Mohini Vanam Ch 36 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 36 பிளந்த முற்றுகை!
Mohini Vanam Ch 36 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
ஜாவுத் கோட்டையின் முற்றுகையைத் தான் ஒரு மாத காலம் எதிர்த்து நின்ற பிறகும் உதயபூரில் இருந்து எந்தவித தூதோ துணைப் படையோ வராததால், மேலும் கோட்டைக்குள் உட்கார்ந்திருப்பது தற்கொலைக்கு ஒப்பாகும் என்ற
முடிவுக்கு வந்த பின்பே கோட்டையைவிட்டு வெளியேறிவிடுவது என்ற தீர்மானத்துக்கு வந்தான் ‘தீப்சந்த். இதைப்பற்றி அந்த இரவின் ஆரம்பத்தில் புஷ்பாவதியுடனும் மற்ற இரண்டு மூன்று படைப் பிரிவுகளின்
உபதலைவர்களுடனும் பேசினான். டீ பாயின் குண்டு வீச்சால் மாடி இடிந்த நடு மாளிகையின் தரையில் இருந்த பெரிய அறை ஒன்றில் இந்த மந்திராலோசனையை நடத்திய தீப்சந்த் “உபதளபதி, இங்கிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு
வழியில்லை. மேவார் மன்னர்களியாட்டத்தில் இருப்பதால் நம்மைக் கவனிக்க அவகாச மில்லை அவருக்கு. பிரதான மந்திரி சோம்ஜியிடம் இருந்தும் எந்தவித லிகிதத்தையும் காணோம். ஆகையால் உடனடியாக இங்கிருந்து
வெளியேறுவதுதான் நல்லது. அதற்கு என்ன செய்யலாம்?” என்று புஷ்பாவதியை நோக்கிக் கேட்டான்.
தீப்சந்த் ஏதாவதொரு திட்டம் இல்லாமல் இத்தகைய முடிவுக்கு வரமாட்டான் என்பதை உணர்ந்திருந்த, புஷ்பாவதி, “முடிவு படைத்தலைவருடையது. அதை நிறைவேற்ற வேண்டியது உபதலைவர்கள்” என்றாள எதிலும்
பட்டுக்கொள்ளாமல்.
தீப்சந்தே தங்களை யோசனை கேட்பதை பெருமை: யாக நினைத்த ஒரு உபதலைவன் “முதலில் இங்குள்ள மதில்களில் இருந்து பீரங்கிகளை இயக்குவோம். அவற்றின் பாதுகாப்பில் நமது படை வெளியேறலாம்.” என்று கூறினான்.
“அதுவரை டீ பாயின் வாளாவிருப்பானா?” என்று தீப்சந்த் கேட்டான்.
“இல்லாமல் என்ன செய்வான்?” என்று அந்த… உபதலைவன் கேட்டான்.
“பதிலுக்குக் குண்டு வீசமாட்டான். நாம் வெளியில் வரும்வரை காத்திருப்பான். வெளியில் நாம் தலை காட்டியதும் நம்மைத் தூள் செய்ய பீரங்கிகளை இயக்குவான். நிமிர்ந்து இப்பொழுது. கோட்டையின் உட்புறத்தை நோக்கும்
பீரங்கிகள் சற்று தாழ்ந்து கோட்டை வாசலை நோக்கிக் கொண்டிருக்கும். கோட்டை வாயிலைத் திறக்கும் வரையில் எதுவும் நடக்காது. நமது படையின் ஒரு பிரிவு வெளியே சென்றதும் நமது படையின் மீது பீரங்கி குண்டுகள் விழும்.
நாம் திரும்பி கோட்டைக் குள்ளும் வரமுடியாது. வெளியே தொடர்ந்து போகவும் முடியாது. நமது படை இரண்டாகத் துண்டிக்கப்படும். வெளியே சென்றுவிட்ட நமது படைக்கும் பின்னாலுள்ள கோட்டையிலுள்ள படைக்கும் இடையில்
டீ பாயின் தனது புரவிப்படையை ஏவுவான். அப்புறம் நமது படையில் பாதி அவனால் வளைக்கப்படும். மீதிப் பாதி கோட்டைக்குள் அகப்பட்டுக்கொள்ளும். வெளியே நம்மை அழித்த பிறகு கோட்டைக்குள் டீ பாயின்
நுழைந்துவிடுவான் என்று டீ பாயின் செய்யக்கூடியதை விவரித்துச் சொன்னான் தீப்சந்த்.
