Mohini Vanam Ch 22 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 22 மன்னனும் மாதாவும்!
Mohini Vanam Ch 22 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
அறை வாயிலில் அதிர்ச்சியும் சோகமும் கலந்த முகத்துடன் ராஜமாதா ராம்பியாரி நிற்பதைக் கண்டதும் தீப்சந்த் அச்சப்படவும் இல்லை; அவள் நிலை கண்டு அனுதாபப்படவும் இல்லை. இப்படியொரு கையாலாகாத காமப் பித்தனான
மகாராணா பீம்சிங்கைப் பெற்றதற்கு மகாராணி எவ்வளவு சோகப்பட்டாலும் தவறில்லை என்றே நினைத்தான் வீரனான தீப்சந்த்.
அவன் உள்ளத்தில் ஏற்பட்ட வெறுப்பு முகத்திலும் தெரிந்ததைக் கவனித்த ராஜமாதா ஏதோ பேச முயன்றுனது இதழ்களைத் திறந்தும் சொல் ஏதும் வெளிவராததால் இதழ்களை இருமுறை திறந்து மூடவே செய்தாள்
நடு வயதை அடைந்திருந்துங்கூட ராஜமாதாவின் உதடுகள் அழகுடனும் உறுதியுடனும் இருப்பதைக் கண்ட தீப்சந்த் அவளைத்தனது தீகக்கும் விழிகளால் ஏறெடுத்து நோக்கினான். “ராஜமாதா! தங்கள் கட்டளை ஏதாவது
இருக்குமானால் சொல்லுங்கள். அதை நிறைவேற்றி விட்டுச் செல்கிறேன்” என்று கடுமை நிறைந்த குரலில் பேசினான்.
ராஜமாதா அதற்குப் பதிலும் சொல்லவில்லை, அறை வாயிலை விட்டு நகரவும் இல்லை. அறைக்குள் புறப்பட சித்தம் செய்து கொண்டிருந்த புஷ்பாவதியை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தாள்.
புஷ்பாவதி, மகாராணி வந்ததைக் கவனித்தும் கவனிக்காதது போலவே நடந்து கொண்டாள். “புறப்பட நான் தயார்.” என்று ஒரு வார்த்தையை மட்டும் தீப்சந்தை நோக்கிக் கூறினாள்.
அதுவரை பேசாமலே நின்றிருந்த மகாராணி, “எங்குப் புறப்படுகிறாய் புஷ்பாவதி?” என்று மெதுவாக வினவினாள்.
புஷ்பாவதி அறையில் இருந்த கட்டில் அருகில் நின்ற படியே மகாராணியைத் திரும்பிப் பார்த்தாள். “எங்கு என் மானத்துக்குப் பங்கம் வராதோ அந்த இடத்துக்கு.” என்றும் சொன்னாள்.
இந்த உரையாடலுக்குள் மனதை உறுதிப்படுத்திக் கொண்ட ராஜமாதா கேட்டாள், “அது எந்த இடம் புஷ்பாவதி?” என்று.
“என் தந்தை இருக்கும் இடம்.” என்றாள் புஷ்பாவதி.
“அங்குதானே என் மகனின் ஆசைநாயகி இருக்கிறாள்?” என்று கேட்டாள் மகாராணி.
“அவளை ரகசிய ராணி என்று அழைக்கிறோம்” என்று புஷ்பாவதி சொன்னாள்.
“நீங்கள் எப்படி அழைத்தாலும் அவள் மகாராணாவின் ஆசை நாயகிதானே?” இதை வெகு தந்திரமாகக் கேட்டாள் ராஜமாதா.
“அப்படியே வைத்துக் கொள்ளுங்கள், அதைப் பற்றி எனக்கென்ன?” என்றாள் புஷ்பாவதி.
