Mohini Vanam Ch 28 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 28 புஷ்கரம்
Mohini Vanam Ch 28 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
இரு காவலரிடையே ஆணுடையில் தனது அந்தப் புரத்துக்கு அழைத்து வரப்பட்ட புஷ்பாவதியை நோக்கிய மாதாஜி சிந்தியாவின் மனைவி அந்தப் பெண்ணின் அழகைக் கண்டு பிரமித்துப்போய், “வா… அம்மா உள்ளே” என்று
அவளை அணைத்து உள்ளே அழைத்துப் போனாள். ஏதோ பேசப்போன புஷ்பாவதியைத் தடுத்த சிந்தியாவின் மனைவி, “பெண்ணே! நீ நீண்ட தூரம் பயணம் செய்திருக்கிறாய். முதலில் அந்த அறைக்குள் சென்று மாற்றுடை அணிந்து
வா, பிறகு பேசுவோம்.” என்று ஒரு அறையைச் சுட்டிக்காட்டினார்.
அந்த அறைக்குள் சென்ற புஷ்பாவதி அங்கு கயிற்றுக் கொடிகளில் தொங்கிய பல சேலைகளில் ஒன்றை எடுத்துத் தனது கால் சராய்களைக் களைந்துவிட்டுச் சேலையை உடுத்தித் தலையையும் முடிந்துக்கொண்டாள். அவள்
பெண்ணுடை அணிந்து வெளியே வந்தபோது அவள் அழகைக் கண்டு பிரமித்துப்போன சிந்தியாவின் மனைவி, “பெண்ணே! உன் பெயரென்ன?” என்று வினவினாள்.
“புஷ்பாவதி.” என்று புஷ்பாவதி உண்மையைச் சொன்னாள். பொய்யோ உண்மையோ எதைச் சொன்னாலும் விளைவு ஒன்று தான் என்ற காரணத்தால்,
நடுத்தர வயதை அடைந்திருந்த மாதாஜி சிந்தியாவின் மனைவிக்குப் பெண் குழந்தைகள் இல்லாததாலும் புஷ்பாவதியின் நீண்ட கருத்த கேசத்தைக் கண்டு வியப்படைந்ததாலும், புஷ்பாவதியை அருகில் அழைத்து உட்கார வைத்து
அவள் நெடுங்குழலைச் சிக்கெடுத்து வார முற்பட்டாள். ‘அப்பா! எத்தனை நீளம்! எத்தனை அடர்த்தி!’ என்று வியந்துகொண்டே புஷ்பாவதியின் குழலை வாரிப் பின்னிய சிந்தியாவின் மனைவி புஷ்பாவதியைத் திரும்பச் சொல்லி
முன்னுச்சியை வகிடு எடுத்த போது முகத்தின் அழகையும் பார்த்துப் பிரமித்தாள். அகலமான வதனமும், அச்சமற்ற அழகிய விழிகளும் சிந்தியாவின் மனைவியின் மனதை அப்படியே ஈர்த்ததால் அவள் உள்ளூர வினவிக்கொண்டாள்,
‘இவளை எதற்காக நானாராவ் சிறைபிடித்து வந்தார்?’ என்று.
சிந்தியாவின் மனைவியின் மனதில் ஓடிக்கொண்டிருந்த சந்தேகங்களைப் புரிந்துகொண்ட புஷ்பாவதி தனது அழகிய அதரங்களில் புன்முறுவலைப் படரவிட்டுக் கொண்டு, “அம்மா! நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது.”
என்றாள் மெதுவாக.
“என்னடி புரிகிறது உனக்கு?” என்று சொந்தத்துடன் வினவினாள் சிந்தியாவின் மனைவி.
“என்னை ஏன் நானாராவ் பிடித்து வந்தார் என்று சிந்திக்கிறீர்கள்.” என்று கூறி, லேசாக நகைத்தாள் புஷ்பாவதி.
