Mohini Vanam Ch 26 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 26 ராணியின் பிரவேசம்
Mohini Vanam Ch 26 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மந்திரி சோம்ஜியின் உத்தரவுப்படி பல்வந்த்சிங்கை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிடத் தீர்மானித்த சங்கிரம சிம்மன் அவரை நெருங்கமுற்பட்டதும் பல்வந்த்சிங் சட்டென்று பின்புறம் நகர்ந்து தமது கச்சையில் இருந்த குறுவாளை
எடுத்துக்கொண்டார். “ஒரு அடி முன்னே வைத்தாலும் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று சங்கிரமசிம்மனை எச்சரிக்கவும் செய்தார். குறுவாளைக் காட்டி. பதிலுக்கு சங்கிரமசிம்மன் புன்முறுவல் செய்த வண்ணம் அவர் குறுவாளை
நோக்கியே நடந்தான்.
சினத்தால் நிதானத்தை இழந்துவிட்ட பல்வந்த்சிங் சங்கிரமசிம்மனைத் தீர்த்துவிட குறுவாளை மேலே ஓங்கினார்.
அவர் குறுவாளை ஓங்கிய அந்த சமயத்தில், வெகு துரிதமாகத் தனது உடலை அவர் உடல்மேல் மோதவிட்ட சங்கிரமசிம்மன் தனது இடதுகையால் குறுவாளேந்திய வலது கையைப் பிடித்தான்,
ஏதோ இரும்பு வளையம் ஒன்று தமது கையைப் பிடித்து மணிக்கட்டு எலும்புகளை முறிப்பதுபோன்ற பிரமை ஏற்படவே, அவர் கைவிரல்கள் விரிந்து குறுவாளைக் கீழே போட்டன. அந்தக் குறுவாள் தரையில் விழுந்து எழுப்பிய
ஒலி மந்திரி மாளிகை முழுவதும் பெரிதாகக் கேட்கவே, மந்திரி பிரமித்து நின்றார். ராட்சதன் போன்ற உருவத்தைப் படைத்த பல்வந்த்சிங்கை சங்கிரம சிம்மனின் மெல்லிய கை எப்படி நொறுக்கிவிட்டது என்று நினைத்தும் விடை
காணாததால் “வீரன் கையென்றால் இப்படி ஒல்லியாகத்தான் இருக்கவேண்டும் போலிருக் கிறது!” என்று தமக்குள் சொல்லிக்கொண்டார். அத்துடன் தமது கையையும் பார்த்துக்கொண்ட மந்திரி “எனது கையும் ஒல்லிதான், ஆனால்
அவன் கையிலிருக்கும் வலு இதில் இல்லையே?” என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.
அந்தச் சமயத்தில் ஏற்பட்ட அடுத்த நிகழ்ச்சி அவர் சிந்தனையை உடைத்து சங்கிரமசிம்மன் சர்வசாதாரணமாக அவரது வலது கையுடன் தனது வலது கையைக் கோர்த்துக்கொண்டு, கீழே கிடந்த அவரது குறுவாளை அந்தக் கூடத்தின்
கோடிக்குத் தனது காலால் உதைத்துத் தள்ளிவிட்டு, “வாருங்கள் பல்வந்த்சிங்” என்று அவரை அழைத்துச் சென்றான். அவரும் என்ன காரணத்தினாலோ மேற்கொண்டு எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் நெடுங்கால நண்பன் போல்
சங்கிரமசிம்மனுடன் நடந்து சென்றார்…
அந்தக் கூடத்தின் ஒரு கோடியை அடைந்ததும் அங்குள்ள ஓர் அறையைக் காட்டி “பல்வந்த்சிங்! இன்றிரவு நீங்கள் இந்த அறையில் தங்கலாம்.” என்று சொல்லி விட்டுத் திரும்ப முயன்றான்.
அவனை பல்வந்த்சிங்கின் குரல் தடுத்தது. “அறையைப் பூட்டவில்லையா?’ என்று கேட்டார்.
