Mohini Vanam Ch 37 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 37 சலூம்பிரா வந்தார்!
Mohini Vanam Ch 37 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
அரசன் காமுகனாகி காம அந்தகாரத்தில் மூழ்கிக் கிடந்தால் அந்த அரசாட்சி அழிந்துவிடும் என்பதற்கு சரித்திரத்திலும் சான்றுகள் உண்டு. காவியத்திலும் அத்தாட்சிகள் உண்டு.
அரசையே கவனிக்காமல் மாதர்களின் மையலிலேயே மூழ்கிக் கிடந்தவனான அக்னிவர்ணன் என்ற அரசனோடு ரகுவம்சம் அழிந்துவிட்டதென்பதை காளிதாசன் எழுதிய ரகுவம்ச மகா காவியத்தில் இருந்து அறிந்துகொள்கிறோம்.
ராணா பீம்சிங்கின் காமப் பித்தத்தால், அரசாட்சியில் அவன் காட்டிய அசிரத்தையால் மேவார் ராஜ்ஜியம் அழிந்தது என்பதை வரலாற்று ஆசிரியர்களிடம் இருந்து அறிகிறோம். மகாராஷ்டிரர்களாலும் மேவாரின் சுயநலப் பிரபுக்களாலும்
மேவாரில் அராஜகம் நிலவிய காலத்தில் சிறு பருவம் நீங்கிப் பருவமும் ஏறி முற்றிய சமயத்தில் வாலிப சரச விளையாட்டில் மூழ்கி மோகினி வனத்தில் ராணா பீம்சிங் உல்லாச வாழ்க்கையில் காலத்தைக் கழிப்பானா?
மகாராணாவின் உல்லாசம் மேவாரை நாசம் செய்து விடும் என்று நம்பிய அமைச்சர் சோம்சந்த் காந்தி மனம் கலங்கி திகைப்பில் இருந்தார். தீப்சந்தின் பெருமுயற்சி இருந்தும் அவனுக்குத் தாம் ஏதும் உதவ முடியாத காரணத்தால் ஜாவுத்
கோட்டை எதிரி வசமாகிவிட்டது என்ற செய்தி அவருக்கு இணையிலா துன்பத்தை அளித்தாலும், வெள்ளைக்காரனான டீபாயின் திறமையான பீரங்கிப் படையையும் மகாராஷ்டிரர்களின் வாயு வேகப் புரவிப் படையையும் அவன்
ஒருமாத காலம் எதிர்த்து நின்றதும், முற்றுகையிட்ட எதிரிகளை ஊடுருவி அவன் வெளியேறியதும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது சோம்ஜிக்கு. அப்பேர்ப்பட்ட மகாவீரன் மகாராணாவின் நடத்தையால் மனம் கசந்து தனது மண்டலக்
கோட்டைக்குப் போய் விட்டது மந்திரி மனதில் பெரும் கசப்பை அளித்தது. ஜாவுத் கோட்டை வீழ்ச்சியுடன் மகாராஷ்டிரர்கள் தாங்கள் ராஜஸ்தானத்தில் கோட்டைவிட்ட அத்தனை கோட்டைகளையும் திரும்பப் பிடித்துவிட்டதால்,
மேவாரின் முக்கிய இடங்களை அவர்கள் பிடித்துவிட்டார்கள் என்பதை நினைக்க, இடிந்த மனத்துடன் தமது மாளிகை அறையில் உட்கார்ந்திருந்த சமயத்தில் ராஜமாதா ராம்பியாரி அங்கு வந்து சேர்ந்தாள்.
அவள் காலடி ஓசை கேட்டுத் திரும்பிய சோம்ஜி மகாராணாவை மகா கேவலமாக வளர்திருத்த அந்தத் தாயைக் கண்டு உள்ளே வெறுப்பு கொண்டாலும், மேலுக்கு மகிழ்ச்சியைக் காட்டி “மகாராணி! தாங்கள் இங்கு வருவானேன்!
சொல்லியனுப்பியிருந்தால் நான் வரமாட்டேனா?” என்று மரியாதை சொற்களை உதிர்த்தார். தலையையும் தரையைத் தொட்டு விடுவது போல் வணங்கினார்.
மகாராணி அந்த வணக்கத்தை ஏற்றுக்கொண்டாளோ இல்லையோ தெரியாது. வந்த காரியத்தைப் பற்றி வீணாக வார்த்தைகளை வளர்த்தாமல் பேசினாள். “சோம்ஜி! மேவார் இருக்கும் நிலை உமக்குத் தெரியுமா?” என்று வினவினாள்
அதிகாரக் குரலில்.
“மந்திரியின் வேலையே, உள்ள நிலையை உள்ளபடி உணர்வதுதான் என்று நினைக்கிறேன்.” என்றார் சோம்ஜி.
