Mohini Vanam Ch 20 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 20 ரகசிய ராணி
Mohini Vanam Ch 20 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
பாரதத்தில் போர் முறைகள் மாறிவிட்டதையும் புது முறைப் போர்கள் தலையெடுத்து விட்டதையும், அந்த வகையில் போராடினாலொழிய மகாராஷ்டிரர்களின் படையெடுப்பைச் சமாளிப்பது கஷ்டமென்று தீப்சந்த் கூறியதை, அந்த
மந்திர ஆலோசனையில் சம்பந்தப்பட்ட யாருமே ரசிக்கவில்லை. மகாராஷ்டிரர்களுடன் இருக்கும் வெள்ளையர் படையின் பயங்கர சக்தியைப்பற்றி அவன் எடுத்துரைத்தபோது, போர் அனுபவம் இல்லாத தீப்சந்த் தங்களைப்
பயமுறுத்துவதாகவே சலூம்பிராவும் சங்கிரம சிம்மனும் நினைத்தார்கள். அந்த வெள்ளையர் படையைச் சமாளிக்கத் தான் இருப்பதாக தீப்சந்த் சொன்னதும், அவன் துணிவையும் திமிரையும் எண்ணி மற்ற இரு மகா வீரர்களும் வியப்பே
அடைந்தார்கள்.
அந்த வியப்பின் விளைவாக சலூம்பிரா சொன்னார்: “இளங்கன்று பயமறியாது. துள்ளி விளையாடுகிறது. அதை ரசிப்போம். அதைப்பற்றி யாரும் பெரிதாக நினைக்க வேண்டாம்.” என்று.
சங்கிரமசிம்மன் அப்படி தீப்சந்தை மன்னித்துவிடுவதாகத் தெரியவில்லை. “இளங்கன்றாக. இருந்தாலும் துள்ளி விளையாடும் நிலம் உண்டு. கண்ட இடத்தில் விளையாடினால் அதைப் பிடித்துக் கட்டி அடக்க வேண்டியது அவசியம்”
என்றான் சற்றே சினத்தைக் காட்டி.
சங்கிரமசிம்மன் பேச்சைக் கேட்ட தீப்சந்த் புன்முறுவல் செய்தான். “இளங்கன்றை எப்படி அடக்குவதாக உத்தேசம்?” என்று வினவினான் புன்முறுவலின் ஊடே.
“காலம் வரட்டும் சொல்கிறேன்” என்று சற்று ஆணவத்துடன் பேசினான் சங்கிரமசிம்மன்.
“போர் நாட்டுக்கு வந்துவிட்டது, இன்னும் என்ன காலம் வர வேண்டும்?” என்று கேட்டான் தீப்சந்த்.
இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாததால் தனது வாளின்மீது கையை வைத்தான் சங்கிரமசிம்மன். அப்பொழுது தலையிட்ட சலூம்பிரா, “சங்கிரமசிம்மா! வாளைக்கொண்டு இந்த வாலிபனை அடக்க முடியாது. பெரிய வாள்
வீரன். இவனிடம் வீண்சண்டை வைத்துக் கொள்ளாதே!” என்று சொன்னார்.
சங்கிரமசிம்மன் முகத்தில் ஆச்சர்ய ரேகை பெரிதாகப் படர்ந்தது.”சலூம்பிரா! தாங்களா இப்படிப் பேசுவது?” என்று கேட்டான்.
“இது விஷயத்தில் என்னைவிட காரணத்துடன் பேசுபவர் இருக்க முடியாது.” இதைத் திட்டமாகச் சொன்னார் சலூம்பிரர். அதைச் சொல்லிக்கட்டுப் போட்டிருந்த தனது வாட்கரத்தையும் நோக்கினார்.
சங்கிரமசிம்மன் ஏதும் புரியாமல் விழித்தான். “இந்தச் சிறுவன்…” என்று ஏதோ இழுத்தான்.
“வாட்போரில் என்னை வென்றான்.” என்று வாசகத்தை முடித்தார் சலூம்பிரா.
அதை நம்பமுடியாததால் “நேர் போரிலா?” என்று சங்கிரமசிம்மன் கேட்டான்.
“ஆமாம். நேரான தர்மமான போரில்.” என்றார் சலூம்பிரா.
அவர் சொற்களைக் கேட்ட சங்கிரமசிம்மன் மட்டுமின்றி சோம்ஜியும் வியப்பின் எல்லையை எய்தினாலும், சோம்ஜி மட்டும், “சலூம்பிரா! இது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது.” என்று சொன்னார்.
