Mohini Vanam Ch 19 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 19 மூன்று சந்தேகங்கள்
Mohini Vanam Ch 19 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
சந்தாவதர்களின் தலைவரான பீம்சிங் சலூம்பிராவும் சக்தாவதர்களின் உபதலைவனான சங்கிரமசிம்மனும் தழுவிக்கொண்டதால் மேவார் ராஜ்யம் பிழைத்ததென நம்பி மந்திரி சோம்ஜி ஆனந்தக்கண்ணீர் உகுத்தபோதும், அந்த இரு
குலத்தாரின் ஒற்றுமை பயனளிக்கும் என தீப்சந்த் நம்பவில்லை.
மகாராஷ்டிரர்கள் படையெடுத்து விட்டார்கள் என்றதைக் கேட்டதால் ஏற்பட்ட உணர்ச்சி வேகத்தில் இணைந்த வாட்கள், அந்த உணர்ச்சி தீர்ந்து சுயநலம் தலை காட்டியதும் ஒன்றையொன்று மோதிக்கொள்ளும் என்று திட்டமாக
நம்பினாலும், அதை அவன் அந்தச் சந்தர்ப்பத்தில் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. அந்த ஒற்றுமை நாடகத்தில் தானும் பங்கு கொண்டவன் போலவே நடித்தான். சோம்ஜியின் தூய கடமை உள்ளத் தின் விளைவாக அவர் கண்களில்
உதிர்ந்த நீரைப்பார்த்து “ராஜபுதனத்தில் இப்படியும் ஓரிருவர் இருப்பதால்தான் ராஜபுதனம் உயிரோடு இருக்கிறது” என்று தனக்குள் சொல்லியும் கொண்டான்.
அவன் மனதில் ஏதோ எண்ணங்கள் ஓடுவதையும், மகிழ்ச்சியில் அவன் உண்மையில் பங்குகொள்ளாததையும் மிகவும் கூர்மையான தமது புத்தியால் ஊகித்துவிட்ட சோம்ஜி “தீப்சந்த்! இந்த ஒற்றுமை நாட்டுக்கு ஏற்படக் கூடிய
நன்மையின் தன்மை, அளவு, நீண்டகால திடம் இவை உனக்குப் புரியவில்லையா?” என்று வினவினார்.
தீப்சந்த் சிறிதும் தாமதிக்காமல் உடனடியாகப் பதில் சொன்னான். “ஏன் புரியவில்லை? நன்றாகப் புரிகிறது”, என்று. அவன் அதைச் சொன்ன முறையும் இதழ்களில் இளநகை கூட்டியவிதமும் சோம்ஜிக்குச் சந்தேகமாக இருந்ததால்,
“உனக்கு ஏதாவது சந்தேகமிருந்தால் அவர்களையே கேட்கலாம்.” என்று சொன்னார்.
தீப்சந்த் மிகுந்த அச்சத்தை முகத்தில் காட்டினான் “மேவார் ராணாக்களுக்குப் பெரும் தொண்டு செய்து நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்த வீரர்கள் குலத்தின் இரு பிரிவுகள் சந்தாவதர்களும் சக்தாவதர்களும், அவர்களைக் கேட்க
எனக்குத் தகுதி என்ன இருக்கிறது? இப்பொழுது தங்கள் முன்பு தழுவிக்கொண்ட இருதரப்புத் தலைவர்களும் இத்தனை நாள் ஏன் தழுவிக்கொள்ள வில்லை என்பது எனக்குப் புரியவில்லை. ஒரு குலத்தில் இரு கிளைகள் இத்தனை
நாள் ஏன் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன என்பதும் என் அறிவுக்கு அப்பார் பட்டதாக இருக்கிறது. ஆனால் இந்த நட்பு பழைய விரோதங்களை மறக்க அடிக்குமா என்பதும் சந்தேகமாயிருக்கிறது” என்று தீப்சந்த் தனது
சந்தேகங்களை மெதுவாக அவிழ்த்தான்.
இதைக் கேட்டதும் சோம்ஜி மிகுந்த சங்கடத்துக்குள்ளானார். “எதிலும் சந்தேகம் கொள்வது அனர்த்தத்தைத்தான் விளைவிக்கும். சலூம்பிராவும் சங்கிரம சிம்மனும் மகாவீரர்கள். செய்த முடிவுக்காக உயிரையும் விடுவார்கள்” என்று
அந்த இரு வீரர்களின் பெருமையை எடுத்துச் சொன்னார்.
