Mohini Vanam Ch 18 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 18 இணைந்த வாட்கள்
Mohini Vanam Ch 18 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
சோம்ஜி என்று அழைக்கப்பட்ட சோம்சந்த் காந்தியின் மந்திர ஆலோசனை அறையில் படாடோபம் ஏதுமில்லாது இருந்தாலும் அதில் ஒரு கவுரவமும் கண்ணியமும் இருக்கவே செய்தது. அந்த அறையின் பின் வடக்குச் சுவரின்
மத்தியில் போடப்பட்டிருந்த பெரிய மஞ்சத்தின் மீதிருந்த நீள இருக்கையின்மீது சோம்ஜி சாய்ந்து கொண்டு, கையில் இருந்த பத்திரங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், தீப்சந்த் உள்ளே நுழைந்து அவருக்கு எதிரில்
தலை வணங்கி நின்றான்.
பக்கத்தில் இருந்த ஒரு மஞ்சத்தில் அவனை உட்காரச் சொல்லி சைகை காட்டினார் சோம்ஜி. பிறகு ஏதும் பேசாமல் கையிலிருந்த கடிதங்களை உற்றுப் படித்துக் கொண்டிருந்தார். வெளியிலிருந்து பீம்சிங் சலூம்பிராவின் பலத்த குரல்
கேட்ட பிறகுதான் அவர் காகிதங்களைப் பக்கத்தில் மடித்து வைத்துவிட்டு, தமது விழிகளை அவர் மீது நாட்டினார்.
தீப்சந்துக்கு சைகை காட்டியதுபோல் அவருக்கு சைகை காட்டாமல்” “சலூம்பிரா! வரவேண்டும். உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன். இப்படி உட்காருங்கள்” என்று முகமன் கூறி எதிரேயிருந்த பெரிய மஞ்சம் ஒன்றைச்
சுட்டிக்காட்டினார். அவர் அமர்ந்த பிறகுதான் தமக்குப் பின்னால் இருந்த அறையைத் திரும்பி நோக்கினார்.
அவர் நோக்குவதற்கும் அறைக் கதவு திறப்பதற்கும் நேரம் சரியாயிருக்கவே, சோம்ஜி ஏதோ முன்னேற்பாட்டுடன் இருக்கிறார் என்பதை தீப்சந்த் புரிந்துகொண்டான். அடுத்து அந்த அறையிலிருந்து வெளியே வந்த வாலிபனைக்
கண்டதும் ஏதோ அனர்த்தம் நிகழப் போகிறது என்பதைப் புரிந்துகொண்ட தீப்சந்த் எதற்கும் சித்தமாயிருந்தான்.
அறையிலிருந்து வெளியேறிய வாலிபன் மிக அழகாக இருந்தான். அவன் முகத்தில் வீரக்களை எழுதி ஒட்டியிருந்தது. அவன் நடை சிங்கத்தின் நடையாயிருந்தது. தனது வாளின் மீது கையை வைத்துக்கொண்டு ராஜநடை நடந்து வந்த
அந்த வாலிபன் ஏதோ சண்டைக்கு வருபவன் போலிருந்தானேயொழிய சமாதானத்துக்காக வருபவனைப் போல தெரியாததால் அவன் யாராயிருக்கக் கூடும் என்று தீப்சந்த் சிந்தித்தபோது, சோம்ஜி சொன்னார் : “நீங்கள் இருவரும்
நண்பர்களாகக் கட்டிக் கொள்ளுங்கள்” என்று.
அதைக் கேட்ட சலூம்பிரா தீவிழி விழித்தார். சோம்ஜியை நோக்கி, “சோம்ஜி! இவனை இங்கு வர வழைக்க உமக்கு மிகுந்த துணிவு இருக்க வேண்டும்.
இவனைத் தழுவும்படிச் சொல்வதால் உமக்குச் சித்தப் பிரமையும் ஏற்பட்டிருக்க வேண்டும்” என்று கூறவும் செய்தார் தீயினும் சுட்ட சொற்களால்.
