Mohini Vanam Ch 24 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 24 அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!
Mohini Vanam Ch 24 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
முற்றும் எதிர்பாராத விதமாக மோகினிவனத்தில் தோன்றி அந்த திடீர் தடையை ஏற்படுத்தியவர் புஷ்பாவதியின் தந்தையும் நாகராமக்ராவின் தலைவருமான பல்வந்த்சிங்.
தன்னந்தனியாகப் பெரிய புரவியில் ராட்சதன் போன்ற தோற்றத்துடன் வேளையில்லா வேளையில் அங்கு காட்சியளித்த பல்வந்த்சிங் தமது மகளையும் அவள் பக்கத்தில் நெருங்கி நின்றுகொண்டிருந்த தீப்சந்தையும கொலைப்
பார்வையாகப் பார்த்தார். அவர்களைச் சூழ்ந்து நின்ற மேவார் படை வீரர்கள் மீதும் தமது ராட்சதக்கண்களால் நோட்டம் விட்டார் சில விநாடிகள். பிறகு புலி உறுமுவதைப் போன்ற கரகரத்த குரலில் மகளை நோக்கி, “புஷ்பாவதி! இங்கு
என்ன நடக்கிறது? உன்னையும் இந்த வேவுகாரனையும் ஏன் படைவீரர்கள் சுற்றி நிறகிறார்கள்?” என்று வினவினார்.
“இவர் வேவுகாரர் இல்லை “ என்று வீரர்கள் தலைவன் திருத்தினான் பல்வந்த்சிங்கை.
தந்தையைக் கண்டதும் ஏதோ குற்றம் செய்து விட்டவள் போன்ற மனநிலையை அடைந்து, இதயம் திக் திக்கென தொடர்ந்து அடிக்க நின்று கொண்டிருந்த புஷ்பாவதி, “இவர்கள் பிரதான மந்திரியின் வீரர்கள். எங்களைத் திரும்ப
அழைத்துச்செல்ல வந்திருக்கிறார்கள்” என்று நடுங்கும் குரலில் சொன்னாள்.
“உங்களைச் சிறை செய்ய வந்திருக்கிறார்களா?, என்று இரும்புக் குரலில் வினவினார் பல்வந்த்சிங்.”
“இல்லை. சிறை செய்ய வரவில்லை” என்று மந்திரியின் வீரர்களின் தலைவன் பதில் சொன்னான்.
நாகராமக்ராவின் தலைவர் இடியென நகைத்தான். “திரும்பி அழைத்துச் செல்ல இத்தனை வீரர்கள் எதற்கு?” என்று வினவினார் பல்வந்த்சிங்.
வீரர்கள் தலைவன் மிக சாதுரியமாகப் பதில் சொன்னான். “இவர்களாக வராவிட்டால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல.” என்றான் அவன்.
பல்வந்த்சிங் இகழ்ச்சிப் புன்முறுவல் செய்தார். “சிறை என்ற சொல்லை உபயோகிக்க தைரியம் இல்லை. அதற்குப் பதில் வலுக்கட்டாயம் என்று சொல்கிறாய். புரிந்து கொண்டேன்.” என்றார் இகழ்ச்சி குரலிலும் ஒலிக்க.
அத்துடன் அந்த வீரனை விசாரிப்பதை விட்டுத் தமது மகளை நோக்கி, “புஷ்பாவதி! ஒரு ராஜபுத்திரி இருளில் தனியாக இன்னொருவனுடன் பயணம் செய்வதைப்பற்றி ஏதாவது சிந்தித்தாயா?” என்று வினவினார்.
புஷ்பாவதி மெள்ள துணிவை வரவழைத்துக்கொண்டு “இவர் இல்லாவிட்டால் இத்தனை நேரம் நான் உயிருடன் இருக்க மாட்டேன்” என்று பதில் சொன்னாள்.
பல்வந்த்சிங்குக்கு வெறியூட்ட வேண்டுமானால் புஷ்பாவதியின் பதிலே போதும். ஆனால் அதை நன்றாக விளக்கினான் வீரர்கள் தலைவன். இவர் மகாராணாவின் மெய்க் காவலர். இவர்தான் தங்கள் மகளைக் காப்பாற்றி
அரண்மனைக்குக் கொண்டு வந்தார்.” என்று சொன்னான்.