“பெருந்தன்மையை அல்ல சோம்ஜி, உண்மையைக் காட்டுகிறது. என் ஆயுளில் நான் சந்தித்த மிகப் பெரிய வாள் வீரர்களில் தீப்சந்தும் ஒருவன். இதில் சந்தேகம் வேண்டாம்” என்றார்.
“அந்த வீரத்தை நானும் சிறிது பார்க்கிறேனே” என்ற சங்கிரமசிம்மன் மறுபடியும் வாளின்மீது கையை வைத்தான்.
தீப்சந்தின் கண்களில் ஏளனச் சிரிப்பு உதிர்ந்தது. ‘நமது வீரத்தைக் காட்டி நம்மை நாமே கொன்று கொள்வதைவிட எதிரிகளைக் கொல்வதில் நமது சாமர்த்தியத்தை உபயோகிப்பது நல்லதல்லவா?” என்று சொன்னான் தீப்சந்த்.
இந்த இடத்தில் உரையாடலில் மந்திரி புகுந்து “தீப்சந்த் சொல்வதில் நியாயமிருக்கிறது” என்றார்.
“என்ன நியாயம்? தற்பெருமை நியாயமாகுமா?” என்று சங்கிரமசிம்மன் கேட்டான்.
“வயது அப்படிப் பேசச் செய்கிறது. அதை மன்னித்து விடு.” என்றார் சோம்ஜி.
சங்கிரமசிம்மன் மன்னிக்கும் மனநிலையில் இல்லை. கோபமாக தீப்சந்த், சோம்ஜி இருவரையும் பார்த்துவிட்டு “மந்திரி! என் படை போருக்கு என்றும் சித்தமாயிருக்கும் சலூம்பிரா என்றைக்கு மகாராஷ்டிரர் படைகளை நோக்கி
நகருகிறாரோ அன்று என் படையும் நகரும்” என்று கூறிவிட்டு சலூம்பிராவுக்கும் மந்திரிக்கும் தலைவணங்கி வெளியேற முயன்றான்.
அப்பொழுது தீப்சந்த் ஒரு கேள்வியை வீசினான். “படைகள் சித்தமாயிருக்கலாம். தலைமை வகித்து நடத்தும்போது சேனாதிபதி யார்?” என்று.
வெளியேறத் தொடங்கிய சங்கிரமசிம்மன் திரும்பினான் வேகமாக. “அவரவர் படைகளுக்கு அவரவர் தலைவர். இதுகூடத் தெரியாதா உனக்கு?” என்று வினவினான் ஆத்திரத்துடன்.
“அப்படி தலைக்குத் தலை தலைவர்களாக இருந்து தான் ராஜபுதனம் அழிந்திருக்கிறது. ஏற்கெனவே நிகழ்ந்துள்ள சரித்திரம் நமக்குப் படிப்பினையைக் கொடுக்கவில்லையென்றால் இனிமேலும் நாம் உருப்படு வது சந்தேகம்.” என்ற
தீப்சந்த், “மந்திரி! ராஜபுதனப் படைகளை நடத்த ஒரு பொதுத்தலைவன் தேவை. தலைக்குத் தலை நாட்டாண்மையால் மறுபடியும் தோல்வியே ஏற்படும். ராஜபுதனம் சாம்ராஜ்யத்தை இழந்து நிற்கிறது. மகாராஷ்டிரர் சாம்ராஜ்யத்தை விரிவு
படுத்தி வருகிறார்கள். அவர்களை எதிர்க்க ஒரே தலைவனின்கீழ் இயங்கும் திறமையான படைத் தேவை. அந்தத் தலைவன் யார் என்பதை முடிவு செய்யுங்கள். அவரிடம் பணி செய்ய நான் சித்தமாயிருக்கிறேன்.” என்றும் கூறினான்.
- இதை தீப்சந்த் பேசியதும் சலூம்பிரா, சங்கிரம சிம்மன் இருவருமே சோம்ஜி என்னும் சோம்சந்த் காந்தியை நோக்கினார்கள். சோம்ஜியின் பார்வை மெதுவாக சலூம்பிரா மீது நிலைத்தது. “இங்கு வயதிலும் போர் அனுபவத்திலும்
சலூம்பிரா பெரியவர்…” என்று பேசத் தொடங்கினார். –
சங்கிரமசிம்மன் விழி விழித்தான். “மந்திரி! இதில் வயதல்ல முக்கியம். சந்தாவதர்களுக்கு சக்தாவதர்கள் குறைந்தவர்களல்ல” என்று சுட்டிக் காட்டினான்.