“பெண்ணே! அப்படி என்ன குற்றம் செய்தாய் நீ?”
“நான் ஜாவுத் கோட்டைக்குள் நுழைய முயன்றேன்” என்று கூறிக் கண்களை வெட்கத்தால் தாழ்த்திக் கொண்டாள்.
“யாரைப் பார்க்க?”
“அங்குள்ள ராஜபுத்திர தளபதியைப் பார்க்க.”
“யாரோ தீப்சந்த் என்று சொல்கிறார்களே அவரையா?”
“ஆம்.”
“அவரை எதற்காக நீ பார்க்க வேண்டும்?”
“அவர்… அவர்…” என்று தடுமாறினாள் புஷ்பாவதி.
“புரிகிறது, புரிகிறது, நீ ஒன்றும் சொல்ல வேண்டாம்” என்று கூறிப் புன்முறுவல் காட்டிய சிந்தியாவின் மனைவி, “ஆமாம்! தளபதியென்றால் வயதாயிருக்க வேண்டுமே. குறைந்தபட்சம் நடுத்தர வயதாவது இருக்க வேண்டுமே.
போயும் போயும் வயதானவரை ஏன் உன் தந்தை பிடித்தார் உனக்குக் கணவனாக. ஈடு, வயது, இரண்டுமே சரியாயிருக்காதே” என்று கேட்டாள் சிந்தியாவின் மனைவி சற்றே துயரம் துளிர்த்த குரலில்.
அதற்குள் அவள் புஷ்பாவதியின் முன்னுச்சியை வாரி கன்னங்களைத் தடவிக் கைகளால் சொடுக்கெடுத்து திருஷ்டி கழித்தவுடன் புஷ்பாவதி அவளை மெதுவாக “அம்மா!” என்றழைத்தாள்.
“என்னம்மா?” என்று கேட்டாள்.
“நீங்கள் நினைப்பதுபோல் அவர் ஒன்றும் வயதான வரல்ல…” புஷ்பாவதி குழைந்தாள்.
“என்ன வயதிருக்கும்?” என்று கேட்டாள் சிந்தியாவின் மனைவி.
“இருபத்தி நான்குக்குமேல் இருக்காது.”
“அவ்வளவு சின்னப் பிள்ளையா?”
“ஆமாம், அம்மா!”
“அதற்குள் பெரிய தளபதியாகிவிட்டானே!”
“அவர்…”
“சொல்லடி கண்ணே.”
“மகாவீரர். பீம்சிங் சலூம்பிராவையே தோற்கடித்தவர்.”
புஷ்பாவதியின் குரலில் இருந்த கனிவையும் ஆர்வத்தையும் கவனித்த சிந்தியாவின் மனைவி புஷ்பாவதியை அப்படியே வாரி அணைத்துக்கொண்டாள். அப்பொழுது சொன்னாள் புஷ்பாவதி, ‘அம்மா எனக்குத் தாயில்லை. நீங்கள்
தான் தாய், இந்த அரவணைப்பை இதுவரை யாரும் எனக்குத் தரவில்லை” என்று.
“எனக்கும் உன்னைப்போல் ஒரு பெண் வேண்டும். உன் கணவன் வரும் வரையில் என்னுடனேயே இருந்து விடு.” என்ற சிந்தியாவின் மனைவி, “இன்று இந்த மாளிகையிலேயே நீராடிவிடு. நாளை முதல் உன்னைப் புஷ்கரம் ஏரிக்கு
அழைத்துப் போகிறேன். அந்தப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் உன் கஷ்டங்கள் எல்லாம் போகும். உன் கணவனும் உன்னை நாடி வருவான்.” என்று கூறினாள்.
புஷ்பாவதியின் கண்களில் இன்பச் சாயை விரிந்தது. “அம்மா!” என்று மெதுவாக அழைத்தாள்.
“என்ன புஷ்பாவதி?” சிந்தியாவின் மனைவியின் வளைந்த புருவங்கள் சிறிது மேலே ஏறி அதிகமாக வளைந்தன.