சங்கிரமசிம்மன் அவரைத் திரும்பி நோக்கி, “அவசியமில்லை.” என்று சொன்னான்.
“மந்திரி பூட்டச் சொன்னாரே?”
“அதனால் பாதகம் இல்லை.”
“நான் தப்பிவிட்டால்?”
“தப்ப முடியாது.”
“ஏன் முடியாது?”
“எதிர் அறையில் தான் நான் தங்குகிறேன்.”
“நீர் தூங்கிவிட்டால்?”
“தூங்கமாட்டேன்.”
இதைக் கேட்டதும் பல்வந்த்சிங்கின் சுபாவமான கோபம் தலை தூக்கியது. “நீ என்ன மனிதன் இல்லையா?”“ என்று சீறினார்.
“மனிதனாயிருந்தால் தூங்கித்தான் ஆகவேண்டுமா?* என்று வினவினான் சங்கிரமசிம்மன்
“ஆம்.” திட்டமாகச் சொன்னார் பல்வந்த்சிங்.
“அப்படியானால் நான் மனித வர்க்கத்துக்கு விலக்கு” என்று சொன்ன சங்கிரமசிம்மன் அதற்குமேல் அவரிடம் பேச்சுக் கொடுக்காமல் எதிர் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டான்.
கதவை அவன் மூடியதும் திருட்டுப் பார்வையாக அப்படியும் இப்படியும் பார்த்தார் பல்வந்த்சிங். எங்கும் யாருமில்லாது போகவே தமது வாயிற்படியிலிருந்து ஒரு காலை எடுத்து வெளியே வைத்தார். அப்பொழுது யாரோ நகைத்த
சத்தம் கேட்கவே எதிர் அறையை நோக்கினார். வாயில் திறந்துதான் இருந்தது. சங்கிரமசிம்மனை அங்கு காணோம். சிறிது பக்கவாட்டில் நோக்கினார். அறையின் இடதுபுற சாளரத்தில் சங்கிரமசிம்மன் முகம் தெரிந்தது.
அதில் இகழ்ச்சி கலந்த நகைப்புக்குறி தெரிந்தது. அடுத்து வேகத்துடன் கதவைச் சாத்திக்கொண்ட பல்வந்த்சிங், அந்த அறைக்குள்ளிருந்த கட்டிலில் தடாலென விழுந்தார். அறை சிறையின் அறையாகத் தெரியவில்லை. பெரிய
விருந்தினர்களைத் தங்கவைக்கும் அறைபோல் சகல வசதிகளுடன் காணப்பட்டது. மனதில் பல வேதனைகள் வலம் வந்தாலும் அவற்றை மறந்து உறங்க முயன்ற பல்வந்த்சிங்குக்கு உறக்கம் அடியோடு வராததால் புரண்டு புரண்டு
படுத்தார். பிறகு அயர்ந்து தூங்கிவிட்டார்.
எத்தனை நேரம் தூங்கியிருப்பாரென்று அவருக்கே தெரியாது. அவர் விழித்தபோது அவர் பழைய அறையிலில்லை. நாகராமக்ராவில் தமது வேட்டைக்கார விடுதியிலிருந்தார். அதுவும் தமது பஞ்சணையில் படுத்திருப்பதை உணர்ந்தார்.
கண்களை அகல விரித்து தாம் சுய உணர்வோடு தான் இருக்கிறோமோ என்று அறிய முயன்றார். ‘இல்லை சுத்த கனவு’ என்று மறுபடியும் கண்களை மூட முயன்றார். அவர் எதிரில் ராஜமாதா ராம்பியாரி உட்கார்ந்திருந்தாள். ராஜமாதா
அங்கு வரக் காரணமில்லை. ஆகையால் தாம் காணுவது கனவுதான் என்று முடிவு செய்துகொண்டு பஞ்சணையில் குப்புறப் படுத்துக்கொண்டார்.