பல்வந்த்சிங் அத்தனை முரட்டுத்தனத்திலும் தானும் அறியாத ஏதோ விபரீதங்கள் உதயபூரில் ஏற்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டார். ‘யார் இவளை என்ன செய்தார்கள்? யாரிடமிருந்து காப்பாற்றினார்?” என்று
விசாரித்தார்.
“சலூம்பிராவின் வீரர்கள் இவர்களைத் தூக்கிச் செல்ல முயன்றார்கள். இவர்கள் தலையிலும் வாள் காயம் பட்டது. அந்தச் சமயத்தில் மகாராணாவின் மெய்க் காவலர் தோன்றித் தங்கள் மகளை விடுவித்து அரண்மனைக்குத் தூக்கிச்
சென்றார். அங்குத் தங்கள் மகளுக்கு அரண்மனை மருத்துவரே மருத்துவம் பார்த்தார்” என்று விவரங்களைச் சொல்லியும் புஷ்பாவதியின் தந்தைக்குத் திருப்தி ஏற்படாததால் சிறிது நேரம் சிந்தனையில் இறங்கினார். பிறகு கேட்டார்.
“இவர்கள் இருவரையும் அழைத்துவர உத்தரவா அல்லது இவரை மட்டும் அழைத்துவர உத்தரவா?” என்று விசாரித்தார்.
“இருவரையும் அழைத்து வரத்தான் உத்தரவு.” என்றான் வீரன்.
“அப்படியானால் நானும் வருகிறேன்.” என்றார் பல்வந்த்சிங்.
“தங்களை அழைத்துவர உத்தரவில்லை.” என்று வீரன் திட்டமாகச் சொன்னான்.
“மந்திரி அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நான் வருவேன்” என்ற பல்வந்த்சிங் புரவியில் ஏறினார்.
புஷ்பாவதியும் புரவியில் ஏறினாள் தந்தையைத் தொடர. தீப்சந்த் மட்டும் புரவிமீது ஏறாமல் இடித்த புளி போல் நின்றான். “நீங்களும் புரவியில் ஏறிக் கொள்ளுங்கள்.” என்றான் வீரர்கள் தலைவன்.
“நான் வரமுடியாது என்று மந்திரிக்குத் தெரிவித்து விடு. நான் மன்னர் மெய்க்காவலன் பதவியைத் துறந்து விட்டதாகச் சொல்லிவிடு. நான் நேராக எனது கோட்டைக்குச் செல்வதாகவும் கூறிவிடு.” என்று கூறி விட்டுத் தனது
புரவியில் தாவி ஏறி வெகுவேகமாகப் பறந்து விட்டான்.
அவனைத் தொடர யாரும் முயலவில்லை. அதுவரை வீராப்பு பேசிய பல்வந்த்சிங்கூட திக்பிரமை பிடித்துப் புரவியில் உட்கார்ந்திருந்தார். “என்னத் துணிவு இவனுக்கு?” என்று உள்ளூர வியந்தும் கொண்டார்.
அவரோ மற்ற வீரர்களோ வேறு ஏதும் செய்ய இயலாததால், தீப்சந்த் தவிர மற்றவர்கள் மீண்டும் உதயபூரை நோக்கித் திரும்பினார்கள்.
அந்தக் கூட்டம் உதயபூரை அடைந்தபோது கிட்டத் கட்ட விடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் சந்திரன் தனது கலைகளைச் சிறிது குறைத்துக்கொண்டு மந்தமான நிலவை எங்கும் வீசிக்கொண்டிருந்தான். அப்படி
மங்கிவிட்ட நிலவு மேவார் நாட்டின் நிலையையே மங்கச் செய்வதுபோல் இருப்பதாகத் தோன்றியது புஷ்பாவதிக்கு. புரவியில் ஏறியதில் இருந்து தந்தையைத் திரும்பிப் பார்க்காமலே ஏதேதோ சிந்தனைகள் மனத்தை அழுத்த மிகுந்த
துன்பத்துடன் பயணம் செய்தாள். தீப்சந்த் தன்னை விட்டுச் சென்றது நியாயமற்றது என்று எண்ணினாள் புஷ்பாவதி. ஆனால் தீப்சந்த் போன்ற ஒரு வீரனை சிறைசெய்ய முயன்றது எத்தனை முட்டாள் தனம் என்றும் நினைத்தாள்.
