Mohini Vanam Ch 23 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 23 எதிர்பாராத தடை
Mohini Vanam Ch 23 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
பிரதான மந்திரி சோம்சந்த் காந்தியின் அவசரத்தையும் அவர் குரலில் இருந்த அச்சத்தையும் கவனித்த மேவார் மகாராணா பீம்சிங் ஏதோ அனர்த்தம் தொடர இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாலும், அனர்த்தம்
எதுவாயிருந்தாலும் அதைச் சமாளிக்கும் திராணி தனக்கில்லை என்பதை உணர்ந்திருந்ததால் மேலுக்குத் துணிவைக் காட்டி, “தீப்சந்தைக் காண என்ன அத்தனை அவசரம்?” என்று பிகுவை விடாமல் வினவினார்.
“அவசரமில்லாமலா இங்கு வருவேன் இந்த நேரத்தில்?” என்று சோம்ஜி பதில் கேள்வி விடுத்து “காலம் கடத்தாதீர்கள் மகாராணா, சீக்கிரம் அவன் இருக்கும் இடத்தைச் சொல்லுங்கள்” என்று பரிதாபம் நிறைந்த குரலில் கெஞ்சினார்.
மகாராணாவும் தமது அவசரம் அச்சம் இரண்டையுமே இழந்து இளக்காரம் ஒலித்த குரலில் சொன்னார் : “அந்த அதிர்ஷ்டந்தான் மேவாருக்கு இல்லையே!” என்று.
“எந்த அதிர்ஷ்டம்?” மகாராணா கேட்டார் ஏதும் புரியாமல்.
“மகாராணாவே பிரச்சினைகளைத் தீர்க்கும் அதிர்ஷ்டம்.” என்றார் சோம்ஜி.
மந்திரி தம்மைப்பற்றி இகழ்ச்சியாகப் பேசுகிறார் என்பதைப் புரிந்துகொண்ட மகாராணா “சோம்ஜி! நீர் சொல்வது எனக்குப் புரிகிறது. மன்னனைப்பற்றி இகழ உமக்கு என்ன துணிச்சல்? நான் இஷ்டப்பட்டால்…” வார்த்தையை
முடிக்காவிட்டாலும் அதில் பூர்ணமான எச்சரிக்கை இருந்தது.
இந்த மிரட்டலுக்கு சோம்ஜி மசியவில்லை. “எது வேண்டுமானாலும் செய்யலாம்” என்றார் மகாராணாவின் வார்த்தையைத் தொடர்ந்து.
“உம்மைச் சிறை செய்துவிட முடியும்.”
“அதைவிட சௌகரியம் எனக்கு வேறு எதுவுமில்லை தயவு செய்து சிறை செய்யுங்கள்.”
“என்னய்யா உளறுகிறீர்?”
“உளறவில்லை. இந்தப் பணியில் இருக்கும் பிடுங்கலை விட சிறை அமைதியானது. பேசாமல் என்னைச் சிறை செய்துவிடுங்கள்.”
“உமக்கு வேறுவித அமைதியும் என்னால் கொடுக்க முடியும்…”
“விளக்குங்கள் மகாரணா.”
“உம்மைக் கொலை செய்யவும் என்னால் உத்தரவிட முடியும்.”
இதைக் கேட்ட மந்திரி லேசாக நகைத்தார்.
“என்ன சிரிக்கிறீர்?” சீற்றத்துடன் கேட்டார் மகா ராணா
சோம்ஜி சில விநாடிகள் மகாராணாவை ஏறெடுத்து நோக்கினார். மகாராணா! என்னைக் கொல்ல எந்த முயற்சியும் எடுக்கவேண்டாம். தங்களைப் பாதுகாப்பதால் வரிகளை வசூல் செய்வதால், என்னைக் கொல்ல சலூம்பிரா
முதற்கொண்டு பலர் சித்தமாயிருக்கிறார்கள். எந்த நிமிடத்திலும் என் உயிர் போகலாம் தங்களிடம் மந்திரியாயிருப்பவன் கதி இது. இத்தனையும் மீறி நான் ஏன் தங்களிடம் மந்திரியாயிருக்கிறேன் என்பது எனக்குப் புரியவில்லை” என்ற
சோம்ஜி “மகாராணா! தீப்சந்த் இருக்குமிடத்தைச் சொல்லுங்கள் அல்லது அவனை வரவழையுங்கள்” என்று அவசரப்படுத்தினார்.
மகாராணாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆகவே “எதற்கும் மகாராணியைக் கலந்து பேசுவோம்” என்றார்.
14 “அதற்கெல்லாம் அவகாசமில்லை. மகாராணி இதில் செய்யக்கூடியது எதுவுமில்லை.” என்று சற்று இரைந்து பேசினார் சோம்ஜி.
அதைக் கேட்டுக்கொண்டே மைந்தன் அறைக்கு வந்த ராஜமாதா ராம்பியாரி “சோம்ஜி! இந்த அகாலத்தில் இங்கு எதற்காக வந்தீர்?” என்று கேட்டாள்.
“தீப்சந்தைப் பார்க்க வந்தேன் மகாராணி” என்றார் சோம்ஜி.
“எதற்கு?”
“சிந்தியாவிடம் இருந்து செய்தி வந்திருக்கிறது.”
“மகாராஷ்டிரர் தளபதியிடம் இருந்தா?”
“ஆம்.”
“என்ன செய்தி சோம்ஜி?”
“மகாராஷ்டிர தளபதி பாக்கி பணம் கேட்கிறார்.”
இதைக் கேட்ட ராஜமாதா மட்டுமின்றி மகாராணாவும் அதிர்ச்சியடைந்தார். “நம்மிடம் ஏது பணம்?” என்று ராஜமாதா கேட்டாள்.
“இல்லாவிட்டால் பழைய ஒப்பந்தப்படி கோட்டைகளைக் கேட்கிறார்கள்” என்று சோம்ஜி அறிவித்தார். அத்துடன் நிற்காமல் பழைய ஒப்பந்தத்தையும் நினைவுபடுத்தினார். “மகாராஷ்டிரர் நம்மீது படையெடுக்காதிருக்க அறுபத்தி
மூன்றரை இலட்சம் ரூபாய்கள் மகாத்ஜி சிந்தியாவுக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டோம். முழுப் பணமும் கொடுக்க முடியாததால் பாதியைக் கொடுத்து ஜாவத் முதலிய ஐந்து பர்கானாக்களை (மாகாணங்களை) அடமானம் வைத்து
அவர்களை வரி வசூலித்துக்கொள்ளச் சொன்னோம். வசூலிப்பதில் நாமும் உதவுவதாகச் சொன்னோம்.” என்றார்.
மகாத்ஜி சிந்தியாவைப்பற்றிக் கேட்டதும் குலை நடுங்கினார் மகாராணா. இருப்பினும் தனது கம்பீரத்தை விடாமல், “அது பழைய கதை” என்றார்.
“ஆனால் புதிய உருவம் எடுத்திருக்கிறது. சிந்தியா ஒன்று பாக்கியைக் கேட்கிறார். இல்லாவிட்டால் ஊர்களைக் கேட்கிறார்” என்ற சோம்ஜி ராஜமாதாவை நோக்கினார்.
ராஜமாதாவின் முகத்தில் கவலை அதிகரித்தது. அந்தக் கவலை கிளறிய கோபத்தால் மகனைச் சுட்டுவிடுவது போல் பார்த்தாள். ‘. இதற்கு என்ன சொல்கிறாய்?’, என்று கேட்டாள்,
அதுவரை வீம்பைக் காட்டிய மகாராணா திடீரென பணிவைக் காட்டினார் பணிவை மட்டும் காட்டவில்லை. ‘சோம்ஜி! தமிழ் படித்திருக்கிறீரா?” என்று கேட்டார்.
“எதற்கு?”
“அதில் ஒரு பழமொழி இருக்கிறது.”
“என்னவோ?”
“மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல். இதை என்னிடம் வேலைக்கு இருந்த தமிழக வீரன் ஒருவன் அடிக்கடி சொல்லுவான்.”
“அதற்கு என்ன இப்பொழுது?”
