Mohini Vanam Ch 33 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 33 முற்றுகையும் முடிவும்
Mohini Vanam Ch 33 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
தீப்சந்த் ஏவிய ராக்கெட்டுகளால் தனது கூடாரமும் வெடி மருந்து கூடாரம் ஒன்றும் தீக்கிரையானதால், டீபாயின் சினம் மிகுந்து அந்தக் கோட்டையின் உட்புற மாளிகையையும், இதர இல்லங்களையும் அழித்து விடுவதென்ற
தீர்மானத்துக்கு வந்ததால், மீதியிருந்த கூடாரங்களில் இருந்த வெடிமருந்துகளை சற்று எட்ட இருந்த அடர்ந்த தோப்புக்குள் மாற்ற உத்தரவிட்டான். பீரங்கிகளையும் அந்தத் தோப்பின் எல்லையில் நிறுத்தி, அவற்றையும் நேராக
கோட்டையில் இருப்பவர்களின் கண்ணுக்குத் தெரியாமல் அடித்தான். தனக்கு உதவியாக வந்த மகாராஷ்டிரப் படைப் பிரிவுகள் இரண்டையும் கோட்டையின் பக்கவாட்டுகளில் பிரித்துப் பிரித்து பல கூட்டங்களாக நிறுத்தி எதிரி
வெளியே வந்தால் வளைத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்தான். அந்தப் பிரிவுகளுக்கு நடுவிலும் சில பீரங்கிகளை வைத்து அந்தப் பீரங்கிகளைப் புரவி வீரர்களுக்கிடையே மறைத்தான்.
“பீரங்கிகளை எதிரி கண்ணில் தெரியாதபடி நீங்கள் புரவிகளுடன் அவற்றைச் சூழ்ந்து நில்லுங்கள். குண்டு வீசும் சமயத்தில் மட்டும் சிறிது விலகி மீண்டும் அதைச் சூழ்ந்துகொள்ளுங்கள். இதனால் பீரங்கிகள் மீது குறி வைக்க
எதிரியால் முடியாது. இந்த பீரங்கிகளைச் பாதுகாக்க தோப்பு மறைவிலிருந்து எனது பீரங்கிகள் குண்டுகளைப் பொழியும்” என்று மகாராஷ்டிரப் படைகளுக்கு உத்தரவிட்டான்.
இந்த ஏற்பாடுகளை அவன் செய்து முடித்ததும் காட்டு எல்லைக்குள் இருந்த பீரங்கிப் படைகளோடும் தனது உப தலைவர்களோடும் சேர்ந்துகொண்டான். பீரங்கிகளை அடுத்து அடுத்து நான்கு பகுதிகளாக நிற்கவைத்து பீரங்கிப்
படையைப் பிரித்தான். ‘பெட்ரான் நான் கையை அசைக்கும்போது நீ இரண்டு பீரங்கிகளை முன்னால் பத்தடி துரிதமாக இழுத்துச் சென்று இரண்டு வெடிகுண்டுகளை கோட்டையின் நடு மாளிகைமீது வீசி விட்டுப் பின்னால்
பீரங்கிகளை இழுத்துவிடு. ரோகரன்! நீயும் அப்படியே செய், சதர்லண்டு! ராபர்ட்ஸ்! உங்கள் தலைமையில் பத்து பத்து பீரங்கிகள் இயங்கும். அவற்றைக் கொண்டு கோட்டைமீது வீசுங்கள். குறி எதுவும் வேண்டாம். கோட்டைக்குள்
அவை விழட்டும்.” என்று உத்தரவுகளையும் உபதளபதிகளுக்குப் பிறப்பித்தான்.
இந்த உத்தரவுகளுக்குப் பிறகு, இன்று மாலை மட்டும் பீரங்கிகளை இயக்க வேண்டாம். இரவில் இயக்குங்கள்.” என்று கூறி தனது பீரங்கிகள் மறைந்திருந்த தோப்புப் பகுதியைப் பார்வையிடச் சென்றான்.
பீரங்கிகளை மறைக்க தான் தேர்ந்தெடுத்த இடமும் பீரங்கிகளை அமைத்த இடங்களும் சரியானாலும் அவை எதிரி நிலையங்களைத் தாக்கும் தூரத்தில் இருக்கின்றனவா என்பதில் டீ பாயினுக்கு சந்தேகமிருந்தது. ஆகவே முன்னால்
பீரங்கிகளை இழுத்துச் சென்று பிறகு திருப்பி இழுத்து வரும்படி உத்தரவு பிறப்பித்திருந்தான். எதிரியிடம் ராக்கெட்டுகள் அதிகமிருந்தால் பீரங்கிகள் பயனளிக்குமா என்ற சந்தேகமும் டீபாயினுக்கு இருப்பினும், டீ பாயின் படைகள்
ஐரோப்பிய ரெஜிமெண்டு களின் கட்டு திட்டங்களில் பழக்கப் பட்டிருந்ததால் மகாராஷ்டிர, ராஜபுதனப் படைகளை விட அவை திட்டத்துடன் இயங்க முடியும் என்பதையும், தனது இரும்பு அரணை உடைத்து தப்ப ராஜபுத்திரர்களால்
முடியாது என்றும் தீர்மானத்துடன் இருந்தான்.