அந்த வாலிபன் ஏதும் பேசவில்லை. “சோம்ஜி’ நாங்கள் இருவரும் சற்று வெளியே போய் பேசிவிட்டு வருகிறோம்” என்றான் அலட்சியமாக.
“இங்கேயே பேசலாமே” என்றார் சோம்ஜி அடுத்து வர இருந்த விபரீதத்தைத் தடுக்க.
“இங்கு வாட்கள் பேச முடியாது. ஆகையால் வெளியில் பேசுகிறோம். இருவரில் ஒருவர் உள்ளே வருவோம்” என்றான் அந்த வாலிபன் சர்வசாதாரணமாக.
“இளங்கன்று பயமறியாது” என்றார் சலூம்பிரா.
“கிழ மாடு நடக்காது” என்றான் அந்த வாலிபன்.
விவகாரம் முற்றுவதைக் கண்ட சோம்ஜி, சலூம்பிராவை நோக்கி, “இவன் யார் தெரியுமா உங்களுக்கு?’ என்றார்.
“பெயர் தெரியாது. சக்தாவதர்களின் கும்பலைச் சேர்ந்தவன் என்பது தெரிகிறது.” என்றார் சலூம்பிரா.
வந்த வாலிபன் தனது பெயரைச் சொல்லவில்லை. சோம்ஜியே சொன்னார் : “இவன் பெயர் ராஜபுதனத்தில் பிரசித்தமானது. சங்கிரமசிம்மன், சக்தாவதர்களின் உப தலைவன்.” என்று.
பெயரைக் கேட்டதும் சலூம்பிராவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. “கொலைகாரன்” என்று பயங்கரமான குரலில் பேசினார் சலூம்பிரா. சட்டென்று மஞ்சத்தில் இருந்து எழுந்து, தமது வாளின் பிடிமீது கையையும்
வைத்தார்.
“சலூம்பிரா!” என்று அவரை அலட்சியமாக அழைத்தான் சங்கிரமசிம்மன். பிற்காலத்தில் ராஜபுதனப் போர்களின் பெரும்பங்கை வகிக்க இருந்தவனும், கோட்டைகளைக் கைப்பற்றுவதில் அசகாய சூரன் என்றும் பெயர்
பெற்றிருந்தவனுமான சங்கிரமசிம்மனை அலட்சியமாக நோக்கிய சலூம்பிரா “என்ன?” என்று வினவினார் கடுமை நிரம்பிய குரலில்.
சங்கிரமசிம்மனின் கண்கள் சலூம்பிராவை வெறுப்புடன் நோக்கின. “நேருக்கு நேர் போர் செய்து எதிரியைக் கொல்பவன் கொலைகாரன் என்பது உமது புது அகராதியில் இருக்கலாம். ராஜபுதன அகராதியில் அப்படி யில்லை” என்ற
சங்கிரமசிம்மன் “சலூம்பிரா! அப்படி யானால் குழந்தைகளை வெளியில் இழுத்துப் போட்டுக் கொலை செய்பவனுக்கு நீங்கள் என்ன பெயர் கொடுப்பீர்கள்?” என்று கேட்டான். “உங்கள் நண்பன் சலீம்சிங்கை நான் தர்மயுத்தத்தில்
ஈட்டியால் குத்திக் கொன்றேன். ஆனால் உங்கள் வலதுகை போலிருக்கும் கோராப்பூர் அர்ஜுன்சிங் நானில்லாத சமயத்தில் என் வயதான தந்தையைக் கொன்றான். என் குழந்தைகளை வெளியே இழுத்து வெட்டினான். இதைக் கேட்டதும்
நான் விரைந்தேன் எனது கோட்டைக்கு. எனது வரவைக் கேட்டு ஓடிவிட்டான். உங்கள் கூட்டம் வயதானவர்கள் குழந்தைகளுடன் தான் போராட முடியும். அதிகமாகப் போனால் நமது கையாலாகாத மன்னரை சுரண்ட முடியும்.
வேறென்ன முடியும்?” என்று வினவினான். சலூம்பிரா! நீராவது வீரர்களோடு போராட பழகிக் கொள்ளும். வாரும் வெளியே” என்று வெறுப்பு நிரம்பிய குரலில் அழைத்தான்.