தீப்சந்தின் கண்கள் மட்டும் லேசாகச் சிரித்தன. “இப்பொழுது அவர்கள் செய்திருக்கும் முடிவு அவர்கள் உயிரைப் பறிக்குமா?” என்று வினவினான்.
“ஏன் பறிக்க வேண்டும்?” என்று சோம்ஜியும் கேட்டார்.
‘மகாராஷ்டிரர் படையெடுப்பைத் தடுக்கப் போராட வேண்டும். மகாராஷ்டிரர்களும் அல்ப சொல்பமானவர்கள் அல்ல. ஒளரங்கசீப்பையே எதிர்த்து சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்கள். நாம் சாம்ராஜ்ஜியத்தை இழந்தவர்கள். அவர்கள்
படைபலம் பெரிது. அதைவிட’ போர்த் தந்திரமும் புத்திபலமும் பெரியவை. நாம் போராடப்போவது பெரும்படைகளோடு மட்டும் அல்ல. மகாராஷ்டிரர்களின் தந்திரத்துடனும் போராட வேண்டும். பூனாவில் இருக்கும் பேஷ்வா பெரிய
குள்ள நரி. நம்மீது படையெடுக்கக்கூடியவர். அருகிலுள்ள மகதாஜி சிந்தியா புத்திபலம் படைபலம் இரண்டும் உடையவர். அங்கு பணபலம் கிடையாது. அதைச் சுரண்ட ராஜ புதனத்தின்மீது படையெடுக்கிறார்கள்” என்ற தீப்சந்த் “பெரும்
ஆபத்தில் மேவார் சிக்கியிருக்கிறது. இதிலிருந்து மீள சந்தாவதர்கள் சக்தாவதர்கள் பலம் மட்டும் போதாது.” என்று சொன்னான்.
அதுவரை ஏதும் பேசாமலிருந்த பீம்சிங் சலூம்பிராவின் முகத்தில் சினம் ஏறியது. “வேறு யார் பலம் வேண்டும்? உன் பலமா! உன் உதவியா?” என்று சினத்துடன் கேலியையும் கலந்துகொண்டு வினவினார்.
தீப்சந்த் அவரை ஏறெடுத்து நோக்கினான். “நமது மந்திரியின் திட்டம் உருவாகு முன்பே எனது படைகள் இங்கு வர உத்தரவு அனுப்பிவிட்டேன். எப்படியும் என் உதவி உங்களுக்கு இருக்கிறது. ஆனால் சக்தாவதர்களும் சந்தாவதர்களும்
மட்டும் ராஜபுதனமல்ல. கோட்டா சமஸ்தானாதிபதி சலீம்சிங்கின் ஒத்துழைப்பு வேண்டும். அவர் படையும் இணைய வேண்டும்” என்று சொன்னான் தீப்சந்த் துணிவுடன்.
“பூ! இவ்வளவுதானா?” என்று அலட்சியமாகக் கேட்டு ஒரு நிதானத்துக்கு வந்துவிட்ட சலூம்பிரா, “ஜலீம்சிங் எனது நண்பன். அவனை வரவழைப்பதில் கஷ்டமில்லை.” என்று கூறினார்.
அதுவரை மவுனமாயிருந்த சங்கிரமசிம்மன் “இன்னும் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?” என்று வினவினான் தீப்சந்தை நோக்கி இகழ்ச்சி நிரம்பிய குரலில்,
“வேறு என்ன இருக்கிறது? முடிந்துவிட்டது. கோட்டாவும் மேவாரும் ஒன்றுபட்டால் ராஜபுதனம் ஒன்று சொன்னார்.
ஆனால் தீப்சந்த் அத்துடன் விஷயத்தை முடிக்கவில்லை. “இன்னும் ஒரே ஒரு சந்தேகம்.” என்றான் மெதுவாக.
“என்ன அது?” என்று குழப்பத்துடன் கேட்டார் சோம்ஜி.
“சிறுவன்! அவனைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்” என்ற சலூம்பிரா தீப்சந்தின் அருகில் வந்து முதுகில் ஆதரவாகத் தட்டிக்கொடுத்து. “தம்பீ! உனக்கு உலக அனுபவம் போதாது. சும்மா இரு.” என்றார்.