அவன் யோசனைகளை தீப்சந்தும் உணர்ந்திருந்தான். தனது முதல் கணை வீச்சுக்குப் பிறகு மற்ற கூடாரங்கள் அகற்றப்பட்டுத் தோப்புக்குள் மறைக்கப்பட்டதையும் கவனித்தான். எதிரியும் தற்காப்புப் போரில் ஈடுபட்டால், அதிக
நாள் முற்றுகையைத் தான் தாங்குவது கஷ்ட மென்றும் புரிந்துகொண்டான். எதிரி தனது பீரங்கிகளை இழுத்து தோப்பில் மறைத்துவிட்டதைக் கண்டு, அவை இலக்குமீது சுட முடியாது என்பதை உணர்ந்ததால் பீரங்கிகள்
அவ்வப்பொழுது முன்னேறிசுடும் என்பதையும் உணர்ந்து கொண்டான். அப்படி அவை வெடிகுண்டு வீசினால் மாளிகை பாதிக்கப்படும் என்பதையும் அறிந்தான். இந்த யோசனைகளின் விளைவாக மாற்று ஏற்பாடுகளையும்
துரிதமாகச் செய்தான்.
நடு மாளிகையைக் காலி செய்துவிட உத்தரவிட்டான். புஷ்பாவதியைத் தனது உபதளபதியாக்கிக் கொண்டு தனது திட்டங்களை விளக்கி அவற்றை நிறைவேற்றும் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்தான். “புஷ்பாவதி! நடு
மாளிகையில் இருக்கும் ராக்கெட்டுகளையும் வெடி மருந்துகளையும் பக்கத்திலிருந்த சிறு கட்டிடங்களில் பிரித்து வைத்துவிடு. நடு மாளிகை எதிரி குண்டு வீச்சால் பற்றினாலும் மற்ற வெடி மருந்துக் கோணிகள் காப்பாற்றப்படும்.
கோட்டையைப் பாதுகாக்கவும் பீரங்கிகளைக் கோட்டைச் சுவரை அடுத்த மேடுகளில் ஏற்றி இங்குள்ள காட்டுத் தழைகளைக் கொண்டு மறைத்துவிடு. எதிரி இரவில் குண்டு வீச்சு தொடங்கும் போது நாமும் துவங்கும்வோம்.”
என்று உத்தரவிட்டான்.
பிறகு தனது பத்தாயிரம் வீரர்களையும் சின்னஞ்சிறு பிரிவுகள பகப் பிரித்து பீரங்கிகளிடமும் ராக்கெட்டுகளிடமும் நிற்க வைத்தான்.
புரவிப் படையைச் சேர்ந்த ஐயாயிரம் பேர்கள் வீடு களின் இடையிடையே நிற்க வைக்கப்பட்டார்கள். “நான் சைகை செய்யும் போது ஒன்றாகக்கூடி எதிரிமீது ராக்கெட்டுகளை வீசுங்கள். மற்ற சமயங்களில் மறைவுக்குச்
சென்றுவிடுங்கள்.” என்று உத்தரவிட்டான்.
அன்று முழுவதும் கோட்டையைச் சுற்றி வந்து தான் நின்று போரிட வேண்டிய பகுதிகளை ஆராய்ந்தான். பிறகு வீடுகளைப் பரிசோதனை செய்ததில், உணவுப் பொருள்கள் ஒரு மாதத்துக்குத் தாங்கும் என்பதால் மகிழ்ச்சி
அடைந்தான்.
டீ பாயின் பீரங்கிகள் அன்று பகல் முழுவதும் இயங்க வில்லை. அதைப்பற்றி புஷ்பாவதி கேட்டபோது, “இரவில் குண்டுகள் வீசப்படும். அநேகமாக மாளிகை இடிக்கப்படும். மாளிகைப்பக்கம் யாரும் போகவேண்டாம் என்று
சொல்லிவிடு.” என்றான்.
அவன் எதிர்பார்த்தபடியே டீ பாயின் நடந்து கொண்டான். இரவு முற்றியபின் பீரங்கிகள் முன்னுக்கு நகர்ந்து வெடிகளை வீசின. நடு மாளிகையின் மீது அவை குறி வைக்கப்பட்டதால் மாளிகையின் மேல்பகுதி இடிந்து சிதறியது.
இடிந்து விழுந்த பகுதிகளைத் துரிதமகக அப்புறப்படுத்திச் சுவர் ஓரமாக நகர்த்த உத்தரவிட்டான் தீப்சந்த். பதிலுக்கு ராக்கெட்டுகளை அனுப்பட்டுமா என்று புஷ்பாவதி கேட்டபோது, “வேண்டாம். ராக் கெட்டுகளை நாம் வீணடிக்கக்
கூடாது. நாம் இங்கிருந்து தப்பிச் செல்லும் சமயத்தில் அவை நிரம்ப வேண்டியிருக்கும்.” என்று பதில் சொன்னான். அவ்வப்பொழுது எதிரி பீரங்கிகளுக்குப் பதில் சொல்ல பீரங்கிகள் இயங்கட்டும் என்று மட்டும் உத்தரவிட்டான்.
