Mohini Vanam Ch 25 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 25 புஷ்பாவதிக்கு ஓலை
Mohini Vanam Ch 25 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
சங்கிரமசிம்மன், ராஜமாதா, மந்திரி சோம்ஜி, மூவரும் ஒரே சமயத்தில் தனது ஆஸ்தான அறையில் தோன்றியதாலும் அவர்கள் விளக்கமாகப் பேசினால் தமது குற்றம் அம்பலத்துக்கு வந்துவிடுமாதலாலும், அப்படி வந்தால் மூர்க்கனான
பல்வந்த்சிங்கின் போக்கு எப்படி மாறுமோ என்ற அச்சத்தாலும் மகாராணா தமக்கு ஏன் இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை என்று தம்மைத்தாமே கேட்டுக் கொண்டார். மற்ற மூவர் பேசிய பிறகும், மகாராணா மௌனமே வாழ்க்கையில்
சிறந்தது என்று எண்ணி அந்த விரதத்தை மேற் கொண்டார்.
என்ன செய்வது என்று அறியாத பல்வந்த்சிங் மகாராணாவை நோக்கி, “மகாராணா! என் மகள் என்னுடன் வர மறுக்கிறாள். அரண்மனைக்கும் வர மறுக்கிறாள். பிடிவாதமாக மந்திரியின் இல்லத்துக்குச் சென்று விட்டாள். அதற்கெல்லாம்
எனக்குக் காரணம் தெரிய வேண்டும்.” என்றார் தமது கரகரத்த குரலில்.
‘தலைக்குமேல் ஓடிய வெள்ளம் சாண் போனால் என்ன முழம் போனால் என்ன?’ என்று தீர்மானித்த மகாராணா, “பல்வந்த்சிங்! உமது மகளின் மனதில் இருப்பது யாருக்குத் தெரியும்? அதை அவளையே கேட்டு விடுவதுதானே?” என்று
கேள்வியொன்றை வீசினார்.
மகாராணாவின் பேச்சினால் ஏமாறாத பல்வந்த்சிங், தமது மீசை துடிக்க மகாராணியைத் திரும்பி நோக்கி, “மகாராணி! என் மகள் இங்கு வர மறுக்கும் காரணத்தை நீங்கள் சொல்வதாகச் சொன்னீர்களே! அதை இப்பொழுது
சொல்லலாமா?” என்று வினவினார்.
மிகக் கூர்மையான புத்தியுள்ள ராஜமாதா பேச்சின் தோரணையை அடியோடு மாற்றி “பல்வந்த்சிங்! நீரும் ராஜபுத்திரர் தானே?” என்று கேட்டாள்.
“அதில் சந்தேகமா?” என்று சூடாகக் கேட்டார் பல்வந்த்சிங்.
“மேவாரின் நன்மையில், மகாராணாவின் நன்மையில், உமக்கும் சிரத்தையிருக்கிறது அல்லவா?” என்று ராஜமாதா மேலும் கேட்டாள்.
“இது மகாராணாவுக்கே தெரியும். நான் சொல்லத் தேவை இல்லை.” பல்வந்த்சிங் இதைத் திட்டமாகச் சொன்னார்.
“ஆகவே உமது மகளைப்பற்றிப் பிறகு பேசுவோம். முதலில் மேவார் நிலையைப்பற்றி யோசிப்போம்” என்ற ராஜமாதா ராம்பியாரி, பல்வந்த்சிங் மீது நிலைக்க விட்ட கண்களை மந்திரி சோம்ஜிமீது திருப்பினாள்.
“சோம்ஜி! மேவார் தனது சங்கடங்களைத் தீர்க்க உம்மைத்தான் நம்பியிருக்கிறது. அப்படியிருக்க நீர் எதற்காகப் பதவியைத் துறக்க ஆசைப்படுகிறீர்?” என்று கேட்டாள்.