“புஷ்பாவதி நீ வயது வந்தப் பெண். திருட்டுத்தனமாக ஒரு பெண்ணுடன் சரசமாட அடிக்கடி மகாராணா நாகராமக்ராவுக்கு வருகிறார். அதற்கு உன் தந்தை இடங் கொடுப்பது மானமுள்ள நடத்தையா? அந்த இடம் தான் மானத்தைக்
காக்கும் புண்ணிய பூமியா? அந்த இடத்தை விட இந்த அரண்மனை எந்த விதத்தில் குறைந்தது?” என்று கேட்ட மகாராணி, “புஷ்பாவதி! என் மகனுக்கு நான் பரிந்து பேசுவதாக நினைக்காதே. அவன் நடத்தையும் கோழைத்தனமும்
தினமும் என் உயிரைச் சிறிது சிறிதாகக் கரைத்துக் கொண்டு வருகின்றன. இப்பொழுது நான் பிழைத்திருப்பது மகனுக்காக அல்ல. மேவார் ராஜ்ஜியத்துக்காக. உன்னைவிட, என்னைவிட, மகா ராணாவை விட மேவார் பெரியது.
அதைத்தான் தினமும் நான் எண்ணி எண்ணி இறந்து கொண்டிருக்கிறேன். என் மகன் நடத்தைக்குப் பரிந்து நான் வரவில்லை. மேவாரையும் சூரிய குலத்து மன்னனான மகாராணாவையும் காப்பாற்ற தீப்சந்தைக் கேட்டுக் கொள்ளவே
நான் வந்தேன்.” என்று சொல்லிக் கண்களில் நீர் ததும்ப நின்றாள்.
அப்பொழுது பேசினான் தீப்சந்த் தனது மவுனத்தைக் கலைத்துக் கொண்டு, “மகாராணி! தர்மங்களை, பேச்சு சாதுரியத்தினால், உங்கள் உள்ள உணர்ச்சிகளால், மாற்ற முடியாது. உண்மையான எந்த ராஜபுத்திரனும் ராஜ புத்திரியும்
மானமிழந்து வாழ இஷ்டப்படமாட்டார்கள்.
இது உங்களுக்குத் தெரியாததல்ல. நாகராமக்ராவில் நடக்கும் மகாராணாவின் சாகசத்துக்கு புஷ்பாவதியோ அவள் தந்தையோ காரணமல்ல. மன்னர் இருக்கும் இந்த அரண்மனையை விட இவள் தந்தையிருக்கும் நாகராமக்ரா தான்
புஷ்பாவதி இருக்க வேண்டிய இடம். இவள் தந்தை எந்த அநீதியையும் அனுமதிக்காதவர் என்னையே கொன்று விடுவதாகச் சொல்லியிருக்கிறார். ஆகவே புஷ்பாவதியை அங்கு அழைத்துப் போகிறேன்” என்று சொன்னான்.
“தீப்சந்த்…!” மகாராணியின் உதடுகள் துடித்தன. அந்த ஒரு சொல்லும் தெளிவாக வரவில்லை அவள் வாயிலிருந்து.
“மகாராணி!”
“மகாராணாவை இந்த ஒரு முறை மன்னிக்கக் கூடாதா?”
“மன்னிப்பு சில காரியங்களுக்குத்தான் உண்டு மகாராணி.”
“மேவார் என்ன ஆவது தீப்சந்த்?”
“மேவாரை நானா காப்பாற்றப் போகிறேன்? பொம்மையா கோபுரத்தைத் தாங்குவது? மகாராணி! பெரிய அரசுகளை அழித்திருப்பது ஆள்பவர்களின் நடத்தை கெட்டதால் தான்”
தீப்சந்தின் இந்தப் பேச்சில் மகாராணி கலங்கவில்லை. “தீப்சந்த்! மேவார். பெற்றெடுத்த செல்வம் நீ. அந்த அன்னை பூமியைக் காப்பது உனது கடமை அல்லவா?” என்று கேட்டாள்.