எதிரியின் ஒவ்வொரு பீரங்கி குண்டுக்கும் பதில் குண்டு வீசப்பட்டது. அந்தப் போரை தீப்சந்தே முன்னின்று நடத்தினான். எதிரி பீரங்கிகள் தோப்பை விட்டு வெளியே வந்ததும் கோட்டை மேட்டில் சித்தமாயிருந்த தீப்சந்தின் பீரங்கிகள்
படுவேகத்துடன் இயங்கின. அந்தக் குண்டு களிடம் இருந்து தப்ப எதிரிகள் அவ்வப்பொழுது மறைவை நாட வேண்டியிருந்ததால் அவர்கள் நினைத்த வேகத்தில் பீரங்கிகள் குண்டு வீசவில்லை.
அன்றிரவின் முதல் பாதிக்குப் பிறகு, குண்டு வீச்சை டீ பாயின் நிறுத்தி விட்டான். “நாம் குண்டுகளை விரயம் செய்ய வேண்டாம்” என்று உத்தரவிட்டதால் இரவின் பிற்பகுதியில் குண்டு வீச்சு எதுவும் ஏற்படவில்லை.
அதன் காரணத்தைப் புரிந்து கொண்ட தீப்சந்தும் சற்று இளைப்பாறத் தீர்மானித்துத் தனக்கென திட்டம் செய்திருந்த ஒரு சிறு வீட்டுக்குள் சென்றான். அங்கு அவனுக்கு உணவை வைத்துக் கொண்டு சித்தமாக இருந்தாள் புஷ்பாவதி.
உணவருந்திய பிறகு வீட்டுத் தரையில் படுத்த தீப்சந்தைப் பரிதாபத்துடன் நோக்கிய புஷ்பாவதி, “பஞ்சணையில் படுக்க வேண்டியவர் மண் தரையில் படுக்கிறார்” என்று உள்ளூர சொல்லிக் கொண்டாள். அந்த எண்ணத்துடன் தானும்
உணவருந்தி அவன் பக்கத்தில் உட்கார்ந்தான்.
தீப்சந்த் படுத்த மாத்திரத்தில் உறங்கிவிட்டான். புஷ்பாவதி அவனை எழுப்ப விருப்பம் இல்லாமல் பக்கத்தில் உட்கார்ந்தபடி அவன் கால்களைப் பிடித்துவிட்டாள். பிறகு அவன் காலடியிலேயே படுத்து உறங்கியும் விட்டாள். சுமார் சில
நாழிகைகளே உறங்கிய தீப்சந்த் விழித்துக் கொண்டபோது, காலடியில் படுத்துக்கொண்டிருந்த புஷ்பாவதியை நோக்கினான். “பாவம் மிகவும் அலுத்திருக்கிறாள்” என்று அனுதாபத்துடன் கூறினான்.
பிறகு எழுந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவள் முதுகைத் தடவிக்கொடுத்தான். தலையை எடுத்துத் தன் மடிமீது வைத்துக்கொண்டான். அவள் மெதுவாக விழித்து தனது தலை தீப்சந்தின் மடியில் இருப்பதைக் கண்டு
புன்சிரிப்புக் கொண்டாள், “ தூங்கு புஷ்பாவதி, விடிய ஒரு ஜாமம் இருக்கிறது.” என்றான்.
“விடிய நேரமிருந்தால் தூங்கத்தான் வேண்டுமா?” என்று அவள் கேட்டாள்.
“எதிரி அனுமதிக்கும் வரையில் தூங்குவது தவறாகாது” என்றான் தீப்சந்த்.
“இன்னும் எத்தனை நாள் இந்த முற்றுகை நீடிக்கும்?” என்று வினவினாள் புஷ்பாவதி.
“ஒரு மாதம்.”
“அதற்குப் பின்?”
“நாம் வெளியேறுவோம்.”
“எப்படி?”
“நீ நேராகவே பார்க்கலாம்” இதை உறுதியுடன் சொன்னான் தீப்சந்த்.
உண்மையில் டீ பாயின் நாளாக ஆக தனது பொறுமையை இழந்தான். இருபது நாட்கள் சென்றதுமே மிக உக்கிரமாகக் கோட்டையைத் தாக்கலானான். ஒவ்வொரு தாக்குதலும் தோல்வியடைந்தது. கோட்டைக்குள் ஏறிக் குதித்துப்
போரிடுவது என்று கடைசியாகத் தீர்மானித்தான். அதற்காகப் பெரும் ஏணிகளையும் சித்தப்படுத்தினான்.
இந்த ஏற்பாடுகளின் விளைவாகப் போர் சிறிது தடைப்பட்டிருந்ததைக் கவனித்த தீப்சந்தும் துணிகரமான முடிவொன்றை எடுத்தான்.
ராஜபுதனத்தையும் மகாராஷ்டிரத்தையும் வியக்க வைத்த முடிவு அது.