சோம்ஜி மகாராணியை மட்டுமின்றி அந்த அறையில் இருந்த மற்றவர்களையும் ஒருமுறை நோக்கினார். பிறகு மகாராணியை மட்டும் நோக்கித் தமது கண்களை நிலைக்க விட்டு “மகாராணி! சேர இஷ்டமில்லாத சக்திகளை
இப்பொழுதுதான் ஒன்று சேர்த்தேன்.இந்த சங்கிரமசிம்மனும் சலூம்பிரா தலைவரும் மகாராஷ்டிரர்களை மேவார் மண்ணிலிருந்து விரட்ட ஒன்று சேருவதாக வாளின் மேல் ஆணையிட்டார்கள். கோட்டா சமஸ்தானாதிபதி சலீம் சிங்குக்கும்
செய்தி அனுப்பியிருக்கிறேன் நம்முடன் சேர. தீப்சந்தின் பத்தாயிரம் வீரர்கள் கொண்ட பீரங்கிப் படையும் இரண்டு நாட்களில் இங்கு வருவதாயிருந்தது. இத்தகைய பெரும் பணியை சிருஷ்டித்த என் திட்டம் இப்பொழுது அடியோடு
குலைந்துவிட்டது. சலூம்பிரா பீம்சிங், சித்தூருக்குப் புறப்பட்டுவிட்டார். தீப்சந்த் நாகராமக்ராவுக்குப் போய்விட்டதாக இவர்கள் சொல்கிறார்கள். நான் நம்பவில்லை. அவன் எங்கு போயிருக் கிறானென்று எனக்குத் தெரியாது. அந்த
நமது படைகளின் சேர்க்கைக்கு அவன் தான் அச்சு. அவனும் போய் விட்டான். ராஜ்ய வண்டி கலகலத்துவிட்டது. இனி நான் பதவிக்கும் பேருக்கும் தான் மந்திரியாயிருக்க வேண்டும்” என்று சோகத்துடன் பேசிய மந்திரி பெருமூச்செறிந்தார்.
மகாராணா பதிலேதும் பேசவில்லை. மகாராணியே பேசினாள். “சோம்ஜி! சலூம்பிராவையும் தீப்சந்தையும் நான் அழைத்து வருகிறேன்” என்று.
“மகாராணி; தாங்களா!” என்று வியப்பு ஒலிக்கும் குரலில் கேட்டார் மந்திரி.
ராஜமாதா சிறிதும் சிந்திக்காமல் சொன்னாள். “நான் தான் சோம்ஜி! இப்பொழுது நான் ராஜமாதா அல்ல ; மேவாரின் நன்மைக்காக சலூம்பிராவை நாடிச் செல்லும் ஒரு குடிமகள்.” என்று கூறினாள்.
அப்போது சங்கிரமசிம்மன் இடைபுகுந்து பேசினான். “மகாராணி! சக்தாவதர்கள் இருக்க ஜெய்பூரும் கோட்டாவும் தங்கள் பக்கமிருக்க, தாங்கள் சலூம்பிராவிடம் கெஞ்ச வேண்டாம். மகாராஷ்டிரர்களை நாங்கள் சந்திக்கிறோம்,
தீப்சந்தை அழைத்துவர புஷ்பாவதியை அனுப்பு வோம்”, என்று கூறினான் சங்கிரமசிம்மன்.
அதுவரையில் பேசாதிருந்த பல்வந்த்சிங், ‘சங்கிரமசிம்மா! என் மகளையா தீப்சந்திடம் அனுப்பப்போகிறாய்?’ என்று இடிபோல் சொற்களைக் கொட்டினார்.
“அனுப்பினால் என்ன?” என்று சங்கிரமசிம்மன் கேட்டான்.
“பெண்களின் உதவியால் தான் மேவார் பிழைக்க வேண்டுமா? என் பெண்ணை அனுப்புவதாகச் சொன்னால் உன்னை இங்கேயே வெட்டிப் போடுவேன்” என்று கர்ஜித்தார் பல்வந்த்சிங்.
சங்கிரமசிம்மன் நிதானத்தை அறவே இழந்தான். “நீங்கள் மட்டும் என்ன வாழ்ந்துவிட்டீர்கள்? மகாராணாவுக்காக ஒரு பெண்ணை வைத்து மகாராணாவை அங்கு அடிக்கடி வரவழைத்து உறவாட விடுகிறீர்” என்று சீறினான்
சங்கிரமசிம்மன்.