தீப்சந்த் முதுகில் அவர் கொடுத்த தட்டல் என்ற அறையை அவன் லட்சியம் செய்யவில்லை. “சலூம்பிரா! நீங்கள் என்னை மட்டும் சகோதரனாக நினைக்கக் கூடாது. எல்லாரையும் நினைக்க வேண்டும்.” என்றான்.
“அப்படியே ஆகட்டும்” என்றார் சலூம்பிரா. “தம்பீ! இன்னும் என்ன வேண்டும்?” என்று குதூகலத்துடன் மேலும் வினவினார்.
“தம்பியை சதா கேள்வி கேட்காதீர்கள். அவன் ஏதாவது புதுப் பகைகளைக் கிளப்பிக்கொண்டிருப்பான்” என்றான் சங்கிரமசிம்மன்.
தீப்சந்த் முகத்தில் இகழ்ச்சி கலந்த மகிழ்ச்சியைக் காட்டினான். “இவ்வளவு பேர்கள் எனக்கு அண்ணன் மார்கள் ஆனது மிகவும் சந்தோஷம். ஆனால் சகோதர முறை நீடிக்க வேண்டுமானால் நாம் மனதை விட்டுப் பேச வேண்டும்.”
என்றான் இகழ்ச்சி குரலிலும் ஒலிக்க.
அதுவரை குளிர்ந்திருந்த சலூம்பிரா, “நாங்கள் என்ன உள்ளொன்று வைத்துப் புறமொன்றா பேசுகிறோம்?” என்று சீறினார்.
“இவனை அதிகமாகப் பேசவிட்டதே பிசகு.” என்றான் சங்கிரமசிம்மன்.
“நானாகப் பேச வரவில்லை. நீங்கள் கருத்தைக் கேட்டதால் சொன்னேன். இன்னும் ஒரு சந்தேகமும் இருக்கிறது.” என்று அதிர்வெடியை வீசினான் தீப்சந்த்.
விவாதம் நீடிக்க நீடிக்க சோம்ஜியின் முகத்தில் கவலை படர்ந்தது. “இவன் சந்தேகத்தை நான் தீர்க்கிறேன். நீங்கள் செல்லுங்கள், மேவாரின் பாது காப்பைப் பலப்படுத்துங்கள். மகாராஷ்டிரர் படை முன்னேறு முன்பு அவற்றைத் தடை
செய்ய முயலுங்கள்” என்று அவர்களை வெளியே அனுப்ப முயன்றார்.
“அவன் சந்தேகங்களை என் முன்பாகவே பேசட்டும்.” என்றார் சலூம்பிரா.
“அதுதான் சரி.” என்றான் சங்கிரமசிம்மன்
தீப்சந்த் தனது ஆசனத்திலிருந்து எழுந்து நின்று கொண்டான், “சலூம்பிரா! நீங்கள் மகாவீரர். என்னைப் போன்ற சிறு வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டியவர்…” என்று வாசகத்தை முடிக்காமல் விட்டான்.
“அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினார் சலூம்பிரா.
“சொன்னால் கோபிக்கமாட்டீர்களே?” தீப்சந்த் கேட்டான் மிகவும் சாந்தமான குரலில்.
“நீ என்ன கேட்டாலும் உன் மீது எனக்குக் கோபம் வராது.” என்றார் சலூம்பிரா தாராளத்துடன்.
தீப்சந்த் உடனடியாக ஏதும் பேசவில்லை. அந்த மந்திராலோசனை சபையைச் சுற்றிக் கண்களை ஓடவிட்டான். சோம்ஜி, சலூம்பிரா இருவர் மீது மாறி மாறிக் கண்களை நிலைக்க விட்டான். பிறகு சொன்னான் “எனக்கு இன்னும் மூன்று
சந்தேகங்கள் இருக்கின்றன” என்று.
“இன்னும் மூன்று சந்தேகங்களா? கெட்டது குடி” என்றான் சங்கிரமசிம்மன்.
“ராணாவின் குடி கெட்டு ரொம்ப நாளாகிறது. அது கிடக்கட்டும். எனது சந்தேகங்களுக்குப் பதில் சொல்லுங்கள். மேவாருக்குத் தலைநகரம் ஒன்றா இரண்டா? இது முதல் சந்தேகம்” என்றான் தீப்சந்த்.