புஷ்பாவதி திகைத்தாள். “போர் என்பதில் எத்தனை அழிவு இருக்கிறது!” என்று மனம் புழுங்கினாள். “எதற்காக மனிதர்களில் ஒரு வகுப்பு இன்னொரு வகுப்பை நாசம் செய்து வாழ வேண்டும்?” என்று தன்னைத்தானே
கேட்டுக்கொண்டாள்.
அவள் மனதில் ஓடிய எண்ணங்களைத் தீப்சந்த் புரிந்து கொண்டதால், “உபதளபதி! போர் என்றால் நாசந்தான். சுயநலம் மனிதனிடம் மேம்பட்டு இருக்கும் வரை போர்களைத் தவிர்க்க முடியாது.” என்று கூறினான். அத்துடன் தனது
திட்டத்தையும் விளக்கலானான்.
“புஷ்பாவதி! உபதலைவர்களே! இன்றிரவு முதல் ஜாம முடிவில் நமது பந்தங்களோ வேறு விளக்குகளோ அதிகமாக எரிய வேண்டாம். நம்மிடமிருக்கும் நூறு பீரங்கிகளும் நான்காகப் பிரிக்கப்பட்டுக் கோட்டையின் பல பகுதிகளிலும்
சித்தமாயிருக்கும். கதவு திறந்தவுடன் அந்தப் பீரங்கிகள் வண்டியில் ஏற்றப்பட்டுத் தயாரா கட்டும் வெளியே போக. அப்படி முதல் இருபத்தி ஐந்து பீரங்கிகள் போனதும் மதில்களில் பின்புறமிருந்து ராக்கெட்டுகளை வீசுங்கள். பீரங்கி
வீச்சைவிட ராக்கெட்டு வீச்சு வேகமானது. எதிரியைக் கைகால் ஆடவிடாமல் செய்யும் வன்மை வாய்ந்தது. டீ பாயிடம் ராக்கெட்டுகள் இல்லையென்று நினைக்கிறேன். இருந்தால் இக்கனை நாள் வீசா திருப்பானா? அவனிடம் இல்லாத கணை
நம்மிடம் இருக்கும்போது அதை உபயோகப்படுத்துவதுதான் நல்லது.” என்று சொல்லிக்கொண்டு போனான்.
தீப்சந்தை, புஷ்பாவதி ஒரு சந்தேகம் கேட்டாள். “டீ பாயினிடம் ராக்கெட்டுகள் இருந்து, அதை அவன் உபயோகப்படுத்தாமல் இருந்து நாம் வெளியே செல்லும் போது வீசினால்?” என்று கேட்டாள்.
புஷ்பாவதியைப் பெருமை துலங்கிய கண்களால் பார்த்தான் தீப்சந்த். “உபதளபதி! நீங்கள் கேட்பதிலும் பொருளிருக்கிறது. ஆனால் நம் ராக்கெட்டுகளை வீசி டீ பாயின் கூடாரத்தைக் கொளுத்திய பிறகும் அவன் ராக்கெட்டு எதையும்
வீசவில்லை. அவனிடம்ராக்கெட்டுகள் இருந்தால் இத்தனை நாள் இந்த முற்றுகையை நாம் சமாளித்திருக்கவும் முடியாது.” என்று கூறினான். மேலும் சொன்னான் : “அப்படியே அவன் ராக்கெட்டுகளைக் கடைசி சமயத்துக்காகத் தேக்கி
வைத்திருந்தாலும் நாம் வெளியே சென்ற பிறகு அவை பயனற்றதாகிவிடும். நாம் அவன் படையைப் பிளந்து செல்லும்போது இருபுறத்திலும் எதிரி படையிருக்கும் அவ்வளவு கிட்டத்தில் ராக்கெட்டுகளை வீசமுடியாது.நாம் வெளியே
சென்றதும் நமது பீரங்கிகளும் மாட்சுலாக் துப்பாக்கிகளும் சுடும் போது கிட்டத்தட்ட கைகலப்பது போன்ற நிலையே ஏற்படும். அப்பொழுது வாளும் துப்பாக்கியுந்தான் பயன்படும். பீரங்கி ஓரளவு பயன்படலாம். ஆனால் முழுவதும்
பயன்படக் காரணமில்லை.