பல்வந்த்சிங்கின் முகம் ரத்தமெனச் சிவந்தது. உதடுகள் துடித்தன. “மகாராணா! இதைக் கேட்டுக் கொண்டு ஏன் வாளாவிருக்கிறீர்கள்? என்னிடம் நீங்கள் அடைக்கலம் வைத்திருப்பவள் யார் என்பதை சொல்லி விடுங்கள்.” என்று
படபடத்துப் பேசினார்.
மகாராணா சிறிதுநேரம் மவுனம் சாதித்துவிட்டு “என் சொந்த விஷயங்களைப்பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை. இங்கு நீங்கள் கவனிக்க வேண்டியது மேவாரின் அரசியல் நிலை” என்று சற்று திடமாகவே பேசினார்.
பல்வந்த்சிங் அடியுண்ட வேங்கைபோல் திணறினார் சில விநாடிகள். “அப்படியானால் நான் வருகிறேன் மகாராணா! தங்கள் ராணியை இங்கு அனுப்பிவிடுகிறேன். உங்கள் சொந்த விஷயம் உங்கள் அந்தப்புரத் திலேயே இருப்பதுதான்
நல்லது” என்று கூறித் திரும்ப முயன்றார்.
மகாராணாவின் வேதனை நிறைந்த குரல் அவரைத் தடுத்தது. “பல்வந்த்சிங்! அவளை சாதாரணமாக அழைத்து வர முடியாது. அழைத்து வரும் முறையில் அழைத்து வர வேண்டும். அந்த ராஜ்ய சிக்கல் முதலில் தீர வேண்டும்.”
மகன் ஒரு வேட்டைக்காரர் தலைவனிடம் கெஞ்சுவதைப் பார்த்த மகாராணி வெகுண்டாள். “மகனே! நீ யாரையும் எதற்கும் கெஞ்ச வேண்டாம். அந்த ரகசிய ராணியை நானே அழைத்து வருகிறேன். முதலில் உன்னை நாலுபேர்
முன்னிலையில் விரட்டும் அந்த பல்வந்த்சிங்கை வெளியே அனுப்பு. அரசனிடம் மரியாதை யற்ற அவனிடம் ஏன் அஞ்சுகிறாய்? சலூம்பிராவிடம் அஞ்சுகிறாய்? போதாக்குறைக்கு தீப்சந்தையும் எதிரியாக்கிக்கொண்டு அவனுக்கும்
அஞ்சுகிறாய். அப்படி அஞ்சி அஞ்சி எத்தனை நாள் காலம் கழிக்கப்போகிறாய்?’ என்று பெண் புலிபோல் சீறினாள்.
மந்திரி சோம்ஜி மெள்ள தலையிட்டு, “மகாராணி! இந்த சோம்ஜி உயிருடன் இருக்கும் வரையில் மகாராணா யாரையும் கெஞ்சவேண்டாம். மகாராணா தமது திருமணத்தைப் பகிரங்கமாக நடத்த சலூம்பிராவிடம் தமது வரிப் பணத்தைக்
கேட்டார். சலூம்பிரா கையை விரித்து விட்டுத் தமது மகள் திருமணத்தை அமர்க்களமாக நடத்தினார். அதற்கு ஒரு இலட்சம் பவுன் செலவழித்தார் அதற்கெல்லாம் சீக்கிரம் விடிமோட்சம் ஏற்படும். என்னை நம்புங்கள்.” என்றார் மந்திரி
சோம்ஜி.
“அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன?’ என்று கேட்டாள் மகாராணி.
“இன்னும் பத்தே நாட்களில் பதில் சொல்கிறேன்” என்ற மந்திரி சோம்ஜி மகாராணாவை நோக்கி “மகாராணா! நீங்கள் வறுமையில் மணந்த அந்த ரகசிய ராணியும் குழந்தையும் இங்கு வரட்டும். மகாராணா நெறி தவறாதவர் என்ற நிலை
பிரகடனமாகட்டும் சலூம்பிராவைக் கெஞ்ச வேண்டாம். மகாராணா பிரதாப்பும் ராஜ சிம்மனும் வளர்ந்த இந்த மேவாரின் மகாராணா யார் தயவிலும் இருக்க வேண்டாம். பல்வந்த்சிங்! உமது மகளை அழைத்துப் போவது உமது சொந்த
விஷயம். என் மாளிகைக்கு அவள் போவதை நான் பார்த்தேன். அங்கு போய் அவளை அழைத்துப் போகலாம். இங்கு இனிமேல் அடி எடுத்து வைத்தீர், உம்மைச் சிறை செய்ய நான் தயங்கமாட்டேன்” என்று கண்டிப்புடன் பேசினார்.