தீப்சந்தின் பீரங்கிகளின் உதவி இல்லாமல் மேவாரை மகாராஷ்டிரர்களிடமிருந்து காப்பதோ, மகாராணாவை சலூம்பிராவின் மூர்க்கத்தனத்திலிருந்து மீட்பதோ முடியாத காரியம் என்று புஷ்பாவதிக்குச் சந்தேகமறத் தெரிந்ததால் அவன்
எங்குதான் போயிருப்பான் என்று எண்ணிப் பார்த்தாள். அவன் மண்டலக் கோட்டைக்குப் போயிருப்பான் என்று அவள் நம்பவில்லை. தனது பீரங்கிப் படையை உதயபூருக்கு வரச்சொல்லிவிட்டு, தீப்சந்த் மண்டலக் கோட்டைக்குப்
போவதாயிருந்தால் உதயபூரை மகாராஷ்டிரர்களிடம் இருந்து எப்படிக் காப்பாற்ற முடியும் என்ற சிந்தனையில் இறங்கியபடியே புரவியை நடத்தினாள்.
அவள் தீர்க்கசிந்தனையையும் சிந்தனையால் ஏற்பட்ட மௌனத்தையும் பல்வந்த்சிங் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். இத்தனைக்கும் காரணம் தீப்சந்த்தான் என்று முடிவுகட்டிய பல்வந்த்சிங், அவனுக்கு எப்படியும் புத்தி
கற்பிப்பது என்று முடிவு செய்தார். மகாராணாவின் ரகசிய ராணி தன்னிடம் இருப்பதால் மகாராணாவைச் சரிப்படுத்துவது அப்படியொன்றும் கஷ்டமான காரியமில்லை என்றும் தீர்மானித்தார். ஆனால் அவர் தீர்மானம் பலிக்காது
என்பதை உதயபூர் அரண்மனையை அடைந்ததும் உணர்ந்து கொண்டார்.
அவர்கள் உதயபூர் அரண்மனையை அடைந்தபோது பொழுது புலர்ந்துகொண்டிருந்தது. அரண்மனைக்குள் வர புஷ்பாவதி மறுத்தாள். “நீங்கள் வேண்டுமானால் அரண்மனைக்குள் செல்லுங்கள். நான் மந்திரியின் இல்லத்துக்குச்
செல்கிறேன்” என்று கூறினாள்.
பல்வந்த்சிங் சினத்தின் சொரூபமாகக் காட்சியளித்தார். “அரண்மனை உனக்குக் கசக்கிறதா?” என்று வினவினார் மிகுந்த கோபத்துடன்.
“ஆம்.” என்றாள் புஷ்பாவதி உறுதியுடன்.
“நீ யாருடன் பேசுகிறாய் என்பதைத் தெரிந்து கொண்டுதான் பேசுகிறாயா?” என்று வினவினார் பல்வந்த்சிங் சினத்துடன்.
“விவரம் புரியாத வீண் பிடிவாதத் தந்தையுடன் பேசுகிறேன் என்பதை அறிந்து தான் பேசுகிறேன்” என்ற புஷ்பாவதி புரவியை மந்திரியின் இல்லத்தை நோக்கிச் செலுத்தினாள் வேகமாக.
மந்திரியின் வீரர்கள் அவளைத் தொடர்ந்தார்கள்.
அவர்கள் போவதைப் பார்த்துக்கொண்டு பிரமித்து நின்றுவிட்ட பல்வந்த்சிங் “மன்னரிடம் பேசிவிட்டு உன்னைப் பார்க்கிறேன். உன் கொட்டத்தை அடக்குகிறேன்” என்று கறுவிவிட்டு, அரண்மனைக்குள் சென்று தனது புரவியைக்
கொட்டடியில் கட்டிவிட்டு, விருந்தினர்கள் வந்தால் தங்கும் அறைகளை நாடிச் சென்றார்.