ஏற்கெனவே மேவார் அரசை இரண்டாகப் பிளந்திருக்கும் சந்தாவதர்- சக்தாவதர் போட்டி மீண்டும் தலையெடுப்பதை நினைத்து சோம்ஜி கலங்கினார்.
இருப்பினும் தைரியத்துடன் சொன்னார் : “சங்கிரமசிம்மா! உன் வீரத்தையோ சக்தாவதர்களின் வீரத்தையோ நான் சந்தேகிக்கவில்லை. வெளியார் படையெடுத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் பதவியை நினைத்து நாம் பிளவுபட்டால்
மேவார் போய்விடும். இந்தப் போர் முடியும்வரை சலூம்பிரா சேனாதிபதியாக இருக்கட்டும்.” என்றார் மிகவும் தீனமான குரலில்.
சங்கிரமசிம்மன் பதில் சொல்லவில்லை.
தீப்சந்த் மட்டும் பதில் சொன்னான் “எனக்கு சம்மதம்” என்று.
சங்கிரமசிம்மன் வேண்டா வெறுப்பாகத் தலையை அசைத்துவிட்டு வெளியேறினான். ஆனால் அன்றைய முடிவு எத்தனை விபரீதங்களை மேவாரில் விளைவிக்கப் போகிறது என்பதை மந்திரி சோம்ஜி அன்று உணர வில்லை. அந்த
முடிவு அவரது உயிருக்கே உலை வைக்கும் என்பதையும் அவர் அறியவில்லை. நாட்டு நன்மையை முதன்மையாக வைத்து அன்று அவர் அந்த முடிவைச் செய்தார்.
அவர் முடிவு சந்தாவதர்கள் சக்தாவதர்களின் விரோதத்தை முறியடிக்கவில்லை. முடிவைக் கேட்டதும் சங்கிரமசிம்மன் வெளியேறினான். போருக்கு ஒப்புதல் தந்து, சலூம்பிரா வெற்றிப் புன்னகை செய்தார். “மந்திரி! கவலை வேண்டாம்,
மகாராஷ்டிரர்களை நானே வெற்றி கொள்கிறேன். சங்கிரமசிம்மன் இல்லாவிட்டால் கோட்டா சமஸ்தானாதிபதி ஜலீம்சிங் இருக்கிறான் நமக்கு உதவ. அவன் பெரும்படையும் இருக்கிறது. தவிர தீப்சந்த் இருக்கிறான்.” என்று கூறி
விடைபெற்றுக் கொண்டார்.
அவ்விருவரும் சென்றதும் தீப்சந்தை உற்று நோக்கிய மந்திரி சோம்ஜி “தீப்சந்த்! இந்த முடிவைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று வினவினார்.
தீப்சந்த் தனது முகத்தில் வருத்தத்தைப் படரவிட்டுக் கொண்டான். “நமது நாடு கட்சி விரோதங்களால் அழிந்தது. நாட்டுப் பற்றில்லாமல் தங்கள் நலனைமட்டும் உத்தேசிக்கும் கட்சிகள் இருக்கும் வரை இந்த நாடு உருப் படுவது கஷ்டம்.
ஆனால் பொது விரோதி வரும்போதாவது இவர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்களா பார்ப்போம்” என்று கூறினான். அவன் குாலில் தொனித்த சோகம் முகத்திலும் தெரிந்தது.
சோம்ஜி சோக பிம்பமாகத் தெரிந்தார். “நல்லதோ பொல்லாததோ எனக்குச் சரியென்று தெரிந்த முடிவுக்கு வந்துவிட்டேன்” என்று கூறிய அவர் சொற்களிலும் சோகம் பெரிதாக ஒலித்தது. “எதற்கும் இங்கு நடந்ததை ராஜமா தாவிடம்
தெரிவித்து விடு.” என்று சொன்னார்.
“உத்தரவு மகாமந்திரி. அப்படியே செய்கிறேன். நாளை நான் ஊருக்குக் கிளம்பு முன்பு உங்களைச் சந்திக்கிறேன்” என்று கூறிக் கிளம்ப முற்பட்டவனை சோம்ஜி தடுத்து, “ஊருக்கா!” என்று வியப்புடன் கேட்டார்.
“ஆம்.”
“உனது வீரர்கள் பத்தாயிரம் பேர் உதயபூருக்கு வரப்போவதாகச் சொன்னாயே?”