“நீங்கள் சொன்னீர்களே.”
“என்ன சொன்னேன்?”
“அவரைப் பற்றி.”
“தீப்சந்தைப் பற்றியா?”
“ஆம்.”
“அவருக்கென்ன?”
“அவருக்கும் எனக்கும் திருமணமாகவில்லை.”
“ஏன்?”
“நிச்சயமானவுடன் இந்தப் போர் மூண்டுவிட்டது.”
“இந்தப் போர் நீடிக்காது. புஷ்பாவதி. சீக்கிரம் முடிந்துவிடும். நீ உன் கணவனை அடையலாம். உன் திருமணத்தை நானே நடத்தி வைக்கிறேன்.”
இந்த ஆதரவான சொற்களைக் கேட்டதும் புஷ்பாவதியின் கண்களில் நீர் சுரந்தது. “அம்மா! இனி நீங்கள் தான் எனக்குத் தாய். தாயில்லாத குறையை நீங்கள் தீர்த்துவிட்டீர்கள்” என்றாள். கண்களையும் துடைத்துக் கொண்டாள்.
“பைத்தியமே! அழுவதற்கு என்ன நேர்ந்துவிட்டது? உன்னை ஓடவிட்ட அந்த மாப்பிள்ளை வரட்டும் அவனை என்ன செய்கிறேன் பார்” என்று ஆறுதல் சொன்ன சிந்தியாவின் மனைவி, “புஷ்பாவதி’ இங்குள்ள புஷ்கரம் என்ற ஏரி மகா
புனிதமானது. இன்றிலிருந்து ஏழாவது நாள் அதன் புண்ணிய நீராட்ட தினம் வருகிறது. அதில் நீராடு. உன் துன்பங்கள் எல்லாம் தீரும்” என்று சொல்லி “சரி, நீராடிவிட்டு வா.” என்று நீராட்ட அறையையும் காட்டினாள்.
அன்றுமுதல் சிந்தியாவின் மனைவி புஷ்பாவதியை பிரதிகினம் புஷ்கரம் ஏரிக்கு அழைத்துச் சென்றாள். அழகான சூழ்நிலையில் அலைகள் மோதும் நீரால் நிரம்பிய அந்த ஏரியைக் கண்டு பிரமித்த புஷ்பாவதி சிந்தியாவின்
மனைவியுடன் நீராடினாள். ஒவ்வொரு நாளும் அவள் திரும்பியதும் அவள் கூந்தலை உலர்த்தச் சொல்லி சீர் செய்து மகிழ்ந்தாள் சிந்தியாவின் மனைவி.
இரண்டு நாளுக்குள் சிந்தியாவின் மனைவியின் காரணமாக அவள் பெண் பெறக்கூடிய அந்தஸ்து அனைத்தையும் புஷ்பாவதி பெற்றாள். காவலர் அவளுக்குத் தலைவணங்கி வணக்கம் செலுத்தினர். சிந்தியாவுக்கும் அவள் மீது
அன்பு ஏற்பட்டதால் அவளுடனேயே உணவருந்தவும் முற்பட்டு, மெதுவாக அவள் கதையை மனைவி மூலம் தெரிந்து கொண்டார். அதனால் அவர் மனதிலும் துன்பம் துளிர்த்தது. ஜாவுத் கோட்டையைக் கைப்பற்ற வலுவான
படையொன்றை மீண்டும் அனுப்பியிருந்தார் சிந்தியா. அது தவிர கோல்கார் சமஸ்தான ராஜமாதவான அகல்யாபாயை யும் ராஜபுத்திரர்களைத் தாக்க வேண்டிக்கொண்டிருந்தார். இப்படி இணைந்த பெரும் படைகள் மேவார்
கோட்டைகளைத் தாக்கினால் அவை மீண்டும் தமது வசமாகிவிடும் என்பதில் சிந்தியாவுக்குச் சந்தேகம் சிறிது மில்லை. அப்படி ஏற்படும் வலுவான போரில் இந்தப் பெண்ணின் காதலனும் சிக்கி அவனுக்கு ஆபத்து ஏற்பட்டால் என்ன
செய்வதென்று கலங்கிய சிந்தியா “போரில் நமது கடமை இருக்கிறது. இருந்தாலும் இவனைக் காப்பாற்றப் பார்க்கிறேன்” என்று ஜாவுத் கோட்டையின் தளபதிக்குத் தீங்கு ஏற்படாமல் உயிரோடு பிடித்து வரவும் செய்தி அனுப்பினார்.