சற்று சிந்தித்த தீப்சந்த் “மகாராணி! எந்த மனிதனுக்கும் மனைவி, மாதா, இருவரையும் காக்கும் பொறுப்பு இருக்கிறது. அதற்காகத் திரும்பி வருவேன், ஆனால், புஷ்பாவதியை இங்கு இருத்தி வைக்க முடியாது. அவளை அவள் வீட்டில்
விட்டுத் திரும்புகிறேன். எனது பீரங்கிகள் இங்கு வருமுன்பு நான் இங்கு வருகிறேன். என் உயிர் இருக்கும்வரை மகாராணாவைக் காப்பாற்றுகிறேன்” என்ற தீப்சந்த் தனது கச்சையை இறுகக் கட்டிக் கொண்டான். “புறப்படு புஷ்பாவதி”
என்றும் சொன்னான்.
புஷ்பாவதி தனது சேலைத் தலைப்பை எடுத்து முக்கா டிட்டுக் கொண்டு கிளம்பினாள். போகும்போது மகாராணியிடம் ஏதும் சொல்லாமலே புறப்பட்டாள். “புஷ்பாவதி!” என்ற மகாராணியின் அழைப்பு அவளைத் தடை செய்தது.
திரும்பி நோக்கினாள் புஷ்பாவதி. “புஷ்பாவதி! தீப்சந்தின் கரம் உன்னைக் காக்கும் வரை உனக்குக் குறைவு எதுவும் இருக்காது. மகாராணவைப் பற்றி மனம் நோகாதே, நீ சபித்தால் மகாராணா அழிந்து விடுவான். உனக்கும் தீங்கு
எதுவும் ஏற்படவில்லை. சமயத்தில் தீப்சந்த் வந்து விட்டான்.” துக்கத்தால் மனம் கலங்கப் பேசினாள் ராஜமாதா.
மகாராணியை புஷ்பாவதி சீற்றம் மிகுந்த கண்களால் நோக்கினாள். “மகாராணி! ஏழைக்கும் மானம் உண்டு” என்று கூறிவிட்டு வாயிற்படியைத் தாண்ட முயன்றாள்.
மகாராணி வழிவிட்டு நின்றாள்.
தீப்சந்த் மகாராணிக்குத் தலை வணங்கிவிட்டு புஷ்பாவதி பின்தொடர வெளியே வந்தான்.
அவர்கள் போவதைப் பார்த்துக் கொண்டே நின்ற மகாராணி, அங்கிருந்த மகாராணாவின் அறையை நோக்கி நடந்தாள்.
அன்று என்ன காரணத்தாலோ மகாராணாவின் அந்தரங்க அறை திறந்து கிடந்தது. அவருடைய முதல் ராணியும் அங்கு இல்லாததால் படுக்கையில் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார் மகாராணா.
“பீம்!” மகாராணியின் உஷ்ணமான குரலைக் கேட்டுத் தலை நிமிர்ந்தார் மகாராணா. “அம்மா! நீங்களா!”
“அந்தப் பாவத்தை செய்தவள் தான்” மகாராணியின் சொற்கள் வேகமாக உதிர்ந்தன.
“பாவமா! என்ன பாவம் செய்தீர்கள்?” மகாராணா கேட்டார் பணிவுடன்.
“உன்னைப் பெற்ற பாவம்.” மகாராணியின் குரலில் வெறுப்பு இருந்தது. “உன்னை நீயே அழித்துக் கொள்கிறாய்.” என்று தொடர்ந்து சொன்னாள்.
மகாராணாவுக்கு மற்றதில் அதிக புத்தியில்லாவிட்டாலும் மகாராணியை அவர் நொடி நேரத்தில் புரிந்துகொண்டார். நந்தவனத்தில் நடந்தது அவள் காதில் விழுந்திருக்க வேண்டும் என்று உணர்ந்துகொண்ட தால், “அம்மா நீங்கள்
சொல்வது புரியவில்லை” என்றார். –
“புரிந்து கொள்.”