சோம்ஜி அதிர்ச்சியடைந்து உட்கார்ந்துவிட்டார்.
மேவாரின் ஆதி தலை நகரான சித்தூர் பீம்சிங் சலூம் பிராவின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்பதும், அந்தத் தலைநகரில் அவர் இன்னொரு மன்னராக ஆட்சி புரிகிறார் என்பதும் உலகத்துக்கே தெரிந்திருந்ததால் அவர் அதைப் பற்றி
எண்ணவும் மறுத்தார். எண்ண மறுத்தவர் எப்படிப் பேசுவார்? திகிலடைந்து உட்கார்ந்துவிட்டார்.
அவர் மவுனத்தைக் கண்ட தீப்சந்த் அவர் அச்சத்தை உணர்ந்து கொண்டான், ஆகையால் அவனே பேசினான். “மேவாரில் உலகம் காணாத விந்தை நடக்கிறது, இரண்டு தலை நகர்கள் சித்தூர் ஒன்று, உதயபூர் ஒன்று. இப்படி தலைநகரே
இரண்டாயிருக்கும்போது ஒரு ராஜ்ஜியம் என்று இதைச் சொல்ல முடியாது. ஆகவே ஒற்றுமை மேல்பூச்சு தான்…” என்றான்.
இதனால் அங்கிருந்த யார் முகத்திலும் ஈயாடவில்லை. சலூம்பிரா உறுமினார். சங்கிரமசிம்மன் ஏதோ சொல்ல முயன்று வாயை அடக்கிக்கொண்டான்.
இரண்டாவது சந்தேகத்தை வீசினான் தீப்சந்த்.
“மந்திரி! மகாராஷ்டிரர்களுடன் போரிட இருக்கும் படைகளுக்குச் சம்பளம் கொடுக்க உம்மிடம் பணமிருக்கிறதா?” என்று கேட்டான் தீப்சந்த்.
இதற்குப் பதில் சொல்ல மந்திரியால் முடியவில்லை. சித்தூர் பகுதிகளில் உள்ள வரிகளை சலூம்பிராவே வசூலித்துத் தமது படைகளுக்குச் சம்பளம் கொடுக்கிறார் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. ஆகவே எரிச்சலுடன் கேட்டார்
“அடுத்த சந்தேகத்தையும் கேட்டுத் தொலை” என்று.
மூன்றாவது கேள்வியை வீசினான் தீப்சந்த். “உங்களிடம் பீரங்கிகள் எவ்வளவு இருக்கின்றன?” என்று கேட்டான்.
மந்திரி மூர்ச்சை போடாத நிலை. அப்படியே திண்டில் சாய்ந்துகொண்டு கண்களை மூடினார். பூனைக் கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடுமா? சலூம்பிரா அப்பொழுது இடியென முழங்கினார். “சோம்ஜி! கவலைப்
படாதீர்கள். படைகளுக்கு ஆயுதம் அளிப்பதும் நடத்துவதும் எங்களுக்குப் புதிதல்ல. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.” என்றார்.
சங்கிரமசிம்மன் தலையை ஆட்டினான் ஒப்புதலுக்கு அறிகுறியாக.
தீப்சந்த் நின்றபடியே பேசினான். “மந்திரி! இத்தனை தலைமுறைகள் நாம் போரிட்டது, ஒருமுறை. இப்பொழுது நாம் நமக்குள் போரிடப் போவதில்லை, மொகலாயருடனும் போராடப்போவதில்லை. மகாராஷ் டிரர்களிடம்
போராடப்போகிறோம். அவர்களிடம் மட்டு மல்ல அவர்களிடம் உள்ள பலமான இன்னொரு படையுடன் மோதப் போகிறோம். அது ஒரு இரும்புப் படை.” என்றான்.
“இரும்புப் படையா!” வாயைப் பிளந்தார் சோம்ஜி
“ஆம்; வெள்ளைக்காரர்கள் படை. உங்களுக்கு எதிரே இரும்புச் சுவர்போல் நகர்ந்து வரும்” என்றான் தீப்சந்த்.
“அதைச் சமாளிக்க…” இழுத்தார் சோம்ஜி.
“தீப்சந்த் இருக்கிறான்.” என்றான் தீப்சந்த்.