சலூம்பிரா அவன் அழைப்புக்கு இணங்கி வெளியே செல்லவில்லை. கல்லாய் சமைந்து நின்றுவிட்டார் பல விநாடிகள். “என்ன! அர்ஜுன்சிங் குழந்தைகளைக் கொன்றானா?” என்று வியப்பும் அதிர்ச்சியும் நிரம்பிய குரலில் வினவினார்.
சங்கிரமசிம்மன் முகத்தில் குழப்பம் தெரிந்தது. “உங்களுக்கு அந்தப் படுகொலையைப் பற்றி எதுவுமே தெரியாதா?” என்று வினவினான்.
தெரியாது என்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் அசைத்தார் சலூம்பிரா. அதுவரை மவுனமாயிருந்த சோம்ஜி “வீரர்களே! நீங்கள் சண்டையிட உங்களை இங்கு நான் அழைக்கவில்லை” என்று கண்டிக்கும் குரலில் சொன்னார்.
“வேறு எதற்கு அழைத்தீர்கள்?” என்று சலூம்பிரா கேட்டார் சினம் துளிர்த்த குரலில்.
“ஆம். எதற்கு வரவழைத்தீர்கள்?” என்று சங்கிரம சிம்மனும் வினவினான்.
“உங்கள் சண்டையைவிட முக்கியமான சண்டை இருக்கிறது.” என்றார் சோம்ஜி.
“அப்படி எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.” மூர்க்கத்தனமாகப் பேசினான் சங்கிரமசிம்மன்.
அதுவரையில் இந்த சொற்போரை ஏதும் பேசாமல் கவனித்துக்கொண்டிருந்த தீப்சந்த் “எதற்கும் மந்திரி யவர்கள் சொல்வதைக் கேட்போமே!” என்று மெதுவாகப் பேசினான்.
அதுவரை சங்கரமசிம்மனுடன் சொற்போர் புரிந்து கொண்டிருந்த சலூம்பிரா அப்பொழுதுதான் தீப்சந்தை நோக்கினார், அவருக்கு சங்கிரமசிம்மனிடம் இருந்த கோபத்தை தீப்சந்தின்மீது காட்டி “மந்திரி பிரமாதமாக என்ன
சொல்லிவிடப் போகிறார்?” என்று கேட்டார்.
“கேட்டால் தானே தெரியும். பிரமாதமா இல்லையா என்பது.” என்று சுட்டிக் காட்டினான் தீப்சந்த்.
“தீப்சந்த்! உனக்கு இதில் என்ன சம்பந்தம்? மந்திரியின் விவகாரங்களிலும் அரசியலிலும் தலையிட உனக்கென்ன உரிமை?” என்று சலூம்பிரா வினவினார்.
ப தீப்சந்த் புன்முறுவல் கொண்டான். முகத்தில் சிறிது சிந்தனையையும் காட்டினான். “மன்னருக்கு அரசியலில் உள்ள உரிமை எனக்கும் உண்டு” என்றான் மெதுவாக.
இதைக் கேட்டதும் சலூம்பிரா, சங்கிரமசிம்மன், சோம்ஜி மூவருமே தீப்சந்தை நோக்கினார்கள் ஏதும் புரியாமல். அவர்கள் குழப்பத்தைக் கண்ட தீப்சந்த் “இன்றுதான் ஒப்புக்கொண்டேன் மகாராணாவின் மெய்க் காவலனாகவும்
படைத்தலைவனாகவும் இருக்க.” என்று கூறினான்.
சோம்ஜி திகைத்தார். “என்ன! மகாராணாவின் படைத்தலைவனா!” என்று வினவினார் திகைப்பின் ஊடே.
‘படைத்தலைவனாயிருக்க எனக்குத் தகுதியில்லையா?’ என்று கேட்டான் தீப்சந்த்.
‘இங்கு சந்தாவதர்கள் படை, சக்தாவதர்கள் படை இரண்டு தான் இருக்கின்றன. அவற்றுக்குத் தலைவர்களும் இருக்கிறார்கள்.” என்று சோம்ஜி விளக்கினார்.
