டார். “வரட்டும், அவர்களை ஒழித்து விடுகிறேன்” என்று பயங்கரமாகக் கூச்சலிடவும் செய்தார்.