நாட்கள் ஆறு சென்றன. புஷ்கரத்தில் நீராடும் புண்ணிய தினமும் நெருங்கிக் கொண்டிருந்தது. ஏராளமான பயணிகள் புஷ்கரத்துக்கு வந்துகொண்டிருந்தார்கள். புண்ணிய தினத்தை உத்தேசித்து யாரும் தடை செய்யப்படவில்லை.
சந்நியாசிகள், போர் வீரர், வணிகர் இப்படிப் பலதரப்பட்ட மக்களும் அந்த நகரத்தில் குழுமினர். சிந்தியாவின் மாளிகை மாடியிலிருந்து ஊருக்குள் வந்து கொண்டிருந்த மக்கள் சமுத்திரத்தைப் பார்த்து வியந்து கொண்டிருந்தாள்
புஷ்பாவதி. இருப்பினும் தீப்சந்த் எப்படியிருக்கிறானோ என்ற எண்ணமே அவள் மனதில் மேலோங்கி நின்றது. அன்றிரவு சிந்தியாவின் மனைவி மறுநாள் புஷ்கரத்தில் தாங்கள் நீராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருந்தாள்,
“புஷ்பாவதி! நாளையுடன் உனக்கு விடிமோட்சம் ஏற்படும்” என்று கூறினாள். அது எப்படி சாத்தியம் என்று எண்ணிய புஷ்பாவதி உள்ளிருந்த சோகத்தின் விளைவாகப் பெருமூச்சொன்றையும் வெளியிட்டாள்.
அன்று இரவு முழுவதும் தீப்சந்தையே நினைத்துக் கொண்டிருந்த புஷ்பாவதி புஷ்கரத்தில் இருந்து தப்பும் வழியைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவனுடன் தான் மகாராணா அந்தப்புரத்திலும், நந்தவனத்துக் கொடி
வீட்டிலும், மரங்களின் மறைவுகளிலும் அனுபவித்த இன்பங்களை நினைத்து நினைத்து ஏங்கினாள். இரவு நீங்கிப் பொழுது விடிந்த பின்பும் புஷ்பாவதி அதே யோசனையிலிருந்ததால் அவள் கண்கள் சிவந்திருந்ததைக் கண்ட
சிந்தியாவின் மனைவி. “புஷ்பாவதி! உன் மனம் எனக்குப் புரிகிறது. ஆனால் இன்றுடன் உன் நிலையில் சீர்மை காணும். உன் துயர் துடைக்கப்படும்.” என்று கூறி அவளையும் புஷ்கர ஏரிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகளைச்
செய்தாள்.