இதைச் சொன்ன தீப்சந்த் “முதலில் இருபத்தி ஐந்து பீரங்கிகள் குண்டு வீசிக்கொண்டு முன்னேறுவதை அடுத்து நான் நமது புரவிப் படையின் ஒரு பகுதியுடன் அதன் பின்னால் செல்வேன். பீரங்கிகள் பிளந்த வழியில் எனது படை
அம்புபோல் செல்லும். இப்பொழுது துப்பாக்கிகளும் வாட்களும் இயங்கும். எங்களை வளைக்க டீபாயின்’ முயல்வான். அப்பொழுது அடுத்த இருபத்தி ஐந்து பீரங்கிகள் வரும். அவை இருபுறங்களிலும் குண்டு மழை பொழியும்,
அந்தச் சமயத்தில் நமது ராக்கெட்டுகள் கோட்டைக்குள் இருந்து சீறிவரும் எதிரிமீது. அதிலிருந்து தப்ப எதிரி கோட்டையின் இடது பக்கத்தில் போனால் வெளியே வரத் தயாராயிருக்கும் அடுத்த புரவிப் படைப் பிரிவு கோட்டையின்
பின்கதவு வழியாக வெளியே வந்து அங்குள்ள படைகள் மீது பீரங்கிகளை இயக்கிக்கொண்டு இரு பிரிவுகளாக வரும்.
நான் இருபத்தி ஐந்து இருபத்தி ஐந்தாகப் பிரிக்கப்பட்ட இரு பீரங்கிப் படைகளுக்கிடையில் முன்னேறுகிறேன். பின்வாசலில் இருந்து வெளியே வரும். மற்றும் ஐம்பது பீரங்கிகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து வலது புறமும் இடது புறமும்
வரும் ராக்கெட்டுகளை வீசிக் கொண்டு நல்லவேளையாக நான் முதலில் உதய பூருக்கு வரச்சொல்லியிருந்த பத்தாயிரம் வீரர்களில் பாதிப்பேரை உதயபூரில் இருந்து கிளம்பி வழியிலேயே சந்தித்து மண்டலக் கோட்டைக்கு
அனுப்பிவிட்டேன். இங்கிருப்பது ஐயாயிரம் பேரும் நூறு பீரங்கிகளும் தான். நமது புரவிப் படை ராஜபுதனத்திலேயே சிறந்தது. ஆகவே நான் முன்புறமும் மற்ற இரண்டு பிரிவுகள் பின்புறமாகவும் வெளியேறி, பின்பக்கம் வரும் படை
இரண்டாகப் பிரிந்து கோட்டையின் இரு பக்கத்திலும் வரும்போது டீ பாயின் ஒரே சமயத்தில் முன்புறத்தில் தாக்கப்படுவான். முன்னும் இரு பக்கங்களிலும் பீரங்கிகளுடன் ராக்கெட்டுகளும் இயங்கும்போது அவன் அதை சமாளிப்பது
மிகவும் கஷ்டம். தவிர அந்தப் படையில் முக்கால்வாசி மகாராஷ்டிரர்கள். அவர்களில் ஒரு சிறு பிரிவு புரவிப்படை இருக்கிறது. அதுதான் நம்மை எதிர்க்கும் வேகமும் சக்தியும் உள்ளது. அதை நான் கவனித்துக்கொள்ளுகிறேன்” என்று
விளக்கினான்.
அத்துடன் மந்திராலோசனை முடிந்தது.
அதற்குப் பிறகு, படைகளைத் தனது உத்தரவின்படி பிரிக்கும்படி கட்டளையிட்ட தீப்சந்த் “புஷ்பாவதி நீ போய் உன் வேலையைக் கவனி. பின்பக்கமாக வரும் படையை நீ திறம்பட இயக்குவதில் தான் நமது வெற்றி இருக்கிறது.” என்று
அவளுடன் தனது சிறு வீட்டுக்குச் சென்றான். உள்ளே சென்றதும் தனிமையில் அவளைக் கட்டித்தழுவி “எச்சரிக்கையுடன் இரு புஷ்பாவதி. பீரங்கிகளுக்கு ராஜபுதனத்தில் குறைவில்லை. ஆனால் பீரங்கிகளே போரை வெற்றி
கொள்ளாது. அதற்கு அறிவு வேலை செய்ய வேண்டும்” என்று கூறினான். பிறகு வெளியே சென்றான்.