“எதை?”
“இன்னொருவன் மனைவிமீது ஆசைப்படுவது அனர்த்தம் என்பதை.”
“அப்படியொன்றும் நான்…”
“நந்தவனத்திற்கு ஏன் போனாய்?”
“அழைத்ததால் போனேன்…”
“யார் அழைத்தார்கள்?”
“நாகராமக்ராவில் இருந்து வந்தாளே, அந்தப் பெண்.”
“எதற்கு?”
“ஏதோ செய்தி சொல்ல.”
மகாராணா வெகு தந்திரமாக நடந்ததைத் திருத்திச் சொல்லியும் மகாராணி ஏமாறவில்லை.
“என்ன செய்தி?” என்று கேட்டாள். “யாரிடமிருந்து செய்தி வந்தது? உன் ஆசைநாயகியிடம் இருந்தா?” என்று சீறவும் செய்தாள்.
மகாராணா திகைத்தார் சில விநாடிகள். “மகாராணி!” என்று தாயை அழைத்தார்.
மகாராணி முகத்தில் இகழ்ச்சியைக் காட்டினாள். ‘நான் மகாராணி, நீ மகாராணா, இதுதான் சரி” என்று வெறுப்புடன் சொன்ன மகாராணி, ““தீப்சந்த் போய் விட்டான்” என்றும் சொன்னாள்.
“எங்கு?” என்று மகாராணா கேட்டார் அதிர்ச்சி மிகுந்த குரலில்.
“உன் ஆசை நாயகி இருக்கும் இடத்திற்கு.” என்றாள் மகாராணி.
தூக்கிப்போட்டது மகாராணாவுக்கு. “அவள் இருக்குமிடத்திற்கு இவன் ஏன் போகிறான்?” என்று கேட்டார்.
அவள் அழைத்திருப்பாள்.” என்ற மகாராணி, “மகாராணா! உன்னை புஷ்பாவதி அழைக்கலாம், உன் ஆசைநாயகி உன் மெய்க்காவலனை அழைக்கக்கூடாதா?” என்று சீறிவிட்டு அந்த அறையை விட்டு அகன்றாள்.
மகாராணா ஏதும் சொல்ல வழியில்லாமல் பிரமை பிடித்து நின்றார். அவர் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. தீப்சந்த் போய்விட்டால் சலூம்பிராவின் கை ஓங்கும் என்ற நினைப்பால் சற்று மனம் தளர்ந்தார்.
அப்பொழுது அங்கு தோன்றிய காவலன் ஒருவன் வந்து “மகாராணாவை மந்திரி பார்க்க விரும்புகிறார்” என்று தெரிவித்தான்.
“இந்த நடுநிசியிலா!” என்று கேட்டார் மகாராணா
காவலன் பதில் சொல்வதற்குள் மகாமந்திரி சோம்ஜி வெகுவேகமாக மகாராணாவின் அறைக்குள் நுழைந்தார். மந்திரியின் அவசரத்தையும் முகத்தில் இருந்த கலக்கத் தையும் கண்ட மகாராணா “மந்திரி! என்னைப் பார்க்க வேளை நேரம்
கிடையாதா?” என்று கேட்டார்.
வேளை பார்க்கும் சமயமல்ல இது.” என்றார் மந்திரி.
“என்ன அப்படி முக்கியமான செய்தி?”
மந்திரியின் குரல் லேசாக நடுங்கியது. பேரதிர்ச்சி தரும் செய்தியைச் சொன்னார் மகாமந்திரி சோம்சந்த் காந்தி. “எனக்கு உடனடியாக தீப்சந்தைப் பார்க்க வேண்டும்” என்றார். “அவன் இருக்கும் அறை எது? நானே போய் பார்க்கிறேன்”
.
என்று குரலில் அவசரம் மிதமிஞ்சி ஒலிக்க வினவினார்.