“பொருள் வரும் வழியைச் சொல்லுபவர் தான் சரியான மந்திரி.”
“நான் வேலையை விட்டுவிடுகிறேன். பொருளை வர வழைக்கும் மந்திரியாரையாவது பார்த்துக்கொள்ளுங்கள். சிறையிடுவதாகச் சொன்னீர்களே. அதையாவது செய்யுங்கள்.” என்றார் சோம்ஜி சினத்துடன்.
ராஜமாதா உரையாடலில் புகுந்தாள். “என்ன! உம்மைச் சிறைசெய்வதாகச் சொன்னானா?” என்று கேட் டாள்.
“ஆம், கொலைகூட செய்வதாகச் சொன்னார்” என்றார் சோம்ஜி.
ராஜமாதா மைந்தனைச் சினம் கக்கிய விழிகளால் நோக்கினாள். “பீம்! நீ யாரையும் சிறை செய்ய அவகாசம் இருக்காது ; உன்னை எதிரிகள் சிறை செய்வார்கள் நீ இப்படியே காலங் கழித்தால்” என்று மைந்தனைப் பார்த்துச் சீறிய மகாராணி
“சோம்ஜி! இப்பொழுது உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டாள்.
“தூது அனுப்ப வேண்டும் சிந்தியாவுக்கு” என்றார் சோம்ஜி.
“என்ன தூது?”
“முதலில் பணம் கொடுக்க அவகாசம் கேட்கிறேன். அதுவும் இல்லாவிட்டால் அடகு வைத்திருக்கும் இடங்களைச் சில காலத்திற்கு அவர்கள் வசம் விட வேண்டும்.”
“சரி ; அப்படியே அனுப்பும் தூது” என்றாள் மகாராணி.
“அதற்குச் சரியான தூதன் வேண்டும்” என்றார் சோம்ஜி.
“யாரை வேண்டுமானாலும் அனுப்புங்கள” என்றாள் மகாராணி.
“தீப்சந்தை அனுப்புவதுதான் சரி. அவனைத் தேடித் தான் இங்கு வந்தேன்.” என்றார் சோம்ஜி.
மகாராணியின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. “சற்று முன்புதான் தீப்சந்த் சென்றான்.” என்றாள்.
இம்முறை சோம்ஜியின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. “என்ன! சென்றுவிட்டானா? எங்கு?” என்று துரிதமாகக் கேட்டார்.
“புலிமலைக்கு (நாகராமக்ராவுக்கு) புஷ்பாவதியைக் கொண்டு விட” என்றாள் மகாராணி சற்றுத் தயக்கத்துடன்.
“மகாராணாவின் மெய்க்காவலனாகி இன்னும் இரண்டு நாள் ஆகவில்லை. அதற்குள் எப்படி அனுமதி இல்லாமல் கிளம்பலாம்?” என்று சோம்ஜி சட்டம் பேசினார்.
“அந்தப் பெண்ணை இங்கு எப்படித் தனியாக வைத்திருக்க முடியும்?” என்றாள் ராஜமாதா.
“இங்கென்ன தனி? அரண்மனையில் ராஜபோகம் இதைவிட நாகராமக்ரா எந்தவிதத்தில் உயர்வு?” என்று சீறினார் மந்திரி.
அதற்குமேல் அவர் அங்கு நிற்கவில்லை. “மகாராணி! எப்படியாவது நமது வீரர்களை அனுப்பி அவனை வர வழைக்கிறேன். அவனிடம் சிந்தியாவுக்கு நல்ல மதிப்பு. அவன் போவதுதான் நமக்கு லாபம்.” என்று கூறிக் கொண்டு
தடதடவென படிகளில் இறங்கி அந்தப்புரத்தை விட்டு நடந்தார் படுவேகமாக.
மாதாவும் மைந்தனும் ஒருவரையொருவர் நோக்கிக் கொண்டனர். முடிவில் மகாராணாவின் தலைதான் குனிந்தது. “உன் நடத்தையின் பலனைப் பார். உன்னைக் காக்கும் ஒரே வீரனையும் ஓட்டிவிட்டாய்!” என்று ராஜு மாதா சீறினாள்.