“அவற்றால் மன்னருக்கு உபயோகம் ஏதுமில்லை.” என்றான் தீப்சந்த்.
“வேறு ஏது படை?” சலூம்பிரா கேட்டார்.
“என் சொந்தப் படை, பத்தாயிரம் வீரர்களைக் கொண்டது. இன்னும் சில நாட்களில் இங்கு வந்து சேரும்.” என்று தீப்சந்த் பதில் சொன்னான்.
வந்து என்ன செய்யும்?” என்று சங்கிரமசிம்மன் கேட்டான் கோபத்துடன்.
“உங்கள் இருவர் படைகளும் கைகலக்காமல் தடுக்கும்” என்று உறுதியுடன் சொன்னான் தீப்சந்த்
அப்பொழுது இடைமறித்த சோம்ஜி “தீப்சந்த்! சக்தாவதர்களையும் சந்தாவதர்களையும் ஒன்றுபடுத்தத்தான் இங்கு அவர்களை வரவழைத்தேன். ஆகையால் உன் படைக்குத் தேவையிருக்காது.” என்றார்.
“நாங்கள் ஒன்றுபடுவது முடியாத காரியம்.” என்றார். சலூம்பிரா.
“இந்த ஒரு விஷயத்தில் எங்களுக்குள் கருத்து ஒற்றுமையிருக்கிறது.” என்றான் சங்கிரமசிம்மன்.
அதுவரை சாய்ந்திருந்த சோம்ஜி எழுந்திருந்தார். “ராஜபுதனத்தைப் பெரும் தீமை எதிர்கொண்டிருக்கிறது. நீங்கள் ஒன்றுபட்டால் ராஜபுதனம் பிழைக்கும். இல்லை யேல் நீங்களும் அழிவீர்கள், அதுவும் அழியும்.” என்றார். அவர்
குரலில் உணர்ச்சி அதிகமாயிருந்தது. அவர் மேலும் சொன்னார். “இந்த ராஜபுதனம் இதுவரை சந்தாவதர்களாலும் சக்தாவதர்களாலுமே காப்பாற்றப்பட்டு வந்தது. இனியும் அதைக் காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு” என்று.
சலூம்பிரா கேட்டார்: “சோம்ஜி! சுற்றிவளைக்க வேண்டாம். சொல்வதைத் திட்டமாகச் சொல்லும்.” என்றார்.
“திட்டமாகவே சொல்கிறேன். கேளுங்கள். மகாராஷ்டிரர் ராஜபுதனத்தின்மீது படையெடுத்துவிட்டார்கள். ஏற்கெனவே சில இடங்கள் பிடிபட்டுவிட்டன” என்றார் சோம்ஜி.
அதுவரை இருந்த விரோதங்கள் மறைந்ததால் சலூம்பிரா பயங்கரமாகக் கூறினார்: “அவர்களைக் கூண்டோடு ஒழித்துக் கட்டிவிடுகிறேன்” என்று. வாளையும் உருவினார் வேகமாக. அதேசமயத்தில் உருவப்பட்ட சங்கிரமசிம்மன் வாளும்
சலூம்பிராவின் வாளுடன் இணைந்தது. அந்தச் சமயத்தில் மகாராஷ்டிரர் படை யெடுக்கிறார்கள் என்ற செய்தி அளித்த வேகத்தில் சுய பூசல்கள் மறைந்தன. வாட்கள் இணைந்தன ஒற்றுமைக்கு அறிகுறியாக.
சங்கிரமசிம்மன் தலை வணங்கினான் சலூம்பிராவுக்கு.
சலூம்பிராவும் வாளைத் தாழ்த்தி சங்கிரமசிம்மனை அணுகி அவனைத் தழுவிக்கொண்டார்.
சோம்ஜியின் கண்களில் ஆனந்த நீர் துளிர்த்தது. “மேவார் பிழைத்தது” என்ற சொற்கள் அவர் உதடுகளில் உற்பத்தியாகி இதயத்தைத் தொட்டன.