“ஆம் சொன்னேன்.”
“அவர்கள் வரும்போது நீ இருக்க வேண்டாமா?”
“அதற்குள் வந்து விடுவேன்.”
“அதற்குள் மண்டலக் கோட்டைக்குச் சென்று திரும்பி விடுவாயா?”
“அங்குப் போகப் போவதில்லை. நேராக நாகராமக்ராவக்குச் சென்று திரும்பிவிடுவேன்.”
இதைக் கேட்ட சோம்ஜி, “அங்கு எதற்கு?” என்று கேட்டார்.
“புஷ்பாவதியைக் கொண்டுபோய் விட வேண்டும். இரண்டாவதாக அங்குள்ள ஒரு பெண்ணைப் பார்க்க வேண்டும்.” என்றான் தீப்சந்த்.
சோம்ஜி சிந்தனை வசப்பட்டார். “புஷ்பாவதியை நீ கொண்டுபோய் விடவேண்டிய அவசியம் தெரிகிறது. வந்தபோதே அவளை சந்தாவதர்கள் மறித்துத் தூக்கிச் செல்ல முயன்றார்கள். ஆனால் இன்னொரு பெண் யார்?” என்று கேட்டார்
தீவிர சிந்தனைக்குப் பிறகு.
தீப்சந்த் அவருக்கு மட்டும் கேட்கும்படி பேசினான். அவர் காதுக்கருகில் குனிந்து, “ரகசிய ராணி!” என்று சொன்னான் ரகசியமாக.
மந்திரி பிரமித்தார். “என்ன! ரகசிய ராணியா!” என்றும் கேட்டார்.
“மகாராணாவுக்கு அங்கு ஒரு ராணி இருக்கிறாள். அதை ரகசியமாக வைத்திருக்கிறார் மகாராணா.” என்றான் தீப்சந்த்.
இந்தப் புது செய்தியைக் கேட்டுத் திடுக்கிட்டார் மந்திரி, “மகாராணா இருக்கும் லட்சணத்துக்கு ரகசிய ராணி வேறா? இங்குள்ள ராணிகளை நிர்வகிக்கவே பணம் இல்லை,’ என்று எரிந்து விழவும் செய்தார். அந்த ராணியின் பெயர் என்ன?”
என்று கேட்டார்.
“தெரியாது.”
“தெரியாதா? அப்படியானால் ராணி இருப்பது மட்டும் எப்படித் தெரியும்?”
“பார்த்தேன்.”
“என்ன பார்த்தாயா?”
“மகாராணா ராணியைக் கட்டித் தழுவுவதை”
“சீ… சீ…! அதைப் பார்க்கலாமா?”
“வேண்டுமென்று பார்க்கவில்லை. தற்செயலாகப் பார்த்தேன்.”
.
அதற்குமேல் சோம்ஜி ஏதும் பேசவில்லை. “சரி ; அவள் யார் என்பதையும் குலத்தையும் பெயரையும் விசாரித்து வா.” என்று மட்டும் சொன்னார்.
அங்கிருந்து கிளம்பிய தீப்சந்த் தனது புரவியில் ஏறி அரண்மனைக்கு வந்தான். பழையபடி புரவியைப் புரவிக் கொட்டடியில் கட்டிவிட்டு அந்தப்புர நந்தவனத்தில் புகுந்தான். முந்தைய நாளைப்போல் அன்றும் வெண்மதி தன்
கிரணங்களை வீசியிருந்தான் நந்தவனத்தின்மீது. அன்றும் தீப்சந்த் கண்களை உயர்த்தினான் சாளரங்களை நோக்கி. சாளரங்களில் யார் முகமும் தெரியவில்லை. சாளரங்கள் எல்லாம் மூடியபடி இருந்தன. அதனால் ஏமாற்றப் பெருமூச்சு
விட்டு அந்தப்புரத்தை நோக்கி நடக்க முற்பட்டவன் பக்கத்திலிருந்த கொடி வீட்டில் யாரோ இருவர் பெசும் ஒலி கேட்டு சட்டென நின்றான். பேசிய இருவரில் ஒருவர் மகாராணா. இன்னொரு குரல் புஷ்பாவதியின் குரல்.
“மகாராணா! இது உங்களுக்குத் தகுதியல்ல. போய் விடுங்கள்” என்றாள் புஷ்பாவதி.
ஆனால் மகாராணா அவளுக்குச் செவி சாய்க்கவில்லை.