முதல் இரண்டு ஜாமங்கள் கோட்டை வாயிலைப் பார்வையிடுவதில் செலவழித்தான். இரண்டாவது ஜாமம் ஆரம்பத்தில் விளக்குகளும் பந்தங்களும் அணைந்தன. எங்கும் அமைதி நிலவியது அரை ஜாமத்துக்கு. கதவுகள் திறக்கும் வரை
அமைதியைக் கலைக்க வேண்டாமென திட்டமான உத்தரவிட்டிருந்தான் தீப்சந்த்.
இந்த அமைதியால்தான் டீ பாயின் ஏமாந்தான். விளக்குகள் அணைந்ததும் அரை இருட்டு கோட்டைக்குள் ஆட்சி செய்ததை டீ பாயின் தனது கூடார வாயிலில் இருந்து கவனித்தான். அதற்குக் காரணம் என்னவாயிருக்கும் என்று
சிந்தித்தான். சதர்லண்டையும் யோசனை கேட்டான். “இடைவிடாத போர் ஒரு மாத காலமாக, சற்று ஓய்வெடுக்கலாம்” என்றான் சதர்லண்டு.
அதை நம்பவில்லை டீ பாயின். “ஓய்வெடுப்பது என்பதோ அஜாக்ரதையோ தீப்சந்திடம் கிடையாது. எதற்கும் படைகள் எச்சரிக்கையாயிருக்கட்டும்.” என்று உத்தரவிட்டான்.
ஜெனரல் அனாவசியமாக அஞ்சுகிறார் என்று சதர்லண்டு நினைத்தான். ஆனால், அது எத்தனை தவறு என்பதை மூன்றாவது ஜாமம் துவங்கியதும் சதர்லண்டு புரிந்துகொண்டான்.
மூன்றாவது ஜாமத்தில் திடீரென கோட்டையின் உட்புறம் உயிர் பெற்றது. ராக்கெட்டுகள் பல வேகமாக டீ பாயின் படைகள்மீது விழுந்தன. அதே சமயத்தில் முன் கதவு திறக்கப்பட்டு பீரங்கி வண்டிகள் குண்டுகளை வீசிக் கொண்டே
வெளியே வந்தன. அவை முற்றுகைப் படையின் இடையே வெட்டிப் புகுந்ததும், புரவிப்படை வேகமாக வெளியே வந்தது தீப்சந்தின் தலைமையில், மாட்ச்லாக் துப்பாக்கிகள் கடுமையாகச் சுட்டன.
டீ பாயின் வெகு சீக்கிரத்தில் தனது படைகளை இயக்கினாலும் எதிரியின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியவில்லை, பிறகு தனது இரு தளபதிகளைப் பக்கவாட்டுகளில் தாக்க உத்தரவிட்டான்.
அதே சமயத்தில் கோட்டையின் பின்புறம் இருந்து வந்த பீரங்கிகள் இருபுறமும் டீ பாயின் படைகள்மீது குண்டுகளை வீசின. அவற்றைத் தொடர்ந்து புஷ்பாவதி புரவிமீது வந்தாள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் செய்வது அதிகமில்லை என்று டீ பாயின் நினைத்தான்.
வெள்ளைக்காரர் போர் முறையையே எதிரியும் பின் பற்றியதால், போர் சூடு பிடித்ததாலும் எதிரி முப்புறமும் தன்னைச் சூழ்ந்து நெருங்கியதால், தனது படைகளுக்கு இடையே பாதை செய்துகொள்வதை அவனால் தடுக்க
முடியவில்லை. எதிரியின் ராக்கெட்டுகளும் பீரங்கிகளும் விளைவித்த நாசத்தால் எதிரிக்கு வழி விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தான் டீ பாயின்.
சுமார் அரை ஜாமத்திற்குப் பீரங்கிகளையும் ராக்கெட்டுகளையும் இயக்கி டீ பாயின் படைகளை ஊடுருவிச் சென்றுவிட்டான் தீப்சந்த். அதற்குப் பிறகு தனது படையை மண்டலக் கோட்டையை நோக்கி வட திசையில் திருப்பினான்.
டீ பாயின் மட்டுமின்றி மகாராஷ்டிரப் படைகளும் ஏதும் செய்ய இயலாமல் தங்கள் சேதத்தை மதிப்பிட ஆரம்பித்தார்கள்.