“நினைத்து என்ன செய்தீர்?” என்று ராஜமாதா வினவினாள்.
“அதுதான் புரியவில்லை.” என்றார் சோம்ஜி.
“புரியாவிட்டால் மந்திரிப் பதவியை வேறு யாரிடமாவது ஒப்படைப்பதுதானே?” என்று கடுமையாகக் கேட்டாள் ராஜமாதா.
“இந்த விநாடியிலேயே ஒப்படைக்கச் சித்தமாயிருக்கிறேன். இதை ஏற்றுக்கொள்ளக்கூடிய யாரையாவது அனுப்புங்கள். இல்லை இந்தப் பெரும் பதவியை தாங்களே ஏற்றுக்கொள்வதாயிருந்தால் ராஜமுத்திரை களை இப்பொழுதே
தங்களிடம் ஒப்படைக்கிறேன்” என்ற சோம்ஜி மிக விஷமமாகப் பேசினார்.
“மிகவும் கெட்டிக்காரத்தனமாகப் பேசுவதாக நினைப்போ?”
“இல்லை. ராஜமாதாவின் கெட்டிக்காரத்தனத்தில் இம்மியளவு கூட அடியவனுக்கு இல்லை என்பதை நீண்ட நாளாக உணர்ந்திருக்கிறேன்.”
ராஜமாதா உடனடியாக இதற்குப் பதில் சொல்லவில்லை. அறையில் குறுக்கும் நெடுக்குமாகப் பெண் புலி போல் நடந்தாள். பிறகு சோம்ஜிக்கு எதிரில் நின்று “சோம்ஜி! உமது கருத்தும் மாறுபட்டிருந்தால் நிறை வேற்றத் தகுந்தது
எது?” என்று வினவினாள்.
“சந்தேகமென்ன? தங்கள் கருத்து தான்.” என்ற சோம்ஜி “கருத்து எதுவாயிருந்தாலும் தெரிவித்தால் நிறைவேற்றி வைக்கிறேன்.” என்று கூறினார். அவர் குரலில் பலத்த சந்தேகம் தொனித்தது.
ராஜமாதா பலத்த சிந்தனையுடன் உலாவினாள் அறையில். அவள் படும் அவஸ்தையைக் கண்ட சோம்ஜி, அவளுக்கு ஒரு மஞ்சத்தை எடுத்துப் போட்டு, தாம் எதிரில் கை கட்டி நின்றார். அதில் அமர்ந்த ராஜமாதா “சோம்ஜி! உமது
ராஜதந்திரத்தின் விளைவு என்ன தெரியுமா?” என்று வினவினாள்.
“சொல்லுங்கள் மகாராணி.” என்றார் சோம்ஜி.
“மேவார் சிம்மாசனத்துக்காக உயிரைக் கொடுத்த சலூம்பிராக்கள் வம்சத்தில் பிறந்தவர் பீம்சிங் சலூம்பிரா…” என்று இழுத்தாள் மகாராணி.
“ஆம்.”
“அவர் நம்மிடம் விரோதம் கொண்டு சித்தூருக்குப் போய் விட்டார்.”
“சித்தூரில் ஆட்சி செய்கிறார் என்பது பொருந்தும்.”
“அதைப்பற்றி எனக்குத் தெரியாது” என்றாள் மகாராணி.
“எனக்குத் தெரியும். சலூம்பிராவும் அவரது நண்பன் கோராபூர் அர்ஜுன்சிங்குமாகச் சேர்ந்து மகாராணாவின் நிலங்களைத் தாங்களே விற்று சாசனம் செய்கிறார்கள். மேவாருக்கும் உதயபூருக்கும் இடையிலுள்ள பாதி நிலங்களை
அவர்கள் விற்று வரிப் பணத்தையும் சாப்பிட்டு வருகிறார்கள்.”
ராஜமாதா சிலையென நின்றாள். பிறகு உணர்ச்சியை வரவழைத்துக் கொண்டு “அதைத் தடுக்க என்ன செய்தீர்?” என்று கேட்டாள்.
“நமது வீரர்களை அனுப்பி அவர்கள் வரி வசூலைத் தடை செய்தேன். நிலங்களை மகாராணா அனுமதியில்லாமல் விற்றதற்குக் காரணம் கேட்டு கடிதமும் அனுப்பியிருக்கிறேன்.” என்றார் சோம்ஜி.
“உமது கடிதத்தைச் சலூம்பிரா மதிப்பாரென்று நினைக்கிறீரா?” –
“இல்லை. மதிக்கமாட்டார்.”
“அப்படியானால் என்ன செய்ய உத்தேசம்?”
மந்திரி சோம்ஜி மகாராணி எதிரில் உறுதியுடன் நின்றார். “ராஜமாதா! மன்னவனுக்குப் பணியாதவர்கள் துரோகிகள். தண்டிப்பது ராணாவின் கடமை” என்றார் சோம்ஜி.