அரண்மனையின் கோடிப் பகுதியில் இருந்த ஒரு அறையை அங்கிருந்த காவலன் ஒழித்துவிட அதில் தனது அங்கியைக் கழற்றிவிட்டு, காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, நீராடி சிற்றுண்டியருந்தி மகாராணாவைப் பார்க்கப்
புறப்பட்டார்.
மகாராணா அன்று விடியற்காலையிலேயே எழுந்து தமது ஆஸ்தான அறையில் உட்கார்ந்து சக்தாவதர்கள் தலைவருள் ஒருவனான சங்கிரமசிம்மனுடன் பேசிக் கொண்டிருந்தார்.
சங்கிரமசிம்மன் மகாராணாவின் முன்பு கம்பீரமாக நின்றிருந்தான். “மகாராணா! மந்திரியின் சொல் கேட்டு நான் சலூம்பிராவுடன் சேர்ந்து போரிடுவதாக ஒப்புக் கொண்டேன். சலூம்பிரா இப்பொழுது தனியாகப் பிரிந்து
சித்தூருக்குப் போக முற்படுகிறார். அவர் சித்தூருக்குச் சென்றால், அவர் படையும் அங்கிருந்தால், அவர்தான் சித்தூருக்கு மகாராணா. இந்த முயற்சியை நீங்கள் உடனடியாகத் தடுக்க வேண்டும்.” என்றார்.
“எப்படித் தடுப்பது? யார் தடுப்பது?” என்று மகாராணா வினவினார்.
“தீப்சந்த் தடுக்க முடியும். அவனுக்கு உத்தர விடுங்கள். சித்தூரை சலூம்பிரா நாடாமல் அவனால் செய்ய முடியும்.” என்றான் சங்கிரமசிம்மன்.
மகாராணா பெரும் சங்கடத்தால் மலைத்தார். ஆகவே மெதுவாகச் சொன்னார்: “தீப்சந்த் நாகராமக்ராவுக்குப் போயிருக்கிறான்” என்று.
“அங்கு எதற்கு?” சங்கிரமசிம்மன் கேட்டான்.
“அவன் காதலியைக் கொண்டு விட” என்றார் மகாராணா.
“யார் அவன் காதலி?” சங்கிரமசிம்மன் விசாரித்தான் விவரம் தெரியாததால்.
“புஷ்பாவதி என்று பெயர்…” என்று மகாராணா வார்த்தைகளை முடிக்கு முன்பே “யார் சொன்னது அப்படி?” என்று கர்ஜித்துக்கொண்டு உள்ளே நுழைந்தார் பல்வந்த்சிங்.
பல்வந்த்சிங்கைக் கண்டதும் மகாராணா பிரமிப்படைந்தார். “நீங்களா? இங்கு எதற்கு வந்தீர்கள்?” என்று வினவினார்.
“பெண்ணை அழைத்துப்போக வந்தேன்” என்றார் பல்வந்த்சிங்.
“அவள்…” என்று துவங்கினார் மகாராணா.
“வர மறுக்கிறாள்” என்றார் பல்வந்த்சிங்.
“தங்களுடனா!” வியப்பைக் காட்டினார் மகாராணா குரலில்,
“ஆம்.”
“தீப்சந்துடன் போய்விட்டாளா?”
“இல்லை.”
“வேறு எங்கே இருக்கிறாள்.”
“மந்திரி வீட்டில்.”
“ஏன்?”
“காரணம் தெரியவில்லை.”
அந்த சமயத்தில் “காரணத்தை நான் சொல்கிறேன்” என்று கூறிக்கொண்டே ராஜமாதா ராம்பியாரி உள்ளே வந்தாள்.
அதே சமயத்தில் உள்ளே வந்த மந்திரி சோம்சந்த் காந்தி “மகாராணா! நான் என் பதவியை விட விருப்பப்படுகிறேன்.” என்றார்.
.
“ஏன்?”
“இனி மேவாரைக் காக்க எனக்குச் சக்தியில்லை” என்றார் மந்திரி.
மகாராணா அதிர்ச்சியின் உச்சகட்டத்தை அடைந்த போது, இன்னொரு பேரதிர்ச்சியும் அவருக்கு நேர்ந்தது. அதன் விளைவாகக் கை கால் ஆடாமல் உட்கார்ந்து விட்டார் மகாராணா.