‘பல்வந்த்சிங்! எழுந்திரும். தூங்கியது போதும்’ என்ற ராஜமாதாவின் அதிகாரக் குரல் அவரை மீண்டும் விழிக்க வைத்தது. அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்த பல்வந்த் சிங் “மகாராணி! தாங்களா! தாங்கள் இங்கு வரலாமா?’ என்று
வினவினார்.
“வந்தாலென்ன?” என்றாள் மகாராணி.
“தாங்கள்…?” இழுத்தார் பல்வந்த்சிங்.
“எனது மகன் வரலாம். நான் வரக்கூடாதா?”
“மகாராணா…”
“எதற்கு வந்தார் என்பது எனக்குத் தெரியும்.”
“ஆம், ஆம். எல்லாருக்குமே தெரியும் அந்த ரகசியம்.*
“பல்வந்த்சிங்!”
“மகாராணி!”
“எல்லாருக்கும் தெரிந்தது ரகசியமாகுமா?”
“ஆகாது.”
“பின் ஏன் மூளையின்றிப் பேசுகிறீர்?” மகாராணியின் குரலில் கடுமை இருந்தது.
பல்வந்த்சிங்கிடம் கோபம் தலை தூக்கினாலும் மகாராணியின் எதிரில் அது செலாவணியாகாது என்பதைப் புரிந்துகொண்டதால் அவர் பதிலேதும் சொல்லவில்லை.
மகாராணியே மேலும் பேசினாள். “உம்மை மயக்க மருந்து கொடுத்து இங்கு கொண்டு வந்தேன். நீர் ஒன்றரை நாள் தூங்கியிருக்கிறீர். அதாவது மயக்கத்திலிருந்தீர். இன்று நான் புறப்படுகிறேன். என்னுடன் எனது மருமகளும்
வருகிறாள்…” என்று விஷயத்தை ஆரம்பித்தாள்.
வியப்புடன் விழித்தார் பல்வந்த்சிங். “மகாராணி!” என்று ஏதோ சொல்ல முயன்றார்.
தடுத்துப் பயனில்லை. மகாராணாவை நீர் அச்சுறுத்தியபோதே இந்த ரகசியத்தை உடைத்துவிடத் தீர்மானித்தேன். ரகசிய ராணி இனி மகாராணாவின் உலகம் தெரிந்த ராணியாக அவர் அரண்மனையிலேயே இருப்பாள். என் பேத்தி
கிருஷ்ணாவும்…” என்று மகாராணி பேச்சை முடிக்குமுன் “குழந்தையின் பெயரும் தங்களுக்குத் தெரியுமா?” என்று பிரமிப்பு முகத்தில் நிலவ, சொற்களில் பிரதிபலிக்கக் கேட்டார் பல்வந்த்சிங்.
“எனக்குத் தெரியாமல் மேவாரில் ஏதும் நடந்துவிடும் என நினைக்க வேண்டாம். எனது மகனின் பலவீனம் அவனைப் பலர் கையில் சிக்கவைத்து விட்டது. அந்தச் சிக்கல்கள் அனைத்தையும் நான் அவிழ்க்க முடிவு செய்து விட்டேன்.
முதலில் ரகசிய ராணியை வைத்து மகாராணாவை அச்சுறுத்தியது இன்றுடன் நின்றுவிடும். அடுத்து இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பாடம் கற்பிக்கிறேன், வெகு விரைவில், வாயிலில் ராணிகள் செல்லும் பல்லக்கு
இருக்கிறது. அதில் ஏற்றுங்கள் எனது மருமகளையும் குழந்தையையும்” என்று உத்தரவிட்டு எழுந்தாள் மகாராணி.
அங்கிருந்து அப்பொழுதே புறப்பட்டு மகாராணி தனது மருமகளுடனும் பேத்தி கிருஷ்ணாவுடனும் பல்லக்கில் இரவு நெடுநேரம் கழித்து வந்து சேர்ந்தார்கள், உதயபூர் அரண்மனைக்கு; அங்கு ரகசிய ராணிக்கும் மன்னன்
சிறுமிக்கும் தோழிகள் மங்கல ஆரத்தி எடுத்தார்கள்.