ராஜமாதா சிந்தனையில் இறங்கினாள். “சோம்ஜி! நீர் சொல்வது எல்லாம் சட்டப்படி சரிதான். ஆனால் ஏட்டுச் சுரைக்காய் கரிக்கு உதவாது. சமயத்துக்குத் தகுந்தபடி சட்டத்தை வளைப்பதும், விட்டுக் கொடுப்பதுந்தான் ராஜதந்திரம்.”
என்று சூசகமாகப் பேசினாள், ராஜமாதா.
“எப்படி சட்டத்தை வளைக்கலாம்? எப்படி விட்டுக் கொடுக்கலாம்? யாரிடம் விட்டுக் கொடுக்கலாம்? என்பதை மகாராணியே சொல்லலாம்.” இதைத் திட்டமாகச் சொன்னார்.
மகாராணி முகத்தில் மிகுந்த வேதனைக் குறி காணப்பட்டது, பீம்சிங் சலூம்பிரா துஷ்டன் தான். இருப்பினும் மகாராணாவுக்குச் சேவை செய்ய அழைத்தால் அவன் மறுக்க முடியாது. அவன் குல ரத்தம் அதற்கு இடங்கொடாது.” என்றாள்.
ராஜமாதாவின் மனப்போக்கை சோம்ஜி நன்றாகப் புரிந்துகொண்டார். – “தங்கள் சித்தம் மகாராணி!” என்றார் சோம்ஜி.
“உமக்கு ஆட்சேபணையில்லையே?” என்று ராஜமாதா கேட்டாள்.
“எனது மனச்சாட்சியை நான் இன்னும் அடகு வைக்கவில்லை. ஆனால் என் கருத்து முக்கியமல்ல.” என்றார் சோம்ஜி.
“இன்றே நான் சித்தூருக்குக் கடிதம் அனுப்புகிறேன், சலூம்பிராவை வரச்சொல்லி.” என்றாள் ராஜமாதா.
மந்திரி பதில் பேசவில்லை. தலையை மட்டும் நன்றாகத் தாழ்த்தினார்.
ராஜமாதா வேகமாக வெளியேறினாள்.
சோம்ஜி தமது அலுவலக அறைக்குச் சென்று துரிதமாக ஏதோ எழுதினார் நீண்ட நேரம். பிறகு அந்தக் கடிதத்தை ஒரு குழலில் போட்டு முத்திரையும் வைத்தார். அதை தமது மரப்பெட்டியில் பத்திரப்படுத்தினார். சோகமான
புன்முறுவல் ஒன்று அவர் இதழ்களில் தவழ்ந்தது.
சோம்ஜியின் மாளிகையில் இருந்து அரண்மனை சென்ற ராஜமாதாவும் தனது அந்தப்புர அறையில் உட்கார்ந்து வேகமாக ஒரு கடிதம் எழுதினாள். அதற்கு அடியில் முத்திரை வைக்க எதையோ தேடினாள். அது கிடைக்காததால்
அப்படியும் இப்படியும் பார்த்த ராஜமாதா தனது முதல் பேத்தி கிருஷ்ணகுமாரி மெள்ள வருவதையும் அவள் தலையில் அந்தப் பழைய உச்சிப்பூ இருப்பதையும் கவனித்தாள்.
சிறுமியிடம் சென்று அந்த உச்சிப்பூவை தலையிலிருந்து கழற்றி அதைக்கொண்டே முத்திரையும் வைத்தாள். அந்த உச்சிப்பூவால் அனர்த்தம் விளையும் என்ற பழைய வதந்தியை அவள் நம்பவில்லை. முத்திரை வைத்து தானும்
கையொப்பமிட்டுக் குழலில் செய்தியை வைத்து குழலுக்கும் முத்திரை வைத்தாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் மகாராணியின் ஓலையுடன் ஒரு தூதன் விரைந்தான் சித்தூரை நோக்கி.
இரண்டு நாட்களில் சலூம்பிராவிடம் இருந்து பதில் வந்தது. அதை வாங்கிப் படித்த ராஜமாதா புளகாங்கிதமடைந்தாள். சலூம்பிரா எழுதியிருந்தார் : “ராஜமாதா திருவடிகளில் பீம்சிங் விழுந்து எழுதுவது : ராணாவுக்கு சேவை செய்ய
என்றும் சித்தமாயிருக்கிறேன். இத்தனை நாள் நான் விலகியிருந்ததற்குக் காரணம் தங்களுக்குத் தெரியும். விரைவில் ராணாவின் திருப்பாதங்களில் வணங்கி வருகிறேன். ராணாவுக்கும் மேவாருக்கும் உயிரையே கொடுப்பேன்.” இப்படி
எழுதியிருந்தார் சலூம்பிரா.