பிறகு சங்கிரமசிம்மனை நோக்கி, “செய்தியொன்று தருகிறேன்.கோட்டாவுக்குச்சென்று வா. வா என்னுடன்” என்று கூறி மகாராணா வின் ஆஸ்தான அறையில் இருந்து வெளியேற முயன்றார்.
மகாராணி அவரைத் தடுத்து, “மந்திரி! போரைத் தவிர வேறு வழியில்லையா?” என்று கேட்டாள்.
சோம்ஜி திரும்பி மகாராணியை நோக்கினார். “இருக்கிறது” என்றார்.
“என்ன வழி?”
“சரணாகதி.”
“மந்திரி!”
“மகாராணி! உண்மையைச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டும். மேவார் இன்னும் செத்துவிடவில்லை. எல்லா வீரர்களும் சுயநலக்காரர்களா? மேவாரின் வீரத்தை வெகு சீக்கிரம் காண்பீர்கள்” என்று கூறிச் சென்றார்.
அங்கிருந்து நேராக மாளிகைக்கு வந்ததும் அங்கு ஒரு வீரன் காத்துக்கொண்டிருந்தான் மந்திரியின் வரவை நாடி. மந்திரி வந்ததும் தலை வணங்கிய அவன் “இந்த ஓலைத் தங்களுக்குத்தானே?” என்று கேட்டு அவர் கையில் ஓலையைத்
திணித்தான்.
ஓலையைக் கண்ட மந்திரி பிரமித்தார். பிறகு வீரனை இருக்கச்சொல்லிவிட்டு, “புஷ்பாவதி’“ என்று அழைத்தார்.
புஷ்பாவதி வந்ததும் ஓலையை அவள் கையில் கொடுத்தார்.
புஷ்பாவதி ஓலையைப் பிரித்துப் படித்துவிட்டு மந்திரியிடம் கொடுத்தாள். மந்திரியின் முகத்தில் பெருமை விரிந்தது. “மேவார் விடுதலைப் போரை தீப்சந்தே தொடங்கிவிட்டான்” என்றுகூறி, “நீ சீக்கிரம்புறப்படு.” என்றும்
சொன்னார்.
“எங்கு?” புஷ்பாவதி கேட்டாள்.
“தீப்சந்த் இருக்கும் இடத்திற்கு.” என்றார் மந்திரி.
“அவர் எங்கிருக்கிறார்?” என்று கேட்டாள்.
“அது ரகசியம்” என்ற மந்திரி மகா உற்சாகத்தில் இருந்தார். அந்த இரவிலேயே ஓலையைக் கொண்டு வந்த வீரனுடன் புஷ்பாவதியை அனுப்பி வைத்தார். தீப்சந்த்துக்கு ஒரு ஓலையும் கொடுத்தார்.
புஷ்பாவதி உடனடியாகக் கிளம்பி விட்டதால் அவள் தந்தை மந்திரி இல்லத்துக்கு வந்தபோது, அவள் அங்கு இல்லை.
“எங்கே என் மகள்?’ என்று சீறினார் பல்வந்த்சிங்.
“எனக்குத் தெரியாது. வேண்டுமானால் இந்த மாளிகையில் நீரே தேடிப்பாரும்” என்று இகழ்ச்சியுடன் பேசினார் மந்திரி.
பல்வந்த்சிங் ஏதோ பதில் சொல்ல முற்பட்டார். அந்தச் சமயத்தில் அங்கு வந்த சங்கிரமசிம்மனை நோக்கிய மந்திரி, “இந்தப் பெரியவரை இரண்டு நாட்களுக்கு ஏதாவது ஒரு அறையில் பூட்டி வை” என்றார்.
சங்கிரமசிம்மன் இதழ்களில் புன்முறுவல் விரிந்தது. “வாருங்கள் பல்வந்த்சிங்! உமது அறையைக் காட்டு கிறேன்” என்று கூறிக்கொண்டு அவரை நெருங்கினான் சங்கிரமசிம்மன்.