விடிந்ததும் தனது சிவிகையில் புஷ்பாவதியுடன் கிளம்பிய சிந்தியாவின் மனைவி மக்கள் சமுத்திரத்தின் காரணமாக மெள்ளவே ஏரியை அடைய வேண்டியிருந்தது. மெள்ளச் சிவிகையில் இருந்து அருகில் கட்டப் பட்டிருந்த பிரத்தியேகக்
கூடாரத்தில் தங்கி நீராடும் ஆடைகளை அணிந்து கொண்ட சிந்தியாவின் மனைவி, புஷ்பாவதியைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைந்தாள். நன்றாகப் புடைத்து எழுந்து நின்ற புஷ்பாவதியின் கடின மார்பகத்தைக் கண்டு ஒருநாள்
தானும் அப்படியிருந்ததை நினைத்துக்கொண்டாள். பிறகு புஷ்பாவதியை ஆசையுடன் அணைத்துக் கொண்டு காவலர் புடை சூழ நீராடும் துறைக்குச் சென்றாள். நன்றாகக் காவலிடப்பட்டு சிந்தியாவின் மனைவியும் தோழிகளும்
நீராட மூங்கில்கள் நடப்பட்டுத் தனி நீராடு துறையாக வளைக்கப்பட்ட இடத்துக்குள் சிந்தியாவின் மனைவியும் புஷ்பாவதியும் நீராட முற்பட்டாலும், நடப்பட்ட கால்களுக்கு வெளியே கும்பல் நெறிப்பட்டுக் கொண்டிருந்தது. எங்கும்
கிருஷ்ணா கோவிந்தா என்ற சப்தம் ஆகாயத்தை நிரப்பிக்கொண்டிருந்தது.
.
அந்தக் கோஷத்தைக் கேட்டு கிருஷ்ணனே அங்கு வந்து விடுவான் போலிருக்கிறது என்ற தெய்விக சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
புஷ்பாவதியின் கையைப் பிடித்துக்கொண்டு ஏரி நீரில் மூழ்கு முன்பு! “புஷ்பாவதி! உனக்குத் தேவையான தைப் பிரார்த்தித்துக் கொண்டு நீரில் மூழ்கு. என்றாள் சிந்தியாவின் மனைவி.
தீப் சந்தை நினைத்துக் கொண்டே இரண்டு முறை நீரில் மூழ்கி மூன்றாவது முறை எழுந்தபோது ஏரியின் நீரில் அத்தனை கூட்டத்தையும் மீறி ஒரு வாலிபன் நீந்தி துளைந்து கொண்டிருந்தான். ஒருமுறை மூழ்கி எழுந்த போது
அவன் முகம் நன்றாகவே தெரிந்ததால் திடுக்கிட்டாள் புஷ்பாவதி.
அவள் கண்டது தீப்சந்தின் முகம்! அவன் முகத்தைக் கண்டு திடுக்கிட்டதைக் கவனித்த சிந்தியாவின் மனைவி புஷ்பாவதியைத் தவறாகப் புரிந்து கொண்டு, “அவனைப் பற்றிப் பயப்படாதே. அவன் இன்றுதான் நம்மிடம் காவலனாக
அமர்ந்திருக்கிறான். முகம் சற்று விகாரமானாலும் நல்லவன். அவனை உன் தந்தையே தேர்ந்தெடுத்து அந்தப்புரக் காவலனாக நியமித்திருக்கிறார். அவனுக்கு மூளை கொஞ்சம் சரியில்லை. வேறு குறை கிடையாது.” என்றாள்.
புஷ்பாவதி நீராடிவிட்டுச் சிந்தியாவின் மனைவியுடன் தங்கள் கூடாரத்துக்குச் சென்று மாற்றுடையை அணிந்தாள். சிவிகையில் ஏறு முன்னமே அந்தப் புதிய அந்தப்புரக் காவலன் வந்து அவர்கள் இருவரையும் தலை வணங்கிச்
சிவிகையைத் தூக்கவும் மற்றவர்களுக்குக் கை கொடுத்தான். சிவிகைக்கு அவன் தோள் கொடுத்தது மிகவும் கஷ்டமாயிருந்ததால் புஷ்பாவதி கேட்டாள் ; “இந்தப் புது மனிதனால் சிவிகையைத் தூக்க முடியுமா?” என்று.
“நன்றாக சொன்னாய் புஷ்பாவதி! இவன் நம்மிரு வரையும் கூட தூக்குவான், நல்ல பலசாலி. வயதில் சிறிய வனாயிருக்கிறானே என்று எண்ணாதே” என்றாள் சிந்தியாவின் மனைவி.