ராணி உள்ளே நுழைந்ததும் அவளது அந்தப்புர அறைக்கு ராணி அழைத்துச் செல்லப்பட்டாள். அவள் அறையை அடையுமுன்பு மகாராணா அவளை வழியிலேயே சந்தித்துத் தமது குழந்தையையும் கையில் எடுத்து உச்சி முகர்ந்தார்.
அப்பொழுது குழந்தையின் தலையிலிருந்த உச்சிப்பூ அவர் உதடுகளில் படவே மகாராணா குழந்தையின் தலையை விளக்கு வெளிச்சத்தில் பார்த்தார்.
உச்சிப்பூவின் மாணிக்கக் கற்களும் விளக்கு வெளிச்சத்தில் பளபளத்துச் செவ்விய காந்தியை மன்னன் முகத்திலும் வீசின.
அதைப் பார்த்த மகாராணா, “இந்த உச்சிப்பூவை எதற்காகக் கொணர்ந்தாய்?” என்று வினவினார் தமது ராணியை நோக்கி.
“ஏன் அதனாலென்ன?” என்று ராணி கேட்டாள்.
“இது மேவாரைப் பிளந்துவிடும். குழந்தைக்கும் தீமை தரும் என்று சொல்கிறார்கள்” என்றார் மகாராணா.
“ஒரு சிறு உச்சிப்பூ எப்படிப் பெரிய மேவாரைப் பிளக்கும்?” என்று ராணி கேட்டாள்.
“சோதிடர்கள் சொன்னார்கள்” என்றார் மகாராணா.
“சோதிடத்தை நீங்கள் நம்புகிறீர்களா?” என்று ராணி வினவினாள்.
“நம்புகிறேன். மனிதன் எதையாவது நம்பவேண்டுமல்லவா?” என்று மகாராணா தமது பள்ளியறைக்குச் சென்றார்.
அடுத்த சில நாழிகைகளுக்கு எல்லாம் மகாராணாவின் பள்ளியறைக்குள் நுழைந்த ரகசிய ராணி மெதுவாகக் கதவைச் சாத்திவிட்டுக் கணவனை நெருங்கினாள். அவள் சுந்தரவதனத்தையும் கருவண்டு கண்களையும் கண்ட
மகாராணா அவள் சிற்றிடையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தார். அடுத்த விநாடி ராஜ்ஜியத்தை மறந்தார். நெருக்கடி நிலையை மறந்தார். தனது ராணியின் உடலைத் தன் உடலுடன் சேர்த்து நெருக்கிக்கொண்டிருந்தார். மகாராணா
சொன்னார் “உன் அழகு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது” என்று சொல்லித் தன் கைகளில் இறுகியிருந்த அவள் உடலைப் பஞ்சணையில் கிடத்தினார். விகசித்த புஷ்பம்போல் கிடந்தாள் ராணி வண்டுபோல் அவள் மீது புரண்டார்
மகாராணா. வேட்கை மிகுந்த நிலையில் அவள் கேட்டாள். “என்ன இத்தனை வெறி உங்களுக்கு?” என்று.
“பிரிவு வேட்கையைத் தருகிறது, வேட்கை வெறியைத் தருகிறது.” என்றார் மகாராணா.
.
வெறியைக் காட்டவும் துவங்கினார். அந்த வெறி தான் எத்தனை இன்பமாக இருந்தது ராணிக்கு. அவள் பெருமூச்சும் அர்த்தமில்லாமல் அவளிடமிருந்து வந்த ஒலிகளும் அவள் அடைந்த சொர்க்கபோகத்துக்கு அத்தாட்சிகளாயிருந்தன.
மகாராணா போகத்தில் உலகை மறந்தார். அதே சமயத்தில் மேவாரின் இன்னொரு பகுதியில் விளைந்து கொண்டிருந்த விபரீதத்தை அவர் உணரவில்லை.