ராஜமாதா பூரிப்படைந்தாள். “இன்னும் இரண்டு நாட்களில் பீம்சிங் ராணாவைச் சரணடைவான். அவன் வீரவாள் மேவாரைப் பாதுகாக்கும்.” என்று உள்ளூர எண்ணமிட்டாள்.
உதயபூரில் ராஜமாதா மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்த சமயத்தில் சித்தூரில் பீம்சிங் சலூம்பிரா தமது நண்பனான கோராபூர் அர்ஜுன்சிங்கிடம் ரகசியமாக ஏதோ சொன்னான்.
அதைக் கேட்ட அர்ஜுன்சிங் பிசாசைப்போல் நகைத்தான். “சலூம்பிரா! உங்கள் புத்தியில் பாதி ராணாவுக்கு இருந்தால் இந்த மேவார் என்றோ உருப்பட்டிருக்கும்” என்றும் கூறினான் நகைப்பின் ஊடே.
“நூறுபேர் கொண்ட படை மட்டும் நம்முடன் வரட்டும். அதற்குமேல் அழைத்துச் சென்றால் சந்தேகம் வரும். நான் மகாராணாவிடம் பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் நீ சோம்ஜியைப் பார்த்துவிட்டு வா.” என்றார் சலூம்பிரா.
புரிந்ததற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த அர்ஜுன்சிங் “நாம் எப்பொழுது புறப்படுகிறோம்.” என்று வினவினான்.
“நாளைக் காலையில் நாம் வருவதை அறிவிக்க இரண்டு வீரர்களை முன்னோடிகளாக அனுப்பிவை.” என்றார் சலூம்பிரா.
மோகினிவனத்தில் உள்ள தமது பெரிய மாளிகையின் நந்தவனத்தில் மகாராணா ஒரு அழகியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஓடிய அந்தப் பருவ அழகியை ராணா கட்டிப்பிடித்தார். “மகாராணா! நான்…” என்று அச்சத்துடன்
சொன்னாள்.
“நான்காவது ராணி” என்ற மகாராணா அவளை அழைத்துக் கொண்டு ஒரு கொடி வீட்டை நோக்கிச் செல்ல முயன்ற சமயத்தில் சலூம்பிரா அந்த நந்தவனத்தில் நுழைந்தார். மகாராணா இருக்கும் நிலையைப் பார்த்து வெறுப்பு கலந்த
புன்முறுவலுடன் நின்றார் சில விநாடிகள்.
மகாராணாவுடனிருந்த பெண் சலூம்பிராவைப் பார்த்ததும் பிரமிப்பும் அச்சமும் அடைந்தாள் “தங்களைக் காண யாரோ வந்திருக்கிறார்கள்” என்று அச்சம் குரலிலும் ஒலிக்கச் சொன்னாள். “இங்கு யாரும் வர முடியாது பெண்ணே!
இங்கு யார் வந்தாலும் மரண தண்டனை கிடைக்கும்” என்று கூறிக்கொண்டு திரும்பியவர் சிலையென நின்றார்.
சலூம்பிரா வேகமாக வந்து மன்னன் காலில் விழுந்தரர். பாதங்களைத் தனது இரு கைகளாலும் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டார். “சரணடைந்தவனுக்கு மகாராணா மரணதண்டனை கொடுக்க முடியாது.” என்றும் கூறினார்
புன்முறுவலுடன். தனது வாளையும் எடுத்து மகாராணாவின் பாதங்களில் வைத்து, “இது இனி தங்கள் சேவையில் இருக்கும்.” என்றும் கூறினார்.
.
மகாராணாவின் முகத்தில் பெருமை நிலவியது “சலூம்பிரா! உன் குலப் பெருமையை மீண்டும் ஒளிபெறச் செய்துவிட்டாய். உன்னால் மேவார் பிழைக்கட்டும். எதிரிகள் நாசம் அடையட்டும்’, என்று கூறி, வாளை எடுத்து அவர் கைகளில்
கொடுத்தார்.
சலூம்பிரா பெரிதும் குழைந்தார். நன்றாக தமது பாத்திரத்தை நடித்தார். மகாராணாவுக்கு முதுகைக் காட்டாமல் பின்புறமாகவே நடந்தார்.
“நாளை இந்த மாளிகையின் மகாமண்டபத்துக்கு வந்து சேர்.” என்று மகாராணா ஆணையிட்டார்.
“சித்தம்! சித்தம்!” என்று அதிகமாகக் குழைந்தார் சலூம்பிரா.
அடுத்த நாள் அவர் மகா மண்டபத்துக்கு வந்தார். அவர் வருமுன்பே மேவாரைப் பெரும் விபத்து ஆட் கொண்டது.