மகாராணா பதில் பேசாமல் இடித்த புளிபோல் உட்கார்ந்திருந்தார். இந்தத் தர்க்கம் அரண்மனையில் நடந்து கொண்டிருக்கையில் இரண்டு புரவிகளில் பயணம் செய்த தீப்சந்தும் புஷ்பாவதியும் மோகினிவனத்தை அடைந்து
கொண்டிருந்தார்கள்.
அந்த இடத்துக்கு வந்ததும், “புஷ்பாவதி! இந்த இடத்தில் தான் நீ மயக்கமடைந்து கிடந்தாய்.” என்று அவள் கிடந்த இடத்தைச் சுட்டிக் காட்டினான் தீப்சந்த்.
புஷ்பாவதி அவனைச் சற்றே திரும்பிப் பார்த்து “இங்கு மட்டுமென்ன அரண்மனையிலும் தான் மயங்கிக் கிடந்தேன்” என்று சொல்லிப் புன்முறுவல் செய்தாள்.
“இந்த மயக்கம் வேறு, அந்த மயக்கம் வேறு.” என்று சுட்டிக்காட்டினான் தீப்சந்த்.
“எப்படி?’ என்று அவள் கேட்டாள் வெட்கத்துடன்.
“இங்கு நீ மாத்திரம் மயங்கிக் கிடந்தாய், அந்தப் புரத்தில் உன்னுடன் நானும் மயங்கினேன்” என்றான் தீப்சந்த் உற்சாகத்துடன்.
“இங்கு காயத்தினால் மூர்ச்சை அடைந்திருந்தேன்.” என்றாள் புஷ்பாவதி.
.
“அங்கு?”
“காயத்துக்கு ஒருவர் மருத்துவம் பார்த்தார்.”
“அதனால்?”
“காய்ச்சல் கண்டது.”
“காய்ச்சலா!”
“ஆம்!”
“மிகவும் சூடோ?”
“மிக மிக சூடு. ஆனால் அது அவர் செய்த மருத்துவத்தில் விளைந்தது.”
“மருத்துவத்தால் காய்ச்சல் குறையுமா? வளருமா?”
“மருத்துவத்தைப் பொறுத்தது” என்ற புஷ்பாவதி நகைத்தாள்.
அவனும் நகைத்தான். பிறகு புரவியில் இருந்து இறக்கிவிட்டான். அக்கம் பக்கத்தில் இடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் நடந்து சென்ற அந்த இருவரையும் காற்று வேகத்தில் வந்த நான்கு புரவிகள் சுற்றிக் கொண்டன.
அவர்கள் மீது அலட்சியமான பார்வையைச் செலுத்திய தீப்சந்த் தனது வாளின்மீது கையை வைத்தான்.
அந்த நான்கு புரவி வீரர்களுக்குத் தலைவனாக வந்தவன் புரவியில் இருந்து குதித்துத் தலை வணங்கினான் தீப்சந்த்துக்கு. “தாங்கள் உடனடியாக அரண்மனைக்குத் திரும்ப உத்தரவு” என்று கூறினான்.
“யார் உத்தரவு?” தீப்சந்தின் கேள்வியில் வெறுப்பு இருந்தது.
“மந்திரியின் உத்தரவு.” என்றான் காவலன்.
“இரண்டு நாளில் வருகிறேன் என்று சொல்.” என்றான் தீப்சந்த்.
“தலை போகிறகாரியமாம். இதை அரசக்கட்டளையாகப் பாவிக்கச் சொன்னார் மந்திரி.”
“நாளைக்கு வந்துவிடுகிறேன்.” என்றான் தீப்சந்த்.
“அதற்கும் அவகாசம் இல்லையாம்.” என்றான் காவலன்.
“நான் வேலையை விட்டுவிட்டதாகச் சொல்.” என்ற தீப்சந்த் மீண்டும் நடக்க முற்பட்டான்.
அப்பொழுது ஏற்பட்டது அவன் முற்றும் எதிர்பாராத தடை.
அதைக் கண்டு வெலவெலத்துப் போனான் தீப்சந்த்.
புஷ்பாவதியின் மனம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது.